வெகுநாட்களுக்கு பின், இல்லை சில வருடங்களுக்கு பின் முழுமையான சந்தோஷத்துடனான பார்வை ஆழினியிடம்.
சின்ன சின்ன சஞ்சலங்களுடன், அதனை மறைக்க முயலும் இறுக்கத்துடன், இயல்பாக இருக்க முயலும் முயற்சியுடனே அவளின் பொழுதுகள் கலந்திருக்கும்.
இதோ அனைத்தும் சுமூகம் பெற்று உள்ளத்தில் என்னவோ ஒரு அமைதி நிலவ குளிர்வாய் உணர்ந்தாள்.
ஆர்ப்பரிப்பு ஏதுமற்ற அமரிக்கையான ஒரு இதம் அவளை மொத்தமாய் சூழ்ந்துகொண்டது.
கேட்டின் வெளியே பைக்கின் ஹாரன் சத்தம் காதை பிளக்க இதழ்களை புன்னகை நிறைத்துக்கொள்ள விழிகள் அவன் வரும் வழியில் பதிந்தது.
கேட் திறக்கப்பட்டு பைக்கை சுழற்றிக்கொண்டு வந்து நிறுத்தியவன் தோற்றம் எல்லாம் பின்னுக்கு சென்று அவனின் புன்னகையும் சந்தோஷமும் அவளை மொத்தமாய் அள்ளிக்கொண்டது.
அத்தனை துள்ளலாய் வந்திருந்த கார்மேகவண்ணனும் ஆழினியின் பார்வையில் ஆர்ப்பாட்டம் தணிந்து இலகுவாய் தரையிறங்கினான்.
“பைனலி…” என்று இரு தோள்களையும் தூக்கி குலுக்கியவன் தலையசைக்க,
“முழுமை…” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
உள்ளார்ந்து உணர்வுப்பூர்வமாய் சிந்திய அந்த வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தது.
காதல் என்று மனம் விட்டு சொல்லிக்கொள்ளவில்லை. கைகோர்த்து பிடித்தங்களை வார்த்தையில் பரிமாறிக்கொள்ளவில்லை.
சிணுக்கங்கள் எல்லாம் சிறைக்குள் தான் இருந்தது. ஆனாலும் சிலிர்ப்புகள் சொல்லி தீராமல் பார்வையில் பாஷைகளாகி நிற்க இருவரின் முகத்தில் குறுஞ்சிரிப்பு தூறல்கள்.
“ஹ்ம்ம், சிட்…” என்றவன் அந்த தோட்டத்தின் புல்வெளியில் கால் நீட்டி அமர்ந்து கல்பெஞ்சில் சாய்ந்துகொண்டான்.
அதிக வெயில் இல்லாத காலை பொழுது. அளவாய், அழகாய், அற்புதங்களை தந்துகொண்டிருந்தது.
“சிட் ஆழி…” என்றான் மீண்டும்.
வாசலில் காவல் காப்பவர் இருவரையும் பார்த்துவிட்டு வெளிப்பக்கமாயிருந்த நிழல் கூண்டுக்குள் சென்று அமர்ந்துகொண்டார்.
“இன்னும் வேற யார்? கமலாக்காவா?…” என்று கேலியாய் கேட்க,
“ஏன் அவங்கல்லாம் பார்த்தா உட்கார மாட்டேனா என்ன?…” என்று சொல்லி ஆழினியும் அவனருகில் அமர்ந்துகொண்டாள்.
அவனிடம் முன்பே அத்தனை பேசமாட்டாள். இப்போது பேசவே தோன்றாத மௌனம் அவளை சூழ கார்மேகவண்ணனும் சிலநொடிகள் மௌனம் கொண்டான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையால் தழுவவும், புன்னகைத்து முகத்தை திருப்புவதுமாய் இருந்தனர்.
காதல் வசனங்கள் எல்லாம் இல்லாது ஒரு இலகுவான பேச்சு அவனிடம் வியப்புடன் வெளிப்பட்டது.
“ஏன் அதென்ன ஆழினி சூஸ் பண்ணினதுல இவ்வளோ ஆச்சர்யம்?…” என்றவள் ‘சஞ்சனாவை கொண்டு நினைக்கிறானோ?’ என பார்த்தாள்.
“பெருசா ஒன்னும் நீ இல்லாம நானில்லை அப்படின்னு நீ நினைக்கிற மாதிரி எந்தவிதத்துலையும் நான் உன்னை இம்ப்ரெஸ் பன்றமாதிரி நடந்துக்கலை. ஆனா, அதுவும்…” என்றவன் தலையை கோதிக்கொண்டான்.
மிதமான அந்த வெயிலில் கூட தென்றல் குளிர்ந்து வீசிக்கொண்டிருந்தும் அவனுள் உஷ்ணம் பரவியது.
“ஓகே, பேசிடலாம். ம்ஹூம், சொல்லிடலாம்…” எனறு இன்னும் தளர்வாய் சாய்ந்து அமர்ந்தான் கார்மேகவண்ணன்.
“இதை நான் முன்னாடியே பேசியிருக்கனும். ஆனா எல்லாம் பிக்ஸ் பண்ணிட்டு பேசறேன்…” என்று சொல்ல,
“ஆமா, கண்டிப்பா. நீ தெரிஞ்சுக்க விரும்பாம போனாலும் நான் சொல்லனும். உனக்காக உனக்கு க்ளாரிட்டி குடுக்கறதுக்காக எல்லாம் இல்லை. முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே. என் சைட் என்ன நடந்ததுன்னு சொல்ல தோணுது…” என்றான்.
ஆழினிக்கு அதை கேட்கும் அளவிற்கு விருப்பமோ, மனதளவில் ஒப்புமையோ சுத்தமாய் இல்லை.
அவனுக்காக, அவனுக்காக என்றே வளர்ந்து வந்தவள், இதையும் அவனுக்காக கேட்க நினைத்தாள்.
“என்னோடது பார்த்ததும், பிடிச்சு, மயங்கி இந்த டைப் லவ் எல்லாம் இல்லை…” என்றதும் ஆழினியின் முகத்தில் ஒளி குன்றியதோ போலொரு பிரம்மை கண்ணனின் பார்வையில்.
“பொய்யாவே இருந்தாலும் தேவையில்லாத நேரம் அது பொய்ன்ற உண்மை வெளிப்பட்டு மனசை உடைச்சு போட்டுடும். அதனால வலிச்சாலும் உண்மை எவ்வளவோ பெட்டர். ஒத்துக்க பழகு…” என்றவன்,
“உன்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் இது. உங்கப்பா மாதிரி என்னை நீ அப்ரோச் பண்ணனும்ன்னு நினைக்காத ஆழினி. பாசம் வேற. அது கண்ணை மறைச்சிடும்…” என்றான் எச்சரிக்கை போல.
“ப்ச், நீங்க சும்மா இப்படியெல்லாம் சொல்லவேண்டாம்…” அவளின் மனதில் அவனின் பேச்சு ஏற்புடையதாக சேரவில்லை.
“சும்மாவும் இல்லை, சுமந்துட்டும் இல்லை. நீ…” என்று அதட்ட ஆரம்பித்தவன் அவளின் முகபாவனையில்,
“ஊஃப்…” என்றான் சட்டென பொங்கிவிட்ட வேகத்தில் நிதானித்து.
“என்னவோ பேச ஆரம்பிச்சு இப்ப ரூட் மாறுது. இன்னைக்கே பேசிடலாம். உன் பேம்ப்பரிங்கை நான் அப்பறமா கவனிச்சுக்கறேன்…” என்று சொல்லியவன் பெருமூச்சுடன் தொடர்ந்தான்.
“அவளை மூணு வருஷத்துக்கு முன்னாடி நம்ம கம்பெனில ஜாப் ஆஃபர் பண்ணிருக்கும் போது தான் மீட் பண்ணேன். ஆபீஸ் வாசல்ல அழுதுட்டே நின்னா. முதல்ல அவாய்ட் பண்ணிடலாம்ன்னு தான் நான் நினைச்சேன். இந்த பாய்சன் பண்ணின வேலை…” என்று பல்லை கடித்தான்.
“அவாய்ட் பண்ணிருந்திருக்கலாம்…” என முணுமுணுத்தவள் குரல் அவனையுமே எட்டியது.
“ஓகே, ஈஸி. அந்த ஆஃபர் அநோன்ஸ் பண்ணின உன்னை என்ன செய்யலாம்?…” என்று கேலி செய்தவன்,
“லீவ் இட்…” என்று சொல்லி,
“நஞ்சா தான் அந்த பொண்ணை பார்த்துட்டு என்னன்னு கேட்டுட்டு நின்னான். அப்ப தான் ரெண்டுபேரும் ஒரே ஏரியான்னு தெரிஞ்சது. அவனுக்கு அவ்வளவா பழக்கம் இல்லைன்னாலும் பார்த்திருந்திருக்கான். அதனால என்னன்னு விசாரிக்க நானும் வேற எதுவும் பிரச்சனையோன்னு பக்கத்துல போனேன்…”
“சர்ட்டிபிகேட் மிஸ் பண்ணிருக்கா வர்ற வழில. அதோட இண்டர்வ்யூல கலந்துக்க முடியாதுன்னு அழுதுட்டு நின்னிருக்கா. குடும்ப கஷ்டம். வேலைக்கு போகனும். நினைச்ச படிப்பை தொடர முடியலை. ப்ளா, ப்ளா, ப்ளா…” என்று இரு கைகளையும் விரித்தவன்,
“சென்டியா பீலாச்சு. அப்ப தான் நான் இந்த அய்யனார்கிட்ட வேற பாரின்க்கு போக போராடிட்டு இருந்த டைம். ஆசைப்பட்டும், படிப்பிருந்தும் இப்படி பெத்தவர் குறுக்க நிக்கிறாரேன்னு அவ்வளோ கோபத்துல இருந்தேனா, இந்த பொண்ணும், குடும்பம் சூழ்நிலைன்னு சொல்லவும் கர்ணபிரபுவா மாறிட்டேன்….” என்று சொல்லி சிரித்துக்கொண்டான்.
அதன் பின்னான வலியை ஆழினியால் முழுதாய் உணரமுடிந்தது. ஏமாற்றப்பட்ட வலி அத்தனை விரைவில் மறைந்துவிடாதே!
“நஞ்சா தான் சமாதானம் செஞ்சு அடுத்து ஆபர் பண்ணினா சொல்றேன்னு சொல்லி நம்பர் வாங்க எனக்கு மனசுக்கு கொஞ்சம் கஷ்டம். அவ்வளோ அழுகை. அவளை பார்த்திருந்தா அய்யனாரே கரைஞ்சிருப்பார். நானும் ஜஸ்ட் ஒரு ஹெல்ப்பிங் மூட்ல தான் ஹெல்ப் பண்ணினா படிக்கிறியான்னு கேட்டேன்….”
“இது நஞ்சாவுக்கே அப்ப தெரியாது. அப்படி ஆரம்பிச்ச பழக்கம் தான். எப்போ எங்க பிடிக்குதுன்னு சொன்னேன் கூட ஞாபகமில்லை. ஆனா கல்யாணம்ன்ற வரை யோசிச்சிருந்தேன். படிப்பு முடியட்டும். ஒரு நேரம் பார்த்து வீட்டுல பேசலாம்ன்னு வெய்ட் பண்ணிட்டிருந்தேன்…”
“அவ வீட்டுல காய்கறி கடை, கஷ்டம், இதெல்லாம் அழகா இருக்குலன்னு எதையாச்சும் சொல்லி ஏக்கமா கேட்கும் போது புத்தி தடுமாறும். அவளுக்கு எல்லாமே நாம தானே செய்யனும். நம்மோட பொறுப்புன்னு ஒரு கடமை உணர்வு. ஆசைப்பட்டதை மட்டுமில்லை, இதை எல்லாம் ஆசைப்படுவான்னு தெரிஞ்சிக்கிட்டு வாங்கி தந்தேன்…”
“கிப்ட் பண்ணும் போது அவ்வளோ சந்தோஷப்படுவா. அதை பார்க்கும் போது எனக்குள்ள திமிரோட ஒரு கர்வம் வரும் பாரு. அதுக்கு தான் சரியான அடி. அவ கேட்காமலே பார்க்கும் போதெல்லாம் கிப்ட் குடுத்தேன். பின்னாடி யூஸ்ஃபுல்லாவும் இருக்குமேன்னு தான் ஜ்வல்ஸ் குடுத்தேன்….”
“அதிகமாய் மீட் பண்ணிக்கிட்டதில்லை. ஆனா டெய்லி பேசுவோம். ரொம்ப நேரம்ன்னும் சொல்லமுடியாது. அன்னன்னிக்கு காலேஜ்ல நடந்தது எல்லாம் சுருக்கமா சொல்லுவா. படிப்பை பாருன்னு சொல்லி அவ மைண்ட் டைவேர்ட் பண்ணாம தான் இருக்கும் என் பேச்சும்…”
“பட், எங்க எப்போன்னு தெரியலை. படிப்பு முடிஞ்சது. ஜாப் போகனும்ன்னு சொன்னா. வெய்ட் பண்ணுன்னு சொல்லிருந்தேன். நம்ம கம்பெனில திரும்ப ஆள் எடுக்கற சூழ்நிலை. அவளுக்கு நல்ல படிப்பு. நல்ல டேலென்ட். கண்டிப்பா கிடைச்சிடும்ன்னு நம்பிக்கை…”
“ப்ச், நம்பிக்கையும் இரு கை ஓசை மாதிரின்னு அப்ப புரியலை எனக்கு. நாம நம்பினா நாம நம்புறவங்களும் நமக்கு அந்த நம்பிக்கையை காப்பாத்தி தருவாங்கன்னு சொல்லமுடியாதுல…”
“வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலை. அவாய்ட் பன்றான்னு எனக்கு புரிய ஆரம்பிச்சதே லேட்டா தான். புரிஞ்சதும், அவளை தெரிஞ்சதும் ஒரே நாள்ல. கம்பெனில அடுத்த ஜாப் ஆஃபர் பண்ணலாம்ன்னு பேசும்போது அவளுக்கும் இன்பார்ம் பண்ண நினச்சேன்…”
“நஞ்சாவும் ஞாபகம் வச்சு பண்ணிருந்திருக்கான். ஆனா அவளோட பதில் எனக்கு அப்போ ரொம்பவே ஷாக்கிங். நம்பவே முடியலை. நான் லைன்ல இருக்கும் போது தான் கால் பண்ணான்….” என்று சொல்லும்பொழுது அவனறியாமலே விழிகளும், முகமும் சிவந்து தகித்தது.