சித்தாராவின் மௌனத்தை சிலநொடிகள் மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.
அவரின் பதில் சொல்லவியலாத இயலாமை பார்வையை சத்தியமாய் கார்மேகவண்ணனால் எதிர்கொள்ள முடியவில்லை.
“நான் கிளம்பறேன் சித்தும்மா…” என்று புன்னகை மாறா முகத்துடன் அவன் எழுந்துகொள்ள,
“கண்ணா இருடா…” என்று அவனின் கையை பிடித்து நிறுத்திவிட்டார்.
இது அவர் மட்டும் எடுக்கக்கூடிய முடிவில்லையே. வாழவந்தானிடமும் பேசவேண்டும்.
அதையும்விட இரு குடும்பங்களுக்கும் அதில் பரிபூரணமான விருப்பமா என அறியவேண்டும்.
“ஏன் கிளம்பற? இரு…” என்று அவர் சொல்லி மகிழாவை பார்த்தார்.
மகிழாவின் முகத்தில் அச்சம் மட்டுமே வியாப்பித்திருக்க எதை கொண்டு தன் முடிவை சொல்ல என்று யோசித்தார்.
இது மகளின் விருப்பம் கூட என்பது தெளிவாய் தெரிந்துவிட்டது. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது சொல்லவும் இன்னுமே குழப்பத்தில் ஆழ்ந்தார்.
அதிர்ச்சி, திகைப்பு, குழப்பம் எல்லாம் தள்ளிவைத்துவிட்டு பார்த்தால் முழுமனதாய் இதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அந்த சூழ்நிலையிலும் அவன் மனவருத்தத்துடன் கிளம்புவதை சுத்தமாய் பொறுக்கமுடியவில்லை சித்தாராவிற்கு.
“ப்ளீஸ் சித்தும்மா, உங்களோட பார்வையை என்னால பேஸ் பண்ணவே முடியலை. நான் தப்பு பண்ணிட்டேன்ற அர்த்ததுல சொல்லலை. நானும் ஆழினியும் விரும்பறோம். இதுல தப்பா எதுவும் தெரியலை எனக்கு…” என்றவன்,
“ஆனா எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம இப்படி நீங்க இருக்கறதை என்னால பார்க்க முடியலை. உங்களுக்கு இதுல விருப்பம் இல்லைன்னு சொன்னாலும் எனக்கு உங்கமேல எந்த வருத்தமும் இருக்க போறதில்லை….” என்றான்.
“இல்லை கண்ணா, நான்…”
“ப்ச், இப்ப தான சொன்னேன். இப்படி யோசிச்சு பேசற அளவுக்கு எதுவுமே இல்லை. உங்களை கஷ்டப்படுத்திக்காதீங்க சித்தும்மா…” என்று அவரின் கையை பற்றி சொல்ல,
“நீ,,, நீ போகாத. கொஞ்சநேரம் இருடா. இங்க உக்கார்…” என்று அவன் பேசியதை எதையும் காதில் வாங்க முடியவில்லை சித்தாராவல்.
“கண்ணா…” என்று இறைஞ்சுதலாய் பார்த்தார்.
“நான் உன் மாமாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வரவா?…” என்று கையில் கைபேசியுடன் வாழவந்தானுக்கு அழைத்தபடி கேட்கவும்,
“ஹ்ம்ம்…” என்றான் மௌனமாய் தலையசைத்து மெல்லிய சத்தத்துடன் கார்மேகவண்ணன்.
அந்த சிரிப்பும், தலையசைப்பும் அடிவயிற்றை சுருட்டி சுளீரென்ற வேதனையை பரப்பிவிட்டது சித்தாராவுக்கு.
வலியுடனான புன்னகையை முதன்முதலில் கண்ணனின் முகத்தில் காண்கிறார் சித்தாரா.
“கண்ணா…”
“ஆழினியை தரலைன்னா கூட ஓகே சித்தும்மா. ப்ளீஸ். இப்படி பார்க்காதீங்க…” என்று அவரின் கையை எடுத்து தன் கண்ணில் பதித்தபடி மடங்கி அமர்ந்துகொண்டான்.
எத்தனை முறை ஆழினியை அந்த வார்த்தையை சொல்லக்கூடாதென்று அதட்டியிருக்கிறான்?
‘எதுக்கு ப்ளீஸ்? கெஞ்சி அப்படி என்ன வேணும் உனக்கு? இன்னொருதடவை சொல்லு பேசிக்கறேன்’ என்று அதனை செய்யவிட்டதில்லை.
அவன் இப்பொழுது அதையே சொல்லி கேட்கவும் சித்தாராவிற்கு மனமெல்லாம் பாரமாகியது.
“எனக்கு உனக்கப்பறம் தான்டா என் பொண்ணு. உரிமையா நீ கேட்டா நாங்க மறுக்கமாட்டோம் கண்ணா. ஆனா ஆனா…” என்று கைகள் அவனின் நிலை தாளாமல் பேசியவர் கைபேசியை அப்படியே வைத்துவிட்டு கண்ணனின் அருகிலமர்ந்துகொண்டார்.
“இது நான் மட்டுமே எடுக்கற முடிவில்லை கண்ணா. நாங்க இதுவரைக்கும் அப்படி ஒரு நினைப்பை யோசிச்சு கூட பார்த்ததில்லையா? அதான் கொஞ்சம் ஷாக்…” என்றவருக்கு அவனிடம் வேறு என்ன பேச என்று தெரியவில்லை.
தான் அழைத்த அழைப்பில் வாழவந்தானும் அதனை அங்கே கேட்டுக்கொண்டிருப்பதையும் கவனிக்காமல் போனார் சித்தாரா.
“நீ எப்பவும் உன் மாமாக்கிட்ட தானே முதல்ல சொல்லுவ? இப்படி என்கிட்ட சொல்லி எதுக்குடா ஷாக் குடுக்கற? என்னை பதில் சொல்லவிடாம திணறடிக்கிற?…” என்றதற்கு மௌனமாய் சிரித்தவன்,
“நீங்க தானே காலையில முதல்ல ஆழியை கண்டுபிடிச்சது?…” என்றான் கண்சிமிட்டியபடி.
“அட படவா?…” என்றவர் முகம் இன்னும் தெளியவில்லை.
“எனக்கும் ஷாக் தான். ஆனா உங்களுக்கு தெரிஞ்சிடுச்சுன்னு புரிஞ்சும் நான் சொல்லாம இருக்க முடியாதில்லையா?…” என்றவனுக்கு ஆழினியின் இத்தனை வருட காதலை அவர்களிடம் சொல்லவும் மனம் வரவில்லை.
தன் விஷயமென்றால் ஆமாம் என்று பட்டென்று போட்டு உடைத்திருப்பான். இது அவள் பொத்தி பொத்தி வைத்து வளர்த்த வர்ண பிம்பம்.
அதனை அப்படி வெளிப்படுத்த அவன் மனம் இடம்தரவில்லை. முதலில் தனக்கே ஆழினியின் மனதறிந்து ஏற்க முடியாமல் தானே திணறினோம் என்று அவர்கள் பக்கம் நின்று யோசித்தான் கார்மேகவண்ணன்.
மகிழாவிடம் சொல்லும் பொழுதும் அவர் முதலில் பேசியது அவனின் முதல் காதல் என்று எண்ணிய அலங்கோலத்தை தான்.
“அதெப்படி சரிவரும் கண்ணா? அவங்க இதையெல்லாம் யோசிப்பாங்க. எத்தனை இருந்தாலும் பழக்கவழக்கம், உறவுமுறை வேற. கல்யாண சம்பந்தம் வேற கண்ணா…” என்று தட்டுத்தடுமாறி நிதர்சனத்தை சொல்லிவிட்டார்.
“ம்மா, எனக்கு பிடிச்சிருக்கு. எங்க ரெண்டுபேருக்குமே பிடிச்சிருக்கு. இதை என்னால மாமா, சித்தும்மாக்கிட்ட மறைக்கமுடியாது. அது பெரிய தப்பு. நம்பிக்கையை ஏமாத்தறது ஆகிடும். எதுவானாலும் சரி. அவங்க விருப்பமில்லைன்னாலும் சரி. நான் ஏத்துப்பேன்…” என்றவன்,
“எனக்கு மட்டுமில்லை, ஆழிக்குமே எல்லாரோட சம்மதமும் முக்கியம். ஒருத்தருக்கு வருத்தம்ன்னாலும் பார்க்கலாம். முதல்ல அதிர்ச்சியா இருக்கும். ஆனா யோசிப்பாங்க இல்லையா?…” என்று அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.
“எனக்கு இஷ்டமான்னு நீ கேட்கவே இல்லையே?…” என கிளம்பும்பொழுது பாவமாய் பார்த்த மகிழாவை அணைத்துக்கொண்டவன்,
“என் அம்மாவை தெரியாதா எனக்கு?…” என்று சொல்லி சிரிக்க,
இப்போது மகனின் பேச்சுக்களும், அவன் அமர்ந்திருந்த விதமும் வெகுவாய் வருத்தியது அவரை.
திருமணம் என்று வருகையில் பெண்ணை கொடுப்பவர்கள் அனைத்தையும் பார்க்கத்தானே செய்வார்கள் என்று உள்ளுக்குள் பதட்டம் தான்.
எத்தனை தான் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி இருந்தாலும் இதனை சட்டென ஏற்றுக்கொள்வார்களா?
‘அப்படியா உன்னை நினைச்சேன்? உன்மேல வச்ச நம்பிக்கையை பாழாக்கிட்டியே?’ இப்படியாக எந்த வார்த்தை குத்தல்களும், குற்றங்களும் இன்றி மகனின் மனது வேதனைகொள்ளாமல் விஷயத்தை சுமூகமாக்கிவிடு என்ற வேண்டுதலுடன் தான் வந்தார்.
இங்கே மகன் வந்து சொல்லியதும் சித்தாராவின் திகைப்பும், அதிர்வும் மகிழாவிற்கு உயிரை பிடுங்கிவிட்டது.
பதட்டமும், பயமுமாய் தான் சித்தாராவை பார்த்துக்கொண்டிருந்தவர் அடுத்தடுத்த பேச்சுக்களில் நெகிழ்ந்து போனார்.
கண்ணனுக்கு வரன் பார்க்க வேண்டும், ஆழினிக்கு வரன் பார்க்கவேண்டும் என்றுதான் பேசிக்கொள்வார்களே தவிர அவர்கள் இருவருக்கும் முடிச்சிட்டுக்கொள்ள வேண்டும் என்று வாய்வார்த்தைக்கு கூட பேசியதில்லை அவர்கள்.
மாப்பிள்ளை, பெண் இப்படி இருக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்திருக்கின்றனர் தான். ஆனால் இருவரையும் இணைக்க தோன்றியதில்லை.
இப்போது பிள்ளைகள் மனதில் எங்கிருந்து இந்த எண்ணம் துவங்கியிருக்கும் என்றொரு பக்கம் வியப்பு என்றாலும் மகிழாவிற்கு கூடுதலான கவலை மகன் செய்துவைத்திருந்த முற்செயல் கொடுமையில்.
முன்பே ஒருத்தி மேல் காதல் என்று காவல்நிலையம் வரை சென்று வந்தவன் என்னும் பிம்பம் ஒட்டிக்கொண்டிருக்கிறதே?
‘ஏன் என் மகனுக்கு என்ன குறை?’ என்று அதட்டலாய் கேட்டுவிட முடியாமல் மகிழாவின் இயல்பும், நிஜமும் தடுத்தது.
இப்போது சித்தாராவின் பேச்சில் ஓரளவு அவர் மனம் அறிந்தாலும் வாழவந்தான் பற்றிய எண்ணமும், அவரின் மகளின் எதிர்கால கனவும் பெரிதாய் அச்சமுறுத்தியது.
“எவ்வளோ நேரம் நிப்ப மகி? உட்கார் முதல்ல…” என்றவர்,
“கண்ணா உனக்கு புரியுதா? நான் என்ன சொல்ல வரேன்னு…” என்று சித்தாரா மீண்டும் ஆரம்பிக்க,
“கொஞ்சநேரம் வெய்ட் பண்ணுங்க சித்தும்மா. இப்பவே எதையும் சொல்லவேண்டாம். எனக்காகன்னு கூட எதையும் பேசவேண்டாம். இப்ப நான் கிளம்பறேன். பொறுமையா சொல்லலாம். பதில் எதுவானாலும் எனக்கு சம்மதம்…” என்று மீண்டும் எழுந்துகொண்டான் அவன்.
“இது கல்யாண விஷயம் மட்டுமில்லை. ரெண்டு குடும்பத்தோட உறவு சம்பந்தப்பட்டது. ரெண்டுபேர் பக்க சொந்தங்களும் இதுல அடக்கம். அதனால மாமாட்ட கலந்து பேசிட்டு எதுவானாலும் சொல்லுங்க. எதுவா இருந்தாலும்…” என்றவன்,
“எனக்கு என்ன தோணுதுன்னு சொல்லிடறேன் சித்தும்மா. சொல்லமுடியாம போயிடுமோன்னு ஒரு தாட். அதான்…” என்று தொண்டையை செருமிக்கொண்டு நிதானமாக முயன்றான்.
ஆழ்ந்த பெருமூச்சுடனான அந்த நொடிநேர அமைதியில் சித்தாராவிற்கு கண்கள் கலங்கியது.
“என்ன மகி இவன் இப்படி பன்றான்?…” என்றார் ஆற்றாமையுடன்.
“என்ன பண்ணேன்? சும்மா சின்னதா ஒரு ரிலாக்ஸ். நான் ஓகே தான் சித்தும்மா…” என்று மீண்டும் கண்சிமிட்டி புன்னகைத்தவன்,
“ஆழினி என்னோட பரிபூரணம்…” என ஆத்மார்த்தமாக கூற, இரு தாய்களும் ஸ்தம்பித்து பார்த்தனர் அவன் சொல்லிய பாவனையில்.
அவர்கள் மட்டுமல்லாது அந்தநேரம் அப்போதுதான் உள்ளே நுழைந்த ஆழினியுமே அந்த வார்த்தையில் அசைவற்று நின்றுவிட்டாள்.
“என்னடா கொஞ்சநாள் முன்னாடி இன்னொருத்திக்காக என்னெல்லாம் செஞ்சுட்டு எங்கெல்லாம் போய்ட்டு வந்தான். இப்ப இங்க இந்த டயலாக் விடறான்னு நீங்க நினைச்சாலும் தப்பில்லை. அது முடிஞ்சு போனது. என் வாழ்க்கையில் இனி நான் திரும்பி பார்க்க விரும்பாத பக்கம்…”
“நான் உண்மையை பேசறேன். நான் என் வாழ்க்கையை ஒருமுறை தவறா தீர்மானிச்சேன் தான். ஆனா எந்த இடத்துலையும் என் எல்லையை தாண்டலை. என் பார்வை கூட. நம்பினாலும் இல்லைன்னாலும் அது உண்மை. அது காதல்ன்னு நானே அப்படி பேர் வச்சுக்கிட்டேன் போல. இதுவரைக்கும் இதை சொல்லனும்ன்னு தோணினதில்லை….”
“ஏன் இங்க உடனே சொல்றேன்னா எங்களுக்குள்ள எங்க மனசை, விருப்பத்தை நேத்து தான் தெரிஞ்சுக்கிட்டோம். இப்படியே சொல்லாம கண்டினியூ பண்ண வேண்டாமேன்னு தோணுச்சு. எனக்கே ஒரு கில்ட் குடுத்திரும். இந்த வீட்டு பொண்ணை காதலிச்சிட்டு பெத்தவங்களை ஏமாத்தி வந்து போற மாதிரி ஒரு எண்ணம் வந்திடக்கூடாது இல்லையா?…” என்று சொல்ல சொல்ல,
“உன்னை தெரியும்டா கண்ணா. இவ்வளோ ஏன் சொல்லி எங்களை கஷ்டப்படுத்தற?…” சித்தாரா அவன் கையை பிடித்துக்கொள்ள,
“நான் பேசலாமா?…” என்றாள் ஆழினி.
அவரின் வருகையை யாரும் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக கார்மேகவண்ணன்.
“உன்னை ட்ராப் பண்ணிட்டு தானே வந்தேன். நீ எப்படி வந்த?…” என்றான் மற்றவற்றை எல்லாம் உதறிவிட்டு ஆழினியிடம்.
அவனின் பார்வை அவளின் கைகாயத்தில் பதிய இன்னும் முறைத்து பார்த்தான் ஆழினியை.