பெட்டியில் அடுக்கப்பட்டவற்றை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக்கொண்டிருந்தான் கார்மேகவண்ணன்.
“எத்தனைதடவை பார்த்தாலும் நாம என்ன வச்சோமோ அதுதான் இருக்கும்…” ஆழினி சொல்ல,
“இருக்கும் தான். எதுவாச்சும் மறந்துட்டா? மழை சீசன் வேற. அங்க போய் தேடி வாங்கிட்டிருக்க முடியாது…” என பார்த்துக்கொண்டிருந்தவன் ஊஃப் என்று பெருமூச்சுடன் அமர,
“ட்ராலியை இங்க தள்ளுங்க. ஓரமா வச்சிருவோம்…” என்று ஆழினி கேட்டதும் அதனை இறக்கி அவள் பக்கம் தள்ள சக்கரம் சுழன்று சென்றது.
“ஆழிம்மா…” மகிழாவின் குரல் வெளியே.
“நீ போய் பாரு. நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்…” கண்ணன் எழுந்துகொள்ள,
புகுந்தவீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தான் கடந்திருந்தது. பெரிதாய் எவ்வித மாற்றங்களும் அவளுக்கு தோன்றவில்லை தான் தன் கண்ணனின் மனைவி என்பதை தவிர.
திருமணம் முடிந்தே ஒருவாரம் தான் ஆகியிருந்தது. இரு வீட்டுக்கும் இங்கும் அங்குமான பயணங்கள் எல்லாம் அவளை பெரிதாய் பாதிக்கவில்லை.
“செம்ம லக்கி ஆழி நீ. நினைச்சா அம்மா வீடு. நினைச்சா மாமியார் வீடு. மறுவீடு முடிஞ்சு புருஷன் வீட்டுக்கு நான் போனப்போ அவ்வளோ அழுதேன். உன் முகத்துல அந்த கஷ்டம் எதுவும் இல்லை…” என்று சொல்லி ஷர்மி அன்று கேலி பேசியிருக்க,
“என்னத்துக்கு கஷ்டம்? அதான் காத்திருந்து காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாளே. நினைச்சா உங்கப்பாம்மாவும் கூட அங்க போய் வீட்டோட சம்பந்தியா இருக்கலாம்…” என்று ஷர்மி மாமியார் அனைவரின் முன்பும் கேலி போல பேச,
“எப்பவும் உங்களை மாதிரியே எல்லாரையும் நினைக்கிறதுன்றது இதுதான் போல த்தை. நீங்க பெரியத்தான் மாமியார் வீட்டோட போயிருக்கீங்க இல்ல? அப்படி எல்லாருக்கும் மனசு வருமா என்ன?…” என்றுவிட்டாள் ஷர்மி.
கண்ணனுக்கு அத்தனை கோபம் வந்து பேச வாய் திறக்கும் முன் சுள்ளென்று சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்துவிட்டாள் ஷர்மி.
“அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும். மகனோடவே போய் சம்பந்தி வீட்டில இருக்கறதெல்லாம் சும்மாவா? எங்கப்பாம்மாவை சொல்லுங்க. அந்த விவரம், தியாகம் பன்ற மனசு இதெல்லாம் வரவேவராது. சரியான கௌரவம் புடிச்ச மனுஷங்க. மக வீட்டுக்கு வந்து இருக்கவே அத்தனை யோசிப்பாங்க…” என்றாள் விடாமல்.
“ஷர்மி விடு…” என்று கோவேந்தன் சொல்ல,
“என்னன்னாலும் என் மாமியார் எனக்கு உசத்தி தான் ப்பா. உண்மையை சொன்னா உங்களுக்கு பொறுக்காது போங்க….” என்றவள்,
“என்னத்தை, நான் சரியாத்தானே சொன்னேன்?…” என்றதற்கு அவளின் மாமியார் பொத்தாம்பொதுவாக தலையை ஆட்டிவைத்தார்.
தன்னை புகழ்ந்து பேசுகிறாளா, இகழ்ந்து பேசுகிறாளா என்றே பிரிக்க முடியாதபடிக்கு இருந்தது ஷர்மியின் பேச்சு.
இப்போது நினைத்தாலும் ஆழினிக்கு சிரிப்பு தான் வரும். அன்றைக்கு அவள் பேசவில்லை என்றால் கண்ணன் வாய் திறந்து பிரச்சனை பெரிதாகி இருக்கும்.
“ண்ணா, நான் பேசிட்டா மாமியார், மருமகள் சண்டைன்னு போய்ரும். இதுவே நீ பேசினா சம்பந்தகாரங்க சண்டைன்னு என் மாமியார் பெருசா இழுத்து விட்டுடும். எத்தனை தான் பின்னாடி சமாதானமானாலும் அது மறையாது. நீ கீப் கொயட்…” என்றுவிட்டாள் கண்ணனிடம்.
எத்தனை தெளிவாய் அவள் பேசுகிறாள் என்றுதான் பார்த்தாள் ஆழினி. எப்போதும் மகிழாவின் சமாளிப்பிலும், சாமர்த்தியத்திலும் ஒரு அலாதியான ஆச்சர்யம் இருக்கும்.
அதனை ஷர்மியின் விஷயத்தில் கண் கூடாக கண்டுவிட அன்றைக்கெல்லாம் ஷர்மி மாமியாரை பார்க்க பார்க்க சிரிப்பு தான் ஆழினிக்கு.
“நேத்து தான் நான் இங்கயே வந்தேன். நீங்க இன்னைக்கு கிளம்பறீங்க ஷர்மிக்கா. இது கொஞ்சம் கூட நல்லாயில்லை…” என்ற ஆழினி குறைபட,
“இருக்க ஆசை தான். நானும் ரொம்பநாள் இருக்கனும்ன்னு நினைச்சேன். ஆனா எங்க முடியுது? என் மாமியார் இப்பதான் வந்திருக்க வந்த நேரம் தான் குலதெய்வம் கோவிலுக்கு போகனும், அது இதுன்னு இழுக்கறாங்க. நான் ஒருபக்கம் இழுத்தா விளைவு மோசம்….” என்று சிரிக்க,
“ஷர்மிக்கா சமாளிக்க மாட்டீங்களா?…”
“அதெல்லாம் ஈஸியா சமாளிக்கலாம். இதுவுமே சமாளிப்பு தான். இல்லைன்னா இங்க நடந்ததுக்கெல்லாம் ஓவர் டைம் போட்டு அதை எப்படி ட்விஸ்ட் பண்ணலாம்ன்னு யோசிக்கும் என் மாமியார். அதுக்கு சான்ஸ் குடுக்கலாமா? அதான், படியிற இடத்துல படியனும். பதுங்கற இடத்துல பதுங்கனும். இங்க தலையை நாம ஆட்டினோம்ன்னா, அங்க என் புருஷன் எனக்கு தலையாட்டுவார்….” என்றாள்.
சிலரின் வாழ்க்கைகள் சூட்சமங்களால் நிறைந்தது என்பதற்கு ஷர்மி வாழ்க்கை அத்தனை சான்றாக தெரிந்தது ஆழினிக்கு.
“எல்லாருக்குமே பர்பெக்ட் & லவ்வபிள் ஃபேமிலி அமைஞ்சிடாது ஆழி. பொறாமைல சொல்லலை. உனக்கு அமைஞ்ச மாதிரியும், அண்ணனுக்கு அமைஞ்ச மாதிரியும் எல்லாருக்கும் கிடைக்காது. அதுக்காக என் மாமியாரை நினைச்சு நான் அழுது வடிஞ்சா என் தலையில உக்கார்ந்திருவாங்க…” என்றவள்,
“பாசமா போனா நாமளும் இறங்கலாம். பரிகாசம் பன்றவங்களுக்கு அவங்க போக்குல போய் தான் பதில் தரமுடியும். என் புருஷன் நல்லவர் தான். அதுக்காக எல்லா நேரத்துலையுமே புருஷன் புருஷனா இருக்கமாட்டாங்க. அவங்களை மட்டும் முழுசா நம்பவே கூடாது. கூடவே இருந்துட்டு இவதான்ம்மான்னு கோர்த்து விடறதுல முதல் ஆளா இருப்பாங்க…” என சிரித்தாள்.
முன்பே பலவிஷயங்கள் பகிர்ந்துகொள்வார்கள் தான். ஆனாலும் இப்போது திருமணம் என்ற பின்னரான ஷர்மியின் பேச்சுக்கள் ஆழினிக்கு இன்னும் புதிதாய் இருந்தது.
முன்பு கேலியாய் பகிரும் விஷயங்கள் இப்போது பொறுப்பாய், பக்குவமாய் அவளுக்கு தெரியப்படுத்தப்பட்டது இன்னும் விளக்கமாக.
“அதனால இப்படி மாமியார், மாப்பிள்ளை இருக்கும்போது நான் எந்நேரமும் அலார்ட்டா கையில வேப்பிலையோட தான் இருக்கனும். அடிச்சு ஓட்டனும்ன்னு இல்லை. லைட்டா தட்டிவிட்டு, தடவி குடுத்தே ஓட்டலாம். எதுக்கு சண்டைன்னு வரிஞ்சுகட்டி பெரிசு பண்ண? ஈஸியா சமாளிக்கிறதை விட்டுட்டு நம்ம எனர்ஜியையும் வேஸ்ட் பண்ணிட்டு?…” என்று சிரித்தாள்.
“மகிம்மா பொண்ணுன்னா சும்மாவா?…” ஆழினி புன்னகைக்க,
“ஆழி மட்டுமென்ன? சும்மாவா?…” என்றாள் ஷர்மி அவளை அணைத்து.
“நான் இப்ப கிளம்பி போனா அடுத்து வரனும்ன்னு நினைக்கும்போது கண்டிப்பா வரமுடியும் ஆழி. அதான் கல்யாணத்துக்கு முன்னாடியே வந்துட்டு உன் கூடவே தானே இருந்தேன். அப்பறம் என்ன?…” என்று சொல்லி கிளம்பிவிட்டாள் ஷர்மி.
ஷர்மி கிளம்பியதுமே வீடே கலகலப்பிழந்ததை காணப்பட்டது. இல்லையென்றால் எந்தநேரமும் இருவரின் குரலும் கேட்டுக்கொண்டே தான் இருக்கும்.
மகிழாவின் முகமே வாடிவிட்டது மகள் கிளம்பி சென்றதும். அத்தனை நாட்கள் இருந்துவிட்டு சென்றுவிட வெகுநேரம் என்னவோ போல் சுற்றிக்கொண்டிருந்தார்.
ஆழினியும் அவருடனே வளைய வர கார்மேகவண்ணன் வந்து மறுநாள் தாங்கள் கிளம்பவேண்டுமே என்று எடுத்துவைக்க அழைத்துவிட்டான்.
இதோ அதொவென்று எல்லாம் முடிக்க இரவாகிவிட்டிருந்தது. கல்யாண வீட்டிற்கான களை இன்னும் குறையவில்லை.
அறையிலிருந்து வெளியே வந்தவள் அடுக்களைக்கு செல்ல அங்கே மகிழா மட்டுமின்றி சித்தாராவும் இருந்தார்.
“ம்மா, வரேன்னு சொல்லவே இல்ல?…” என்று சந்தோஷத்துடன் வந்து நிற்க,
“அவங்களும் கிளம்பிட்டாங்க. நாளைக்கு தான் கிளம்பறதா இருந்தாங்க. அதுக்குள்ள ஊர்ல இருந்து போன். அப்பா தான் நம்ம கார்லயே அனுப்பி வச்சிட்டாங்க போய்ட்டு வாங்கன்னு. அவங்க அந்தபக்கம் போகவும் நாங்க இங்க வந்துட்டோம்…” என்று சொல்ல,
“போதும், போதும். முதல்ல சாப்பிடுவோம். இதை டேபிள்ல வை ஆழி…” என்று சூடான சாம்பாரை ஆழினியிடம் நீட்ட,