மகளின் வருகைக்காக காத்திருந்தார் சித்தாரா. பூனேயில் இருந்து வந்துவிட்டவர் இன்னும் உறங்காமல் காத்திருக்க உள்ளே நுழைந்தாள் ஆழினி.
“இன்னும் தூங்காம எதுக்கு வெய்ட் பன்றீங்கம்மா?…” என்று கேட்க,
“உனக்காக வெய்ட் பண்ணலை. அப்பா இன்னும் வரலை…” என்றார் கவலையுடன்.
“மகிம்மா வீட்டுல இருக்காங்களா?…” சரியாக கேட்டவள் கையிலிருந்த பிரேஸ்லெட் வாட்ச் என ஒவ்வொன்றாய் கழற்றினாள்.
“இப்ப எதுக்கு இங்கயே கழட்டிட்டு நிக்கிற? ரூம்க்கு போய் எல்லாம் பத்திரமா வச்சிட்டு போய் ரெப்ரெஷ் பண்ணிக்கோ…” என்றார் அவளிடம்.
“பேசிட்டே என் கையில குடுத்துட்டு நான் எங்கையாவது வச்சு அதுக்கும் என்னை சேர்த்து பேசுவ நீ…” என்று முன்னெச்சரிக்கையாய் சொல்லியவர் முகத்தில் அவ்வளவு கவலை.
“அவனுக்கு என்ன தலையெழுத்தா? நேத்து மட்டும் நான் இருந்திருக்கனும். அப்ப தெரிஞ்சிருக்கும் அந்த பொண்ணுக்கும், அவங்க சொந்தத்துக்கும்…”
“ம்மா, சும்மா பேசனும்ன்னு பேசக்கூடாது. தெரிஞ்சா மட்டும் என்னவாகிடும்? என்ன செய்ய போறீங்க? இவங்க பண்ணினது இருக்கறதுலையே பெரிய முட்டாள்த்தனம்…” என்று கடுகடுத்தவள்,
“வேண்டாம்ன்னு போறான்னா விட்டது தொல்லைன்னு போகவேண்டியது தானே? நியாயம் கேட்க போனாராமே? என்ன கிடைச்சது? யார் யாரோ அடிக்கிற அளவுக்கு நாம போய்ட்டோமா?…” என்று அவ்வளவு கொந்தளித்தாள் ஆழினி.
“ப்ச், அவனே காதலிச்சிட்டு ஏமாந்து நிக்கறான். பச்சை மண்ணுன்னு நான் அவனை சொல்லும் போதெல்லாம் நம்புனியா நீ? இப்ப பாரு பிள்ளை அலமலந்து நிக்குது. இதுல இந்த அண்ணா வேற சட்டில போட்டு வறுக்கறார்…”
“அதான் உங்க புருஷன் ஒத்தடம் குடுக்க கூட இருக்காராக்கும்? தாலாட்டு பாடி தூங்க வச்சிட்டு வர சொல்லுங்க…” என்றவள்,
“நானா எங்க வந்தேன்? அங்க இருந்தா அண்ணனோட சண்டை போட்டுடுவேனோன்னு மகி தான் அனுப்பி வச்சா. பாவம் கண்ணா…” என்றார் சித்தாரா.
“ஹ்ம்ம், நல்ல பொருத்தம்…” என்ற ஆழினி,
“நல்லதுக்குன்னு நினைங்கம்மா. இதையே அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு எதையாச்சும் காரணம் சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணியிருந்தா தாங்கியிருப்பீங்களா?…” என்று கேட்கும்முன் அவளின் குரல் கரகரத்துவிட்டது.
“சரிதான் நீ சொல்றது. ஆமா உனக்கு ஏன் தொண்டை கரகரக்குது?…” என்று கேட்டவர் மகளின் நெற்றி, கழுத்தில் கைவைத்து பார்த்தார்.
“காய்ச்சல் எதுவும் இல்லையே? கண்டநேரத்துல ஜில்லுன்னு தண்ணி குடிச்சியா?…” என அவராகவே கேட்டுவிட்டு,
“நீ போய் முகம் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா. டிபன் சாப்பிட வேண்டாம். குழைவா சாதம் வச்சு, கொள்ளுரசம் செய்யறேன். கூடவே துவையலும். சாப்பிட்டு தூங்கி எழுந்திரி. சரியாகிடும்…” என்று சொல்லிவிட்டு மகளை மாடிக்கு அனுப்பினார்.
“கமலா…” என்று சமையல் செய்பவரையும் அழைத்துக்கொண்டே சென்றவர்,
“ஆழி நில்லு…” என்று பாதி படியேறிய மகளை நிறுத்தினார்.
“என்னம்மா?…” என்று அங்கிருந்தே இடுப்பில் கைவைத்தபடி ஆயாசமாய் அவரை திரும்பி பார்த்தார் ஆழினி.
“சலிப்பா இருக்கோ? ஏன் இருக்காது? சொன்னேன்ல பிரேஸ்லெட், வாட்ச் எல்லாம் எடுத்துக்கோன்னு. இங்கினவே வச்சிட்ட பாரு?…” என அதனை எடுத்துக்கொண்டு சென்றார்.
“பரவாயில்லையே. இப்பவே குடுத்துட்டீங்க?…” என்று தாயை கிண்டல் பேசியபடி அவர் தந்ததை வாங்கிக்கொண்டவள் தன்னறைக்குள் சென்றாள்.
எதுவுமே செய்ய தோன்றவில்லை சிலவினாடிகள். மெதுவாய் ஆளுயர கண்ணாடியின் முன் நின்று தன் முகத்தை பார்த்தாள்.
பளிங்கு முகமென்று சொல்லமுடியாது. ஆனால் முகத்தில் இருக்கும் சின்ன சின்ன பருக்கள் ஓரிரண்டு கூட அவளின் அழகுக்கு அழகு சேர்ப்பவையாக இருந்தது.
பால் நிறத்தில் புள்ளியாய் பொட்டு வைத்ததை போல அந்த பருக்கள் சிவந்து நிற்க விரல்கள் அதனை கிள்ளியது.
“ப்ச் ஸ்ஸ்ஸ்ப்பா என்ன வலி?…” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் வலியின் சாயல் முகம் முழுவதும் சிவந்து பிங் அன்ட் ரெட்டிஷ் என்னும் நிறத்தில் இருக்க,
“எப்படி வலிச்சிருக்கும் கண்ணா உனக்கு? சரியான கல்லுளிமங்கன். அப்பவும் எப்படி விரைப்பா நிக்கிற?…” என புலம்பி,
“போச்சு, அம்மா கூப்பிட போறாங்க…” என்று தலையசைத்தவள் போனிடெயிலை அவிழ்த்துவிட்டு முதுகில் படரவிட்டாள்.
இயற்கையாய் அவளுக்கு சுருள்முடி இல்லை. ஆனால் அவளே தினமும் அதனை சுருட்டிக்கொள்வது வழக்கம்.
இப்போதும் அலையலையாய் அவளின் கூந்தல் இழைகள் தவழ்ந்து மிதக்க தலையை லேசாய் சிலுப்பிக்கொண்டாள்.
“உனக்கென்ன ஆழி குறை? சிலருக்கு கண்ணெல்லாம் பின்னாடி இருக்குமாம். அதனால கீழே விழுந்து வாரிப்பாங்க. தேவையா? அப்போ வலிக்கும் தானே? ஆனா எனக்கும் சேர்த்தே வலிக்குது….” என்று கேட்டவளுக்கு கண்கள் சிவந்தது கார்மேகவண்ணன் ஞாபகத்தில்.
என்னதான் அவன் வலியை காண்பித்துக்கொள்ளாமல் இருந்தாலும் அந்த காயங்கள் அவளை வெகுவாய் சூடேற்றி இருந்தது.
“என் கண்ணுல திரும்ப மாட்டட்டும். ஒருத்தனுக்காச்சும் கன்னம் பழுக்காம போகாது…” என்று பல்லை கடிக்க, திறந்திருந்த கதவின் வழியே சித்தாரா வாழவந்தானுடன் பேசுவது கேட்டது.
என்னவென்று நின்று கேட்கவெல்லாம் நேரமில்லை. குளியலறை சென்றவள் குளித்துவிட்டு கீழே வர இன்னும் பேசிக்கொண்டிருந்தார் சித்தாரா.
“ஒன்னும் பிரச்சனை இல்லை. அவங்க பேசிக்கிட்டே இருக்கட்டும். நீங்க கண்ணாவை கூட்டிட்டு வாங்க. வயசுப்பிள்ளை தெரியாம பண்ணிட்டான். கொஞ்சம் தன்மையா பேசமாட்டாரோ?…” என்று பொரிந்துகொண்டிருந்தார் சித்தாரா.
“நீ சாப்பிட உக்கார் பாப்பா…” என்று கமலா சொல்ல,
“நீங்க போங்க கமலாக்கா. நான் போட்டுக்கறேன். நீங்க தூங்குங்க…” என்று நேரத்தை பார்த்து கூறினாள் ஆழினி.
“தூக்கமா? உங்கம்மா சொல்லி பேசவாவது நான் இருக்கனும்ல. நீ சாப்பிடு…” என்று சிரித்தபடி சொல்லியவர் அவளுக்கு குழிந்த தட்டில் நன்றாக குழைய வடித்த சாதத்தை போட்டு கரண்டியால் லேசாய் மசித்துவிட்டார்.
“ப்ச், என்னால பிசைஞ்சுக்க முடியாதா? இதுவுமா?…” என்றவள் ரசத்தை எடுத்து நாசியினருகே வைத்து வாசமிழுத்து, பின் தட்டில் ஊற்றி துவையலை ஓரமாய் வைத்துக்கொண்டு உண்ண ஆரம்பிக்க, இங்கே பேச்சு சுவாரஸியம் உச்சம் தொட்டது.
“தம்பி மேல ஒரு பார்வை பட்டுச்சுன்னா அது அவங்க அம்மாப்பாவா இருந்தாலும் நம்ம அம்மா சும்மா விடமாட்டாங்க பாரு…” என்று கமலா அவளிடம் ரகசியம் பேச ஆழினியின் கண்கள் சிரித்தது.
அவன் இன்னொருத்தியை காதலித்திருந்தான் தான். அதனால் ஏமாற்றப்பட்டு காயப்பட்டிருக்கிறான் தான். ஆனால் இதற்கு கூட அவன் மேல் பரிதாபமோ, அனுதாபமோ வரவில்லை.
மாறாக அவ்வளவு கோபம். கூடவே யாருமறியாமல் அவளுக்குள் மட்டும் முகிழ்க்கும் சிறு சந்தோஷம்.
‘உனக்கு ஆவனும்டா கண்ணா’ என்று ஒரு குரல் அடிமனதினுள் ஆர்ப்பரிக்க அதனை அதட்டி வைத்தவள் கோபம் எல்லாம் அவனை காயம் செய்தவர்கள் மேல் அதிகத்திற்கும் இருந்தது.
அதனை நினைத்தபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்து சேர துரைச்சாமி தான் அனுப்பியிருந்தார்.
கமலாவை நிமிர்ந்து பார்க்க கமலா கன்னத்தில் கைவைத்து சித்தாராவை பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்துகொண்டார்.
அவர்கள் கவனம் இங்கில்லை என்று கவனித்த பின்னர் அந்த செய்தியை திறந்தாள் ஆழினி.
சஞ்சனா என்ற பெயரை தாங்கி வந்திருந்த அந்த கோப்பில் அவள் புகைப்படத்தில் இருந்து அந்த சம்பவத்தன்று அங்கிருந்தவர்கள், சொந்தங்கள், காவல்நிலையம் வந்தவர்கள், இப்போது திருமணம் செய்துகொள்ள போகும் மாப்பிள்ளை குடும்பம் வரை தொகுக்கப்பட்ட தகவல்கள்.
“என்ன பண்ண போற ஆழினி?…” என கேட்டு அனுப்பினார் துரைச்சாமி.
“நத்திங் அங்கிள். சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்…” என்று மட்டும் சொல்ல மறுபக்கம் பதிலின்றி சிலநொடிகள்.
“ஓகே, குட்நைட்…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
இங்கே இன்னும் தீரவில்லை சித்தாரா பேச்சுக்கள். கமலாவிடம் சென்று வந்ததை பற்றியும் சொல்லிக்கொண்டு, இடையில் கண்ணனை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.
“நேத்து நைட் நம்ம பாப்பா ஒருவார்த்தை சொல்லலையே என்கிட்ட. தெரிஞ்சிருந்தா தம்பியை பார்க்க போயிருப்பேனே. உங்களுக்கும் சொல்லியிருப்பேன்…” என்று கமலா ஒருபக்கம் அங்கலாய்க்க,
“ஓகே நான் தூங்க போறேன்…” என்று அவள் நகர,
“ஆழி, அப்பா இன்னும் வரலை…” என்றார் மகளை முறைத்து பார்த்து.
“ப்ச்…” என்றவள் மீண்டும் கார் சாவிகளை மாட்டும் இடத்திற்கு சென்றாள்.
“எனக்கு தூக்கம் வரும்ன்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா?…” என சத்தமாய் சொல்ல,
“வேந்தாண்ணா இன்னும் கோபம் குறையாம இருக்காராம்…”
“ம்மா, அவர் அப்பா. கோபப்படாம எப்படி இருப்பாங்க? அதோட நான் போய் சொன்னா மட்டும்…” என்றவள் இருபுறமும் தலையை ஆயாசத்துடன் அசைத்தபடி வெளியேறினாள்.
“பாப்பாவும் கோவமா போகுது…” கமலா சொல்ல,
“அதெல்லாம் இல்லை. நான் சொல்லலைன்னாலும் அவங்கப்பா வராம இவ தூங்கிடுவாளா? வரட்டும்…” என்றவர் பேச்சை தொடர்ந்தார்.
———————————————–
“நான் தான் சொல்றேன்ல வேந்தா. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. விட்டு தொலையேன். இதோட போச்சேன்னு மொத்தமா தலையை முழுகிட்டு…” வாழவந்தான் அத்தனை ஆற்றாமையுடன் சொல்ல,
“நீ முதல்ல கிளம்பு. நான் பேசிக்கறேன் அவனை. இவ்வளோ பேசறேன். பதில் சொல்றானா பாரு?…” என்ற பேச்சிலேயே வாழவந்தானுக்கு கிளம்ப மனதில்லை.