பார்த்ததுமே பக்கென்று சிரிப்பு தான் வந்தது. பொக்கை வாய் திறந்து கார்மேகவண்ணனின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அவனின் சட்டையோடு பிடித்து இழுத்து வாயில் வைக்க முயன்றிருந்தாள் குழந்தை ஆழினி.
அதை கொஞ்சமும் விரும்பாத பாவனையும், எங்கே விழுந்துவிடுவாளோ என்பதை போல பயமும் கண்ணன் முகத்தில்.
தனது போனை எடுத்தவன் அதனை கைபேசியில் பதிவேற்றிக்கொள்ள கதவு திறக்கும் சப்தம்.
‘உங்களை ஞாபகப்படுத்த எதுவும் தேவையில்லை’ என்று அன்றைக்கு அவனின் நெஞ்சில் பதிய செய்திருந்தவள் வார்த்தைகள் இப்போதும் பசுமையாய் அவன் மனதில் ஆர்ப்பரித்தது.
“இப்படி சுத்தி சுத்தி நானே இருந்தா ஞாபகம்ன்னு தனியா எப்படி வரும்? மறந்தா தானே ஞாபகப்படுத்திக்க?…” என்றான் மெல்லிய குரலில்.
அமைதியான அறையில் அவனின் குரல் ஆழினியை அவன் வசப்படுத்த தானும் அவனருகில் சென்று நின்றாள்.
“நான் வந்துட்டேன்…” என்று சொல்ல,
“நீ சொல்லி தெரியனும்ன்னு இல்லை….” என்று சொல்லியவன் தன் பின்னிருந்தவளின் கையை இழுத்து தன் முதுகோடு நிற்கவைத்தான்.
ஆழினியின் இரு கைகளையும் அவனிடையை சுற்றி இழுத்துக்கொண்டவனின் செயலில் தானும் விரல் கோர்த்து அவனை அணைவாய் பிடித்தபடி நின்றாள்.
“லவ்லி கலெக்ஷன்ஸ் ஆழி. என்ன சொல்ல? வார்த்தை இல்லை…” என்று சொல்லியவன்,
“உன்னோட போட்டோஸ் எதுவும் இப்ப வரைக்கும் என் ரூம்ல இல்லை. வச்சுக்கனும்ன்னும் தோணினதில்லை. ஷர்மி அவளோட போட்டோஸ் எல்லாம் அவ ரூம்ல மாட்டிருக்கும் போது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கேன்னு கிண்டல் பண்ணுவேன்…”
“ஆனா இது ஒரு ஃபீல் இல்ல? என்னவோ மனசை பிசையுது. எதையோ நான் தவறவிட்டுட்ட மாதிரி இருக்கு ஆழி…” என்றான்.
அவன் குரல் கனத்தை சுமந்திருக்க அந்த கணம் அவளுக்கு உவப்பானதாக இல்லை.
எத்தனை எத்தனை ஆசைகள் கொண்டிருந்தவள் நேசம் இன்று அவளுள் நிறைந்து நிற்க, கண்ணன் கலங்குவதா என அவனின் முன்னே வந்து நின்றாள்.
“எல்லாருமே ஒரே மாதிரி இருக்கமுடியாது இல்லையா? என் போட்டோஸ் வச்சுக்க எனக்கு பிடிச்சது நான் வச்சுக்கிட்டேன்…” என்று சாதாரணம் போல கூற சிரித்தவன்,
“என்ன என்னை ஈஸியாக்க ட்ரை பன்றியா?…” என்று கேட்டான்.
“அப்படின்னு இல்லை. இவ்வளோ ஃபீல் பண்ண எதுவுமில்லைன்னு சொன்னேன்…” என புன்னகைத்து அவனின் கன்னத்தை பிடித்து சிரிக்கும்படி இழுத்துப்பிடிக்க,
“டாப்பிக் மாத்தாம இதுல என்ன இருக்குன்னு எனக்கு சொல்லு. நான் ஸ்மைல் பன்றேன்…” என்று கேட்க,
“என்னோட போட்டோஸ் தான். இது எப்போ எடுத்ததுன்னா…” என்று ஒவ்வொரு புகைப்படங்களுக்கும் கதை சொல்லியவள்,
“இந்த போட்டோ மட்டும் எப்போ எடுத்ததுன்னு எனக்கு அம்மா தான் சொன்னாங்க. என்னை தூக்கவேமாட்டேன்னு சொன்னீங்களாம். அம்மாக்கிட்ட உங்க பாப்பா வந்தா என்னை மறந்துட்டீங்கன்னு அழுதீங்களாம். சண்டை போட்டீங்கலாம்…” என்று கேட்க,
“அது அறியாத வயசு…” என்றான் கண் சிமிட்டி புன்னகையுடன்.
“இப்ப மட்டும் என்ன அறிஞ்சுக்கிட்டீங்க மிஸ்டர் கண்ணன்?…” என்றாள் ஆழினி முகம்கொள்ளா புன்னகையுடன்.
“இன்னும் அறியலை. இனிமே தான் வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சுக்கனும். பழகனும். படிக்கனும்…” என்று சொல்லி சொல்லி அவளை இன்னும் நெருங்கி நிற்க அவனின் பார்வை ஜாலத்தில் மூச்சடைத்து நின்றாள் ஆழினி.
“இந்த சேரிக்கு இந்த நோஸ் ரிங் சூட்டாகற மாதிரி தெரியலையே ஆழி?…” என்றான் ரகசிய குரலில் கிசுகிசுப்பாய்.
“மேட்சிங் தான். இந்த சேரி கலர் தான்…” என்று புடவையை குனிந்து பார்த்தவள் அவன் முகம் காண நாண,
“எல்லாத்துக்கும் மேட்ச் பன்ற மாதிரி நான் தரேன்…” என்று ஸ்ருங்கார புன்னகையுடன் சொல்லியவன் தன் கைவளைவில் அவளை நிறுத்தி மூக்கில் மாட்டியிருந்த மூக்குத்தியை கழற்றினான்.
“இதை பத்திரமா எங்க வைக்க?…” என்று கேட்டவன்,
“இல்லை என்கிட்டையே இருக்கட்டும்…”என்று சொல்லி தன் சட்டை பையில் போட்டவன் விரல்கள் வெளியே வருகையில் இன்னொரு மூக்குத்தியுடன் வந்தது.
அவள் உடைந்துவிட்டதென பத்திரப்படுத்தியிருந்த அதே மூக்குத்தியின் வடிவமைப்பில் புதிதாய் டாலடிக்க இமை உயர்த்தி கண்கள் பனிக்க அவனை பார்த்தாள்.
“சத்தியமா என்ன பேச, உனக்கு எதை பதிலுக்கு தரன்னு தெரியலை ஆழி. என் மனசு அடிச்சுக்கறது உனக்கு முழுசா புரியுதான்னு தெரியலை. பட், எனக்கு சொல்ல நிறைய இருந்தாலும் சொல்லி தெரிய வைக்க தோணலை. வாழ்ந்து தெரிஞ்சுப்போம்…” என்று சொல்லியவன் அவளின் நுனிமூக்கில் முதல் முத்தத்தை பதிக்க, விழிகள் மூடி அதனை உள்வாங்கினாள் ஆழினி.
“இதுதான் நான்…” என்று சொல்லி தான் வாங்கி வைத்திருந்த மூக்குத்தியை அவளுக்கு அணிவித்தவன் மீண்டும் அதில் முத்தம் பதிக்க ஒன்றிரண்டு என்ற கணக்குகள் எல்லாம் காலாவதியானது.
ஆழினி மூடிய விழிகளை திறக்கவே இல்லை. அவனின் சட்டையை பற்றியிருந்தவள் இன்னுமின்னும் நெருக்கம் காண்பித்து நிற்க,
“ஆழி என்னை பார்…” என்று அசைக்க மெல்ல இமைகளை பிரித்தாள்.
“அன்னைக்கு தூக்கலைன்னா என்ன? இன்னைக்கு தூக்கி வச்சிக்கறேன்…” என்று சட்டென இரு கைகளில் அவளை அள்ளிக்கொள்ள,
“கண்ணன்…” என்றாள் சிணுங்கலுடன்.
“இனிமேலும் சண்டை போடுவேன் சித்தும்மாக்கிட்ட. என் மனைவியை நான் பார்த்துக்கறேன். நீங்க என்னை பாருங்கன்னு. உனக்கெதாச்சும் அப்ஜெக்ஷனா?…” என்றான் அவளின் நெற்றியோடு முட்டியபடி.
“ம்ஹூம். இல்லை…” என்றாள் உடனே.
“அதானே பார்த்தேன்….” என்று முறைத்தவன்,
“எப்படி உன்னால உன்னோட பேரன்ட்ஸ எனக்கு விட்டுக்குடுக்க முடிஞ்சது ஆழி?…” என்று இலகுவாய் பேசியபடி கட்டிலில் அவளுடன் அமர்ந்தவன்,
“இப்ப இந்த கேள்வி தான் முக்கியமா? கண்டிப்பா சொல்லனுமா?…” என்றும் அவனே சொல்ல,
“மூச், கண்ணா…” என்றவள் அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் வெட்கமும் சிணுங்கலுமாய்.
“நமக்குள்ள இந்த சின்ன கேப். இந்த நெருக்கமும், விலகலும் கூட ரொம்ப இம்சிக்குதே ஆழி. என்னை மொத்தமா எடுத்துக்கோயேன் ஆழி…” என்றான் கார்மேகவண்ணன் கண்மூடி அவள் இதயத்தில் தன் முகம் புதைத்து.
விழி மயங்கி விரல் தொட்டு பற்றிக்கொண்ட தீயின் பிரவாகம் அடுத்தகட்டத்திற்கு செலுத்தியது அவர்களை.
கருமேகமழை காய்ச்சல் கொடுத்ததை போலொரு நடுக்கத்தில் ஆழினி கண்ணனை இறுக்க பற்ற, சங்கேதமாய் அவன் சிந்திய சிரிப்புகள் அவனின் கைகளுக்குள் அவளை இன்னும் நெளிய செய்தது.