“ஆமா, முன்னாடி ஒருத்தியை நம்பி தொலைச்சிட்டான் தான் இவன். என்ன செய்ய சொல்றீங்க? அதுக்காக நான் அதையே நினைச்சிட்டு இருக்கனுமா? ஏன் திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தறீங்க? ஏன் இப்படி பன்றீங்க எல்லாரும்?…” என்று கேட்டவள் முகத்தை மூடி விசும்ப ஆரம்பிக்க,
“ஆழிம்மா அழறியா?…” என்றவருக்கு பெற்ற வயிறு கலங்கியது.
“ம்மா, ப்ளீஸ். நான் ஏற்கனவே உங்ககிட்ட இதை மறைச்சிட்டேன்ற கில்ட்டியோட இருக்கேன். புரிஞ்சுக்கோங்க…” என்றவள் அருகில் நின்ற மகிழாவை அணைத்துக்கொண்டாள்.
“மகிம்மா, எனக்கு என்னோட காதலை விட நீங்க எல்லாரும் முக்கியம். இந்த விஷயத்தால நீங்க எல்லாம் வருத்தப்பட்டு பேசாம போய்ட்டீங்கன்னா நான் இங்க இருக்கவே மாட்டேன். எனக்கு எல்லாரும் வேணும். எப்பவும், எப்பவும் போல நாம இருக்கிற மாதிரி….”
“காதல்ன்னா அது கண்ணனை மட்டுமில்லை, எல்லாரையும். நம்மோட ஒற்றுமையையும், நம்ம பந்தத்தையும் சேர்த்து தான். எங்கப்பாவோட பாசமும், எங்கம்மாவோட உரிமையான அன்பும் தான் நானும் கண்ணனை அப்படியே பார்த்துக்க வச்சது. மனசுக்குள்ள தோணவச்சது….”
“நான் பார்த்து வளர்ந்த விஷயம் எனக்குள்ள வேறவிதமா வளர்ந்தது. அதுக்குள்ள நீங்க எல்லாருமே இருக்கீங்க. எல்லாரும்ன்னா அம்மா, அப்பா, நீங்க, மாமா, ஷர்மிக்கா, பாப்பான்னு எல்லாருமே. இதுல யாருக்காவது விருப்பம் இல்லைன்னாலும் நானும் அவங்களும் சேராமலே இருந்திருவோம். மகிம்மா, ப்ளீஸ்…” என்று சொல்லி சொல்லி அழ கண்ணன் பிரமித்து பார்த்தான் அவளை.
‘நிஜமாவே நீ கடல் தான் ஆழி’ என்று மனதார நினைத்துக்கொண்டவன் விழிகளும் பனித்திருந்தது.
என்ன சொல்லிவிட முடியும்? ஆழினி மகிழாவை அணைத்திருக்க, சித்தாரா கண்ணனின் கையை பிடித்திருந்தார்.
“ஆழிம்மா, அம்மாவை பாரேன்…” என்று தன் பக்கம் திருப்பியவர்,
“ஏன்டா முன்னாடியே சொல்லலை நீ? அம்மாக்கிட்டையாவது சொல்லியிருக்கலாமே? உன்னை உன் விருப்பத்துக்கு மீறி நாங்க மறுத்துடுவோமா?…” என்று மகளின் கண்ணீரை துடைக்க,
“புரிஞ்சுக்கிட்டா சரி. இல்லைன்னா? அந்த பயம். அது என்னை நிம்மதியாவே இருக்கவிடலை. அதுக்காக தான் கண்ணன்கிட்ட கூட நான் எதையும் சொல்லலை…” என்றாள் தாயிடம்.
“அப்பா வரட்டும். அம்மா பேசறேன்…” என சொல்ல,
“வந்துட்டார் உங்க வீட்டுக்கார். அங்க மறைஞ்சு நிக்கிறாராம். என்ன ஒரு லட்சணம்?…” என்று வழக்கமான குறும்புடன் இலகுவாய் சொல்லமுயன்றான் கார்மேகவண்ணன்.
முயலத்தான் முடிந்தது. வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவே வெளிவந்தது உணர்வுகளின்றி.
இன்னும் முழுமனதாய் அவனால் வெளிவரமுடியவில்லை. அதிகத்திற்கும் உணர்ச்சிவயப்பட்டிருந்தான் ஆழினியின் பேச்சில்.
“ப்பா…” என்ற அழைப்பில் அதுவரை அவர்கள் பார்வையில் இருந்து விலகி இருந்த வாழவந்தான் உள்ளே வந்தார்.
அவரின் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ளமுடியவில்லை. ஆனால் கண்ணனின் பார்வை அவரிடம் மட்டுமே இருந்தது.
“ப்பா நான்…” என்று ஆழினி பேசவர,
“நீ இரு, நான் பேசறேன்…” என்று சித்தாரா சொல்ல,
“அண்ணே நான் கொஞ்சம் பேசனும்….” என்று மகிழா கேட்க அனைவரையும் கையமர்த்தி நிறுத்திவைத்தார்.
“நீ சொல்லு…” என்று ‘கண்ணா’ என்று அழைக்காமல் வெறுமனே பேச கார்மேகவண்ணன் வாய் திறந்தானில்லை.
“சொல்லுடா, நேத்து போன்ல என்ன பாட்டு பாடின?…” என்று கேட்க ஒருநொடி யோசித்தவன்,
“ஓஹ் காட்…” என்று அனைத்தும் விடுபட்ட உணர்வுடன் இடையில் கைவைத்து நின்றவன் இதயம் இறகாய் மிதக்கும் நிலையில் விழிகள் கலங்க கூடவே ஒரு புன்சிரிப்பையும் எடுத்துக்கொண்டான்.
“சொல்லுடா, கேட்கறேன்ல…” என்று அதட்டலாய் கேட்கையில் வாழவந்தான் குரலும் நடுக்கத்துடன் தழுதழுக்க,
“மாமா…” என்றவன் அவரை கட்டி தழுவி தூக்கி சுற்ற,
“விடுடா, விடுடா படவா. என் கூட நீ ஒருவார்த்தை பேசக்கூடாது. ஆமா…” என்று இறக்கிவிட சொல்லி அவனின் தோளில் அத்தனை அடி வைத்தார்.
“என்கிட்ட சொல்லாம இங்க வந்து என்னடா பேசற நீ? எல்லாம் கேட்டுட்டேன்….” என அவனை அந்த வரவேற்பு கூடத்தில் விரட்டி அடிக்க அவரிடம் சிக்காமல் சிரித்தபடி நழுவினான் கார்மேகவண்ணன்.
வழியும் நீரை துடைக்க கூட தோன்றாமல் மற்றவர்கள் பார்க்க, சித்தாரா தனது போனை பார்க்க அழைப்பு இன்னும் அழைப்பில் தான் துண்டிக்கப்படாமல் இருந்தது.
தான் கண்ணனுடன் பேசுகையில் வாழவந்தானும் அழைப்பை ஏற்றிருக்க அதை கவனியாமல் விட்டிருக்கிறோமே என நினைத்தவருக்கு அந்த கவனச்சிதறலும் நன்மைக்கே என்று தோன்றியது.
“பக்கத்துல வாடா, கண்ணா மூச்சு வாங்குதுடா…” என்று அவர் அழைக்கவும் தான் வாழவந்தானின் கைக்குள்ளே வந்து அடங்கி நின்றான் கார்மேகவண்ணன்.
“மாமாக்கிட்ட சொல்லவேண்டாமா? உரிமையா கேட்கவேண்டாமா நீ? அதுவும் என் பொண்ணுக்கும் சம்மதம்ன்னும் போது…” என்றவர் ஆழினியையும் பார்த்து,
“அப்பா மனசு கலங்கிருச்சுடா. என் பிள்ளைங்களுக்கு அந்த பயத்தை குடுத்துட்டேனா நான்?…” என்றார் வருத்தமாய்.
“அண்ணே…” என்று மகிழா அழைக்கவும்,
“எனக்கும் ஒரு ஓரத்துல ஆசை இருந்துச்சு தான்ம்மா மகி. ஆனா வெளி காமிச்சுக்கலை…” என்றவர் தோளோடு நின்றவனை திரும்பி பார்த்து புன்னகைத்துக்கொண்டார்.
“வளர்ற பிள்ளைங்க மனசுல நாம எதையும் விதைக்க கூடாது மகி. நம்ம ஆசை எதுவா இருந்தாலும் அவங்க வளர்ந்து சுயமா முடிவெடுக்கும் போது அவங்களுக்கான நம்ம தேர்வு சரியாவும் இருக்கலாம். தவறாவும் தோணலாம். நமக்காகன்னு ஒரு அனுசரிப்பு வாழ்க்கையை அவங்க வாழக்கூடாது பாரு…” என்றவர்,
“உள்ளுக்குள்ள ஆசை இல்லாம இல்லை. சித்துக்கிட்ட கூட சொன்னதில்லை. என் ஆசைக்காக உங்களை கேட்டுட்டு சங்கடப்படுத்தக்கூடாதுல. விஷயம் சென்ஸிட்டிவ். நான் உரிமையா உங்ககிட்ட கேட்க பலவிஷயம் இருக்கு. உரிமைக்காக வாழ்க்கையை கேட்க முடியாது இல்லையா?…”
“இப்ப என் பிள்ளைங்க என் மனசை குளிர வச்சுட்டாங்க. வேற என்ன வேணும்? இது போதும். என்ன ஒன்னு இதை ஆழினி முன்னாடியே என்கிட்ட சொல்லியிருக்கலாம்….” என்றவர்,
“இங்க வாடாம்மா…” என்று தன் அருகில் மகளை அழைத்து நிறுத்தினார்.
“கம்பெனில என்னோட முடிவுதான் கடைசின்னு சொல்ற மாதிரி உன் வாழ்க்கையிலையும் சொல்லிருவேனோன்னு நினைச்சியோ?…” என்றார்.
“ம்ஹூம் இல்லைப்பா. இதை எனக்காக நீங்க சம்மதிச்சதா இருக்க வேண்டாமேன்னு நினைச்சேன். இதனால நீங்க யாரையும் ஒரு பார்வை வருத்தமா பார்த்திடக்கூடாதுன்னு நினைச்சேன். அது இத்தனைவருஷ நட்புக்கு களங்கமா போயிடக்கூடாதுல…” என்றாள்.
“எனக்கென்ன? எனக்கு முன்னாடியே சம்மதம் தான். நீங்க என்ன சொல்வீங்கன்னு தான் வெய்ட் பண்ணேன் நான். உங்களை கலந்துக்காம நானா முடிவுக்கு வரக்கூடாதுன்னு. ஆனா அந்த தயக்கம் கூட நான் காமிச்சிருக்க கூடாதுல…” என்றார் கார்மேகவண்ணனை பார்த்து.
“ப்ச், சித்தும்மா…” என்று அவரின் கன்னத்தை கிள்ள,
“சரி நான் போய் கமலாவை சமைக்க சொல்றேன். விருந்து ரெடி பண்ணுவோம்…” என்றார் சித்தாரா.
“அப்ப அப்பா அய்யனார்?…” என்று கார்மேகவண்ணன் கேட்கவும் தான்,
“சரி சரி. விடு. அவன் மட்டும் என்ன சொல்ல போறான்? சரின்னு தான் சொல்லுவான்…” என்று சொல்லிவிட்டு,
“கண்ணா, நீயும் மகியும் பேசிட்டு சொல்லுங்க…” என்று கூற,
“இந்த வேலையே வேண்டாம். நாளைக்கு நைட் தான் வருவார் டிடிஆர். நாளை மறுநாள் காலையில நல்லநேரம் பார்த்துட்டு மாப்பிள்ளை பார்க்க வந்து சேருங்க மாமனாரே…”
“என்னடா மரியாதை எல்லாம்?…” வாழவந்தான் சிரிக்க,
“இனிமே எல்லாம் அப்படித்தான்…” என்றான் கார்மேகவண்ணனும் முகமெல்லாம் புன்னகையுடன்.
“எப்படி கோர்த்துவிடறான் பாரேன். சரி சமாளிப்போம்…” என்று சொல்ல அனைவரின் எதிர்பார்ப்பும் கோவேந்தன் வருகையை நோக்கி இருந்தது.
அன்று காலையே மகிழா குளித்து பக்தி பழமாகி வீடெல்லாம் சாம்பிராணி போட்டு பூஜை முடித்து பரபரப்புடன் சுற்றிவந்தார்.
“எந்த ரயிலை பிடிக்க போறியாம்? கைக்குள்ள, காலுக்குள்ள நடந்துட்டிருக்க காலையில இருந்து?…” என்று எரிச்சலுடன் பேசினார் கோவேந்தன்.
அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவரை உலுக்கி எழுப்பி குளிக்க சொல்லி அத்தனை ரகளை செய்திருந்தார் மகிழா.
“இன்னைக்கு என்னடி விசேஷம்? இந்த அநியாயம் பன்ற? லீவ் நாள்ல மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா?…” என்று கடித்து துப்பாத குறையாய் கத்தினார் மனைவியை.
எதற்கும் வாய் திறக்கவில்லை மகிழா. இன்னும் அவரிடம் எதையும் சொல்லியிருக்கவில்லை.
எதுவானாலும் வரட்டும். வந்து வாழவந்தான் பேசிக்கொள்ளட்டும் என்று மகன் அவர் வாய்க்கு பூட்டை போட்டுவிட்டான்.
இன்றைக்கென்று பார்த்து கோவேந்தன் எழுந்ததில் இருந்தே வள்ளென்று விழுந்துகொண்டே இருக்க அதுவேறு மகிழாவின் பிபியை ஏற்றியது.
“இன்னைக்கு எப்படியாச்சும் என்னை காப்பாத்திவிட்டுடு. என் புருஷனுக்கு மொட்டை போடறேன்…” என்று சத்தமில்லாத வேண்டுதலையும் வைத்துவிட்டார் மகிழா.
“அங்க அடுப்படில எந்த சாமிக்கு கும்பிட்டு போட்டுட்டு இருக்க? எவ்வளோ நேரமா குளிச்சுட்டு வந்து வெறும் வயித்தோட காபி கேட்டுட்டு இருக்கேன்? காபி எங்க?…” என்று ஹாலில் இருந்து இரைந்தார்.
“இந்தாங்க…” என்று கொண்டுவந்து நீட்ட,
“என்னடி காபி ஆறி அலந்து போயிருக்கு?…” என அதற்கும் கத்த,
“அது போட்டு வச்சிட்டு சாமி கும்பிட்டேனா? மொட்டை போட லேட்டாகிருச்சு…” என்றார் பதட்டமாய்.
“காது குத்தியாச்சா?…”
“இனிமேத்தான். வாய்க்கனுமே. சிக்கினா குத்திடனும்…” என்று அவரின் கேள்விக்கு ஏனோதானோவென்று வாய்க்கு வந்ததை பதிலாய் சொல்லியபடி மகன் அறையையும், வாசலையுமாய் மகிழா பார்க்க,
“யாருக்கு மொட்டை போட்ட?…” என்றார் அடுத்ததாய்.
“காது குத்தும் போது போடனும்…” என்றபடி இப்போது மீண்டும் கோவேந்தனை பார்க்க அப்படி ஒரு கோபத்தில் முறைத்துக்கொண்டிருக்க,
“என்ன கேட்டீங்க?…” என்றார் பயத்துடன்.
“ஆங், வெளக்கெண்ணெய் கேட்டாங்க. எந்த கிறுக்கு புடிச்சு உன்னை ஆட்டுது? மனுஷனை ஜீவனை வாங்கற காலாங்காத்தால…” என்று காபி கப்பை கீழே வைக்க,
“காபி…” என்றார் பவ்யமாய்.
“எடுத்துட்டு போய் உன் தலையில் ஊத்திக்க. ச்சே…” என்று எரிந்துவிழ,
“வேற கொண்டுவரேன்…” என சொல்ல,
“இப்ப போறியா…” என்று எகிறும்முன் மகன் வரும் அரவத்தில் திரும்பி பார்த்தவர் கண்கள் யோசனையில் சுருங்கியது.
அவரை பார்த்துக்கொண்டே வந்து ‘எப்படி?’ என மகிழாவை பார்த்து புருவமுயர்த்தி கோவேந்தன் எதிரில் அமர்ந்தான் கார்மேகவண்ணன்.
“இவன் என்ன மாப்பிள்ளை மாதிரி கிளம்பி வந்திருக்கான்? எங்க போறானாம்?…” என்றார் கோவேந்தன் மகனை ஆராய்ச்சியாய் முறைத்தபடி மனைவியிடம்.
“மாப்பிள்ளை மாதிரி இல்லை. மாப்பிள்ளை தான்…” என அலுங்காமல் குலுங்காமல் அவர் நெஞ்சில் வெடி வைக்க, ஒருநொடியானது அது கோவேந்தனுக்கு புரியவே.
“ஓஹ், துரைக்கு மறுக்கா ஒரு காதல் பூக்குதாக்கும்? செடியோட வெட்டிப்போடுவேன். ராஸ்கல், ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷன். இந்ததடவை என்ன ஹைகோர்ட்டா? கொல பண்ணிப்புடுவேன்…” என்றவர்,
“இந்தாடி கேட்டியா?…” என்று மகிழாவிடம் கொந்தளிப்புடன் கொதிக்க,
“நான் எதுக்கு கோர்ட்டுக்கு போகனும்? என்னை தேடி அந்த ஜட்ஜே இங்க வருவார்…” என்றவன் பின்னால் சாய்ந்து இன்னும் சட்டமாய் அமர்ந்துகொண்டான்.
“மகிழா இவனை என்னன்னு விவரமா சொல்ல சொல்லு. எதாச்சும் வம்புவழக்கை இழுத்துட்டு வராம. என்னை ஒருவழியாக்காம விடமாட்டான் போல?…” என்று பொங்கி பொங்கி பேச,
“இவன் என்ன இந்த நேரத்துல வந்துட்டிருக்கான்?…” என்று யோசித்தவர் மீண்டும் பல்லை கடித்தார்.
“என்னடா நீ தான் சாட்சி கையெழுத்தா? இவன் என்ன கேட்டாலும் தலைகீழா குதிச்சிடுவியா? கொஞ்சமாச்சும் யோசிக்கமாட்டியா?…” என்று வாழவந்தானிடம் வேறு காய, கோவேந்தனின் கோபத்தில் அவர் பதட்டமாய் கார்மேகவண்ணனை பார்த்தார்.