தினசரி நாளிதழை திருப்பிக்கொண்டிருந்த கோவேந்தன் புருவ சுளிப்புடன் அங்கே அடித்து ஓய்ந்த போனை பார்த்தார்.
மகனின் கைபேசி தான். கூடத்தில் வைத்திருந்தது இத்துடன் இரண்டு மூன்றுமுறை அடித்துவிட்டது.
அன்று முகூர்த்த புடவையும், திருமணத்திற்கு தேவையான உடைகளும் எடுக்க செல்லும் நாள்.
அனைவரும் கிளம்பி இருக்க இன்னும் மகன் தயாராகவில்லை. இரவெல்லாம் கட்டிடவேலை நடக்கும் இடத்திற்கு சென்றிருந்து காலை தான் திரும்பியிருந்தான்.
வந்தவன் வந்த வேகத்தில் கிளம்புவான் என்று பார்த்தால் ‘ஒருமணி நேரம் உறங்கி எழுந்துவருகிறேன்’ என்று சொல்லிவிட்டதில் கடுப்பாகி போனார் கோவேந்தன்.
இப்போது இதுவேறு அழைத்து எரிச்சலை உண்டாக்க படித்துக்கொண்டிருந்த பேப்பரை மடித்து போட்டவர் எழுந்து வந்தார்.
“ம ண வி. மணவி. யார்ரா இது மணவி?…” என்று மீண்டும் படித்து பார்த்து,
“அட ச்சே மாணவியை தான் இந்த லட்சணத்துல பதிஞ்சிருக்கானா? தலைகீழா நின்னு சேவ் பண்ணிருப்பான் போல திமிரெடுத்தவன்….” என்று பல்லை கடித்தவர்,
“இதுல இவனுக்கு கல்யாணம் வேற? ஒரு பேரை வைக்க தெரியுதா? ஒவ்வொரு எழுத்துக்கும் ஊடால இதென்ன இத்தனை புள்ளியோ? இதுல பெத்த பேரு படிச்சு பட்டதாரின்னு. தலையெழுத்து…” என்று தலையில் அடித்துக்கொண்டார்.
“என்னங்க என்னாச்சு? காபி வேணுமா?…” என்று வந்தார் மகிழா.
“ப்ச், உன்கிட்ட இப்ப எனக்கு தலைவலிக்குதுன்னு சொன்னேனா?…” என்று அவர் மீது பாய,
“இல்ல தலையில தட்டிட்டு நின்னீங்களா? அதான் வலி மண்டையை பிளக்குதோன்னு பாத்தேன்…”
“பார்ப்படி பார்ப்ப. என் மண்டையை தான் அம்மாவும், மகனுமா சேர்ந்து பிளக்கறீங்களே? பத்தாதாக்கும்…” என்றவர்,
“எந்திச்சிட்டானா உன் சீமந்தபுத்திரன்?…” என்றார் கடுப்புடன்.
“அவன்…” என்று மகிழா ஆரம்பிக்க,
“இந்தா உன் மகன் புகழ் பாடறதை நிப்பாட்டு. இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரியும்ல. தெரிஞ்சும் இப்படி பன்றான் இவன்?…” என்று குதிக்க,
“நைட்டெல்லாம் பில்டிங்ல வேலை நடக்குதேன்னு அங்க அண்ணனுக்கு துணையா போய்ட்டான். வயசான காலத்துல அவரை ரொம்பநேரம் முழிக்க வைக்க முடியுமா? அதான் போயிட்டு வந்து கொஞ்சநேரம் படுக்கறேன். போனை இங்க சார்ஜ்ல போட்டுடறேன்னு சொல்லிட்டு இப்பத்தான் போனான்…” என்றார் அவருக்கு தெரிந்த கதையையே பாவம் போல நல்லவிதமாய்.
“ஆழி கண்ணாவை நல்லா பார்த்துப்பா…” என்று மகிழாவின் வாய் ஒட்டுக்கிடக்காமல் சொல்லிவிட அய்யனார் உருவெடுத்துவிட்டார் கோவேந்தன்.
“நீ இருக்கியே? உன் மகனை இன்னும் மடில போட்டு கொஞ்சு. அதுக்கு ஆழியும் அவனை அப்படி பார்க்கனுமோ. தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ….”
“சரிங்க, நீங்க என்னை பார்த்துக்கற மாதிரியே அவனையும் ஆழியை பார்த்துக்க சொல்றேன்…” என்று சொல்லிவிட்டு அடுத்து ஓட்டம் பிடிக்க பார்க்க, மகிழாவை பிடித்துவிட்டார் கோவேந்தன்.
“ஏய் ஏய், என்னடி நக்கலா?…” என்றவருக்கு பதில் சொல்லவே முடியவில்லை.