எதிரே முகமெல்லாம் புன்னகையுடன் அமர்ந்திருந்தவனின் மேல் கோபத்தை காண்பிக்காமல் முறைப்புடன் இருக்கையை விட்டு எழுந்துகொள்ள அவளின் கையை பற்றி மீண்டு அமரவைத்துவிட்டான்.
“அவ்வளோ கோபம் வருது? ஒருவேளை இது எனக்கு தெரியாமலே இருந்திருந்தா?…” என்ற கேள்வியில் அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவள் மௌனம் சாதிக்க அவள் கை காயத்தில் அவன் போட்டிருந்த கட்டிலிருந்து மீண்டும் குருதி கசிந்தது.
“வலின்னு சொன்னா வாங்கிப்பீங்களா?…” என கேட்டு அவனை வாயடைக்க வைத்தாள்.
அவனிடம் வேறுயாரும் இதை கூறினாலும் இந்த பதில் தானே வரும். உண்மைக்கும் மனமெல்லாம் சந்தோஷத்தை தாண்டிய ஒரு ஆழமான வலி அவனுள் ஊடுருவி முணுக்கென்று குத்த ஆரம்பித்தது.
“வெய்ட் பண்ணு….” என்று அவளை ஓரமாய் கதவினருகே நகர்த்தியவன் அங்கே உடைந்திருந்த கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தினான்.
“இப்ப வா. போகலாம்…” என்று அவளின் கார் கீயை எடுத்துக்கொண்டவன் ஆழினியுடன் நடக்க மீண்டும் அழைப்பு.
“மாமா தான்…” என்றவன் அதனை ஏற்கவும்,
“கண்ணா ஆபீஸ்லயா இருக்க?…” என்றார் வாழவந்தான்.
“ஹ்ம்ம், ஆமா. என்ன மாமா?…” என்று அலட்டிக்கொள்ளாமல் கேட்க செக்யூரிட்டி கதவை மூடினார் அவர்கள் வெளியேறவும்.
“செக்யூரிட்டிக்கு கால் பண்ணேன். நீயும் ஆழினியும் ஆபீஸ்ல இருக்கறதா சொன்னான். வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே?…” என்றார் அவர் யோசனையுடன்.
“என்ன பிரச்சனை இருக்க போகுது? எதுவும் இல்லை. நீங்க வாங்க…” என்று சொல்லியவன் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டான்.
வாழவந்தானுக்கு தொழில் சம்பந்தமாக எதுவும் விஷயமாக இருக்குமோ என்ற எண்ணம் தான்.
அதற்கு அழைத்து கேட்க கார்மேகவண்ணன் குரலில் புதிதாய் ஒரு அவசரமும், அவரிடம் பேசாமல் தவிர்ப்பதை போலவும் தோன்ற பிரச்சனை எதையோ மறைக்கிறானோ என நினைத்தார்.
“முதல்ல வீட்டுக்கு கிளம்புவோம்டா வேந்தா. புள்ளைங்க என்ன செய்யறாங்களோ?…” என்று கோவேந்தனை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார் வாழவந்தான்.
ஆழினியும், கண்ணனும் அலுவலகத்தில் இருந்து கிளம்பியதும் நேராக சென்றது அருகிலிருந்த மருத்துவமனைக்கு தான்.
கைதவறி கண்ணாடி பொருள் உடைந்துவிட்டதாக சொல்லி காயத்திற்கு மருந்திட்டுவிட்டு மீண்டும் பயணம் துவங்கியது.
போக்குவரத்து நெரிசலான சாலையில் மெல்லிய தூறல் வேறு வாகனங்களின் வேகத்தை மிதமாகியிருந்தது.
இன்னும் அவனிடம் அவளாக வாய் திறந்து எதுவும் கூறவில்லை. கேட்டதற்கு மறுப்பில்லாத ஒரு ஆசுவாசம் அவன் தன்னை அனுசரித்துக்கொண்டதில்.
அதன் நிறைவு முகத்தில் ஒளிர்ந்தாலும் குடும்பங்களின் சூழல் சுழலாய் அவளை இறுக்கியது.
“எப்படி எப்படி சொல்ல? எப்படி சொல்லுவேன்?…” மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டே வந்தவள் ஒருகட்டத்தில் சத்தமாகவே சொல்லிவிட,
“இப்ப சொன்னியே. வாய்ல தான். ஆனா நீ எங்க சொல்ல போற?…” என்றான் கார்மேகவண்ணன் அலுத்துக்கொண்ட பாவனையுடன் அவளை திரும்பி பார்த்து.
“இப்பவும் நானா தெரிஞ்சுக்கலைன்னா நீ எப்பவுமே சொல்லியிருக்கமாட்ட தானே?…” என்றான் அழுத்தம் கூடிய குரலில்.
தொண்டைக்குழி ஏறி இறங்க எச்சிலை விழுங்கியபடி மௌனமானவள் தன் கையில் போடப்பட்டிருந்த கட்டை பார்த்தபடி இருந்தாள்.
“பேசவேண்டிய நேரம் எதுவும் பேசிடாத. நான் கூட நினைச்சேன் உங்கப்பா மேல நான் காமிக்கிற நெருக்கத்தால வந்த பொசஸிவ் என்கிட்ட நீ விலகி இருக்கன்னு. ஆனா அது இல்லைல…” என்றதும்,
“ஹ்ம்ம்…” என ஒப்புக்கொண்டாள்.
அவளை எந்தவகையிலும் வாய்திறக்க செய்யமுடியாமல் ஆயாசமாய் பார்த்தான்.
அதுவும் இப்போதிருக்கும் மனநிலையில் இன்னும் அதிகமாய் துளைக்க வேண்டாம் என முயன்று தன்னை இலகுவாக்கிக்கொண்டான் கார்மேகவண்ணன்.
இன்றே மொத்தத்தையும் பேசிவிடு என்றால் இன்னுமே அழுத்தமாகிவிடுவாள் என்று தலையை உலுக்கிக்கொண்டவன் தோளை குலுக்கினான்.
“ஓகே, லீவ் இட்…” என்று சொல்லி,
“சரி, எப்ப இருந்து இந்த லவ்?…” என்றவனுக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும்? ‘என்னை விட்டுவிடேன்?’ என்பதை போல பாவமாய் ஒரு பார்வை பார்த்தாள் ஆழினி.
“சொல்லேன் தெரிஞ்சுப்போம்…” என்றவன் விடுவதாய் இல்லை.
“தெரியலை. ஆனா ரொம்ப புடிக்கும்…” என்றவள் அந்த ‘பிடிக்கும்’ என்ற வார்த்தையில் சிலிர்த்து கூச்சத்துடன் கண்களை மூடிக்கொள்ள, அதை கண்டு இதழ்விரிந்த புன்னகை கண்ணனிடம்.
“ஹ்ம்ம், சோ குட்டி பொண்ணா இருக்கும்போதே என்னை பார்த்திருக்க? ராஸ்கல், படிக்கிற வயசுல…” என்று கை நீட்டி தலையில் ஒரு கொட்டு வைத்தான்.
“நான் படிப்புல கவனமில்லாம இல்லையே?…”
“அப்போ என்னை சரியா கவனிக்கலையா?…” என்று வார்த்தைகளை பிடுங்க பார்க்க,
“மேபி…” என்றாள் தோளை குலுக்கி.
சத்தியமாய் வியந்து பார்த்தான். அவனை போலொரு பாவனை. அவனையே அவள் பிரதிபலிப்பதை போலிருந்தது கண்ணனுக்கு.
இந்தளவு இவளுள் தான் ஊடுருவி இருக்கிறோமா என்று முழுமையாய் கூட சந்தோஷம் கொள்ளமுடியவில்லை.
கண்ணனின் நெஞ்சத்தில் அன்றைக்கு காவல்நிலையத்தில் அவள் பார்த்த பார்வைக்கான ஒட்டுமொத்த அர்த்தமும் இன்றைக்கு பாரமாய் அவன் நெஞ்சில் ஏறிக்கொண்டது.
இதில் அவளை வைத்துக்கொண்டே சஞ்சனாவின் வீட்டிற்கு சென்றது, அங்கே அந்த பரிசுபொருட்கள் வாங்கியது, அதையும் ஆழினியிடம் ஒப்படைத்தது என்று ஒவ்வொன்றாய் அவனை பிடித்து இழுக்க பல்லை கடித்தான் தன் மீதே கோபம் கொண்டு.
தன்னை விரும்பும் பெண்ணை, தானும் நேசிக்க துவங்கியிருக்கும் பெண்ணை இன்னொருவனுக்கு மணம் முடிக்க பேசுகிறார்கள் என்ற செய்தியிலேயே எவ்வளவு தூரம் தவித்து போனோம் என நினைத்தவனுக்கு ஆறவில்லை.
இப்போது இவ்வளவு காதலை சுமந்து வாழும் இவளிடம் தெரியாமல் கூட தான் செய்த விஷயம் எத்தனை தூரம் அவளை துடிக்க செய்திருக்கும் என்ற நினைவே அவனை கலங்க செய்தது.
அதுவரை கேள்விகளை கேட்டும், புன்னகைத்தும், கேலி செய்தும் பேசியவனின் திடீர் மௌனத்தில் ஆழினி தான் தவித்து பார்த்தாள்.
“என்னாச்சு? என்ன சைலன்ட்டாகிட்டீங்க? கேளுங்க நான் சொல்றேன்…” என்று அவனின் அமைதி தாளாமல் கேட்க அவள் புறம் திரும்பியவன் முகத்தில் சிறு புன்னகை.
“சைலன்ட் எல்லாம் இல்லை. சும்மா ஒரு யோசனை…” என்று அவன் பேசியதும் தான் நிம்மதியானது.
“என்னன்னு கேட்கமாட்டியா? இப்ப நீ அமைதியானா நான் யார்கிட்ட பேச?…” என்றதும்,
மீண்டும் ஒரு ஆழ்ந்த பார்வையை அவளுள் செலுத்தியவனை ஆழினியால் புரிந்துகொள்ள முடியவில்லை இந்தநொடி.
“எதையாச்சும் நினைச்சு வருத்தப்படறீங்களா?…” என்று கேட்க,
“யாரையாவது நினைச்சுன்னு நேரடியாவே கேட்கலாமே?…” என்றே சொல்லிவிட்டான் கார்மேகவண்ணன்.
தூக்கிவாரிபோட்டது ஆழினிக்கு. ‘சஞ்சனாவை நினைத்து தன்னை ஏன் முன்பே கவனிக்கவில்லை என யோசிக்கிறானோ?’ என்றொரு அல்பமான எண்ணம் தோன்றியது என்னவோ உண்மை.
அதை அவன் கேட்டதும் கூடுதலாய் வலித்துவிட்டது ஆழினிக்கு. சட்டென விழிகள் கலங்க மௌனமானாள் மீண்டும்.
இறுக்கமான மௌனம் அந்தநொடிகளை எடுத்துக்கொள்ள இருவருமே தள்ளாட்டத்துடன் அந்த ஷணங்களை கடந்தனர்.
‘பழசை நினைக்காதடான்னு நீயே ஞாபகபடுத்து ராஸ்கல்’ என தன்னை தானே கடிந்துகொண்டவன்,
“என்ன காரணத்தால உன்னோட பிடித்தம் காதலன்ற ஸ்டேஜ்ல போய் நின்னதோன்னு யோசிச்சேன். எதாச்சும் காரணம் இருக்கா?…” என்றான் இயல்பு போலே.
“ஹ்ம்ம்…” என்று யோசித்தவள்,
“அப்படி எதுவுமே இல்லை. நான் எதையும் நினைக்கலையே?…” என்றாள் அவன் முகம் பார்த்து.
“ஓஹ், அதுவும் இல்லை. ஒருவேளை என்னோட ஞாபகமா என்ன இருக்கு உன்கிட்ட?…” என்றான் அவளை இறுக்கத்திலிருந்து தளர்த்த.
“என்னன்னா?…”
“எதாச்சும் என் திங்க்ஸ், நான் யூஸ் பண்ணினது. எனக்கு பிடிச்சது. இப்படி…” என்று கேட்க இதோ வீடு வந்துவிட்டது. காரை நிறுத்தவும் அவனை பார்த்தவள்,
“ஞாபகமா உங்க ஞாபகங்கள் தான் இருக்கு…” என்றாள்.
இந்த பதிலை கார்மேகவண்ணன் எதிர்பார்க்கவில்லை. அவள் நிறைய சேகரித்து வைத்திருக்க கூடுமோ என்று விளையாட்டாய் தான் நினைத்தான்.
அவளின் காதல் அப்படியும் ஒரு தோற்றத்தை தருவித்திருந்தாலும் ஆழம் உணராமல் இல்லை.
இதோ அந்த ஆழத்தில் அவனுக்கு தான் மூச்சு திணறும் போல் இருந்தது. அசையாமல் ஆழினியை பார்க்க,
“உங்களை ஞாபகப்படுத்த எனக்கு நீங்க யூஸ் பண்ணின எந்த பொருளும் தேவை இல்லை. அப்படி ஞாபகப்படுத்தி தான் உங்க நினைப்பு எனக்குள்ள இருக்கும்ன்னும் கிடையாது…” என்றவள்,
“நீங்க, உங்களை நினைக்கிற அந்த நினைவு தராத உணர்வையா நீங்க உபயோகப்படுத்தற அந்த பொருட்கள் தந்திடும்?…” அவன் கேட்காத காதலை உணர்வாய் அவள் ஞாபகத்தை பகிர அந்த புன்னகை கண்களை நிறைத்தது.
இதழ்கள் வார்த்தைகளை சிறைபிடித்து பூட்டிக்கொள்ள அவன் கண்கள் ஆயிரம் ஜாலத்தை காண்பித்தது அவளின் நேசத்தின் பதிலாய்.
“ஆன்ஸர் கிடைச்சிட்டதா?…” என்று ஆழினி தலையசைக்க,
“ஹ்ம்ம்…” என்றவன் கைகள் மெல்ல உயர்ந்து அவளின் கன்னத்தை ஸ்பரிசிக்க நீள, வீட்டினுள் இருந்து அனைவரும் வரும் அரவம் கண்டுவிட்ட ஆழினி சட்டென கண்ணனின் கையை விலக்கி ஹாரனை ஒலிக்கவிட மயக்கம் கலைந்தவன் போல் பார்த்தான்.
“எல்லாரும் வந்துட்டாங்க. முழிச்சுக்கோங்க…” என்று சிரிப்புடன் இறங்க, உள்ளோடும் உவகை ஊற்றை அனுபவித்தபடி தானும் காரை விட்டு இறங்கினான் கார்மேகவண்ணன்.