இதற்காக எத்தனையோ நாட்கள் அவள் காத்திருக்க, ‘இப்போதும் இவன் இப்படி செய்கிறானே?’ என்றதோடு, ‘இவன் லவ் பெயிலியராம்?’ என்றும் கிண்டலாய் நினைத்து அந்நினைவு சத்தமான சிரிப்பை தர,
“என்ன சிரிக்கிற?…” என்றான்.
“இல்லை சும்மா தான்….” என்றவள்,
“அப்பறம்…” என்று பேச்சை இழுக்க,
“ஆழி…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“சொல்லுங்க. லைன்ல தான் இருக்கேன்…” என்று இங்கிருந்தே அவனை பார்க்க முகம் தெளிவில்லை என்றாலும் வரிவடிவமும் அவன் உடல்மொழியும் தெளிவாய் தெரிந்தது.
“என்ன சைலண்ட்டா இருக்க?…” என்றான் மீண்டும் அவள் அமைதியை குலைக்கும் விதமாக.
“நீங்க தான் கூப்பிட்டீங்க. அதான் பார்த்துட்டிருந்தேன்…”
“ஹ்ம்ம், கூப்பிடறேன். இங்க வா…” என்று அடுத்தநொடி அழைத்தான்.
“என்ன?…” என்று திகைத்தாள்.
“எனக்கு எப்படி அப்ரோச் பண்ணனும்ன்னு கூட தெரியலையே. ஆழி…” என்றவன் வார்த்தைகள் அங்குமிங்குமாய் இடற இளமுறுவல் அவளின் அகத்தில் பூஞ்சாரல் தெளித்தது.
மௌனமான புன்னகையுடன் அழைப்பை துண்டித்தவள் ஜன்னலை சாற்றிவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தாள்.
மீண்டும் அவன் அழைக்க போவதில்லை என்று அவள் உள்மனம் சொல்லியதை போல ஐந்து, பத்துநிமிடங்கள் கடந்தும் கார்மேகவண்ணன் அழைப்பு விடுக்கவில்லை.
“படுத்தற கண்ணா….” என்று கைபேசியில் நெற்றியை முட்டிக்கொண்டவள் கைகள் படபடப்புடன் அவனுக்கு அழைப்பு அனுப்பியது.
அடுத்த நொடி திரையை நிறைத்தான் கார்மேகவண்ணன். புன்னகை ஏதுமின்றிய ஒரு பாவனை.
அவன் விழிகள் அவளை மொத்தமாய் அள்ளிக்கொள்ள துடிக்கும் பேராவலை வெளிப்படுத்த அந்த உணர்வை சட்டென ஏற்கமுடியாமல் ஆழினியின் பார்வைகள் இங்குமங்குமாய் அலைபாய்ந்தது.
“பார்த்தாச்சா?…” என்று இவளே பேச்சை துவங்க,
“ம்ஹூம். இல்லையே…” என்றான் மென்சிரிப்புடன்.
“வெய்ட்…” என்றவன் காதில் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டு பார்க்க அவனின் சந்தோஷம், பேச்சு எல்லாவற்றையும் மிச்சமில்லாமல் ஸ்வீகரித்தவளின் மனதின் ஓரத்தில் சஞ்சனா ஞாபகம்.
அவள் சொல்லிய வார்த்தைகள் அவளுக்கே எதிராய். யாரின் ஞாபகமும் எதைகொண்டு ஞாபகப்படுத்தவேண்டிய அவசியமில்லை.
கார்மேகவண்ணன் காதல் என்றால் சஞ்சனா என்னும் நினைவும் கண்ணில் உறுத்தும் தூசியாய் ஒட்டிக்கொண்டு வந்ததை தவிர்க்க முடியவில்லை.
தன் எண்ணவோட்டத்தை அவன் அறிந்துகொண்டால் என்னும் பயம் சட்டென்று மனதை கவ்வ, அதை முகத்தில் காண்பிக்காமல் இருக்க முயன்றவள் புன்னகைக்க பார்க்க அவளின் பாவனைகளை படிக்க முயன்றிருந்தான் கார்மேகவண்ணன்.
“என்ன என்ன அப்படி பார்கறீங்க?…” என்றவள் இமைகள் அடித்துக்கொண்டது அவளின் இதயத்தை போலவே.
“கண்டிப்பா நீ வெட்கப்படற மாதிரி பார்க்கலை. ஐ’ம் சூர்…” என்றான் அழுத்தமாய்.
திடுக்கிட்டு பார்த்தவள் முகத்தில் கூடுதலாய் ஒரு பதட்டம். அதனை தணிக்க விடாமல் அவளை விழிகளால் அங்கொருவன் துண்டாடிக்கொண்டிருக்க,
“ப்ளீஸ், நீங்க நினைக்கிற மாதிரி…” என அவள் முடிக்கும்முன்,
“நான் எதையுமே நினைக்கலை ஆழினி. நீ தான் நினைக்கிற…” என்று சொல்ல ஆழினியின் முகம் கெஞ்சலில் துஞ்சியது.
“உன்னோட அமைதிக்கும், உன் நினைப்புக்கும் நான் வடிவம் குடுக்க முடியாது. நீ என்னவேணா நினைச்சிருக்கலாம். இவனுக்கு இப்போ ஏன் நம்ம மேல கவனம் வந்துச்சுன்னு நினைச்சிருக்கலாம்…” என்றதும் அவள் கண்கள் பனித்தது.
“கேட்கறியா ஆழினி?…” என்று அவளிடம் வினவ,
“ஹ்ம்ம்…” என்றாள் தலையசைத்து.
“இன்னைக்கு பேசினவன் முன்னே ஏன் பேசலைன்னு எண்ணம் வந்திருக்கலாம்…”
“ஹ்ம்ம்…”
“இவனுக்கு ஏன் அந்த அவ மேல முதல்ல லவ் வந்துச்சோன்னு நினைச்சிருக்கலாம்…”
“இல்…”
“மூச், நான் சொல்லிடறேன்….” என்றவன்,
“இவனுக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலையும் வேணும்ன்னு நினைச்சிருக்கலாம்…”
“அப்படியெல்…” என்றவள் வாய் அவனின் பார்வையில் மூடிக்கொண்டது.
“இப்ப வந்து உன்கிட்ட விழுந்து கிடக்கறேன்னு என்னவேணா நீ நினைக்கலாம்….” என்று சொல்ல அழுகையே வந்துவிடும் போலிருக்க இதழ்களை கடித்து கேவலை அடக்கினாள்.
“அழ வைக்கிறேனோ உன்னை?…” என்றவன் கேட்க ‘இல்லை’ என்று மறுப்பாய் தலையசைத்தாள் ஆழினி.
“ஒன்னு வாய் திறந்து பேசனும். இப்படித்தான்னு சொல்லிடனும். எந்தநேரமும் அமைதியா இருக்கறது சரிவராது ஆழி. நீ என்ன நினைச்சிருப்பியோன்னு நானா எந்த காலத்துலயும் ஒரு முடிவுக்கு வரமாட்டேன்….” என்றவன்,
“ஒரு யூகத்துல இப்படி தான் இருக்கும்ன்னு இன்னொருத்தர் எண்ணத்துக்கு வடிவம் குடுத்து என்னை ஏமாத்தினது போதும். திரும்பவும் அதை செய்யமாட்டேன். நீ இதைத்தான் யோசிப்பன்னு நான் ஏன் திங்க் பண்ணனும்?…” என்றான்.
“புரியுதா?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், நான் நினைச்சது…”
“ஆழி வெய்ட், நாம பேசலாம். இப்ப இல்லை. நாளைக்கு. எனக்குமே நிறைய பேசனும். சொல்லனும். நாளைக்கு நீ ஆபீஸ் வரவேண்டாம். நான் வரேன். உன்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக வரேன்…” என்று சொல்ல,
“அம்மா வரேன்னு சொல்லியிருக்காங்க…”
“ப்ச், அதை நான் பார்த்துப்பேன். நம்ம விஷயத்துல இனி உனக்கு எந்த டென்ஷனும் வேண்டாம்…” என்றவன்,
“குட்நைட்….” என்று சொல்லிவிட்டு கண்கள் மின்னும் புன்னகையுடன் அழைப்பை துண்டிக்க வெகுநேரம் அதனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் ஆழினி.
‘இவ்வளோ தெளிவா நினைக்கிற நீ ஏன்டா அப்படி விழுந்த?’ என்ற ஆற்றாமையை அவளால் தவிர்க்க முடியவில்லை.
இரவெல்லாம் என்ன பேச போகிறானோ என்ற எண்ணமே அவளை உறங்க விடவில்லை.
புதிதாய் காதல் கொண்ட நெஞ்சம் போல் சிலிர்த்திருந்தாலும் கூடவே அவனின் வார்த்தைகளும் அவளை தவிக்க செய்தது.
நிச்சயம் சஞ்சனா பற்றிய பகிர்வாக தான் இருக்கும் என்று நினைத்தவள் அதனை முடிந்தளவு இலகுவாய் கடந்துவர தன்னை தானே இப்பொழுதிருந்தே தயார்ப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தாள்.
பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் காதல். அந்த காதலின் எல்லையில் அவள் நின்றிருந்தாள்.
காலை வழக்கமான நேரத்திற்கு முன்பே எழுந்து குளித்து கிளம்பிவிட்டாலும் கீழே செல்லவில்லை ஆழினி.
“ஆழிம்மா அம்மா வரவா ஹெல்ப் பண்ண?…” என்ற சித்தாராவிடம் மறுத்துவிட்டாள்.
“நீ குளிச்சு கிளம்பனும் ஆழி?…”
“ம்மா, நான் மெதுவா குளிச்சுப்பேன்…” என்று சொல்லிவிட்டு அவரின் அழைப்பை துண்டித்தவள் மனம் அனத்த ஆரம்பித்தது.
“என்ன இவ? எப்படி குளிப்பா? இவர் வேற கிளம்பி போய்ட்டார் என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக சொல்லிட்டு….” என்று புலம்பிக்கொண்டே சித்தாரா இருக்க,
“ம்மா, கண்ணா தம்பி வந்திருக்கு…” என்றாள் கமலா.
“கண்ணனா? எங்க?…”
“வாசல்ல போன் பேசிட்டு நிக்குது…” என்று சொல்லவும்,
“உள்ள வராம என்ன பன்றான்?…” என்று வாசலுக்கு செல்ல அங்கே காரில் சாய்ந்து நின்றபடி சித்தாராவை பார்த்து கையசைத்தான் கார்மேகவண்ணன்.
“உள்ள வாடா, என்ன இங்கயே நின்னுட்ட?…” என்றதும்,
“ஆழியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக வந்தேன் சித்தும்மா….” என்று சொல்ல அவர் திகைத்து பார்த்தார்.
‘தன்னிடம் தானே தன் கணவர் சொல்லி சென்றார்? கண்ணனுக்கும் சொல்லியிருப்பாரோ?’ என்று நினைத்தபடி,
“அவ இன்னும் குளிக்கவே இல்லை…” என்னும் முன்,
“வந்துட்டேன்…” என்ற மகளின் குரல்.
“பை ம்மா…” என்று தயாராய் வந்திருந்தவளை இமைக்காமல் பார்த்தது கண்ணன் மட்டுமல்லாது சித்தாராவுமே.
“வரேன் ம்மா…” என்றவள் தாயின் திகைப்பை கண்டு நிற்க,
“ஆழி வா…” என்று காரின் கதவை திறந்துகொண்டு நின்றபடி அழைத்தான் கார்மேகவண்ணன்.
“ம்மா…” என்று சித்தாராவை ஆழினி பார்த்து நிற்க,
“போய்ட்டு வா…” என்று மட்டும் சொல்லிவிட்டு பின்னே நகர்ந்துவிட்டார்.
இப்போது அவரின் பார்வை கண்ணனிடம் செல்ல கள்ளமில்லா புன்னகையுடன் என்றைக்கும் போல தான் அவன் நின்றிருந்தான்.
“பை சித்தும்மா. நேத்து சாப்பிடலைன்னு புலம்பக்கூடாது. இன்னைக்கு வரேன் ஈவ்னிங்…” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் காரில் ஏறி அமர அவனில் எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை.
ஆனால் மகள்? தயங்கி பார்த்து அவள் நின்ற பார்வையே அவருக்கு எதையோ உணர்த்த செய்வதறியாமல் நின்றார்.
அவரிடம் தலையசைத்துவிட்டு ஆழினியும் காரில் ஏறிக்கொள்ள அவர்கள் செல்லும்வரை நின்றிருந்தவருக்குள் அத்தனை கேள்விகள்.
‘மகள் வரட்டும், நேரடியாக கேட்கலாம்’ என்று காத்திருக்க ஆரம்பித்தவருக்கு வேறு எந்த வேலையும் ஓடவில்லை.
“சித்தும்மா உன்னை நோட் பண்ணிட்டாங்க போல…” என்று ஒரு சிரிப்புடன் சொல்ல,
“நானும் அதான் நினைச்சேன்…” என ஆழினியும்.
“பார்த்துக்கலாம்…” என்றான் இப்போது புன்னகைத்து.
“பேசனும்ன்னு சொன்னீங்களே?…” என்றாள் அவன் முகம் பார்த்து.
“அவ்வளோ ஆர்வம்? பேசலாம். முதல்ல ஹாஸ்பிட்டல் போய்ட்டு பேசலாம். ஹ்ம்ம்…” என கார்மேகவண்ணன் கூறவும் அவளின் பார்வை சாலைக்கு திரும்ப,
“இதுக்கு மேல வீட்டுல மறைக்க வேண்டாம்ன்னு நினைக்கறேன் ஆழினி? நான் பேசிடலாம்ன்னு இருக்கேன்….” என்று சொல்ல,
“என்ன?…” என்று திகைத்து பார்த்தாள்.
“என்ன ஷாக்? எனக்கு தெரியாத வரைக்கும் சரி. ஆனா இப்போ தெரிஞ்சு வீட்டுல சொல்லாம இருக்கறது சரியா படலை. அது அவங்க நம்பிக்கையை கெடுக்கற மாதிரியாகிடும்…” என்றான்.
“என்ன சொல்லுவாங்க?…”
“என்ன சொல்லுவாங்க? முதல்ல நம்பமுடியாம பார்ப்பாங்க. அப்பறம் அவங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்வாங்க. அது பாஸிட்டிவாவும் இருக்கலாம். நெகட்டிவாவும் இருக்கலாம்…” என்றான் இலகுவாய்.
“அதுக்கப்பறம்?…”
“அதுக்கப்பறம் மிஸ்டர் ஆழினியாக என்ன செய்யனும்ன்னு பார்க்கனும். சைலன்ட்டா, வயலென்ட்டான்னு…” என்றவன்,
“நீ என்ன சொல்ற? ஃபேமிலி ப்ரென்ட், அபெக்க்ஷன் இதெல்லாம் தாண்டி இனிமே தான் முக்கியமான முடிவுக்கு அவங்க வரவேண்டிய நிலை…” என்று சொல்ல,
“கண்டிப்பா சம்மதிப்பாங்க தானே?…” என்று கேட்டவளுக்கு மெல்லிய புன்னகையை தான் பதிலளித்தான்.
சட்டென்று ஒரு கனத்த சூழல் அவர்களை எடுத்துக்கொண்டதை போலிருக்க கண்களை மூடி சமன்படுத்த முனைந்தாள் ஆழினி.
“நான், நான் உங்க கையை பிடிச்சுக்கனும்…” என்று தடுமாற்றத்துடன் சொல்ல,
“வா…” என்றான் தன் இடதுகையை அவளை நோக்கி நீட்டி.
“எல்லாம் நமக்கு சாதகமாவே நடக்கும்ன்னு சொல்லமுடியாது. எதுவானலும் அதை சமாளிக்க முடியனும். பார்த்துப்போம்…” என்று சொல்ல அவனின் விரலோடு விரல்களை சேர்த்தவள் கைகள் தந்த அழுத்தத்தில் மீண்டும் அவள் முகம் பார்த்தான்.
“ஞாபகங்கள் ஞாபகமாவே போயிட வேண்டாமே?…” என்று சொல்லியவள் குரலின் நடுக்கத்தில் அவளின் கரம் கோர்த்த விரல்களை தன் நெஞ்சில் அழுத்திக்கொண்டான் கார்மேகவண்ணன்.