“ஹ்ம்ம், இருந்திருந்தா ஸ்டேஷன் போற வரைக்கா விட்டிருப்பான்? ஆளு தான் பம்முவான். அன்னைக்கு மட்டும் இருந்திருந்தா ரகளையே பண்ணிருப்பான். நான் கூட்டிட்டு போய் நகைகளை வாங்கற அன்னைக்கும் இதெல்லாம் வேண்டாம்ன்னு அவ்வளோ சத்தம் போட்டான். இதோட தலைமுழுகி தொலைடான்னு…”
“பின்ன எப்படி தெரிஞ்சது அவ சீட் பன்றான்னு?…” ஆழினியே கேட்க,
“அதுவும் அவன் தான். குடும்பத்தோட வெளியூர்ல இருந்தவன் என்கிட்ட பேசும் போது விஷயத்தை சொல்லவும் எனக்கு அவளா இருக்குமோன்னு கேட்டு, என் விஷயத்தை சொல்ல செம்ம டென்ஷனாகிட்டான். கான்ப்ரென்ஸ்ல போட்டு என்னையே கேட்க வச்சதும் தான் ஓரளவு விஷயம் புரிஞ்சது…”
“ஹ்ம்ம், ஆனா அப்பவும் கூட இது அவ பேரன்ட்ஸ் வற்புறுத்தி பன்றதனாலையோன்னு ஒரு சந்தேகம். அதான் அப்படியே கிளம்பி அவ வீட்டுக்கு போய்ட்டேன்…” என்று சொல்லும்பொழுதே அவனின் முகம் கசங்கிவிட்டது.
“ப்ளீஸ் வேண்டாம்…” என்று ஆழினி தவிர்க்க பார்க்க,
“என்ன வேண்டாம்? அதான் சொல்றேனே? கேளு. என் முன்னாடியே இன்னொருத்தனை, கட்டிக்க போறவன் தான். அவனை ஹக் பண்ணிட்டு அவனை அலோவ் பன்றான்னா…” என்று சொல்லி,
“பார்க்க வந்துட்டு கிளம்பிருப்பான் போல. வெளிவாசல்ல எல்லாரும் இருக்கும் போது. பொது இடம்ன்னு இல்லாம அவன் கைக்குள்ள முகமெல்லாம் சந்தோஷத்தோட. ச்சை…” என்று அசூயையாக முகம் சுளித்தான்.
“ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அங்கருந்த ஒருவீட்டு திண்ணையில அப்படியே உக்கார்ந்துட்டேன். நான் என்னை நிதானப்படுத்திக்கவே சில நிமிஷமாச்சு. அதுக்கப்பறம் தான் நேரா கேட்க போய் அவங்க வீட்டுக்குள்ள இருந்தவங்க என்னை பேசி ப்ரவோக் பண்ணி, என்னவோ ஒன் சைட் லவ், மிரட்டறேன்னு சொல்லி பேச அவக்கிட்ட எந்த மறுப்பும் இல்லை. ஆமா பின்னாடி சுத்தறான்னு சொல்றா…”
“அன்னைக்கு அவ்வளோ அவமானப்பட்டேன். அசிங்கமா இருந்துச்சு ஆழினி. இந்தளவுக்கு அவ கண்ணீர் என்னை ஏமாத்திருக்குன்னு. அவ என்கிட்ட உதவியா கேட்டிருந்தா கூட மனிதாபிமானத்துல ஹெல்ப் பண்ணிருப்பேன். ஆனா…”
“என்னோட ஹெல்ப் அவளை தடுமாற வைக்குதுன்னு சொன்னா. என்னோட நினைப்பாவே இருக்குதுன்னு சொன்னா. எனக்குள்ள அது ஒரு பீல். எப்பவும் என் கூடவே இருக்கனும்ன்னு சொல்லுவா. ப்ச்…” என்று சொல்ல அத்தனையையும் அமைதியாய் உள்வாங்கிக்கொண்டாள் ஆழினி.
மீண்டும் சஞ்சனாவின் அலை அவளை சங்கடப்படுத்த அவனுக்கு எவ்வித ஆறுதலும் சொல்லமுடியவில்லை.
முடிந்துபோனது தான். ஆனால் அதன் அடையாளம் இன்னும் தானே ஆழமாய் அவளுள் பதிந்து போனது.
“ஓவர் ஓவர்….” என்றவன்,
“அவ்வளோ ஸ்ட்ராங்கா என்னால லவ் பண்ண முடியலையா? இல்லை, அந்த பீலை குடுக்க தெரியலையா? எதுவோ ஒன்னு. அந்த சேப்டர் க்ளோஸ். அது பொய்யில ஆரம்பிச்சதாலயோ என்னவோ தெரியலை. அஸ்திவாரம் சரியில்லை. மொத்தமா போச்சு…”
“ஏமாற்றம்ன்ற பீல் தவிர வாழ்க்கை கைவிட்டு போச்சு, மறக்க முடியலை இப்படி எந்த உணர்வும் எனக்குள்ள இல்லை. ஏன்னு தெரியலை. அந்த லட்சணத்துல தான் இருந்திருக்கேன். சிலநேரம் நடப்பதும் நல்லதுக்கு தான் போல…”
“பர்ஸ்ட் டைம் தோத்துட்டேன். அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா?…” என்று கேட்டவன்,
“வேற ஏதாவது தெரிஞ்சுக்கனுமா ஆழினி?…” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ம்ஹூம் இல்லை…” அவள் ‘இதற்கு மேலுமா?’ என்பதை போல அயர்ந்து பார்த்தாள்.
இலகுவாய் சொல்லிவிட்டான் தான். காதலித்தேன். ஏமாற்றப்பட்டேன். விலகிவிட்டேன் என்று.
ஆனால் அவனை உயிராய் சுமந்துகொண்டிருப்பவளுக்கு அது சாதாரணம் அல்லவே.
‘திருமணம் செய்துகொள்ள போகிற எண்ணத்தில் தான் பரிசளித்தேன்’ என்று அவன் கூறுகையில் ஆயிரம் முறை மடிந்து மரித்த உணர்வுகள்.
இப்போது அவன் அவளுக்கு மட்டுமே உரித்தானவன். எந்த சூழலிலும், எத்தனைய நேரத்திலும் அவனுக்கென்றால் சென்று நிற்கும் பைத்தியக்காரத்தனம் இப்போதும் அவளிடம் மேலோங்கி நிற்கிறது தான்.
அதற்காக அனைத்துமே ஜீரணிக்க கூடியவை இல்லை என்று உள்மனம் கலங்க பொங்கி வந்த துக்கத்தை முயன்று விழுங்கினாள்.
“இதை எல்லாம் ஏத்துக்க கஷ்டமா இருக்கா ஆழினி?…” என்றவன் கண்டுகொள்ளலில் அவள் திடுக்கிட்டு பார்க்க,
“ப்ச், ப்ச். தப்பில்லை. தயவு செய்து அப்படியெல்லாம் இல்லைன்னு பொய் மட்டும் சொல்லிடாத. உண்மையை தாங்கிக்க நிறையவே வலு இருக்கு. பெரிய சந்தோசம் தர்றதா இருந்தாலும் அந்த பொய் எனக்கு வேண்டாம். சுமக்க முடியாது…” என்றான் அழுத்தமான குரலில்.
“உண்மையையே சொல்றேனே. உங்களுக்கு ஏன் என் மேல அந்த காதல் முதல்ல வரலை?…” என்று ஆழினி கேட்க திகைத்து பார்த்தான் கார்மேகவண்ணன்.
“இன்னொரு உண்மையை சொல்றேனே. என்னோட பார்வையும், கவனமும் தானே உங்க கவனத்தை என்மேல திரும்ப வச்சுது?…” என்றும் கேட்க மறுக்க முடியுமா அவனால்?
“ஆழினி…”
“என்னோட விருப்பம் உங்களை என் பக்கமா கூட்டிட்டு வந்துச்சு. என் மனசை காமிச்சது. நானே மறைக்க நினைச்சாலும் உங்ககிட்ட என்னை ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத உணர்வு வெளிப்படுத்த வச்சது. என்ன எனக்குள்ள இருக்குன்ற கேள்வி என்னை தொடர வைச்சது. அதோட பாதை, என்னை உங்களுக்கு புரியவச்சது…”
“ஹ்ம்ம், ரைட்…” என்றான் ஒப்புதலுடன் ஆமோதிப்பாய்.
“அப்போ என் காதலை நீங்க ஏத்துக்கிட்டீங்கன்னு தானே அர்த்தம்…” என்றாள் கண்களில் துடித்த வலியுடன்.
“ஆழினி…”
“நிஜம் தானே சொல்லனும். என்னோட காதல் உங்களை கவனிக்க வச்சு, எனக்காக காத்திருக்க வச்சு, கண்டுபிடிக்க வச்சு அந்த பிடித்தம் உங்களுக்குள்ள உருவானது. மேலோட்டமா பார்த்தா ரெண்டுபேருக்கும் பிடிச்சிருக்கு. ஆழமா ஆழினியா யோசிச்சா எனக்கு உங்களை பிடிச்சது உங்களுக்கு ஒருகட்டத்துல விருப்பமா, காதலா மாறியிருக்கு…” என்று சொல்ல என்ன பதில் சொல்வதென தெரியாமல் அதிர்வுடன் பார்த்தான்.
“ஆனா எனக்கு இது போதுமே. நிஜமாவே அவ்வளோ சந்தோஷம். இப்ப இந்த நிமிஷம் என்னைவிட இந்த உலகத்துல யாரும் சந்தோஷமா இல்லைன்னு தான் சொல்லுவேன். ஏனா என் கண்ணன், எனக்கே எனக்கான கண்ணன்…” என்றாள் கண்ணில் நீருடன் இதழ் விரிந்தபுன்னகையோடு.
“கிரேசி இல்லையா நான்?…” என்று கண்சிமிட்ட விழிகளில் திரண்டு நின்ற நீர் உருண்டு கன்னத்தில் வழிந்தது.
பேச்சற்று போனது கார்மேகவண்ணன் மட்டுமே. எத்தனை தூரம் அவளை அவளே சமாளித்து கடந்து வந்திருக்கிறாள் என்று புரிய உள்ளுக்குள் சுருக்கென்ற வலி.
ஆழினியின் தாய்மாமாவும், பெரியப்பாவும் வந்த அன்று யாரிடமும் காண்பிக்கமுடியாத தன் ஆவேசத்தின் கால அளவு சிறிதென்று இருந்தாலும் எத்தனை தூரம் தனக்கு இனி அவளில்லையோ என்று தவித்தோம் என நினைத்து பார்த்தான்.
இன்றைய இவளின் பரிதவிப்பும், சஞ்சலமும் அவனை புரட்டி போட்டு பந்தாடியது.
தனது எவ்வித வார்த்தைகளும் அவளின் வலியை போக்கிவிடாது என்பதில் அத்தனை திண்ணம்.
“சில விஷயங்களை அதன்போக்கில தான் எடுத்துக்கனும் ஆழினி. இப்படி நடந்திருக்கவேண்டாம், இப்படி போய் மாட்டிக்கிட்டோமேன்னு எத்தனையோ முறை நினைச்சு நம்மை நாமே மனசால காயப்படுத்திக்கலாமே தவிர அதுக்கு தீர்வு கண்ணீர் இல்லை…” என்று சொல்லியவன் விரல்கள் நீண்டு அவளின் விழிநீர் துடைக்க.
“கடந்து வா. உனக்கு கஷ்டம் தான். அவ்வளோ ஈஸியா சொல்லிட்டேன்னு கேளு. ஆனா அதை தவிர வேற என்ன சொல்லமுடியும் நான்? காலம் எல்லாத்தையும் மாத்தும். நம்பிக்கை அதானே எல்லாம்…” என்று சொல்ல அவனின் அந்த முகவாட்டம் கூட தாளமுடியவில்லை.
“அதெல்லாம் இல்லை. நான் ஓகே தான். என்னவோ சட்டுன்னு கண்ணுல தண்ணி…” என்று இருகைகளாலும் தன் கண்ணை துடைத்துவிட்டு பளிச்சென்று புன்னகைத்தவளை அசையாது பார்த்தான்.
எத்தனை நேரம் அப்படியே இருந்தார்களோ? ஆழினியின் எண்ணிற்கு நஞ்சப்பனிடம் இருந்து அழைப்பு.
“உன் போன் தான் ரிங்காகுது…” என்று அவளின் தோள் தட்டி கண்ணன் சொல்லவும் சிரிப்போடு அதனை எடுத்தாள்.
“மேடாம், புண்ணியமா போகும். அந்த எமப்பயலை இங்க அனுப்பி வச்சு என்னை ரிலீஸ் பண்ண சொல்லுங்க மேடாம். இந்த போனை உங்க கையா நினைச்சுக்கறேன்…” என்ற கதறல்.
“நஞ்சப்பன் ஏன் அழறாங்க?…” என்றாள் ஆழினி குழப்பத்துடன்.
“அவனா போன்ல. கொண்டா…” என்று வாங்கிய கார்மேகவண்ணன்,
“அப்பறம் மச்சான், வடை பாயாசத்தோட விருந்தை ஒரு புடி புடிச்சாச்சா?…” என்று கேட்க,
“கொலை பண்ணிடுவேன் உன்னை. மனுஷனாடா நீ? மரியாதையா வந்து என்னை உன் வீட்டுலருந்து வெளில பத்திவிடு….”
“என்ன பேச்சுல எகத்தாளம் தெரியுதே?…” என்று இவன் சீண்ட,
“டேய் மச்சான், வேணும்னா மொட்டை அடிச்சுக்கறேன். என்னை காப்பாத்தி விடுடா ராசா. இங்க உங்கப்பா என் ஜீவனை உருவறார்…” என்று பவ்யமும், கதறலுமாய் கேட்க,
“அது. ஆமா என்ன கேட்டுட்டு இருக்கார்?…” என்றான் சாவகாசமாய்.
“ஏன் வந்தன்னு கேட்டார்….”
“ஹ்ம்ம்…”
“நீ கூப்பிட்டு வந்தேன்னு நான் சொன்னேன்…”
“ஹ்ம்ம்ம்…” என்றவன் தன் கைபேசியில் வாழவந்தான் அழைக்க அதனை எடுத்து ஆழினியிடம் நீட்டினான்.
“என்னத்தடா சொல்ல? எங்கப்பாவை பார்க்க வரேன்னு சொன்னீங்களே. என்னன்னு கேட்க வந்தேன்னு சொன்னேன். உங்கப்பாவை நான் ஏன் பார்க்க கூடாதுன்னு விசாரிச்சிட்டு இப்பத்தான் ஹாலுக்கு போயிருக்கார். நான் அர்ஜன்ட்ன்னு சொல்லி பாத்ரூம்லருந்து உனக்கு கூப்பிட்டேன்….”
“ஹ்ம்ம்…” கண்ணனின் பார்வை முழுவதும் ஆழினியின் முகத்தில் தான்.
அத்தனை சந்தோஷமும் வெட்கமுமாய் ஆழினி பேசிக்கொண்டிருக்க விழிகளை அவளிடமிருந்து மீட்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“திரும்ப அடுத்த டேர்ன் வந்திடுவார். மச்சான் வந்து காப்பாத்திவிடுடா…” என்று கெஞ்ச, ஆழினி பேசிமுடித்து கண்ணனை பார்க்க,
“மச்சான் பாய்சா, நான் ரொம்ப பிஸி. டிஸ்டர்ப் பண்ணாத…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட,
“டேய் டேய் டேய். மச்சான். கண்ணா, எமப்பயலே, வச்சிடாதடா…” என்ற கூவலுடன் போனை பார்க்க தொடர்பு அறுந்திருந்தது.