வாழவந்தான், சித்தாரா மட்டுமல்லாது கோவேந்தனும், மகிழாவும் கூட அங்கே தான் இருந்தனர்.
வாழவந்தான் பார்த்ததுமே மகளின் கையிலிருந்த காயத்தை கண்டு இன்னும் வேகமாய் அருகில் வந்துவிட்டார்.
“நான் சொன்னேன்லடா வேந்தா. பாரு, ஆழி கையை…” என்றதும் அவர்களிடம் பரபரப்பு.
“என்னாச்சு ஆழி?…” என்று மாற்றி மாற்றி கேட்க,
“என்ன கண்ணா? சேர்ந்து வரீங்க. என்னப்பா ஆழிக்கு?…” என்றார் சித்தாரா கார்மேகவண்ணனிடம்.
ஆழினியை பேசவும் விடாமல் மாற்றி மாற்றி எப்படியாகிற்று என்று விசாரித்து, மருத்துவமனை சென்றதை பற்றியும் கேட்க பொறுமை இழந்தான் கார்மேகவண்ணன்.
“கொஞ்சநேரம் கேப் விட்டாதான் பதில் சொல்லமுடியும். பேசிக்கிட்டே போனா நான் சொல்றது காதுல விழுமா?…” என்று கேட்க,
“சரி என்னன்னு சொல்லு…” என்று வாழவந்தான் கேட்க,
“அந்த இஞ்சினியரால எதுவும் பிரச்சனையா?…” என்றார் சித்தாரா.
“அதான் இவ்வளோ கேட்கறோமே, வாயை திறக்கானா பாரு?…” என்ற கோவேந்தன்,
“ஹாஸ்பிட்டல் போனா எங்ககிட்ட சொல்லவேண்டாமா? இப்ப வரைக்கும் சொல்லாம இருந்துட்டு, இப்பவும் வாய் மூடிட்டு நிக்கிறான் பாரு…” என்று மகிழாவை பார்க்க அவர் அமைதியாக நின்றார்.
“உன்னை தான். கேட்டு தொலை. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க?…” என்று மனைவியை அதட்ட,
“அய்யனாருக்கு கையில காரணமே இல்லாம அருவா கிடைச்சிரும்…” என்று நக்கலாய் பேசிய கார்மேகவண்ணன்,
“முதல்ல அவங்கவங்க மூச். பேசாம இருந்தா தான் விஷயத்தை சொல்லமுடியும்…” என்றவன் பார்வை ஆழினியிடம் ‘சொல்லிவிடவா?’ என்று நின்றது.
அடிக்கண்ணால் அவனை மிரட்டலாய் ஒரு முறைப்பை காண்பிக்க ‘பார்ரா’ என்று பார்த்தான் அவன்.
“அங்க என்ன? அவளை எதுவும் சத்தம் போட்டியா?…” என்ற கோவேந்தன், மகன் திரும்பி தன்னை பார்த்ததும்,
“கேட்டுட்டே இருக்கேன்ல. நீயும் சேர்ந்து கேளுடி…” என சடுதியில் மகிழாவிடம் பாய்ந்தார்.
“அவனுக்கே கேட்டிருக்கும். சும்மா தொணதொணன்னு பேசாம இருக்கலாம்ல…” என்று அமைதியாக சொல்லியவர்,
“என்னடா?…” என்றார் மகனிடம்.
“ப்ச், என்னன்னு சொல்ல? அங்க ஒரு பிரச்சனையும் இல்லை. ஆழினி மொபைல் எடுத்துட்டு கிளம்பும்போது போன் கை தவறி விழுந்திருக்கு. பக்கத்துல இருந்த கிளாஸ் சேர்ந்தே விழ அதை எடுக்கற அவசரத்துல கையை அழுத்தமாய் வச்சுட்டா. அந்த காயம் தான் கைல…” என்றான் அவர்கள் பேச இடமளிக்காமல்.
‘ஹப்பாடா’ என்னும் பாவனை ஆழினியின் முகத்தில் தெரிய அவளை முறைத்துவிட்டு எழுந்துகொண்டவன்,
“வரும்போதே ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்துட்டோம். இன்னைக்கு கட்டு இருக்கட்டும். நாளைக்கு ஹாஸ்பிட்டல் போய் பிரிச்சுக்கலாம். இதுல டேப்லெட் இருக்கு…” என்று சொல்லி அதனை டீப்பாயில் அவன் போட,
“அந்தநேரம் இவன் எங்க திரும்ப ஆபீஸ் போனானாம்?…” என்றார் கோவேந்தன் அப்போதும் மனைவியிடம்.
“என் இஷ்டம் நான் போவேன். இவருக்கென்னவாம்?…” என்றான் இவனும் நக்கலாக.
“கண்ணா…” மகிழா பாவமாய் பார்க்க,
“ப்ச், ஒரு வேலையா திரும்ப போனேன். போனதால தான் அவளை பார்த்து கூட்டிட்டு வரமுடிஞ்சது. இது ஒரு விஷயமா?…” என்று அலுப்பாய் சொல்ல,
“என்ன பேசுவேன்? என்கிட்ட சொல்லுங்க…” என்று அவரின் முன்னே நிற்க,
“என்னடா பேசமாட்ட? சும்மா சும்மா அவளை எதாச்சும் குறை சொல்லிட்டே தான இருப்ப நீ. அது பாவம் அமைதியான பிள்ளைன்றதால எனக்காக பொறுத்துக்கிட்டு பேசாம இருக்கா. இல்லைன்னா நீ பன்ற அலும்புக்கு…” என்று கோவேந்தனும் எழுந்து நிற்க,
“ஆழினி, உன்கிட்ட நான் எதுவும் சண்டை போட்டேனா?…” என்று ஆழினியை பார்த்து கார்மேகவண்ணன் கேட்க,
“என்ன இது?…” என்றாள் ஆழினி.
“டேய் அவளை ஏன் மிரட்டற? இப்பவும் கடுப்புல உன்னை தொந்தரவு பண்ணிட்டான்னு தானே இவ்வளோ குதிக்கிற?…” என்று தன் பக்கம் மகனை திருப்பினார் கோவேந்தன்.
“அடடா, இப்ப எதுக்கு இவ்வளோ அடிச்சுக்கறீங்க ரெண்டுபேரும்?…” என்று வாழவந்தான் இருவரையும் சமாதானம் செய்யமுடியாமல் விழிக்க,
“நீ சொல்லு ஆழி, உன்னை நான் திட்டினேனா?…” என்று அவன் அதிலேயே நின்றான்.
“ம்ஹூம்…” என்றாள் ஆழினி.
“நீ நான் திட்டறேன், அதட்டறேன்னு உன் மாமனார்கிட்ட எதுவும் சொன்னியா? என்னை கம்ப்ளைண்ட் பண்ணுனியா?…” என்று கேட்க திக்கென்றானது ஆழினிக்கு.
‘மாமனாரா? அடேய்’ என்று பார்த்த ஆழினி இந்த வார்த்தையை மற்றவர்கள் கவனித்தனரா என்றும் பார்க்க ம்ஹூம், ஒருவரும் கண்டுகொண்டதை போல் தெரியவில்லை.
வாழவந்தான் கோவேந்தனை சமாளிக்க முயல, சித்தாரா மகிழாவிடம் சமாதானம் செய்யும்படி கூற என்று அவர்களுக்குள்ளே பேச,
“அட ஆப்பிள் பழங்களா?…” என நொந்துபோய் தலையில் அடித்துக்கொண்டான் கார்மேகவண்ணன்.
“என்னடா?…” என்று கோவேந்தன் முறுக்கிக்கொண்டு மகனை பார்க்க,
“ஹ்ம்ம், இப்ப திரும்பி என்னடான்னு கேளுங்க. உங்களை வச்சுக்கிட்டு ஒரு க்ளூ குடுக்க முடியுதா?…” என்று சொல்லியவனை கண்டு பேந்த பேந்த விழித்தனர்.
“என்ன க்ளூ?…” என்ற கோவேந்தன்,
“பேச்சை மாத்தத நீ. உன்னை பத்தி எனக்கு தெரியாதா?…” என்றவர்,
“பார்த்தியா வாழா?…” என்றார்.
“ஐயோ கொஞ்சநேரம் அமைதியா இருங்களேன்…” என்று சத்தமே போட்டுவிட்டாள் ஆழினி.
“இருந்துட்டாலும்…” என்ற கார்மேகவண்ணன்,
“பேசிட்டு வாங்க. நான் கிளம்பறேன்…” என்று சொல்லி வாசல்பக்கம் திரும்பினான்.
“அட இரு கண்ணா, ஒன்னும் சாப்பிடாம போற? வெய்ட் பண்ணு…” என்ற சித்தாரா,
“இவங்கலாம் என்னவோ ஆபீஸ் பிரச்சனை போல. அதனால நீயும் ஆபீஸ்ல இருக்கன்னு சொல்லி பெருசா கிளப்பிவிட்டதுல ஒன்னும் தோணலை. இதுல அந்த வரன் பத்தி பேசிட்டே இருந்ததுல கமலா என்ன செஞ்சான்னு கூட கேட்கலை…” என்று அடுக்களை பக்கம் சென்றார்.
“சித்தும்மா, எனக்கு பசியில்லை. எதுவும் வேண்டாம்…” என்று சொல்லியவன் திரும்பி பார்க்காமல் நடந்துவிட்டான்.
“உன்னால தான். அவனை வாய்க்கு வந்தபடி பேசி பசியோட கிளப்பிவிட்டுட்ட…” என்று வாழவந்தான் வேந்தனிடம் சண்டைக்கு பாய,
“ஆழி அவன் ஒன்னும் உன்கிட்ட சவடால் காட்டலையே?…” என்றார் இப்போதும்.
“அதெல்லாம் இல்லை மாமா…” என்றவளுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வந்தது.
தன்னிடம் சாதாரணமாக கூட பேசமாட்டான் என்பதை போல் இவர்கள் நினைத்திருக்க நடந்திருக்கும் விஷயத்தை எப்படி சொல்வதென யோசிக்க கூட முடியாமல் தலைசுற்றி போயிருந்தாள்.
இதில் திருமண பேச்சுவார்த்தை ஆரம்பித்த உடனே இப்படி தடை ஏற்பட்டிருக்க அது ஒருபுறம் சித்தாராவிற்கு மனவுளைச்சலை தருவதாக பேசிக்கொண்டிருந்தார்.
“இப்பத்தான் கூடி வருதுன்னு நினைச்சேன். அதுக்குள்ள நாமளே வேண்டாம்ன்னு சொல்ற மாதிரி நடக்குதே?…” என்று மகிழாவிடம் புலம்பி தள்ளிவிட்டார்.
“கல்யாண பேச்சு ஆரம்பிக்கிற மாதிரி தான் தெரியும். கூடி வரது, முடியிறது எல்லாம் நம்ம கையிலையா இருக்கு? ஏற்கனவே முடிவான ஒன்னு இன்னும் நம்ம கவனத்துக்கு வரலைன்னு நினைச்சுப்போம்….” என்று கோவேந்தனும், மகிழாவும் தான் தேற்றினார்.
இரவு உணவு வரை இருந்தனர் அங்கேயே. பேசிக்கொண்டிருந்துவிட்டு ஆழினியிடமும் சொல்லிவிட்டு புறப்பட்ட பின்னர் தான் தன்னறைக்குள் நுழைந்தாள் ஆழினி.
இரவு உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டு பாலை மட்டும் வாங்கி குடித்துவிட்டு வந்திருக்க,
“எதுவானாலும் என்னை கூப்பிடு ஆழி. இந்த கையை வச்சுட்டு என்ன பண்ணுவ?…” என்று கூடவே வந்தார் சித்தாரா.
“ம்மா, அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன். ஒரு கையில தானே கட்டு. இன்னொரு கை இருக்கே. போம்மா…” என்று அனுப்பிவிட்டு வந்தவள் இரவு உடை மாற்றிவிட்டு ஜன்னலை திறந்துவைக்க அவளின் பார்வை தொலைதூரப்பகுதிக்கு தாவியது.
தன்னைப்போல அவள் உள்ளமும், முகமும் மலர பார்வையில் அவன் ஒருவன் தனியே.
அவர்களின் வீட்டு மொட்டைமாடியில் நடந்துகொண்டிருந்தான் கார்மேகவண்ணன்.
பார்த்ததும் லேசாய் தலை சாய்த்து ஜன்னலை ஒட்டியபடி நின்றவள் பார்வையின் அழைப்பு அவனுள்ளம் உணர்ந்ததுவோ!
சட்டென நின்றுவிட்டது அவன் நடை. என்ன செய்கிறானோ என இன்னும் அழுத்தமாய் தலை நிமிர்த்தி ஆழினி பார்க்க அங்கிருந்து அவனுமே அவளை கண்டுகொண்டான்.
இதற்கு முன்பும் எப்போதாவது பார்த்திருக்கிறான் தான். ஆனால் சாதாரணமாக கடந்துவிடுபவன் இன்று பார்த்தபடியே அவனும் இருக்க சிலநொடிகளில் அவனிடமிருந்து அழைப்பு.
‘இந்த நேரத்திலா?’ என்ற யோசனையுடன் தான் அவனின் அழைப்பை அவள் ஏற்க,
“சும்மா ஜன்னல்ல ஏதோ யோசனையில நிக்கிற, என்னவோ வேடிக்கை பார்த்திட்டிருக்கன்னு நினைச்சேன். ஆனா என்னை பார்த்திருக்க?…” என்று எடுத்ததுமே கேட்க,