அவனின் மனதெல்லாம் அவள் காண்பித்த அந்த உடைந்த மூக்குத்தி தான் வந்து நின்றது.
அடுத்த வீதிக்குள் வரும்முன்னரே லட்சம் முறை தன்னை தானே நிந்தித்துக்கொண்டான் கார்மேகவண்ணன்.
பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல டைனிங் டேபிளில் கோவேந்தன் என்னவோ கேட்க வாயில் அடைத்த உணவை விழுங்க முடியாமல் அமர்ந்திருந்தான் நஞ்சப்பன்.
“இதோ வந்துட்டான். நானும் ரெடியாகிட்டு வரேன்…” என்று சொல்லி கோவேந்தன் எழுந்துகொண்டார்.
கண்ணில் கலவரத்துடன் பேயறைந்ததை போல் அமர்ந்திருந்த நண்பனை கண்டு சிரிப்பு பொங்க,
“என்ன இவன் இன்னும் முழுசா உக்கார்ந்திருக்கான்?…” என்றான் வாழவந்தானிடம் நஞ்சப்பனை பார்த்துக்கொண்டே கார்மேகவண்ணன்.
“நல்ல ப்ரெண்ட்ஸ்…” என்று சொல்லிய வாழவந்தான்,
“சித்துவோட அண்ணன் வீடுவரைக்கும் போய்ட்டு வந்திடுவோம் கண்ணா. அவர்கிட்ட விஷயத்தை சொல்லனும். சொல்லிட்டு தேதி முடிவு பண்ணலாம்ன்னு இருக்கோம். நீ என்ன சொல்ற?…” என்றார் அவனிடம்.
“ஹ்ம்ம், சரி நீங்க முன்னாடி போங்க. நானும் நஞ்சாவும் சேர்ந்து வரோம். என்னடா பாய்சா?…” என்று கண்ணன் கேட்கவும்,
“பாவம்டா இவன்…” என்றபடி போனுடன் எழுந்து சென்றார் வாழவந்தான்.
“ஆத்தே உன் கூடவா? முனியாண்டி கையில கசாப்பானாலும் பரவாயில்ல. இன்னியோட நீ யாரோ. நான் யாரோ. நான் போறேன்டா…” என முறைத்தான் நஞ்சப்பன்.
“பாய்சா, நீ போகையிலே போகையிலே…” என கிண்டலுடன் அவனின் தோளில் அடித்து பாடினான் கார்மேகவண்ணன்.
“அட இருப்பா இன்னும் போகலை. உசுரோட தான் இருக்கேன். விட்டா போக வச்சிருவ போலடா எமப்பயலே….” என்று பல்லை கடிக்க,
“நஞ்சா…” கோவேந்தன் அழைக்க,
“ஆத்தீ பஃபேலோ ஓனர். கையில பாசக்கயறு ஒன்னு தான் இல்ல. இன்னும் கொஞ்சநேரம் விட்டா உங்கப்பா புடிக்கிற புடில நான் நெசமாவே போகையிலே தான்….” என அவனே நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ அடக்கமாட்டாமல் அப்படி ஒரு சிரிப்பு.
“நஞ்சா…” மீண்டும் அவர் அழைக்க,
“ஐயோ இவர் என்னை ரொம்ப டார்ச்சர் பன்றார்டா. ஏன்டா மனுஷன் இந்த பாடு படுத்தறார்?…” என்று கேட்க,
“இருடா. வா என்கூட…” என்றவன் நஞ்சப்பனை தன் அறைக்கு அழைத்து சென்று முகம் கழுவ சொல்லி தயார் படுத்தினான்.
“ஆட்டுக்கு மஞ்சத்தண்ணி ஊத்தி கூட்டிட்டு போற மாதிரியே இருக்குடா நீ எனக்கு பட்டி டிங்கரிங் பண்ணி கூட்டிட்டு போறது…” என்றும் சொல்ல இன்னும் அப்படி சிரித்தான் கார்மேகவண்ணன்.
அவனின் புன்னகை கண்ட நஞ்சப்பன் நெஞ்சமும் சந்தோஷத்தில் நிம்மதியில் நிறைந்து போயிருந்தது.
“ஆனாலும் அய்யனாரை என்னனுடா வீட்டுல வச்சு சமாளிக்க?…” என்று கேட்டுவிட,
“வெளில தான் இருக்கார். கூப்பிட்டே கேட்போமே?…” கண்ணன் கண் சிமிட்ட,
“வில்லன்…” என்று சொல்லியபடி கையெடுத்து கும்பிட்டுவிட்டான்.
“ம்க்கும், என்னைக்கு என்னை நீ பறக்கவிட்டியோ அப்பல இருந்தே வரவன் போறவன்லாம் பறக்கவிடறான். இன்னிக்கு உங்கப்பா. பொறவு வேற எப்படி இருப்பேன் நான்?…” என்றவன்,
“ஆமா இந்த லவ்வெல்லாம் ப்ரெண்டுகளுக்கு தெரியற மாதிரி எல்லாம் செய்யமாட்டீங்களோ ஸார்? எப்ப பாரு கமுக்கமா…”
“அப்படி எத்தனை தடவை லவ் பண்ணிட்டேன் நான்?…” கண்ணன் அதற்கும் சிரிக்க,
“ஒன்னை தாண்டினாலே மெனிஸ் லிஸ்ட் தான் மச்சான்…”
“வச்சிக்கறேன்டா உன்னை…” என்று வெளியே வர அனைவரும் தயாராக இருந்தனர்.
“முன்னாடி போங்க. நானும் நஞ்சாவும் என் கார்ல வரோம்…” என்று கண்ணன் சொல்லவும் அவர்கள் கிளம்பினார்கள்.
“வாடா மச்சான்…” என்று நஞ்சப்பனை அழைத்துக்கொண்டு தானும் கிளம்பியவன்,
“சரி சொல்லு, நான் கிளம்பவும் எங்கப்பா என்ன கேட்டார் உன்னை?…” என கதை கேட்க ஆரம்பிக்க,
“இந்த ஆகாதபோகாத கதை தானே வேணாங்கறது. கொஞ்சம் நிம்மதியா இருந்திடக்கூடாதே?…” என்றவன்,
“ஏன் வந்தன்னார்….” என கூற ஆரம்பித்தான்.
“ஹ்ம்ம்…”
“நீ கூப்பிட்டன்னேன்….”
“சரி…”
“ஏன் கால்ல விழுந்தன்னார்….”
“அதுல எல்லாம் அய்யனார் கில்லி…” கண்ணனுக்கு தகப்பன் எப்படி கேட்டிருப்பார் என்று அத்தனை சிரிப்பு.
“பயந்துட்டேன்னேன்….”
“வசமா சிக்கிருக்க…”
“பின்ன? கோர்த்தும் விட்டுட்டு கேள்வி வேறையா?…” என்ற நஞ்சப்பன்,
“அடுத்து ஏன் பயந்தன்னார்….”
“சரி…”
“நீங்க எங்கப்பாவை பார்க்க வரீங்கன்னு பயந்தேன்னேன்….”
“விட்டா அந்தரத்துல பறக்க விட்டுருப்ப. காரை ஓரங்கட்டு ராசா. நான் ஓட்டறேன்….” என்று தானே வாகனத்தை செலுத்த ஆரம்பித்தான் நஞ்சப்பன்.
“அம்புட்டு உயிர் பயம்…”
“வாயில வண்ணங்கள் நிரம்புதுடா. பேசாம வா. என் வாயை புடுங்கி அந்த நங்கூரத்துலையே என்னையே நீ உக்கார வச்சிருவ. பின்விளைவுகள் எனக்கு தானே? கம்முன்னு வா…” என்று சொல்லிவிட்டு ஓட்ட,
“பேசாம அய்யனார் கூடவே நீ போயிருந்திருக்கலாம்…”
“அதுக்கு முனியாண்டிக்கு நான் பிறக்காமலே போயிருந்திருக்கலாம்….” என்று நஞ்சப்பனும் பதில் கொடுக்க, ஆழினி அழைத்துவிட்டாள் கண்ணனுக்கு.
“ஆமா உனக்கு ஏன்டா என்னால கால் பண்ண முடியலை? ஏன் போன் போகலை? எத்தனை தடவை கால் பண்ணேன் தெரியுமா?….” அப்போது தான் ஞாபகம் வந்ததை போல நஞ்சப்பன் அப்பாவியாய் கேட்க,
“ப்ளாக்ல போட்டா எத்தனைதடவை கூப்பிட்டாலும் எனக்கு உன் கால் வராதுடா…” என்றான் அசால்ட்டாக கார்மேகவண்ணன்.
“எதே…” என்றவனுக்கு அழுகையே வந்துவிட்டது.
“மனுஷங்களாடா நீங்க? அதை கூட தெரியாம ரீச்சாகலையோன்னு நம்பி உங்கப்பா முன்னுக்கா உக்கார்ந்திருந்தேன்….”என்று புலம்பியபடி வர,
“நட்புல இதெல்லாம் சகஜம்டா…” என்ற கண்ணன், அவன் பதில் சொல்லும் முன் ஆழினியின் அழைப்பை ஏற்றான்.
“ஆமா, என் மாமனார் வர சொல்லிருக்காரே? போகனுமில்லையா? அதுதான மரியாதை…” என்றான் ஆழினியிடம் கண்ணன்.
“வள்ளல்டா நீ…” நஞ்சப்பன் கேலியாய் கூற,
“நான் கூட யோசிச்சேன். நம்ம நஞ்சா போவோம்ன்னு சொன்னான். அவன் தான் நம்ம கல்யாணத்துல ஏ டூ இசட் எல்லாம் செய்வேன்னு அடம் புடிக்கிறான் ஆழி. கூடவே வரேன்னு இப்ப கிளம்பி வரான்…” என சொல்ல,
“சத்தியமா நெஞ்சுவலியே வருதுடா. எப்படிடா வாய் கூசாம…” என்று புலம்பத்தான் முடிந்தது நஞ்சப்பனால்.
சென்ற இடத்தில் ஆழினியின் தாய்மாமாவும் அதனை எதிர்பார்த்திருந்ததை போல பெரிதாக அதிர்ச்சியெல்லாம் காண்பிக்கவில்லை.
சிலபல யோசனைகள் மட்டுமே. மற்றபடி சம்பந்தப்பட்டவர்களுக்கு பிடித்திருக்க தானும் மனதார சம்மதித்தார்.
“கண்ணனுக்கு தாராளமா குடுக்கலாம். நாம பார்க்க வளர்ந்த பிள்ளை தானே?…” என்று ஆழினியின் தாய்மாமாவின் மனைவியும் கூற அன்றே முகூர்த்தநாளும் குறிக்கப்பட்டுவிட்டது.
மூன்று மாதத்தில் திருமணம் என்று தேதி முடிவாகியிருக்க அந்நாளை எதிர்நோக்கி இருமனங்களும் காதலில் கசிந்திருந்தது கனவுகள் தீர.