“நீங்க காமிங்க…” என்று சொல்லவும் உள்ளிருந்து பெரிய கண்ணாடி பெட்டியில் எடுத்துக்கொண்டு வந்தனர்.
அதுவரை இப்படி செய்துவிட்டானே என்றிருந்த மனநிலை சென்று மனம் எதிர்பார்ப்பில் துள்ள ஆரம்பித்தது.
‘இது எனக்காக அல்லவா?’ என உள்ளூர தேனாய் ஊர்ந்த எண்ணமே அவளை தித்திக்க செய்ய இதழ்களில் மலர்ந்த புன்னகை.
“ப்பா, புடவையை பார்க்காமலே முகத்துல பல்ப் எரியுதே?…” என்று சொல்லியவன் தனது கைபேசியை இன்னொரு பணியாளரிடம் நகர்த்தினான் தங்களை காணொளியாய் பதிவு செய்யும்படி.
“புடவையை பார்ப்போமா?…” என அவளின் கவனத்தை திருப்பினான்.
பணியாளர்கள் இருவரும் இருபக்கங்களில் நிற்க கண்ணாடி பெட்டியின் மீது பரிசு பொருள் போல இளரோஜா வண்ணத்தில் தாள்களால் சுற்றப்பட்டிருந்தது.
“ஓபன்…” என்றான் கார்மேகவண்ணன்.
அலங்கார தாளின் ஒரு நுனியை அவள் பிடித்திழுக்க சின்ன சின்னதாய் பட்டன் ரோஜா வகை பூக்கள் அதிலிருந்து கொட்ட அவை கீழே நழுவியதும் உள்ளிருந்த புடவை கண்ணாடியின் பின் தெரிந்தது.
பார்த்ததுமே ஆழினிக்கு புரிந்துவிட அதற்குமேல் அதனை திறவாமல் அசைவற்று அமர்ந்துவிட்டாள் அப்படியே.
“ஓபன் பண்ணு ஆழி…” என்று கண்ணன் சொல்ல அவன் சொல்லியது புரிந்தாலும் அவளால் முடியவில்லை.
ஸ்தம்பித்த நிலை. அந்த புடவையும், அதில் சேர்த்திருந்த நிறங்களும், அதற்கு நடுவில் சின்ன சின்னதாய் தெரிந்த மூக்குத்தி வடிவமும்.
தொண்டை அடைத்தது ஆழினிக்கு. பொங்கி வெடிக்கும் போல் ஒரு அழுகை சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வர பார்க்க, அவ்விடத்தில் யாருமில்லை என்றால் கண்ணனின் கன்னங்கள் முத்தத்தில் நிறைந்திருக்கும்.
“ஓய், ஓபன் பண்ணுன்னு எவ்வளோ நேரம் சொல்றேன்? பிரிச்சு பாருங்க மனைவி…” என்று சிரிப்புடன் அவளின் கையை நகர்த்த லேசாய் நடுங்கும் விரல் கொண்டு பெட்டியை திறந்தாள் ஆழினி.
கண்ணாடியை தாண்டி உள்ளே அந்த தங்கப்பெட்டியில் மின்னும் புடவையை உள்ளங்கை தொட்டு வருடி பார்க்கவே சிலிர்த்தது.
“லைட் ஷேட் பிங்க் அன்ட் லாவண்டர் டபுள் ஷேட் பாடர், கோல்டன் வித் பேஸ்டல் க்ரீன் டிஸைன். அதுக்குள்ள லைட்டா ரெடிஷ் பிங்க் ஹார்ட்ஸ். உள்ள குட்டியா அந்த மூக்குத்தி. கரெக்ட்டா டிஸைன் பண்ணியிருக்கேனா?…” என்றான் கார்மேகவண்ணன்.
ம்ஹூம், ஒற்றை வார்த்தை பேசமுடியவில்லை ஆழினியால். புடவை மட்டுமல்ல அவனின் குரலும் அவளை பித்துக்கொள்ள சொல்லி படுத்திக்கொண்டிருந்தது.
“விரிச்சு காமிங்க. மேடம் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்…” என கண்ணன் சொல்லவும் பணியாளர்கள் இருவரும் புடவையை அழகாய் விரித்து காண்பிக்க பார்வையை திருப்ப முடியவில்லை.
ஆழினி இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த மூக்குத்தியில் இருந்த நிறத்தில் புடவையும், அந்த மூக்குத்தியை போல வடிவமைப்பு.
நிச்சயம் எதிர்பார்க்கவில்லை ஆழினி. இதைவிட வேறொரு சந்தோஷம் என்னவிருக்கிறது என்று மெய்மறந்து அமர்ந்திருக்க அதனை கலைப்பதை போல,
“அடடா புடவை செலக்ட் பண்ணியாச்சா?…” என்ற சத்தத்தில் இருவருமே திரும்பி பார்த்தார்கள்.
“வாவ் இந்த புடவை எல்லாம் எங்களுக்கு காமிக்கவே இல்லையே?…” என்று வந்து அமர்ந்துகொண்டனர் பெண்கள் குழு.
“என்ன ஆழி புடவை செலெக்ட் பண்ணியாச்சா?…” என்ற சித்தாரா,
“இந்த காம்பினேஷன் சேரி ரொம்ப அழகா இருக்கே. கண்டிப்பா இதை பார்த்தா வேற எடுக்க தோணுமா?…” என்றும் கூற ஆழினி செய்வதறியாமல் அந்தநேர உணர்வை வெளிப்படுத்த தவித்து சித்தாராவை அணைத்துக்கொள்ள கார்மேகவண்ணன் முகத்தில் மௌனப்புன்னகை வீற்றிருந்தது.
“ஹேய் என்னடா? என்னாச்சு?…” என கேட்ட சித்தாரா,
“வேற பார்க்கறியா நீ?…” என்று கேட்க,
“ம்மா, இது போதும். இன்னைக்கு வேற எதுவும் பார்க்க மூட் இல்லை. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்…” என மெல்லிய குரலில் அவரின் காதை கடித்தவள் பார்வை கண்ணனிடம்.
“இதுமாதிரியே வேற கலர் இருந்தா எடுத்து போடுப்பா…” என்று ஆழினியின் பெரியம்மா அமர்ந்துகொள்ள,
“இது ஒரே பீஸ் தான் மேம். வேற இல்லை…” என்று சொல்லிவிட்டனர் அவர்கள்.
“வேற சேரி பார்க்கறீங்களா?…” என்று கேட்டுக்கொண்டே கண்ணனிடம் அவனின் கைபேசியை தந்துவிட்டு தங்களின் வேலையை கவனித்தனர்.
“கல்யாணப்பொண்ணுக்கு எடுத்தாச்சு. அப்படியே மத்தவங்களுக்கும் எடுத்து முடிங்க…” என்ற சத்தத்தில் மற்றவர்களுக்கு உடை பார்க்க,
“ஷர்மிக்கு எடுக்கனும். எதை எடுக்கன்னே தெரியலை…” என்று குழம்பிப்போய் அமர்ந்திருந்தார் மகிழா.
“அவளுக்கு போட்டோ அனுப்பி கேளு மகி…” சித்தாரா சொல்ல,
“ம்க்கும், ஒரு லேட்டஸ்ட் டிஸைன் வந்துடக்கூடாது. உடனே எடுத்திருவா. இப்ப நான் எடுத்தா என்கிட்ட இருக்கேன்னு சொல்லுவா…” என புலம்ப,
“ஓய், புடவையை கட்டி பார்க்கிறியான்னு கேட்டேன். என்ன நீ, என்னை டவுட்டாவே வாட்ச் பன்ற? ஏற்கனவே மூணு முடிச்சு போட்டுட்டேன் நான்….” என்று அவளின் கையை தூக்கி காண்பிக்க,
“ப்ச், என்ன இது?…” என்றவளுக்கு கூச்சம் மிளிர்ந்தது.
“இவ்வளோ வெட்கம்? ஆனா அழகா இருக்கு. நீ வெட்கப்பட்டு திரும்பும்போது இந்த நோஸ் ரிங் என்னவோ சொல்லுதே மனைவி. உனக்கு புரியுதா?…” என்றான் ரசனையுடன்.
“எதுவுமில்லை. எனக்கு கேட்கவுமில்லை…” என்று அடக்கப்பட்ட வெட்கப்புன்னகையுடன் அவள் சொல்ல,
“மேம், கட்டி காண்பிக்கவா?…” என்று வந்தாள் அங்கே வேலை செய்யும் பெண்.
“ஜஸ்ட் வச்சு பார்த்தா போதும். ட்ரையல் வேண்டாம்…” என ஆழினி கூற,
“இங்கயே காமிக்கலாம்…” என்று அவளின் மேல் புடவையை பாந்தமாய் போட்டுவிட்டு மேலோட்டமாய் அணிந்து காண்பிக்க புடவையை நிறத்தை விட ஆழினியின் முகத்தில் வெட்க பூக்கள் சிவந்து குளிர்ந்து.
“லவ்லி…” என்ற கார்மேகவண்ணன் அவளை அப்படியே புகைப்படங்களாக எடுத்து தள்ளிவிட்டான்.
———————————–
காதில் கெட்டிமேள சத்தம் சத்தமாகவே கேட்க கனவில் இருந்து விழிப்பதை போல தான் அணிந்திருந்த அந்த புடவையை கைகொண்டு வருடி பார்த்தாள் ஆழினி.
“ஷர்மிக்கா, பாருங்க உங்களை. ஊர்ல இருந்து வந்ததுல இருந்தே என்னை ஓட்டிட்டே இருக்கீங்க…”
“இல்லையா பின்ன? என்னை நீ ஓட்டாம இருக்கனுமே? அதான் நான் முந்திக்கறேன்…” என்றாள் சிரிப்போடு ஷர்மி.
அத்தனை மகிழ்ச்சி ஆழினியே தன் அண்ணன் மனைவியாக வருவதில். விஷயம் கேள்விப்பட்டு அவள் புகுந்தவீட்டில் சின்ன சின்ன சலசலப்புகள் வரத்தான் செய்தது.
“நினைச்சேன். ஒன்னுமண்ணா பழகறாங்க. இன்னுமா இந்த நினைப்பு வரலை. வெளில பொண்ணு தேடறாங்களேன்னு. நினைச்ச மாதிரியே பேசி முடிச்சாச்சா?…” என்ற அங்கலாய்ப்புகளும்,
“பின்ன உங்கண்ணன்னா வீட்டோட மாப்பிள்ளையா இருந்துப்பான். அவங்களுக்கு கடைசி வரை மகளை பிரியவேண்டாம். சொத்துக்கும் காவலாச்சு. தொழிலுக்கும் ஆச்சு…” என்று நக்கலும், குத்தலுமான பேச்சுக்கள் இருக்கத்தான் செய்தது.
“என்னம்மா இப்படி பேசறாங்க…” என்று மகிழா கூட கலக்கமாய் பார்க்க,
“பேசினா பேசிட்டு போகட்டுமே? ஒன்னுமாக போறதில்லை. எல்லாரோட ஆத்தாமையையும் போய் நாம ஆத்த முடியாது ஆத்தா மகிழா. அய்யனார் அருவாளை எடுத்திருவார்…” என்று கண்ணனும், ஷர்மியும் சொல்லிவிட்டனர்.
இதோ ஷர்மியின் புகுந்தவீட்டு மக்களும் கலந்துகொண்டிருக்க திருமணத்தின் ஆடம்பரத்தில் நொடித்துக்கொண்டாலும் பெரிதாய் எடுத்துக்கூட்டி எதையும் செய்யவில்லை.
“ஷர்மி இங்க என்ன கதை பேசிட்டு நிக்கிற? கூட்டிட்டு வா. வெளில கேமராவோட நிக்கிறாங்க. மாலையை போடு. அழைச்சிட்டு வா…” என்று ஆழினியின் தாய்மாமா மனைவி வந்து சொல்ல சொந்தங்களும் சேர்ந்துகொள்ள நடுவில் அழகோவியமாய் ஆழினி.
அவளுக்கே அவளுக்கென கார்மேகவண்ணன் தேர்வுசெய்த புடவையில் அவள் நடந்து வர, ஆழினியை திரும்பி பார்த்துவிட்டு வந்திருப்பவர்கள் பக்கம் பார்த்தான் கார்மேகவண்ணன்.
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதன் சுகம் என்னவென்று நொடிக்கு நொடி அவன் அனுபவித்து உணர, அதில் அவளால் அவனுள் ஆள்கொள்ளப்படும் உணர்வுகள் கொண்டாடி கூத்தாடியது.
எந்த தூரத்தில் இருந்தாலும், எத்தனை தள்ளி நின்றாலும் ஆழினியின் பார்வை அவனை அவள் வட்டத்திற்குள் எடுத்துக்கொள்ளும்.
இப்போதும் இந்தநேரத்திலும் அவள் தன்னை கவனித்ததில் சின்னதாய் கர்வப்புன்னகை ஒருபுறமிருக்க, அவளின் இந்த அன்பில் என்றென்றும் தான் கரைந்து காலடி தடம் மாறாமல் நடைபோடவேண்டும் என்ற உறுதியுடன் ஆழினி என்னும் சமுத்திரத்தை மங்கலநாண் பூட்டி மனைவியாக ஸ்வீகரித்துகொண்டான் கார்மேகவண்ணன்.
கடல் வானம் கார்மேகத்தின் கைகளுக்குள் ஆர்ப்பரிப்பை அடக்கி வான்பார்த்து மழையில் நனைய தவித்திருந்தது.
உறவுகள் சூழ, உணர்வுகள் சூழ, காதல் கை சேர்ந்து, மெய்மொழி மறந்து ஆத்மார்த்தமான புன்னகை இருவரின் இதழ்களிலும் நிறைந்தது.
“மனைவி ஆழினி…” என்றான் குறும்பு கூத்தாடும் விழிகளுடன் கார்மேகவண்ணன் அவள் கண்ணன்.
“சைலன்ட்…” என்று சொல்லியவளுக்கு தன் சந்தோஷத்தின் அளவை காண்பிக்க முடியாமல் திணறலுடன் அவனை காண, அவளின் மகிழ்ச்சியை பார்த்தபடி ஆழினியின் கழுத்தை சுற்றி கையை கொண்டுவந்தவன் விரல்கள் மனைவியின் நெற்றி வகிட்டில் குங்மத்தை சூடியது.