பதட்டம். மறுவீடு வந்திருக்கும் நேரம் இவள் இப்படி வந்து நிற்க பழிவாங்க வந்துவிட்டனரோ என்று தான் பதறி யாரும் பாராமல் ஓடிவந்தாள் ஆழினியை விரட்டவென்று.
வந்ததற்கு அடியும் வாங்கியாகிற்று. இப்போது இப்படி இவள் கிளம்பும் சாத்தியமில்லாததை போல நிற்க பயந்து வந்தது.
தன் கணவன் வேறு முதல்நாள் தான் ‘என்னவோ பிரச்சனையாமே?’ என்று மேம்போக்காய் கேட்டிருக்க தப்பிக்கவென்று கதை சொல்லியிருந்தாள்.
இப்போது அவனும் ஆழினியை பார்த்துவிட்டால் என்ற அச்சம் அவளை அரிக்க ஆரம்பிக்க,
“ப்ளீஸ் கிளம்புங்க…” என்று கெஞ்சவே செய்ய,
“அப்படியெல்லாம் கிளம்ப முடியாது. என்ன சொன்ன? வழிச்சு வாங்கிட்டு போய்ட்டீங்களேன்னு தானே? அதை பத்தி பேசுவோமா?…” என்று சாவகாசமாய் பேசுவதை போல பார்த்தவள் கண்களில் நெருப்பு பறந்தது.
கேட்டதோடு நில்லாமல் ஒவ்வொன்றாய் வேறு சொல்லி விசாரிக்க பயந்து போனாள் சஞ்சனா ஆழினியின் பேச்சில்.
“ஒருத்தரை ஏமாத்தி அந்த பணத்துல, உழைப்புல வாழ்ந்துட்டு படிச்சிட்டு, பரிசுன்னு சொல்லி கொள்ளையடிச்சுட்டு எவ்வளோ தைரியம் இருக்கனும் என்கிட்டயும் இப்படி பேச?…” என்ற ஆழினி,
“பொருளை எல்லாம் குடுத்துட்ட, கண்ணன் படிக்கவச்ச படிப்பை என்ன செய்ய போற? உன் பாரின் புருஷனுக்கான படிச்சதை தூக்கி போட போறியா? இல்லை அந்த பணத்தை திருப்பி தரப்போறியா?…” என்றாள்.
“பணம் தானே? என் புருஷன்கிட்ட நிறைய இருக்கு. படிக்கவச்ச காசையும் திருப்பி குடுத்துடறேன். இனிமே இப்படி வந்து என்னை டார்ச்சர் பண்ணாதீங்க…” என்ற சஞ்சனாவை ஆழ்ந்து பார்த்தாள் ஆழினி.
“இப்ப கூட உன்னோட தப்பை நீ உணரலை இல்ல? என்ன பொண்ணு நீ? பணத்தை குடுத்துட்ட சரி. மனசு? அதுக்கு என்ன சொல்லுவ? ஆனா உன்கிட்ட அதைபத்தி பேசி நோ யூஸ்ன்னு புரிஞ்சு போச்சு. உன்னோட பேசறதே வேஸ்ட். ஆனா ஒன்னு திரும்ப நீ என் கண்ணுல பட்டுடாத….” என்று சொல்லிவிட்டு காரை எடுத்து வந்திருக்க அடுத்த வீதியில் பஞ்சர் என்று நின்றுவிட்டது வாகனம்.
ஆழினியே அறியாதது அவள் பேசியது எல்லாம் தள்ளிநின்று சஞ்சனாவின் கணவன் கவனித்துவிட்டான் என்று.
இப்போது அதனை நினைத்தவளுக்கு இன்றைய சஞ்சனாவின் நிலையில் பரிதாபம் தான் எழுந்தது.
‘தானாய் தேடிக்கொண்ட வாழ்க்கை. அவள் பாடு’ என்று சொல்லிவிட்டு வந்தாலும் திருமணமான பொழுது பார்த்தவளுக்கும், இப்போது இருப்பவளுக்குமான வித்தியாச தோற்றத்தை நன்றாக உணரமுடிந்தது.
தலை வேறு விண்ணென்று வலிக்க கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் ஆழினி.
“எந்த கோட்டையை பிடிக்க இவ்வளோ தீவிர யோசனை மேடம்?…” என்றபடி தன்னருகில் அமர்ந்தவனை திடுக்கிட்டு பார்த்தவள் கண்களில் கலவரம்.
“கொஞ்சநாளாவே எதுக்கெடுத்தாலும் ஷாக். எப்ப பார் கண்ணீர். முகவாட்டம்ன்னு இதென்ன புது ஆழினி? உதை விழும் பார்த்துக்கோ…” என்று இலகுவாய் பேசினான்.
அவன் சஞ்சனாவை பார்த்திருப்பானா என்று ஒருமனம் அடித்துக்கொண்டாலும் இன்னொரு மனம் கடவுளே பார்த்திருக்கவேண்டாம் என்று தோன்ற, ஒருவேளை பார்த்திருந்தால்?
பரிதாபம் கொண்டு கூட அவன் அவளை நினைப்பதை எண்ணத்தில் கூட கொண்டுவரமுடியவில்லை ஆழினியால்.
அதுவும் இப்போது, இந்த நேரம், தன் மனதை அவன் உணர்ந்திருந்த நேரம் இதை விரும்பவே இல்லை.
“பிடிக்கலையா?…” என்றாள் கம்மிவிட்ட குரலில்.
“ஹ்ம்ம், வாட்?…” என்று அவன் கேட்க,
“இந்த ஆழினியை…” என அவள் முடிக்க,
“என்ன சொல்லனும்? நீ எதை எதிர்பார்க்கிற ஆழினி?…” என்றான் அமர்த்தலாக.
ஒரு பெருமூச்சுடன் இருக்கையின் பின்னால் சாய்ந்தவள் முகம் ஆயாசத்திற்கு மாறியது.
“ஒருவிஷயம் நான் சொல்லனும்…” என்று அவனிடம் இனியும் எதையும் மறைக்க விரும்பாமல் சஞ்சனாவை பார்த்ததை பேச நினைத்தாள்.
“ஆழினி…” என்று நர்ஸ் அழைக்க,
“வா…” என்று தானும் எழுந்துகொண்டான்.
“நான் போய்ட்டு வரேனே?…”
“ஏன்? வேற எதுவும் செக்கப் இருக்கா?…” என கேட்டான்.
“ப்ச், அதெல்லாம் இல்லை. நீங்க வெய்ட் பண்ணுங்க…” என்று சொல்லவும்,
“ஓகே…” என்று இரு தோள்களையும் லேசாய் தூக்கி குலுக்கியவன் அங்கே அமர்ந்துகொள்ள ஆழினி அப்படியே நின்றுவிட்டாள்.
“போகலையா? நின்னுட்ட?…” என்ற கார்மேகவண்ணன் பார்வையில்,
இருவருமாக மருத்துவரை பார்த்துவிட்டு ஆழினியின் காயத்தை பிரித்து மருந்தை போட்டவர்,
“இப்படியே விட்டுடலாம். தண்ணி படாம பார்த்துக்கோங்க…” என்று அதற்கான அறிவுரை சொல்லிவிட்டு அவளின் தலைவலிக்கும் மாத்திரை எழுதி தந்து அனுப்ப இருவரும் வெளியே வந்தனர்.
“முக்கியமான விஷயம் பேசனும்ன்னு சொன்னீங்க. எதுவும் பேசலையே?…”
“சொன்னேன். ஆனா இப்ப வேண்டாம். ஈவ்னிங் பேசறேன். நீ சொல்லு. எங்க போகனும்? வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாமா? இல்லை…”
“ம்ஹூம், ஆபீஸ் போலாம். சும்மாயிருந்தா மூளை என்னன்னவோ நினைக்குது. புத்தி தடுமாறுது…” தன்னை போல அவள் பேசிக்கொண்டே சஞ்சனாவை பார்த்த இடம் நோக்கி வந்தவளுக்கு அதீத படபடப்பு.
“புத்தி ஏன் தடுமாறுது? என்னவோ நினைக்க என்ன இருக்கு? நீ என்னை தானே நினைப்ப?…” என சிரித்தபடி கேட்டவன் கைகள் அவளின் தோளில் அணைவாய் அமர்ந்துகொள்ள ஆழினியும் அவனை ஒட்டியபடி அந்த அறையை கடந்தாள்.
‘வெளில வந்துடக்கூடாது. வந்துடக்கூடாது’ என்று நினைத்தபடி அவ்விடத்தை கடந்துவிட்டாலும் அவளால் ஆசுவாசம் கொள்ளமுடியவில்லை.
ஒரு பெருமூச்சுடன் அந்த பகுதியிலிருந்து அடுத்த திருப்பத்தில் திரும்பும்முன் பார்வையும் அங்கே திரும்பி பார்க்க,
ஆழினியின் நடை நின்றுவிட்டது அப்படியே. அவளை திரும்பி பார்த்தவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை.
‘ஆக, கவனித்துவிட்டு தான் வந்திருக்கிறான்’ என்று அவன் பார்வையில் கண்டுகொண்டாள் ஆழினி.
இதற்காக தான் பேசவந்த விஷயத்தையும் பேசவில்லையோ என்று நினைத்தவள் என்ன சொல்வானோ என்று பார்க்க,
“ப்ச், வா….” என்று மீண்டும் அவளின் தோளில் கையிட்டு அழைத்து சென்றான்.
“நான் நான் சஞ்சனாவை பார்த்து பேசினேன்…” என்று தானாகவே ஆழினி சொல்ல,
“ஓஹ்…” என்று மட்டுமே அவனின் பிரதிபலிப்பு.
“என்னன்னா…” என்னும் பொழுது சக்கர நாற்காலியில் மாமியாரை அமர வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு எதிரே வந்தாள் சஞ்சனா.
பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டது கார்மேகவண்ணனையும், அவன் கைகளின் அணைவில் ஆழினியையும் கண்டு.
இப்படி எதிர்ப்படுவாள் என்று ஆழினியும் நினைக்கவில்லை. கண்ணனை நிமிர்ந்து பார்க்க அப்படி ஒருத்தியின் இருப்பையே உணராதவன் போல,
“சொல்லு, என்னவோ பேசிட்டே வந்துட்டு இப்படி ஸ்டாப் பண்ணிட்ட? ஸ்பீக் அவுட்…” என்று புன்னகைத்தான் ஆழினியிடம்.
பேசிக்கொண்டே காரிருக்கும் இடத்திற்கும் வந்து அவளை அமரவைத்துவிட்டு தானும் அமர,
“கண்ணா…” என்றவளுக்கு வார்த்தைகள் திக்கிக்கொண்டு தொண்டையை விட்டு வெளிவரவில்லை.
“ஹ்ம்ம், எப்பவும் உன்னோட, உனக்கு மட்டுமேயான கண்ணன். கார்மேகவண்ணன். இந்த கடலுக்கு மட்டும் சொந்தமான வானம். புரியுதா? பைத்தியம்…” என்று சொல்லி அவளின் உச்சந்தலையில் கைவைத்து லேசாய் அழுத்திக்கொடுத்தவன்,
“சைலன்ட்டா வராத ஆழினி. மனசுல அடைச்சுக்காத. பேசிடு…” என்று சொல்ல கலங்கும் விழிகளை துடைத்தபடி சஞ்சனாவை பார்த்து பேசிய இரு நிகழ்வுகளையும் அவள் பகிர முகத்தில் எவ்வித மாறுதலுமின்றி கேட்டுக்கொண்டே வந்தான்.
அலுவலகம் வந்தவன் அவளை விட்டுவிட்டு விடுமுறை சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்ப,
“என்னடா மச்சான். ஆபீஸை மறந்துட்ட?…” என்று வந்துநின்றான் நஞ்சப்பன்.
“அட போப்பா. எனக்கு வேலை இருக்கு. தெரியாம உன்கிட்ட கேட்டுட்டேன்…” என்று ஒரே ஓட்டமாக அலுவலகம் புகுந்துவிட்டான்.
சிரித்தபடி முதல்நாள் அங்கே நிறுத்தப்பட்டிருந்த தனது பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியவன் விடாப்பிடியாக மகிழாவை கிளப்பிக்கொண்டு சித்தாராவை பார்க்க வந்துவிட்டான்.
“வா கண்ணா…” என்ற சித்தாரா, அரண்ட முகத்துடன் வந்த மகிழாவை பார்க்க என்னவோ புரிவதை போலிருந்தது.
மனது திடுக் திடுக்கென்று ஓசையை எழுப்பினாலும் எதுவானாலும் வரட்டும் என்று எப்போதும் போலவே அவனை உபசரித்தார்.
“என்ன கண்ணு விரியுது. இந்த ஸீன்க்கு கண்ணு கலங்கனுமே?…” என கண்ணன் கேட்க,
“ஆழியா?…” என்றார் இன்னும் நம்பமுடியாமல்.
காலையில் பார்த்ததில் இது மகள் விருப்பம் என்று நினைத்தாலும் கண்ணனிடம் பெரிதாய் அதனை யோசிக்கவில்லை.
“ஆழியா இல்லை? ஆழினி…” என்றவன்,
“ஏன் சித்தும்மா உங்க பொண்ணு என்னை நல்லா பார்த்துக்கமாட்டான்னு கவலைப்படறீங்களா? பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்….” என்றவனை கோபிக்கவா முடியும்?
அதிர்ச்சியை விழுங்கவே அவருக்கு நேரமெடுத்தது. இந்த கோணத்தில் அவர் என்றைக்குமே யோசித்ததில்லை.
இது தன் கணவனுக்கு தெரிந்தால்? அது ஒருபக்கம் வேறு பயத்தை தந்திருக்க எதிர்பார்ப்புடன் தன்னை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு என்ன பதில் சொல்லமுடியும் என்று பார்த்தார்.
“கண்ணா…” என சித்தாரா பார்க்க,
“என்னடா, ஏற்கனவே வேற ஒரு பொண்ணை நினைச்சு ஸ்டேஷன் வரை போய்ட்டு வந்தவனுக்கு எப்படி நம்ம பொண்ணை குடுக்கன்னு யோசனையா?…” என்றவன் கேள்வி சுருக்கென்று தைத்தது சித்தாராவையும், மகிழாவையும்.
“வெளிப்படையா சொல்லிருங்க சித்தும்மா. கட்டாயம் எல்லாம் இல்லை. எனக்கும் ஆழினிக்கும் பிடிச்சிருக்கு. இனி உங்க விருப்பம் தான்…” என்று சொல்லியவன் முகத்தில் அந்த புன்னகை வாடவில்லை.
‘இந்த விஷயத்தால நம்ம குடும்பத்துல ஒருத்தருக்கும் மனக்கஷ்டமோ, மனக்கசப்போ வந்திடக்கூடாது. அதனால அவங்களுக்கிடையில சின்ன விரிசலோ, விலகலோ வந்தாலும் நான் தாங்கிக்கமாட்டேன். பார்த்துக்கோங்க.’ என்று கண்கள் கலங்க அவனின் கைபிடித்து சொல்லியவள் விழிகளின் தேடலில் இங்கே கண்ணன் தொலைந்துகொண்டிருந்தான்.
சித்தாராவின் அமைதியில் தன் அமைதி சோதிக்கப்படுவதை உணர்ந்தவன் நெஞ்சமும் ஆழ்கடலின் ஞாபகங்கள் மத்தியில் திண்டாட துவங்கியது.