“எவ்வளோ நேரம் நடப்பீங்க? போதும் வந்து உட்காருங்க கொஞ்சநேரம்…” என்று வாழவந்தானை அழைத்தார் சித்தாரா.
“எவ்வளோ நேரம் நடந்துட்டேன்? சும்மா கூட ரெண்டு சுத்து. அவ்வளோ தானே?…” என்று வந்தமர்ந்தவர் முகத்தில் அத்தனை மகிழ்வு.
நினைத்து நினைத்து ஒரு புன்னகை அவர் முகத்தில். பார்க்கவே சித்தாராவிற்கு சிரிப்பாய் வந்தது.
“இப்ப எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்கீங்க?…” என்றதும்,
“இல்ல சும்மா தான்…” என கூறினார்.
“நம்பிட்டேன்…”
“அட நிஜமா தான் சித்து…” என்றவர்,
“இன்னும் கண்ணனை காணுமே?…” என்று மீண்டும் வீட்டை திரும்பி பார்த்தார்.
“அவன் வரும்போது வரட்டும். நீங்க இந்த காபியை குடிங்க. எவ்வளோ நேரமா கொண்டு வந்துட்டு நானும் தோட்டத்துலையே உக்கார்ந்திருக்க?…” என்று சலித்துக்கொண்டார்.
“இப்ப என்ன? இவ்வளோ சலிப்பு? அதான் வேலைக்கு எல்லாம் இருக்காங்க தானே? கமலா எல்லாம் பார்த்துப்பா…”
“நல்லா பார்த்துப்பா. ஆனா சொந்தக்காரங்களை நாம தான் பார்த்துக்கனும். அதுலயும் உங்க அண்ணனும், அண்ணியும் இருக்காங்களே?…” என அலுத்துக்கொண்டவர்,
“நேத்து கல்யாணத்துல கூட முழுசா ஒரு சிரிப்பை காணும். அப்பப்ப எதாச்சும் சொல்லிட்டே இருந்தாங்க உங்க அண்ணி…”
“எனக்கு அண்ணின்னா உனக்கு யாராம்?…”
“ரொம்ப முக்கியம். பேசாம இருங்க. கடுப்பை கிளப்பிட்டு. வந்தோமா, வாழ்த்தினோமா அது வேற. அக்கறையா ஏதாவது சொன்னாங்கன்னா கேட்டுக்கலாம். என்னலாம் பேசினாங்க தெரியுமா?…” என்றார் குரலை தணித்துக்கொண்டு.
“என்னவாம்?…” வாழவந்தான் தானே சித்தாரா கொண்டுவந்திருந்த பிளாஸ்க்கில் இருந்து இருவருக்குமான காபியை ஊற்றினார்.
“நம்ம ஆழிக்கு புடிச்சிருக்குன்னு தெரிஞ்சும் நம்மளை சொல்றாங்க. எல்லாம் நீயும், உன் புருஷனும் குடுத்த இடம். அதான் அவளை மயக்கி மொத்த சொத்துக்கும் அதிபதியாகிட்டான்னு கண்ணன பேசறாங்க….” என்றவர்,
“இதுவே வேற எங்கயும் பேசிருக்கட்டும். நல்லா பதில் குடுத்திருப்பேன். நம்ம வீடா போனதால தப்பிச்சாங்க. நானும் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்கன்னு அமைதியா இருக்கேன்….” என அங்கலாய்க்க,
“சொன்னா சொல்லிட்டு போகட்டும் விடு. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளோ தான்….” என்ற வாழவந்தான்,
“என் பொண்ணை கட்டித்தான் கண்ணனுக்கு சொத்து வேணும்ன்னு இல்லை. அவன் ஒருவார்த்தை கேட்டாலும் நான் குடுக்கத்தான் செய்வேன்….” என்று முகமெல்லாம் விகசிக்க அவர் சொல்ல,
“ஏன்டா சொல்லமாட்ட? நீ சொல்லுவ. அதான் அவன் ஆடறான்…” என்ற சத்தத்தில் இருவரும் திரும்பி பார்க்க, கோவேந்தன் வந்திருந்தார்.
“வாங்கண்ணே…” என்று சித்தாரா வீட்டின் உள்ளே அழைக்க,
“இல்ல இல்ல. இங்கயே உக்காருவோம். இப்ப நானும் கிளம்பனும்…” என்று அங்கே கல்மேடையில் அமர்ந்துகொண்டார் கோவேந்தன் வாழவந்தான் அருகில்.
“என்னடா இந்தநேரமே இந்த பக்கம்?…” என வாழவந்தான் நண்பனிடம்.
“எம்மா ஒரு கப் கொண்டா. நானும் காபி எடுத்துக்கறேன்…” என்று சொல்லியவர் காலை நன்றாக மடித்து சம்மணமிட்டுக்கொண்டார்.
“என்னடா டென்ஷன் ஆகிட்டியா சித்து பேசினதுல?…” என வாழவந்தான் சிரிக்க,
“எனக்கென்ன டென்ஷன்? இங்க இப்படி பேசறாங்கன்னா அங்க என் வீட்டுல வசதியான இடமா புடிச்சுட்டீங்கன்னு பேசறாங்க. பேசறவங்களுக்கு என்ன வந்துச்சு? வாய்க்கு வந்ததை பேசத்தான் செய்வாங்க. இது வேற ஒரு விஷயம்…” என இலகுவாய் பேசினார் கோவேந்தன்.
“அதான, நீ எங்கட்ட தானே டென்ஷனாவ…” வாழவந்தான் முகத்தில் அப்படி சிரிப்பு.
“அய்யே, ரொம்பத்தான். அட ஏன்டா நீ வேற?…” என்று அயர்ச்சியாய் சொல்லியவர்,
“நான் சொன்னேனே? பேசிட்டியா அவன்கிட்ட?…” என்றார் கோவேந்தன் தோட்டத்திலிருந்தே வீட்டை எட்டிப்பார்த்தபடி.
“இன்னும் யாரும் எழுந்து வரலை. அதுவும் கண்ணா வரவே இல்லை. நேத்து தான் கல்யாணமாகியிருக்கு. அதுக்குள்ள வந்திருவானா?…” என்று சொல்லி,
“நேத்து எங்கடா பேசவும் முடிஞ்சது? அதை கேட்க இப்படி பனியோட கிளம்பி வருவியா? காதுல மாட்டவேண்டிய ஸ்கார்ப் எங்க நிக்குது?…” என சரி செய்தார்.
“ப்ச், அதான்டா போட்டுட்டு வந்தேன். இல்லைன்னா பத்து பதினைஞ்சு நாளைக்கு இதையே சொல்லி காமிப்பா. நொச்சு…” என்று மனைவியை பேசினாலும் கூடவே சிரித்துக்கொண்டார்.
“சரி விடு. இப்ப நினைச்சு எதுக்கு இந்த கவலை? அவன் தான் மாட்டேன்னு சொல்றானே வேந்தா. ஆசைப்பட்டப்ப போக முடியலைன்னு சொல்லி இப்ப வேண்டாம்ன்னு பிடிவாதம் பன்றான்…” என்றதுமே கோவேந்தன் முகம் இன்னும் கவலையாகியது.
“ஒத்த புள்ளையை பெத்து வச்சிருக்கேன்டா. நீயும் பார்த்துட்டு தானே இருக்க? சின்னதுல இருந்தே அவனை பிரிஞ்சு மூணுநாள் தாண்டி இருந்ததில்லை. என்னவோ கோவப்படுவேன். பேசுவேன். ஆனா பார்க்காம எல்லாம் இருக்க முடியாதுடா…”
“இவன் என்கிட்ட வாயடிக்காம, வம்பு பேசாம எனக்கு நாள் பொழுதே போகாது. தொலைதூரத்துக்கு அனுப்பிட்டு எப்படா முகம் பார்ப்போம், பக்கத்துல உக்காருவோம்ன்னு ஏக்கத்துல இருக்க முடியுமா? போற நேரத்துல அங்க ஒண்ணுகிடக்க ஒண்ணுன்னா?…” என்று பேசுகையில் கண்ணீரே வந்துவிட்டது கோவேந்தனுக்கு.
“அவனுக்கும் என் மனச புரியும். இருந்தாலும் திமிர். கேட்டதும் ஒத்துக்கலைன்னு. ஆமா, ஒத்துக்க முடியாதுதான். ஏன் இங்க இல்லாத வேலையா அங்க கிடைக்குது?…”
“நாளைக்கு எனக்கோ மகிக்கோ எதுவும்ன்னா கூப்பிட்டா வந்து முகம் பார்த்து காரியம் பன்ற தொலைவுல அவனிருக்கனும்ன்னு நினைக்கறேன்டா. இதுல என்னடா தப்பு?…” என்று பொங்கிக்கொண்டிருந்தார்.
கோவேந்தனின் பேச்சையும் மறுக்கமுடியாது. என்னவோ நடந்துவிட்டால் மகனால் உடனே வந்துவிட முடியுமா என்று அவராகவே நினைத்து அஞ்சுவது கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை வாழவந்தானுக்கு.
முன்புமே அத்தனை சண்டை நடந்தும் கோவேந்தன் அசையவே இல்லை. மகன் பட்டினி இருந்தும் பார்த்துவிட,
“நீ இருந்தா நானும் இருந்துட்டு போறேன். என்னன்னாலும் என் கண்ணு முன்னாடி இரு…” என்று அவனுக்கு மேல் பிடிவாதம் காட்டினார் கோவேந்தன்.
இன்று மகனின் திருமண பரிசாக அவன் ஆசைப்பட்ட இடத்திற்கு தேனிலவுக்கு அனுப்ப நினைக்க நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான் கண்ணன்.
“எனக்கு போக விருப்பமில்லை…” என்று சொல்லிவிட ‘திருமணம் முடிந்ததும் பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டார் மகிழா.
இப்போது வரை எதுவும் பேச மகன் அனுமதிக்கவே இல்லை. முடியவே முடியாதென பிடிவாதமாய் நின்றான் கார்மேகவண்ணன்.
“என்னடா வேந்தா? அதான் சொல்றேன்ல. இப்பவே போனா தானா? வெய்ட் பண்ணு. சமயம் பார்த்து நான் பேசறேன்…” என்று சொல்ல,
“சரி, சரி. அவன் எங்க போனும்ன்னு சொன்னாலும் என்கிட்ட சொல்லு. அனுப்பறதுக்கு ஓரளவு பணமெல்லாம் கணிசமாவே இருக்கு. இல்லைன்னாலும் பார்த்துக்கலாம். ஆனா நான் தான் செய்வேன்…” என்று சொல்லி எழுந்துகொண்டார்.
“இருடா சாப்பிட்டு போகலாம்…”
“வேணாம், அங்க எல்லாரும் எழுந்திருந்தா போய் பார்க்கனும். மதியம் கிளம்பினதும் கால் பண்ணு. நானும் மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்திடறேன்…” என்று சொல்லி செல்ல அவரையே பார்த்துக்கொண்டிருந்தார் வாழவந்தான்.
“அங்கயும் வேலை இருக்கே? அதான். சரி கண்ணா எங்க?…” என்று கேட்க,
“ஆழி தான் கால் பண்ணினா. இன்னும் எழுந்துக்கலை போல அவன். ரெண்டுபேருக்குமா ரூம்க்கு காபி அனுப்ப சொன்னா…” என்று சொல்ல வாழவந்தான் எழுந்துகொண்டார்.
“அப்பறம் சித்து, இந்த அவன் இவன் எல்லாம் மத்தவங்க முன்னாடி இருக்க கூடாது. புரியுதா? கண்ணா எதுவும் நினைக்க போறதில்லை. ஆனா பார்க்கிறவங்களுக்கு இளப்பமா போயிட கூடாது பார்த்துக்கோ…”