“நான் கூட்டிட்டு வரேங்க. நீங்க முன்னாடி போங்க…” என்று கோவேந்தனிடம் அவர் சொல்ல,
“இவ ஒருத்தி…” என்றவர்,
“என்னவோ பார்த்து பக்குவமா வா…” என்று சொல்லி,
“உனக்கென்ன அவனை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற? வந்து சேரு…” என்றதோடல்லாமல் கையோடு இழுத்துக்கொண்டு முன்னே செல்ல,
“என்ன?…” என்றான் கார்மேகவண்ணன் தாயிடம்.
“அங்க வா. சொல்றேன்…” என அவரும் சத்தமின்றி சொல்லி செல்ல அவன் முகத்தில் அவ்வளவு சிரிப்பு.
“இவங்களோட…” என்று தலையாட்டியபடி அழகாய் சிரித்துக்கொண்டவன் தானும் கிளம்பி சென்றான்.
நேராக அலுவலகம் செல்ல அத்தனைபேரும் இன்னும் கூடுதல் பவ்யத்துடன் அவனை பார்த்து புன்னகைத்தனர்.
முன்பே அவன் மீது ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். இப்போது முதலாளியின் மகளை திருமணம் செய்துகொள்ள போகிறவன் என்னும் காரணமே அவர்களை வாயடைக்க செய்திருந்தது.
“எதிர்பார்த்தது தானப்பா…” என்று சிலர் மனதார வாழ்த்தினர்.
“இதை சுத்தமா எதிர்பார்க்கலை. அப்படி கல்யாணம் நடக்க எந்த சிம்டம்ஸும் இங்க இல்லை…” எப்படி இப்படி என்று அதிர்ந்தனர்.
“கார்மேகன் ஸாரா? இவருக்கு லவ்வபிளா பார்க்க, பேச வருமா?…” கேலியாகவும் பேசிக்கொண்டனர்.
“ஆழினி மேம் குணத்துக்கு எப்படி இவரோட ஒத்துவரும்?…” என்றும் பேசிக்கொண்டனர் ஏற்றும், ஏற்கமுடியாமலும்.
இப்படியாக அவர்களுக்குள் ஆயிரம் கருத்துக்கள் வந்தாலும் முகத்தில் ஒட்டவைத்த சிரிப்புடனேனும் வாழ்த்து தெரிவிக்க மறக்கவில்லை அவர்கள்.
“நீங்க லக்கி ஸார்…” என்று கூடுதலாய் ஒருவர் முகஸ்துதி பாடினால் கூட,
அவனிடம் எந்தவித பேச்சுக்களும் எடுபடவில்லை. அனைத்திற்கும் ஒரேவிதமான பிரதிபலிப்பு மட்டுமே.
இதற்கு முன்புமே பெரிதாய் அவன் எந்தவொரு விஷயத்திலும் அலட்டிக்கொள்ளாத காரணத்தினால் இது ஒன்றும் அவர்களுக்கு புதிதாகவோ, திமிராகவோ தோன்றவில்லை.
“அந்த மனுஷன் என்னைக்கு நெருங்கி பேசிருக்கார்? எப்பவும் இப்படித்தானே?…” என்றும்,
“அதான, நான் கூட கம்பெனிக்கு முதலாளி ஆனதும் கெத்து காமிப்பார்ன்னு நினைச்சேன். என்னைக்கும் போலதான் இருக்கார். பேசறார்…” என்றும் பேசிக்கொண்டனர்.
அதுவும் அவனின் காதுகளில் வந்து விழத்தான் செய்தது. இப்படியெல்லாம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை என்றால் தான் அதிசயம் என்று கடந்துபோனான்.
இதோ ஆழினியின் அறை கதவை நாசூக்காய் தட்டிவிட்டு உள்ளே வர அவனை பார்த்ததும் மலரும் பூவாய் அவள் புன்னகை.
“ரெடியா? வேலை முடிஞ்சதா?…” என்றான் கண்ணன்.
“இப்ப தான் முடிச்சேன். நீங்களும் வந்துட்டீங்க…” என்று சொல்லிய ஆழினி தன் ஐடியை எடுத்துக்கொண்டு மேஜையை தாண்டி அவனிடம் வந்தாள்.
“கார் நீங்க ட்ரைவ் பன்றீங்களா நான் பண்ணட்டுமா?…” என கார் சாவியை எடுத்துக்கொண்டே கேட்க,
“அதை வெளில போய் பேசலாமா?…” என்று கேட்டவன் முன்னே நடக்க அவனுடன் இணைத்து நடந்துவந்தாள் ஆழினி.
“நஞ்சப்பன்…” என அவனை அழைத்து பேசிவிட்டு இருவரும் வெளியே வர கார்மேகவண்ணன் தன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
“பைக்லையா? கார்?…”
“ஏன் பைக்ல வந்தா என்ன? உன் ட்ரெஸ் கூட கம்பர்ட்டபிள் தானே?…” என்றான் அவள் அணிந்திருந்த குர்தி, ஜீன்ஸ் பார்த்து.
“இல்லைன்னு சொன்னேனா?…” என்றவளுக்கு வீட்டில் சொல்லிய கவனங்கள் மீண்டும் கண்முன் வலம் வந்தது.
“பயப்படாதீங்க மனைவி. பத்திரமா போய்ட்டு வந்திடலாம்…” என்று சிரிக்க,
“கேலி பண்ணாதீங்க. நாள் கம்மியா இருக்கு. நேத்து லேசா படில தடுமாறினதுக்கே அம்மா செம்ம டோஸ். இந்தமாதிரி நேரத்துல பத்திரமா இருக்கனும்ன்னு. இப்ப பைக்ல போனா…” என்று சொல்லிக்கொண்டே வந்தவள் அவன் பைக்கில் கைகட்டி அமர்ந்தபடி அவளையே பார்க்க கண்டு பேச்சை நிறுத்தினாள்.
“நேத்தே கோவிலுக்கு போய் வேண்டிக்கிட்டு இந்த கயிறை கூட அம்மா தான் கட்டிவிட்டாங்க. ப்ளீஸ், இப்படி பார்க்கவேண்டாம்…” என்று சொல்லி அவனிடம் தன் கையை நீட்ட,
“கல்யாணம் நல்லபடியா நடக்கும். எதுக்கு இவ்வளோ பயம்?…” என்றவன் அவள் நீட்டிய கயிற்றில் அசைந்தாடிய இரு நுனிகளை கொண்டு தானும் மூன்று முடிச்சிட,
“கண்ணா…” என்றாள் ஆழினி புன்னகையுடன்.
“என்னா? கல்யாணமே முடிஞ்சதாம் இப்போ. வரீங்களா மனைவி…” என்று சிரிப்புடன் கேட்க,
“நீங்க இருக்கீங்களே?…”
“இங்க தான் இருக்கேன்…” என்றவனின் தோளில் லேசாய் அடித்தவள் பைக்கில் அமர போக,
“டபிள் சைட் உட்கார் ஆழி…” என்றான் அவளிடம்.
அவன் சொல்லாமல் இருந்திருந்தால் கூட அப்படித்தான் அமர்ந்திருப்பாள். இப்போது சொல்லவும் பட்டென்று அவனை பார்க்க,
“சிங்கிள் மீனிங் தான். டபுள் சைட் கால் போட்டு உக்கார்ந்தா இன்னும் கொஞ்சம் வசதியா இருக்கு. உனக்கு சொன்னேன் மனைவி…” என்று விஷமம் பொதிந்த பார்வையுடன் சொல்ல முதன்முதலாய் எல்லை மீறிய ஒரு பார்வையுடனான பேச்சு.
“ஸோ சேட். இதுக்கு அடுத்த பைக்ல வரலாம் நீ…” என்று அலுத்துக்கொள்ள,
“இன்னொருதடவை அப்படி வரலாம். இப்ப கிளம்புங்க. டைம் ஆகிடுச்சு…” என்றாள் ஆழினி அடக்கப்பட்ட சிரிப்புடன்.
“வேற வழி…” என்று சொல்லி பைக்கை கிளப்பியவன் சொல்லியதை போலவே பக்குவமாய் பயணப்பட்டான்.
இடையிடையே அவளிடம் என்னவோ கேட்க, பைக்கின் வேகத்தில் காற்றின் ஓசையை தவிர்த்து அவனின் பேச்சுக்கள் தெளிவாய் கேட்கவில்லை.
“என்ன சொல்றீங்க? எதுவுமே கேட்கலையே…” என்று அவளறியாமல் ஒரு நெருக்கத்தை அவனிடம் காண்பிக்க கண்ணனின் இதழ்கள் கள்ளப்புன்னகை புரிந்தது.
அதனை காண்பித்துக்கொள்ளாமல் பேச்சு சுவாரஸியத்தில் ஆழினியை வைத்துக்கொண்டவன் மீள விடவில்லை. தானும் மீளவில்லை.
அவர்கள் செல்லும்பொழுதே இரு குடும்பத்தினரும் அங்கே வந்து சேர்ந்துவிட்டனர்.
ஆழினியின் பெரியப்பாவும் அவர்கள் குடும்பமும் அங்கே வந்திருக்க முகத்தில் முழுமையாய் மகிழ்ச்சி இல்லை.
“பொண்ணுக்கு பிடிச்சா என்னவேணா செய்வியாடா நீ? உனக்கு அவனை உன் கைக்குள்ள வச்சுக்கனும். அப்படி என்னடா பாசம் கண்ணை மறைக்குது? உன்னை பார்த்து உன் பொண்ணும் அவன் மேல பாசம் வச்சி இப்ப கல்யாணம்ன்னு வந்து நிக்கிறா. எனக்கு சுத்தமா பிடிக்கலை வாழா….” என வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
“இது நம்ம முடிவு பன்ற விஷயமில்லை. அவங்க விருப்பப்படி நடக்கட்டுமே? கண்ணனும் ஒன்னும் குறைவு இல்லை. நல்ல பையன், நல்ல குடும்பம். கோவேந்தனை நமக்கு தெரியாதா?…” என்று ஆழினியின் தாய்மாமா தான் சமாதானம் செய்துவைத்தார்.
அதன்பின்னர் திருமண வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்து முடிய இதோ முகூர்த்த புடவை எடுக்கும் நாள்.
அவர்களும் வந்திருக்க கண்ணனின் தாய்மாமாவும் குடும்பத்துடன் வந்திருக்க பெண்ணும், மாப்பிள்ளையும் வந்ததும் புடவை தேர்வு செய்வதில் மும்மரம் கூடியது.
“ஆழி இது பாரு. ஆழி இந்த கலர் பாரு…” என்று ஒவ்வொன்றாய் அவளுக்கு காண்பிக்க எதுவுமே மனதை கவரவில்லை ஆழினிக்கு.
“இந்த சேரி தான் கல்யாணத்துக்குன்னே உள்ளது. இதுல இந்த குங்கும கலர் உனக்கு எடுப்பா இருக்கும் ஆழி…” என்றார் ஆழினியின் அத்தை.
“இல்லை இல்லை. இந்த நேவி ப்ளூ கலர் தான் சூட்டாகும்…” என்று ஆழினியின் பெரியம்மா சொல்ல,
“அவளுக்கு எது பிடிக்குதோ அதை எடுக்கட்டும். உங்களுக்கு என்ன வேணுமோ அதை நீங்க எடுங்க…” என்று ஆழினி தாய்மாமா சொல்ல அவரை பார்த்து புன்னகைத்தாள் நிம்மதியுடன்.
“நீயும் மாப்பிள்ளையும் போய் உங்களுக்கு பிடிச்ச மாதிரி புடவை பாருடா ஆழி…” என்று அவர் சொல்ல,
“அப்போ அங்கயே முதல்ல காமிச்சிருக்கலாமே?…” சித்தாரா கேட்க, அந்த பணியாளர் கார்மேகவண்ணனை, ‘என்ன சொல்ல?’ என்று பார்த்தார்.
“இங்க பார்த்துட்டு வாங்க சித்தும்மா. இங்க என்ன பிடிக்குதோ செலெக்ட் பண்ணி வச்சிட்டு வாங்க. அங்கயும் பாருங்க. எது பிடிக்குதோ பைனல் பண்ணிக்கலாம். இப்ப நான் போலாமா?…” என்று கண்ணன் கேட்க,
“நீ கிளம்பு கண்ணா…” என்றார் வாழவந்தான்.
கோவேந்தன் ஒன்றும் பேசவில்லை. வாழவந்தானின் அண்ணன் அவரிடம் பேச, ஆழினியின் தாய்மாமாவும் அவருடன் நின்றுகொண்டார் எதுவும் சுருக்கென்று பேசிவிட கூடாதென.
“நீங்க இங்க பார்த்து முடிங்க. அவங்க ரெண்டுபேரும் மேல பார்த்துட்டு வரட்டும்…” என்றதும் இருவரும் மேல் தளத்திற்கு சென்றனர்.
“ஹாய் ஸார்…” என்று ஒருவர் கண்ணனை பார்த்து புன்னகைத்துவிட்டு செல்ல,
“என்ன பண்ணி வச்சிருக்கீங்க?…” என்று தான் கேட்டாள்.
“நம்ம கல்யாணத்துக்கு நீ கட்டிக்க போற முகூர்த்த புடவையை, நான் குடுக்கற கலர் காம்பினேஷன்ல நெய்ய சொல்லி ஆடர் குடுத்திருந்தேன். அதை தான் பார்க்க வந்திருக்கோம்…” என்று ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“இன்னைக்கு நல்லநாளெல்லாம் பார்த்து வந்திருக்கோம். நீங்களும் ஈஸியா சொல்றீங்க நெய்ய குடுத்தேன்னு. அதுக்கெல்லாம் நாள் பார்க்க வேண்டாமா?…” என்றாள்.
“அதெல்லாம் நல்லநாள், நேரம் எல்லாம் பார்த்து தான் வந்து குடுத்தேன். நெய்யலாம்ன்னு சொல்லலாம்ன்னு நினைச்சா அதுக்குள்ள இங்கயே எடுப்போம்ன்னு முடிவு பண்ணிட்டாங்க. சரி எதுக்கு அவங்களை முடிவை மாத்த சொல்லனும்ன்னு புடவை எடுக்க வரதுக்கு முன்னாடி நானே வந்து ஆடர் பண்ணிட்டேன்….” என்று இலகுவாய் சொல்ல,
“இதுவுமே உனக்கு பிடிச்சா தான் ஆழி. சும்மா போட்டு டென்ஷன் எடுத்துக்காத. பாரு. பிடிக்கலைன்னா இங்க இன்னும் நிறைய ட்ரெண்டி கலெக்ஷன்ஸ் இருக்கு. ஒரே மாதிரி முகூர்த்தப்புடவை தான் கட்டனுமா என்ன?…” என்று அவளையும் அமர வைத்தான்.