“இருக்கலாம். வேற என்ன செய்ய? அப்படி ஒன்னும் ரொம்ப வெயில் இல்லை பேசிட்டு தானே இருக்கோம். ஏன் உனக்கு கஷ்டமா இருக்கா என்ன?….” என்றான் கார்மேகவண்ணன் அவளிடம்.
“ச்சே ச்சே…” என வேகமாய் தலையாட்டி மறுத்தவள் அணிந்திருந்ததோ முத்து பதித்த மூக்குத்தி.
இலகுவாய் சாய்ந்திருந்தவன் சட்டென அவளின் முகம் நோக்கி நெருங்கி ஒற்றை விரலால் நாசியின் நுனியை தீண்டினான்.
“அனேகமா மூக்குத்திக்கே என் சேலரி போயிடும்ன்னு நினைக்கேன்…” என்றான் அவளின் முகபாவனை கண்டு.
“என்கிட்ட எப்படி இருக்கனும்ன்னு கூடவா எல்லை வச்சுப்ப நீ? ராஸ்கல்…” என்றான் கோபமாய்.
“எதுக்குமே எல்லை இருக்கனும். இல்லைன்னா கஷ்டம். வீசி எறியும் போது ரொம்ப வலிக்கும். உயிர் போயிடும்…” என்றாள் உணர்வின்றி புன்னகையுடன்.
“எல்லைன்றது நாமா உருவகம் பண்ணிக்கறது. இதுக்கு முன்னாடி நீ வாழா மாமாவோட பொண்ணு. என்னோட பாஸ். எனக்கு உன்கிட்ட அப்போ லிமிட்ஸ் இருந்தது. ஆனா இப்போ நான் நீயா பீல் பன்றேன். எந்த எல்லையும் கிடையாது. உன்கிட்ட உனக்கு நீயே எல்லை வச்சுப்பியா? அதுமாதிரி…” என்றான் அவளிடம்.
‘இதென்ன இத்தனை நாள் விட்டுவிட்டு இப்போது இப்படி செய்கிறேன்?’ என்று அச்சம் கூடியது.
கார்மேகவண்ணன் பேசிக்கொண்டே அவளின் உள்ளங்கையில் இருந்த மூக்குத்திகளை பார்வையிட்டான்.
ஒவ்வொன்றையும் எடுத்து, பார்த்து ஞாபகத்திற்கு கொண்டுவர முயன்றபடி பேசிக்கொண்டிருக்க ஆழினியின் கவனம் அவனின் பேச்சில் தான்.
என்ன செய்கிறான், என்ன தேடுகிறான் என்றெல்லாம் இல்லை. அவன் வார்த்தைகளில் தான் இருந்தது.
‘இத்தனை வருடங்கள் ஒற்றையாய் சுமந்த காதல் கை சேர்ந்திருக்க அதனை சோதிப்பதை போல தான் நடக்கிறோமே’ என்று கலங்கி போயிருந்தாள்.
அதனை தேற்றும் விதமாய் தனக்காக எத்தனை பேசுகிறான் என்று அவனின் மீதான தன் காதலில் தானே உருக்குலைந்துகொண்டிருந்தாள்.
அவளின் கவனம் தன் தேடலில் இல்லை என்று தெளிவானவன் இதழ்கள் குறுஞ்சிரிப்புடன் தன் விழிகளை கூர்மையாக்க அந்த மூக்குத்தி குவியலில் ஒன்று மட்டும் பழையதாக பழைய வடிவமைப்புடன் இருக்க கையில் எடுத்தவன் இன்னும் மூளையை கசக்கினான்.
அவனின் சம்பந்தப்பட்டதல்லாமல் வேறு எதுவாகவும் அது இருக்கபோவதில்லை என்று மட்டும் நிச்சயமாகியது.
கண்ணனின் பேச்சுக்கள் நின்றதும் தான் ஆழினி அவன் என்ன செய்கிறான் என்பதையே கவனித்தாள்.
“இது…” என்று அவளிடம் காண்பித்ததும் பார்த்தவள் முகத்தில் தவிப்புகள் கலந்தோட எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டால் என்ற பயத்தில்,
“குடுங்க, நான் கொண்டுபோய் வச்சிடறேன்….” என்று அதனை வாங்க முயல,
“இது நான் வாங்கிட்டு வந்து சித்தும்மாவை போட சொன்ன நோஸ் ரிங் தானே ஆழினி?…” அவனுக்கே முழுதாய் உறுதி இல்லை.
அன்றைக்கு வாங்கிக்கொண்டுவந்து அத்தனை கலாட்டாக்கள் செய்து அங்கேயே விட்டுவிட்டு சென்றிருக்க எத்தனை வருடங்களாகி இருந்தது.
சுத்தமாய் நினைவில்லை. ஆனால் அதுவாக இருக்கலாமோ என்ற சிந்தனையுடன் கேட்க ஆழினியின் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சி.
“ஞாபகம் வந்திருச்சா? கண்டுபிடிச்சிட்டீங்க…” என்று அதற்கே அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்த நெஞ்சமெல்லாம் அடைப்பதை போலிருந்தது கார்மேகவண்ணனுக்கு.
“இது அன்னைக்கு நீங்க கொண்டுவந்தது தான். அப்பவே அம்மா போடலைன்னதும் நான் எடுத்து பத்திரமா வச்சுக்கிட்டேன். எப்பவாச்சும் உங்ககிட்ட காமிக்கனும்ன்னு. இன்னைக்கு காமிச்சிட்டேன்….” என்றவள்,
“ஆனா இன்னும் இதை மட்டும் நான் போடவே இல்லை. போடனும்ன்னு அவ்வளோ ஆசை. எடுப்பேன். பார்ப்பேன். திரும்ப வச்சிருவேன். ஒருவேளை அம்மா கண்டுபிடிச்சிட்டா அப்படின்ற பயம். நானே நோஸ் பின் போட ஆரம்பிச்ச பின்னாடியும் உங்களுக்கு எதுவுமே தோணலையா. அதுல கொஞ்சம் வருத்தம்…”
“என்னடா இது, கவனிக்கவே இல்லையேன்னு சும்மா சும்மா முன்னாடி வருவேன். நிப்பேன். பெருசா என்னை பார்த்து எல்லாம் பேசமாட்டீங்க. போற போக்குல பேசிட்டு போயிடுவீங்களா. எப்போ என்னை புரியுதோ அப்போ உங்ககிட்ட காமிச்சு போட்டுக்கனும்ன்னு நினைச்சேன்….”
“ஆனா இப்பவும் போடமுடியாது இதை…” என்று சொல்லி புன்னகைக்க வாயடைத்து பார்த்துக்கொண்டிருந்தவன்,
“ஏன்? குடு நானே போட்டுவிடறேன்…” என்றான் தன்னை ஸ்திரப்படுத்தி கொண்டு..
“எப்படி போடுவீங்க? இது டேமேஜ் ஆகிடுச்சு. போடமுடியாது. இங்க பாருங்க…” என்று காண்பிக்க அப்போதுதான் அந்த வளைவு ஒடிந்து நிற்க கண்டான்.
“ஆனா அழகா இருக்குல. எனக்கு இந்த காம்பினேஷன்…” என்று சொல்லியவள் சட்டென வாயை மூடிக்கொண்டு,