ஆழினியின் அறையில் கைகளை கட்டிக்கொண்டு சுற்றி வந்தான் கார்மேகவண்ணன்.
இரவு உணவை முடித்துவிட்டு அவன் அங்கே வந்திருக்க இன்னும் ஆழினி வரவில்லை.
கண்ணனின் பார்வைகள் எல்லாம் எங்கிருந்த புகைப்படங்களின் மீது தான் பதிந்திருந்தது.
ஒவ்வொன்றையும் மிக அருகில் நின்று பார்த்தவன் இதழ்கள் புன்னகையில் மினுங்க கண்கள் காதலில் கரைந்தது.
வந்ததில் இருந்து இன்னும் அறைக்குள் அமரவே இல்லை அவன். சுற்றிக்கொண்டே இருந்தான்.
சளைக்காமல் மீண்டும் மீண்டும் அந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஒவ்வொன்றிலும் அவன் கண்டுகொண்ட விஷயத்தில் உள்மனம் நிலையில்லாமல் அசைந்தாடிக்கொண்டிருந்தது.
இத்தனை வருடத்தில் அன்றுதான் அவளின் அறைக்குள் அவன் நுழைவது. அதுவும் கணவனாக. உரிமைப்பட்டவனாக.
தேடி தேடி அவள் அந்த புகைப்படங்களை சேமித்திருப்பது புரிய மௌனமாய் அவன் புன்னகை கனத்து காணப்பட்டது.
அவனின் மோனநிலையை கலைப்பதை போலவே கைபேசியில் அழைப்பு வர புருவம் சுருக்கி திரும்பி பார்த்தான்.
நஞ்சப்பன் தான் அவனுக்கு அழைத்திருந்தான். பார்த்ததும் அழைப்பை எடுத்தவன்,
“என்னடா, கிளம்பியாச்சா?…” என்றான்.
“நீ சொன்ன மாதிரி எல்லாரையும் பார்த்து அனுப்பிட்டேன்டா. மத்த கணக்கெல்லாம் அப்பாக்கிட்ட சொல்லியாச்சு. நீ கால் பண்ண சொன்னியேன்னு தான் கூப்பிட்டேன்….” என்று அவசரமாய் கூற,
“எங்கடா ஓடற நீ? பாய்சா, மெல்ல மெல்ல பேசு. இங்க தானே நானும் இருக்கேன்…” என்று சிரித்தவன்,
“சரி நீ பார்த்துக்கோ. நைட் இருக்கியா? இல்ல காலைல வரியா?….” என்றான்.
“சரி என்னன்னு விஷ் பண்ணுவ?…” என்று கண்ணன் நமுட்டு சிரிப்புடன் கேட்க,
“ஆமால, என்னன்னு…”
“அய்யனார்கிட்ட கேளேன்…”
“உன் நம்பரை இன்னைக்கு நான் ப்ளாக் பண்ணலை…”
“பண்ணலை?…”
“பண்ணுவேண்டா. போடா. என்னமோ நல்லாரு. போ…” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க இன்னும் அடக்கமாட்டாமல் சிரித்தான் கார்மேகவண்ணன்.
சிரித்தபடியே தன் தங்கைக்கு அழைக்க ஷர்மியின் கைபேசியை எடுத்தது மகிழா தான்.
“என்னடா கண்ணா இந்நேரம் கால் பண்ணிருக்க?…” என்றார் என்னவோ என்று.
“ஹ்ம்ம், சும்மா தான். எல்லாரும் தூங்க போய்ட்டாங்களா?…” என்றான் அவரிடம்.
“இரு இரு. தனியா வந்து பேசறேன்…”
“ஷர்மி எங்கம்மா?…”
“இப்பத்தான் அவ புருஷனுக்கு பாலை ஆத்தி கொண்டுட்டு போனா…” என முணுமுணுத்துக்கொண்டே வெளியே வந்தார்.
‘யாரோ என்ன இந்தநேரம் வெளியே?’ என்று மகிழாவிடம் கேட்பது கண்ணனுக்கும் கேட்க,
“சும்மா அப்படியே காத்தாட வந்தேன். நீங்க போங்க…” என்று சமாளிப்பாய் பதில் கூறியவர்,
“ஹப்பா இவங்களை சமாளிக்கிறதுகுள்ள…” என்று மகனிடம் பேசினார்.
“என்னம்மா ஷர்மி வீட்டாளுங்க என்ன பன்றாங்க?…” என்றான் கண்ணன்.
“என்ன பண்ணுவாங்க? விசேஷ வீடுனா அப்படித்தான் இருக்கும். இதெல்லாம் ஒரு விஷயமா?…”
“ம்மா…”
“ப்ச், கண்ணா. அதெல்லாம் நீ மனசுல போட்டுக்காத. ஆழினி வந்திருவா. நீ அங்க பாரு…”
“ம்மா…”
“அதான் சொல்றேன்ல. அம்மா சமாளிச்சுப்பேன். இவங்கல்லாம் நாளைக்கு கிளம்பிருவாங்க. அப்பறம் என்ன?…” என்றவர்,
“அவங்கவங்க அதிகாரத்தை இப்படி வந்த நேரம் காமிச்சா தான் உண்டுன்னு காமிக்க பார்ப்பாங்க. இதுல ஒரு சந்தோஷம் அவங்களுக்கு. அதுவும் சம்பந்தி வீடுன்னா சொல்லவா வேணும்?…” என்று கூற கண்ணனிடம் அமைதி.
“விடுப்பா. அவங்களுக்கு சின்ன வருத்தம். மாப்பிள்ளையும் சத்தம் போடத்தான் செய்யறார். ஆனாலும் யார் கேட்க? ரெண்டுநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியது தான். நம்ம மாப்பிள்ளைக்காக. ஷர்மிக்காக…” என்றார் சமாதானமாய்.
“நாளைக்கு வந்து பேசிக்கறேன்…” என்று கண்ணன் சொல்ல,
“அட இவன் எவன்டா? இவங்கலாம் ஒரு ஆளுன்னு. சும்மாயிருக்கமாட்டியா? அதான் சொல்றேன்ல. நான் பார்த்துப்பேன்…” என்று பேசிக்கொண்டிருக்க,
“என்ன மதினி, இந்நேரம் போனோட வெளில வந்துட்டீங்க. அதுவும் ரகசியமா பேசிட்டிருக்கீங்க…” என்று ஷர்மியின் மாமியார் கேட்க,
“எல்லாம் நம்மவீட்டு மகராசி தான். என்ன மகிம்மா பன்றீங்க, சாப்பிட்டீங்களா இல்லையான்னு கேட்டுட்டு இருக்கா. உள்ள ஒரே பேச்சு சத்தமா இருந்ததுல மருமக குரல் சரியா கேட்கலையா. அதான் வெளில வந்தேன்…” என்று அலட்டிக்கொள்ளாமல் மகிழா பேச,
“குடுத்துவச்ச மகராசி. உங்களுக்கு அப்படி மருமக அமைஞ்சிருக்கா…” என்று அவர் குத்தலாய் பெருமூச்சு விட,
“எல்லாம் நம்ம நினைப்புப்படி தானங்க மதினி. நாம நல்லதே நினைச்சா நமக்கும் நல்லதே நடக்கும். இதெல்லாம் சொல்லாமலே உங்களுக்கு புரியாதா என்ன? உங்க மனசுக்கு என் பொண்ணு அமைஞ்ச மாதிரி…” என்று மகிழாவும் பதில் சொல்ல,
“இங்க என்னம்மா பன்றீங்க?…” என்று வந்துவிட்டான் ஷர்மியின் கணவன் ஷர்மியுடன்.
“சும்மா பேசிட்டிருந்தோம் ப்பா…” என மகனை பார்க்கவும் அவர் பவ்யமாய் பேச,
“நேரம் என்னாகுது? மாத்திரை போட்டாச்சே. போய் படுங்க. அப்பாவும் முழிச்சிருக்காங்க…” என்று அவன் அதட்டினான்.
“இதோ போறேன்…” என மகனிடம் சொல்லியவர்,
“ஆமா நீங்க மாத்திரை மருந்தெல்லாம் எடுத்துக்கிட்டாச்சா?…” என்று மகிழாவிடம் கேட்க,
“ஆண்டவன் புண்ணியத்துல அந்த கஷ்டமில்ல மதினி. மாசாமாசம் போய் செக்கப் எல்லாம் பார்த்துடுவேன். என்னவோ வண்டி இம்புட்டு மருந்தில்லாம ஓடுது…” என்று இயல்பு போல சொல்ல அதற்குமேல் நிற்க முடியவில்லை ஷர்மியின் மாமியாரால்.
விருட்டென உள்ளே மகனுடன் அவர் சென்றுவிட ஷர்மியும், மகிழாவும் வாய்பொத்தி சிரித்தனர்.
“பலே பலே மகியா கொக்கா…” என்று கண்ணன் சிரிக்க,
“சந்தடி சாக்குல அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்டியாண்ணா நீ?…” என்றாள் ஷர்மி.
“உண்மைய சொல்லிருக்காங்க ஷர்மி. பெருமையா வேற சொல்லிருக்காங்க…” என்று அவனும் கேலி பேச ஷர்மி பதிலுக்கு வாயாட,
“அட கழுதைகளா. இன்னைக்கு என்ன நாள். இப்படி உக்கார்ந்து அரட்டை அடிக்கிறீங்க?…” என்று சொல்லி போனை பிடுங்கியவர்,
“நீ உள்ள போ….” என மகளை விரட்டிவிட்டு,
“நீ கால் கட் பண்ணு…” என்று சொல்ல, கார்மேகவண்ணன் சிரிப்புடன் அழைப்பை துண்டித்தான்.
கைபேசியை படுக்கையின் அருகிலிருக்கும் டேபிளில் வைத்தவன் பார்வை மீண்டும் அங்கிருந்த புகைப்படங்களில் விழுந்தது.
அறையில் மாட்டப்பட்டிருந்த ஆழினியின் படங்களில் அநேக புகைப்படங்களில் கண்ணனும் நிறைந்திருந்தான்.
அவள் பிறந்ததில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்றுவரை ஒவ்வொன்றாய் அணிவகுத்திருக்க அதில் நடுநாயகமாய் அவனை பெரிதாய் கவர்ந்தது கண்ணன் சிறுவயதில் ஆழினியை தன் மடியில் வைத்து முறைத்து பார்த்தபடி இருந்த புகைப்படம்.