மருத்துவமனை வரும்வரை ஆழினி எதுவும் பேசவில்லை. கார்மேகவண்ணனும் அவளின் அமைதி கலையாதவண்ணம் தான் இருந்தான்.
“உள்ள போய் வெய்ட் பண்ணு. பார்க் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லியவன் அவள் இறங்கியதும் காரை நிறுத்திவிட்டு, கார் சாவியை விரலில் சுழற்றியபடி உள்ளே வர அங்கே யாரிடமோ நின்று பேசிக்கொண்டிருந்தாள் ஆழினி.
அவளின் ஒருபக்கம் மட்டும் தெரிய எதிரில் யார் என்பது கண்களில் விழவில்லை. அவளை நெருங்கி சென்றவன் வாய் திறக்கும்முன்,
“இதை தானே நீங்க எதிர்பார்த்தீங்க. இப்ப சந்தோஷமா?…” என்று ஆவேசமாய் கேட்டுக்கொண்டிருந்தது சாட்சாத் சஞ்சனாவே தான்.
பார்த்ததும் கார்மேகவண்ணன் அப்படியே நகர்ந்து நின்றுவிட்டான் அவர்களின் கண்களில் படாமல்.
“எவ்வளோ பேசினீங்க அன்னைக்கு. உங்களால என் வாழ்க்கை இன்னைக்கு இப்படியாகிருச்சு….” என்று சஞ்சனா சொல்ல,
“வாட், கம் அகைன். என்னால உன் வாழ்க்கை இப்படியாச்சா? இதை சொல்ல வெட்கமாயில்லையா உனக்கு?…” என்றாள் ஆழினியும் அடக்கப்பட்ட கோபத்துடன்.
அவளின் கேள்வியில் சஞ்சனா பேச்சின்றி நின்றாலும் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
அன்றைக்கு ஆழினி பேசாமல் இருந்திருந்தால் அனைத்து விஷயங்களும் அவளின் கணவனுக்கு தெரிந்திருக்கவே போவதில்லை.
ஆத்திரத்தில் சஞ்சனா பொறுமை இழந்தாள் இப்போதும். தன் சுயநலமே பெரிது என வாழ்பவளின் நியாயத்தில் நியாயத்திற்கு உயிரில்லை.
“பேசு, எவ்வளோ பேசின? அன்னைக்குமே என்ன கேட்டேன் உன்னை. நீ மட்டும் ஒருவார்த்தை சொல்லியிருந்தா, இல்லை முன்னாடியே கண்ணன் கிட்ட உன் சூழ்நிலையை சொல்லி விலகிக்கறேன்னு பேசியிருந்தா போலீஸ் ஸ்டேஷன் வரை போகவேண்டிய அவசியமே இல்லையே? இதை தானே கேட்டேன்…” என்ற ஆழினி,
“உன் மேல அவ்வளோ கோவத்துல இருந்தேன். நான் நினைச்சிருந்தா உன்னை உன் மாப்பிள்ளைட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கமுடியும். இன்பாக்ட் நான் அப்படித்தான் நினைச்சேன். அப்பறம் தான் ஒரு யோசனை…” என்று சொல்லி சஞ்சனாவை பார்க்க,
“அதான் தெரிய வச்சுட்டீங்களே?…” என்றாள் கோபமாய்.
“அது இன்டென்ஷனோட பண்ணலை. ஆக்ஸிடன்ட். ஆனா நான் நினைச்சேன்னு சொல்றது முழுக்க முழுக்க உன் மேல வந்த கோபத்தால கல்யாணத்தை நிறுத்திடனும்ன்ற எண்ணத்துல. ஆனா அப்படி பண்ணி நீ திரும்பவும் கண்ணன் லைஃப்ல வர நினைச்சுட்டா?…” என்றதும் சஞ்சனா வாய் பொத்தி பார்த்தாள் ஆழினியை.
“அதான் கல்யாணம் முடிஞ்சு எப்படியோ போகட்டும்ன்னு விட்டேன். திரும்ப உன்னை பார்த்திடவே கூடாதுன்னு இருந்த இடத்துல நீயா தான் என்கிட்ட வந்து பேசின. ஏற்கனவே வெறுப்புல ரோட்ல நின்னுட்டிருந்த என்கிட்ட வந்து பிரச்சனை பண்ண வந்திருக்கியான்னு எகிறினது யார்?…” என்றதும் சஞ்சனா பரிதாபமாய் பார்த்தாள்.
“வேற ஒரு ஞாபகத்துல அந்த பக்கம் வந்துட்டேன். இருந்த டென்ஷன்ல நீ வேற சிக்கிட்ட. நான் பேசினேன். தப்பாவும் பேசலை. உண்மையை பேசினேன். நீ யூஸ் பண்ணிக்கிட்ட தானே? அதை தானே சொன்னேன்? உன் புருஷனுக்காச்சும் உண்மையா இருப்பியான்னு கேட்டேன். அந்த ஒரு டவுட் உன்மேல…”
“நான் எப்படியும் போறேன். அந்த கவலை உங்களுக்கு ஏன்?…” என்று சஞ்சனா கேட்க,
“அதை கண்ணனை ஸ்டேஷன்ல வைக்கிறதுக்கு முன்னாடி நீ யோசிச்சிருக்கனும். எப்படியும் போயிருக்கனும். ஏன் அப்போ வாயை மூடிட்டு இருந்த?…” என்று எள்ளலாய் ஆழினி கேட்க சஞ்சனா முகம் கறுத்தது.
“இப்ப வந்து வாழ்க்கை பாழாகிருச்சு, பன்னீராகிருச்சுன்னு. வழி விடு…” என்றாள் ஆழினி.
“ஆமா, பாழா தான் போச்சு. இல்லைன்னா வெளிநாட்டுல இருக்கவேண்டியவ…” என்று சொல்லும்பொழுதே,
“எம்மா எங்க போன? உன் மாமியார் கூப்பிட்டுட்டே இருக்காங்க. நீதான் வந்து ஹெல்ப் பண்ணனுமாம். எங்களை விடமாட்டேன்றாங்க…” என்று நர்ஸ் வந்து அழைக்க,
“இதோ வரேன் சிஸ்டர். நான் எங்க போனேன்னு எதுவும் கேட்டாங்களா?…” என்றாள் பதட்டமாய் சஞ்சனா.
“இப்ப தான உன்னை பார்க்கறேன். கேட்டாங்க. தெரியலைன்னேன்…” என நர்ஸ் சொல்ல,
“இந்த நர்ஸ்க்கு இங்க சம்பளம் குடுக்காங்க. எனக்கு சம்பளமில்லை. இப்ப இதுதான் என் நிலைமை. என்னால என் வீட்டுக்கும் திரும்பபோக முடியாது. உன் பாடு, உன் புருஷன் பேச்சை கேட்டு இருன்னு சொல்றாங்க. சந்தோஷமா?…” என்றாள் கண்ணீருடன்.
“யாருமே யார் நிலைமைக்கும் காரணமாக முடியாது. அவங்கவங்க எடுக்கற முடிவுக்கு வேற ஒருத்தர் பொறுப்பாகவும் முடியாது. இது நீயா தேர்ந்தெடுத்துக்கிட்ட வாழ்க்கை. இதோட கஷ்ட நஷ்டங்கள் உன்னோட. ஆனா இப்பவும் உனக்காக நான் வருத்தப்பட கூடமாட்டேன். நீ யாரோ எனக்கு….” என்றவள்,
“அவ்வளோ தான். நீ சொன்னியே இதுல எனக்கு சந்தோஷம். அது தேவையும் இல்லை. நீ என் நினைவுல நிக்காம இருந்தாலே போதும். சஞ்சனான்ற ஒருத்தி ஞாபகம் எனக்கு வேண்டவே வேண்டாம்…” என்று சொல்லி அவளை தாண்டி சென்றுவிட்டாள் ஆழினி.
சஞ்சனா திகைப்புடன் நின்றுவிட்டாள் ஆழினியின் பேச்சில். குற்றவுணர்ச்சி எல்லாம் இல்லை.
ஆனால் அவள் பேசி சென்றதில் அந்த நிமிட திகைப்பும், ஆழினியை வேறு ஒன்றும் பேசமுடியவில்லையே என்ற ஆத்திரமும்.
“எம்மா நீ இன்னும் போகலையா? உன் மாமியார் அனத்துது….” என மீண்டும் நர்ஸ் வந்து சொல்ல,
“இதோ போறேன்…” என்று ஓடினாள் சஞ்சனா.
வாழ்க்கை அவளை இனி இப்படியான ஓட்டத்தில் தான் வைத்திருக்க போகிறது என்று தெரிந்துதான் இருந்தது.
எத்தனை ஆசையாய் எதிர்காலமே மாறவிருக்கிறது, இந்த நாட்டை விட்டே செல்ல போகிறோம் என்று என்னென்னவோ நினைத்து அந்த திருமணத்தை அவள் செய்துகொள்ள அத்தனையும் தலைகீழ்.
கட்டிக்கொண்டவன் காதலென காண்பித்ததெல்லாம் ஒருவாரம் மட்டுமே. பெற்றோருக்காக மட்டுமே திருமணம்.
அவர்களை பார்த்துக்கொண்டு அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களுக்கு துணையிருக்க சஞ்சனாவை மஞ்சள் கயறிட்டு அழைத்து சென்றிருந்தான்.
அரசலபுரசலாக சஞ்சனாவின் முந்தைய விவகாரம் அவள் கணவனின் காதில் விழ, என்னவென்று கேட்டவனிடம் அப்போதும் நண்பனாய் பழகியவன் ஒருதலையாய் தன்னை காதலித்து, பிரச்சனை செய்ததாக கூறிவைத்தாள்.
தான் தப்பிக்க பொய்க்கு மேல் பொய். அஸ்திவாரமே பொய்யில் எனும்பொழுது ஆட்டம் கண்டுதானே ஆகவேண்டும்.
ஆழினியின் பேச்சை கேட்டுவிட்ட சஞ்சனாவின் கணவன் அதன்பின் அவளிடம் காண்பித்த முகமே வேறு.
நொந்துகொண்டு பல்லை கடித்து பொறுத்து போவதை தவிர வேறு வழியில்லை என்னும் நிலையில் சஞ்சனா.
ஆழினி கடந்து சென்றதும் சஞ்சனாவும் அவளின் மாமியார் இருக்கும் அறைக்கு திரும்ப, அதுவரை நின்று வேடிக்கை பார்த்த கார்மேகவண்ணன் வேகநடையிட்டு ஆழினியை நோக்கி சென்றான்.
அறைக்குள் நுழையும் முன் தன் நாசியை துளைத்த அந்த வாசனை திரவியத்தின் வாசத்தில் சட்டென திரும்பினாள் சஞ்சனா.
அவளை கடந்து சென்றிருந்த கார்மேகவண்ணனின் பின்புறம் கண்டே அவனை கண்டுகொண்டவளுக்கு அவனும் ஆழினியுடன் வந்திருப்பதை புரிந்துகொண்டாள்.
அத்தனை கோபம், அவ்வளவு ஆத்திரம். எத்தனை தூரம் நகையை, பரிசு பொருட்களை கேட்டு வைத்து தன்னை அசிங்கப்படுத்திவிட்டான் என்று இன்றும் ஆறவில்லை அவளுக்கு.
கார்மேகவண்ணன் என்றால் கனிவு, குறும்பு, அக்கறை என்று தான் அவள் நினைத்திருக்க அவன் அவளிடம் காண்பித்த அந்த முகம் எதிர்பாராதது.
“இன்னும் அங்க என்னடி வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? என் மகனுக்கு ஒரு போனை போட்டா தான் சரிவரும்…” என்று சுள்ளென்று விழுந்த மாமியாரின் மிரட்டல் குரலும்,
“எவ்வளோ நேரமா கூப்பிடறா, நீ கட்டிக்கிட்டு வந்தவ என்னன்னா ஏன்னு கூட பார்க்கமாட்டேன்றா. இதுதான் உன் பொண்டாட்டியோட லட்சணம். ரொம்ப நல்லா பார்த்துக்கறா போ. நாங்க எங்கியாச்சும் ஹோமுக்கு போறோம்…” என்ற மாமனார்,
“நீயே அவளை என்னன்னு கேளு…” என்று சஞ்சனாவின் கணவனுக்கு அழைப்பு விடுத்து, புகாரும் படித்து, கைபேசியை அவளிடம் நீட்ட நரகம் அழைத்தது அவளை.
அதன்பின் வேறு எதையும் நினைக்கும் சூழலில் அவளில்லை. எதையோ எட்டி உதைத்து பறக்க நினைத்ததன் பலனை அனுபவித்தும் அவள் உணர்ந்துகொள்ளவில்லை.
உணரும்வரை உலகத்தில் அனைத்துமே அவளின் எதிர்வினையாகத்தான் தெரியும் என்பதும் புரியவில்லை சஞ்சனாவிற்கு.
ஆழினி மருத்துவமனையில் வைத்து மீண்டும் சஞ்சனாவை பார்ப்போம் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
நர்ஸிடம் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தவள் தலையை பிடித்துக்கொண்டாள்.
அன்றொருநாள் கார்மேகவண்ணன் ‘அடுத்தவர்கள் கைபேசியை பார்க்கமாட்டேன்’ என்று சொல்லியபொழுது வெறுத்து வெளியே கிளம்பி வந்தவள் நேராக சஞ்சனாவின் வீதியின் பக்கம் வந்துவிட்டாள்.
அவனின் பேச்சும், அடுத்தவள் என்று தன்னை தள்ளி நிறுத்தியதும் வெகுவாய் காயப்படுத்திவிட அதனை ஆற்றும் வழிவகை அறியாமல் தாயில்லா பிள்ளையாய் கதறும் மனதை அடக்கவியலாமல் கை போன போக்கில் காரை செலுத்தி கொண்டுசென்று நிறுத்தி இறங்கி நிற்க,
“நீ இங்க என்ன பன்ற? என்ன திரும்பவும் பிரச்சனை பண்ண வந்திருக்கியா?…” என்றவளின் குரலில் தான் நிகழ்வுக்கே வரமுடிந்தது ஆழினியால்.
கூடவே பதட்டமும். சஞ்சனா இங்குமங்குமாய் பார்வையை சுழற்ற அவள் கண்ணனை தேடுகிறாள் என்று புரிந்து சுர்ரென்று ஏறியது ஆழினிக்கு.
“உன்னை தான். எதுக்கு வந்த? அதான் எல்லாமே வழிச்சு வாங்கிட்டு போய்ட்டீங்களே? இன்னும் குடுக்க என்ன இருக்கு?…” என்ற கேள்வியில் ஆழினியின் பொறுமை, நிதானம் எல்லாம் பறந்திருந்தது.
‘என்னன்னு கேட்க தான் போனேன். இப்படி பண்ணிட்டாங்க. சூழ்நிலையில அவ பேசலைன்னு நினைச்சேன். ஆனா தெரிஞ்சே தான் அவாய்ட் பண்ணியிருக்கான்னு அங்க வச்சு தான் புரிஞ்சது’ என்று வலியுடன் கால்களை அசைக்கமுடியாமல் தந்தையிடம் அவன் கூறிய விதம்.
நினைக்க நினைக்க ரத்தம் சூடாகி கொதித்தேறி உச்சந்தலையில் வந்து ஆவேசமாய் நின்றுவிட்டது ஆழினிக்கு.
“குடுக்க ஏன் இல்லை? இதோ…” என்றவள் இடியென ஒற்றை கையை அவளின் கன்னத்தில் பதிக்க தலைசுற்றி தடுமாறி காரின் பேனட்டை பிடித்து நின்றாள் சஞ்சனா.
சற்றுதள்ளி மரத்தினருகே நின்றதனால் அத்தனையாய் யாரும் இவர்களை கவனித்திருக்கவில்லை என்று சஞ்சனா அந்த நொடிகூட பார்வையால் ஆராய்ந்துகொண்டாள்.