“ம்ஹூம். எனக்கு புரிஞ்சு போச்சு. மகிழா அடியேய், உன் புள்ளை என்னமோ பண்ணி வச்சிட்டான். அதுக்கு ஒத்து ஊத தான் இவன் வந்து சேர்ந்திருக்கான்….” என நண்பனை முறைத்தவன்,
“இவன் கூப்பிட்டான்னு சொல்லி நீயும் வந்திருக்க, என்னம்மா?…” என்று சித்தாராவையும் கேட்டுவைக்க அவர் பேசமுடியாமல் மகிழாவை பார்த்தார்.
“வேந்தா நான் சொல்றதை…” என வாழவந்தான் சொல்ல,
“நீ சும்மா இருடா. இவன் இவ்வளோ ஆட காரணமே நீ தான்….” என்று கோவேந்தன் பேச,
“அட அண்ணே, என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு பேசுங்களேன்…” என்று சித்தாராவும் பொறுமையாய் எடுத்து கூற முயன்றார்.
எதையுமே கேட்கும் நிலையில் கோவேந்தன் இல்லை. மகன் மீண்டும் என்னவோ பிரச்சனையில் மாட்டிக்கொண்டான் என்று நினைத்தவர்,
“இப்படி சிக்கலுக்கு மேல சிக்கலை இழுத்து வைப்பான்னு தெரிஞ்சிருந்தா பேசாம பாரினுக்கே போன்னு சொல்லிருப்பேன் நான். என் புள்ளையை என் கண்ணுமுன்னாடி வச்சுக்கனும்ன்னு வச்சுக்கிட்டு நான் படறபாடு?…” என்று சொல்லி,
“ம்ஹூம், இவன் என்னை படுத்துற பாடு. இன்னும் என்னெல்லாம் வச்சிருக்கானோ?…” என்று சொல்ல,
“அவங்க தான் பேசறாங்க இல்ல. என்னன்னு தான் கேளுங்களேன்…” என்றார் மகிழாவும்.
“என்னத்த கேட்க? அதான் தெரிஞ்சு போச்சே. இவன் மாப்பிள்ளைன்னு சொல்றான். இப்படி ஜம்முன்னு கிளம்பி இருக்கான். இவங்களும் அப்படி கிளம்பி கல்யாணத்துக்கு போறமாதிரி வந்திருக்காங்க. என்னவோ முடிவாகி இருக்கு. ஆனா பெத்தவன் எனக்கு தெரியலை…” என்று தன் நெஞ்சில் ஒரு அடி வைத்து சொல்லி,
“ஆமா, உனக்கு தெரியுமா?…” என்றார் மகிழாவிடம்.
“ஆத்தீ, சாமி. நான் என்னத்த சொல்லுவேன்?…” என்று மகிழா இங்குமங்குமாய் தலையை ஆட்ட,
“இந்த ஆக்ஷன், ரியாக்ஷன் எல்லாம் எனக்கு தெரியும். உனக்கு தெரியுமா தெரியாதான்னு கேட்டா ஆமா, இல்லைன்னு பதில் சொல்லு. அதை விட்டுட்டு சாமி வந்தவ மாதிரி கரகமெடுத்த…” என்று நாக்கை மடக்கி மகிழாவை முறைத்தார்.
“என்னை போய் சந்தேகப்படறீங்களா?…”
“டவுட்டே இல்லை. இவன் செய்யிற குட்டுநட்டு, திருகுதாளம் எல்லாம் உனக்கு தெரியாம எப்படி? உனக்கு தெரியும்ன்னு எனக்கு இதுலையே தெரிஞ்சு போச்சு…”
“எப்படி? நான் தான் சொல்லலையே?…” மகிழா கேட்க சித்தாராவும், வாழவந்தானும் தலையில் கை வைத்துவிட்டனர்.
“இந்தா இப்ப சொல்லிட்டியே. இப்படித்தான். நான் புருசென்டி…” என்று தன் மார்தட்டிக்கொள்ள,
“நான் சொல்லலைன்னா அந்த சொல்லலை இல்லை. நீங்களா ஒன்னு நினைச்சா நான் பொறுப்பா?…” என்றவர் பேசமாட்டாமல் விழித்தார்.
“நான் நினைக்கிறது இருக்கட்டும். இப்ப இங்க என்ன நடக்குது, நடக்க போகுதுன்னு இப்ப எனக்கு தெரிஞ்சாகனும். மொட்டையா போட பார்க்கறீங்க?…” என்றவருக்கு அப்போது தான் மகிழா அடுக்களையில் கைகூப்பி வேண்டுதல் வைத்ததும் ஞாபகம் வந்தது.
“இங்க இப்படி என் முன்ன வா. சொல்லு, அந்த மொட்டை, காது குத்து வேண்டுதல் எல்லாம் எனக்காடி வேண்டிக்கிட்ட?…” என்று கேட்க மகிழா எதிர்பார்க்கவில்லை.
“திடீர்ன்னு கேட்டா என்ன சொல்ல?….” என்று சொல்லி,
“ஆங், வேண்டுதலை வெளில சொல்லக்கூடாது. என்ன கண்ணா?…” என்று மகனையும் அழைக்க,
“என்னது?…” என்ற கோவேந்தன் தலைசுற்றாத குறையாக மகனை பார்த்தவர்,
“இவன் என்னடி செஞ்சு வச்சிருக்கான்? ஒழுங்கு மரியாதையா சொல்ல போறியா இல்லையா?…” என்று படபடத்தார் மகிழாவிடம்.
“அதத்தான்டா பேச வந்திருக்கோம். நீ விட்டா தான? உன் டென்ஷன்ல எங்களுக்கு எல்லாம் பிபி வந்திரும்…” என்று பாவமாய் பார்த்தார் வாழவந்தான்.
“இவனுக்கு சப்போர்ட் பண்ணின பார்த்துக்கோ. திரும்ப லவ்வுன்னு நிக்கிறான். பட்டும் புத்தி வரலை. நீயாவது சொல்லி திருத்த தானடா? ஒரு பெரியமனுஷன் செய்யிற வேலையா இது?…” என்று மூச்சு வாங்க அவர் கத்த வாழவந்தானுக்கு பீதியானது.
“வேந்தா, எனக்கு படபடப்பா வந்துரும் போலடா. சொல்றதை கேளேன்…” என்று மீண்டும் சொல்லி கெஞ்சுதலாய் பார்க்க,
“ஆமா, கொஞ்சம் பொறுமையா இருங்களேன்…” என்று மகிழாவும் சொல்ல,
“உக்காருங்கண்ணே முதல்ல…” என்றார் சித்தாராவும்.
இத்தனை பேர் சொல்லவும் அனைவரையும் பார்த்துவிட்டு சோபாவில் அமர்ந்தவர் தலையை திருப்ப அங்கே அவர் அருகே சாந்தஸ்வரூபமாய் மகன் கார்மேகவண்ணன் புன்னகையுடன்.
“இவனை…” என்று பட்டென்று எழுந்தவர்,
“ம்ஹூம், இவன் போக்கே சரியில்லை. என்னமோ பெருசா பண்ணிட்டான். பார்க்கறதை பாரு…” என்றவரை இழுத்து பிடித்த வாழவந்தான்,
“இங்க வந்து என் பக்கம் உட்கார். பேசுவோம்…” என்று அமர்த்திக்கொண்டார்.
“உண்மையை சொல்லு, கையெழுத்து போட தான கிளம்பி வந்திருக்க? மாலை கீலையை காணும்? இல்ல அதுவும் அங்க போயா?…” என்று ஆற்றமாட்டாமல் கோவேந்தன் கேட்க,
“என்னடா பேசற நீ?…” என்ற வாழவந்தான்,
“மகி முதல்ல தண்ணியை கொண்டாம்மா இவனுக்கு…” என்று சொல்லி,
“தண்ணி வர வரைக்கும் வாயை திறக்காத. கொஞ்சநேரம் வாய்க்கு ரெஸ்ட் குடு…” என்று மகிழா கொண்டுவந்த சொம்பு நீரை வாங்கி கோவேந்தனிடம் நீட்டினார் வாழவந்தான்.
பேசிய பேச்சிற்கு எல்லாம் சேர்த்து நீட்டிய நீர் மொத்தத்தையும் காலி செய்த பின்னர் தான் அமைதியானார் கோவேந்தன்.
மீண்டும் மெதுவாய் மகனை திரும்பி பார்க்க, ‘நம்பிக்கை, நாணயம், கைராசி’ என்று கையெடுத்து கும்பிடாத அக்மார் குழந்தை சிரிப்புடன் கார்மேகவண்ணன் அவரை பார்க்க,
“டேய் இவனை திரும்ப சொல்லுடா. என்னிக்கும் இல்லாத திருநாளா? பக்கு பக்குன்னு இருக்கே எனக்கு…” என்று மீண்டும் நெஞ்சை நீவ ஆரம்பித்துவிட்டார் கோவேந்தன்.
“அதுக்குள்ள வந்த விஷயத்தை பேசுங்க மாமா…” என்றான் அவன் வாழவந்தானை பார்த்து கள்ளப்புன்னகையுடன் கண்சிமிட்டி.
“ம்ஹூம், இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பாம நீ ஓயமாட்ட. அடங்குடா…” என வாழவந்தான் சொல்ல,
“சோ சேட். மரியாதை மரியாதை. மாப்பிள்ளைன்ற மரியாதை வேண்டாமா?…” என்று சொல்ல கோவேந்தனுக்கு பொரி கலங்கியது.
மூளை மரத்துவிட்டதை போலிருக்க மீண்டும் அனைவரையும் ஒரு பார்வை சுற்றி பார்த்தார்.
“எனக்கு தான்டா வேந்தா….” என வாழவந்தான் சொல்லவும் கோவேந்தன் விழிகள் தெறித்துவிடும் போலானது.
“வந்து உன்கிட்ட இத எப்படி சொல்ல? கிட்டத்தட்ட இது மாப்பிள்ளை பார்க்கிற விசேஷம் மாதிரின்னு வச்சுக்கோயேன்…” என்று சொல்லி முடிக்க மயக்கமே வந்துவிட்டது கோவேந்தனுக்கு.
“என்னடா சொல்ற?…” என்று அதிர்ச்சியை தாங்கமுடியாமல் கண்கள் சொருகுவதை போலிருக்க,
“மகி தண்ணி…” என்று சித்தாரா சொல்ல,
“ப்ச், இங்க ஸ்டாக் இருக்கு…” என்று தன்னருகில் இருந்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான் கார்மேகவண்ணன்.
“பாரு பாரு, இப்பவும் எப்படி இருக்கான்னு. இவனை போய். டேய் வாழா, உனக்கென்ன பைத்தியமா?…” என்றவர் மீண்டும் தன்னையும், வாழவந்தானையும் கிள்ளி பார்க்க,
“மாப்பிள்ளை நானு. எனக்கு..” என்று தன் கையையும் நீட்டினான் கார்மேகவண்ணன்.
“பின்ன என்னம்மா, என்னவோ கடத்தி வச்சு பொண்ணு கேட்கிற மாதிரி இவனுக்கா? பைத்தியமான்னு பேசிட்டிருக்கார்? ஏன் எனக்கு ஆழினியை குடுத்தா என்ன தப்பு?…” என்று கண்ணன் பேச,
“இவனை பேசாம இருக்க சொல்லு மகி…” என்றவர் சத்தத்தில் சட்டென்று ஒரு அமைதி நிலவியது.
சூழ்நிலை இறுக்கமாகிவிட கோவேந்தன் சிறிதுநேரம் மௌனமாய் என்னவோ யோசனையில் இருந்தார்.
அவருக்கு ஆழினி தன் வீட்டு மருமகள் என்றால் பலமடங்கு சந்தோஷம் தான். அதற்காக எல்லாவற்றிற்கும் சரி என்று சொல்லிவிட முடியுமா என்று யோசித்தார்.
“அதை நாமளா முடிவெடுக்க கூடாது வேந்தா…” என்றவர் அடுத்து பேச வேந்தன் அனுமதிக்கவே இல்லை.
“நாம தான் பார்த்தோமே. எப்படி வளர்ந்தாங்கன்னு. இப்ப வரைக்கும் ரெண்டுபேருக்குள்ள என்ன ஒத்துப்போயிருக்கு? அவக்கிட்ட எப்ப பாரு ஒரு அதட்டல், மிரட்டல், கண்டிப்பு இதுதான் இவன் காமிச்சது. அதோட எனக்கு நம்ம ரெண்டு பிள்ளைங்க வாழ்க்கையும் முக்கியம்…” என்றார் கோவேந்தன்.
“இப்ப நீ ஆழியை நினைச்சு யோசிக்கிறியா?…” என்றதும் தான் மற்றவர்களுக்குமே கோவேந்தனின் எண்ணவோட்டம் பிடிபட்டது.
அவர்கள் இருவருக்குள்ளும் ஒத்துப்போகாது என்று அவர் முடிவிற்கே வந்திருப்பதை புரிந்துகொள்ள கண்ணன் முகத்தில் புன்னகை.
“அய்யனாருக்கு பிள்ளையை விட மருமக மேல தான் பாசம் ஜாஸ்தி….” என்றான் அப்போது கேலியாய்.
“ஆமாடா, என்னன்ற இப்ப? ஆழியோட வாழ்க்கையும், அவ சந்தோஷமும் தான் முக்கியம். அவளை நல்லபடியா பார்த்துப்பியா நீ?…” என்று சொல்லியவர்,
“பார்த்துக்கிட்டாலும்…” என்றவருக்கு மகன் மேல் நம்பிக்கை இல்லாமல் இல்லை.
வாழவந்தான் விருப்பத்தை நிறைவேற்ற கார்மேகவண்ணன் இந்த திருமணத்தை சம்மதித்திருப்பதாக நினைத்துக்கொண்டார்.