“புரிஞ்சுக்கோடா வாழா. நம்ம ஆசைக்காக பிள்ளைங்க அவங்க விருப்பத்தை…” என்று சொல்லியவர் அனைவரின் புன்சிரிப்பையும் கண்டு, தான் என்னவோ தவறாக புரிந்து பேசுவதை உணர்ந்து பேச்சை நிறுத்தி பார்த்தார்.
மீண்டும் மகனின் முகம் காண அதில் வேறென்னவோ ஒரு உணர்வும், உறுதியும் தெரிந்தது.
“நான் தான் ரொம்ப பேசிட்டேனோ? என்ன விஷயம், முழுசா சொல்லுங்க…” என தொண்டையை செருமிக்கொண்டு.
“நல்லா கேட்ட போ. இப்படியே நாளைக்கு வரைக்கும் இழுத்திருவியோன்னு நான் பயந்துட்டேன்….” என்றவர்,
“ஆழிக்கும், கண்ணனுக்கும் பிடிச்சிருக்குடா. அது விஷயமா தான் பேச வந்திருக்கோம்…” என்றார் வாழவந்தான்.
“நீங்க பேசுங்க. வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டு கார்மேகவண்ணன் எழுந்துசெல்ல வாழவந்தான் இருநாட்களுக்கு முன்னால் நடந்ததும், பிள்ளைகள் இருவரின் மனதையும் எடுத்து புரியவைத்தார்.
“இது இது எப்படிடா வாழா?…” என்று திணறி போய் பார்த்தார் கோவேந்தன்.
“ஏன்டா உனக்கு இதுல அதிருப்தியா? முழுமனசா ஏத்துக்க முடியலையா?…” என்று வாழவந்தான் கேட்க,
“என்னடா இவன் லூஸு மாதிரி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை…” என்றவர்,
“வாழா, பிள்ளைங்க வாழ்க்கை. எனக்கு கண்ணன் ஷர்மி மாதிரி தான் ஆழியும். உனக்கு புரியுதா?…” என்று தடுமாறினார் கோவேந்தன்.
சற்றுமுன் உச்சஸ்தானியில் அவர் கொந்தளித்து பேசியதென்ன? இப்போது குரல் நடுங்க நெகிழ்வதென்ன என்று பார்த்தனர்.
“புரியுதுடா நீ என்ன சொல்ல வரன்னு. கண்ணாவோட பாஸ்ட். அதை பத்தி நீ யோசிக்காத. தப்பு. அவனே அதைவிட்டு முழுசா வெளில வந்துட்டான். அது அவங்க வாழ்க்கையை பாதிக்காது…” என்று சொல்ல,
“ஆழி அவ எப்படி? இவன் பன்ற கலாட்டாவுல எப்படி வரப்போற பொண்ணு சமாளிப்பாளோன்னு பயந்துட்டு இருந்தேன் நான்…” என்று கண்ணை துடைத்தபடி பேசியவர்,
“எனக்கென்னடா தயக்கம்? இதுல ரொம்பவே எனக்கு சந்தோஷம் தான்…” என்று அவரை அணைத்துக்கொள்ள,
“அது போதும்டா. அது போதும்….” என்று கோவேந்தன் மகிழ்ச்சியுடன் சொல்ல,
“நினைச்ச மாதிரியே அவனை கூடவே வச்சுக்க முடிவு பண்ணிட்டேன் பார்த்தியா?…” என்றார் வாழவந்தான் குழந்தை போல சிரிப்புடன்.
“புண்ணியமா போகும்டா. கல்யாணத்தை பண்ணி கையோட அவனை கூட கூட்டிட்டு போயிரு. சாமிக்கு மொட்டை அடிச்சுக்கறேன் நான்…” என்று மேல்நோக்கி கை கூப்பி கோவேந்தன் கும்பிட்டு போட,
“ஒரு தலைக்கு எத்தனை வேண்டுதல் வைக்கிறது? இப்பத்தான் எல்லாம் நல்லபடியா நடந்தா உங்களுக்கு மொட்டை போடறேன்னு வேண்டிருந்தேன். உங்க வேண்டுதலை ரெண்டாவது வச்சுக்கோங்க. நான் போய் ஸ்வீட் கொண்டுவரேன்…” என்று மகிழா குதூகலமாய் சொல்லிவிட்டு திரும்ப,
“இந்தாடி நில்லு…” என்றார் கோவேந்தன்.
“பார்த்தியாடா வாழா, கொஞ்சம் முன்னாடி என்னென்ன நடிப்பு நடிச்சிட்டு இப்ப பார்த்தியா எல்லாம் தெரிஞ்சே கமுக்கமா இருந்திருக்கறத?…” என்று முறைக்க மகிழா திருதிருவென்று விழிக்க,
“விடுங்கண்ணே, நல்லதுக்கு தானே?…” என்று தானும் இனிப்பை எடுக்க சென்றார் சித்தாரா.
தன்னறையில் இருந்து நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்தவன் மனதில் அத்தனை உற்சாகம்.
அதனை எப்படி வெளிப்படுத்துவதென தெரியாமல் ஒருவித திணறலுடன் கார்மேகவண்ணன் அறைக்குள் நடக்க நஞ்சப்பனிடமிருந்து அழைப்பு.
“பாய்சா மச்சான்…” என்று அடக்கப்பட்ட கூச்சலுடன் அழைப்பை பார்த்தான்.
“நான் தேடும்போதெல்லாம் தலையை குடுக்கிற ஒரே ஜீவன் நீதான்டா…” என்றபடி கைபேசிக்கு முத்தமிட்டு,
“ச்சீ, த்தூ…” என்று வாயை துடைத்துக்கொண்டவன் அழைப்பை ஏற்றான்.
“என்னடா மச்சான், ரெண்டுநாளா ஒரு போனை கூட காணும்?…” என்று விட்டேற்றியாக நஞ்சப்பன் கேட்க,
“இதை கேட்கத்தான் போன் பண்ணுனியா?…” என கார்மேகவண்ணன்.
“ஆமா, இல்லைன்னா ஒரு கால் பண்ணுனியான்னு அதுக்கும் நீ வஞ்சம் வச்சு என்னை நடுவீதில டான்ஸாட வச்சாலும் வைப்ப. முன்னெச்சரிக்கை. இதை கேட்கத்தான் கூப்பிட்டேன். வச்சிடவா?…” என்று வேகவேகமாய் நஞ்சப்பன் சொல்ல,
“நீ வேற ஏன்டா நான் இருக்கற நிலமையில?…” என சட்டென ஏற்ற இறக்கத்துடன் கார்மேகவண்ணன் பேச,
“இங்க அய்யனார் ஒரே டென்ஷன். செம்ம கோவத்துல இருக்கார்…”
“ஏன்? என்ன பண்ணி வச்ச நீ?…” என்று நஞ்சப்பன் ஆர்வமாக கேட்க,
“கோவம்ன்னா என் மேலதானா?…”
“பின்ன?…”
“அய்யனா காண்டா செம்ம கோவத்துல இருக்கறது உன் மேல…” என கொளுத்தி போட,
“நானா? நான் என்ன பண்ணேன்?…” பச்சைப்பிள்ளை அப்படியே நம்பிவிட்டான் நஞ்சப்பன்.
“அதான்டா, என்னத்த பண்ணி தொலைச்ச? உங்கப்பாவை பார்க்க உங்க வீட்டுக்கு வரேன்னு வேற சொல்லிட்டிருக்கார்….” என்று சொல்ல,
“தெய்வமே, அடேய் அங்கனவே சிவப்பு கொடி காமிச்சு ட்ரெயினை மூவாகாம பார்த்துக்கோ. இப்ப சிட்டா பறந்து வந்திருவேன். நிப்பாட்டுடா. எங்கப்பா முனியாண்டிக்கு தெரிஞ்சது என்னை கசாப் போட்டுடுவார்….” என்றவன்,
“இவனோட ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிருந்தா அந்த மனுஷன எங்கப்பாவுக்கு தெரிஞ்சிருக்குமா? எங்கப்பாவும் தான் அந்த மனுஷனோட பழகிருப்பாரா?…” என்று நஞ்சப்பன் கதறிக்கொண்டு வந்துகொண்டிருந்தான்.
“ஹப்பாடா, முழு நிம்மதி இந்த ஃபீல் இருக்கே….” என்றபடி துள்ளலுடன் வெளியே வந்தவன்,
“எனக்கு ஸ்வீட்?…” என்று கேட்டவன் மகிழா தரவும் வாங்கிக்கொண்டான்.
“அப்பறம் மாமனாரே, மேல்படி விஷயம் பேசியாச்சா?…” என்று ஆரம்பிக்க,
“இன்னும் என்ன? கல்யாண தேதி தானே? பேசனும். பேசுவோம்…” என்று வாழவந்தான் சொல்ல,
“ச்சே, ச்சே. அதில்லை. இந்த டவுரி, வரதட்சனை, சீர்வரிசை…” என்றதும் கோவேந்தனுக்கு புரையேறிவிட்டது.
“இப்பலாம் பொண்ணுங்களுக்கு டிமான்ட். நகை போட்டுட்டு தான் கட்டிக்கனும். டிடிஆர் தானே? உங்க சேவிங்ஸ்ல இருந்து டவுரி குடுக்க ரெடியாகுங்க. இல்லன்னா பொண்ணு குடுக்கமாட்டாராம் என் மாமனார்…” என்று அலப்பறையை கூட்டினான்.
“என்ன மாமா? நான் சொல்றது சரி தானே?…” என்று வேறு கேட்க,
“இல்லையா பின்ன?…” பெருமை பிடிபடவில்லை வாழவந்தானுக்கு.
“இவன் என்ன சொன்னாலும் ஒத்து ஊதுவியா நீ? நல்லா சேர்ந்தீங்கடா எனக்குன்னு?…” என்ற பேச்சுக்களுடன் கலகலப்பாய் நேரம் செல்ல இடையிடையே மகனின் கேலியில் கோவேந்தன் வானத்துக்கும் பூமிக்குமாய் குதிக்க அதேநேரம் தானும் வந்து குதித்தான் நஞ்சப்பன்.
அந்தநேரம் பார்த்து கோவேந்தன் எழுந்து நின்று கண்ணனிடம் என்னவோ கை நீட்டி சொல்லிக்கொண்டிருக்க புயல் வேகத்தில் உள்ளே நுழைந்த நஞ்சப்பன் கோவேந்தனின் இரு கால்களையும் பற்றிக்கொண்டான்.
“டேய் எந்திடா முதல்ல…” என்று கோவேந்தன் சொல்ல வாழவந்தான் கார்மேகவண்ணனிடம் என்னவென்று தலையசைத்தார்.
தனக்கு தெரியாது என்பதை போல தோளை குலுக்கியவன் கோவேந்தனை பார்க்க,
“இப்ப எந்திக்க போறியா இல்லையா?…” என்று அதட்டவும்,
“எடுத்த முடிவ மாத்திக்கோங்க எசமான். நீங்க என்ன கேட்டாலும் இங்கயே நான் சரண்டராகி அப்ரூவரா மாறிடறேன்…” என்றான் இன்னும் விடாமல்.
“நான் சொல்லல. எல்லாம் கூட்டுக்களவானிங்க…” என்ற கோவேந்தன்,
“எந்திச்சு தொலைடா. மனுஷனை அவசரத்துக்கு போகவிடாம…” என்றவர் சத்தத்தில் தான் எழுந்து நின்றான் நஞ்சப்பன்.
“சரி நீங்க பேசிட்டிருங்க. நான் வந்திடறேன்..” என்று கார்மேகவண்ணன் அங்கிருந்து நழுவ பார்க்க,
“நீ எங்கடா போற இப்ப? அதுவும் தனியா விட்டுட்டு?…” என்று கேட்க,
“என்ன தனியாவா? அப்பா இங்க இருக்கறவங்கல்லாம்?…” மீண்டும் விரைத்து நின்றார் கோவேந்தன்.
“ஆத்தீ எசமான், அப்ரூவர் மீ. அப்பாவியும் மீ. இங்கினவே இருக்கேன்…” என்று நஞ்சப்பன் கையை கட்டி நின்றுவிட்டான்.
“வெரி குட் மச்சான் பாய்சா….” என்ற கார்மேகவண்ணன்,
“மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. ஆனா மாப்பிள்ளை பொண்ணை பார்க்கனுமே. பார்த்து பேசிட்டு, பொண்ணு பிடிச்சிருக்கான்னு நானும் சொல்லனும்ல?…” என்று கண் சிமிட்டிவிட்டு தனது பைக் சாவியை எடுத்துக்கொண்டு புறப்பட,
“என்ன நடக்குது இங்க?…” என்றான் நஞ்சப்பன்.
“என்னன்னே தெரியாம தான் வந்தியா நீ?…” என்றார் வாழவந்தான்.
“இவன் தான் போன் பண்ணான்…” என நஞ்சப்பன் நடந்ததை கூற மற்றவர்கள் அடக்கமாட்டாமல் சிரிக்க கோவேந்தன் சந்தேகமாய் பார்த்தார் அவனை.
“அப்படி உயிர் போற அவசரத்துல அடிச்சு பிடிச்சு வந்திருக்கன்னா என்னடா பண்ணிட்டிருக்க நீ? அப்ப கண்டிப்பா முனியாண்டியை பார்க்கனுமே?…” என்று சொல்லவும்,
“மறுபடியும் முதல்ல இருந்தா?…” என்ற முணுமுணுப்புடன் ‘அழுதுவிடுவேன்’ என்பதை போல நஞ்சப்பன் பரிதாபமாய் பார்த்து நின்றான் அவரை.
அனைத்தையும் ஏகப்பட்ட கலாட்டாக்களுடன் நடத்தி முடித்துவிட்டு ஆழினியை காண அவள் வீடு வந்திறங்கினான் கார்மேகவண்ணன்.