“என்ன எல்லாரும் இன்னைக்கு இங்கயே தான் சாப்பிடறதா இருக்கீங்களா? போங்க டேபிளுக்கு…” என்று அவனின் பார்வையை தவிர்த்தபடி ஆழினி பேச்சை திசைதிருப்ப,
“ஆமா, ஆமா…” என்று நகர்ந்து வந்தனர்.
கோவேந்தன் தவிர மற்ற அனைவரும் பேசிக்கொண்டே உணவை முடிக்க அவர் கொரித்துக்கொண்டு இருந்தார்.
“ம்மா, அய்யனார்…” என கிசுகிசுப்பாய் மகிழாவின் காதை கார்மேகவண்ணன் கடிக்க,
“எல்லாம் உன்னால. கொஞ்சம் அவர் பேச்சை கேட்டா என்ன?…”
“இப்ப என்ன நான் கேட்கலை? எங்களுக்கு தேக்கடி போக தான் பிடிச்சிருக்கு. ஆழினியும் அதைத்தான் சூஸ் பண்ணினா. இதுல என்ன இருக்கு?…” என்றான் தோளை குலுக்கிக்கொண்டு.
“தேக்கடி என்ன நாம பார்க்காத இடமா? சொல்லபோனா தடுக்கி விழுந்தா தேக்கடின்னு ரெண்டுவருஷத்துக்கு ஒருத்தடவையாச்சும் அங்க போயிடறோமே?…” என்ற மகிழா,
“சரி விடு. அதான் முடிவு பண்ணி கிளம்பறீங்களே? பத்திரமா போய்ட்டு வாங்க….” என்றுவிட்டார்.
“எல்லாரும் போனமாதிரியா இது? மகிம்மா…” என்று கண்ணன் பல்லை கடிக்க,
“அதானே? அவன் இப்ப ஹனிமூன் போறான். நாம கும்பலா போனதும் இதுவும் ஒண்ணா? என்னம்மா நீ?…” என்ற வாழவந்தான்,
“இப்ப உனக்கு என்னடா? பாரின் ட்ரிப் போகனும். அவ்வளோ தானே? அவன் போகலைன்னா என்ன? எனக்கும் சித்துவுக்கும் ஏற்பாடு செய். நாங்க போய்ட்டு வரோம்…” என்றார் சட்டென்று.
“அடி தூள். மாம்ஸ், கலக்கற போ…” என்று கண்ணடித்த கார்மேகவண்ணன் அவரிடம் ஹைபை அடித்துக்கொள்ள,
“இவனை…” என்று வாழவந்தான் தோளில் நான்கு அடி வைத்தார் கோவேந்தன்.
“வேண்டாமா? சரி விடு. நாம ரெண்டுபேரும் போய்ட்டு கிளுகிளுப்பா இருந்துட்டு வருவோமா? இது ஓகே வா?…” என்றும் கேட்க,
“பிள்ளை இல்லாத வீட்டுல துள்ளி விளையாண்டானாம் கிழவன்…” கோவேந்தன் பற்களை நறநறத்தார்.
“என்னை பார்த்தா கிழவன் மாதிரியா இருக்கு? நீ சொல்லு கண்ணா?…” என்று மருமகனிடம் திரும்ப,
“நல்ல ஆள்கிட்ட கேட்ட போ. எப்படி உன்னை விட்டுட்டு ஒருவாரம் தேக்கடி போறானோன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு…” என்று கோவேந்தன் நக்கல் பேச,
“அதெல்லாம் கமு. இது கபி. கல்யாணத்துக்கு முன்னாடி வேற வழியில்லாம இந்த மனுஷனை தோள்ல தூக்கிட்டு சுத்தினேன். இப்பவும் சுத்தனுமா என்ன?…” என்று கேலியாய் கார்மேகவண்ணன்.
“இதுக்குத்தான் இவனை ஊட்டி ஊட்டி வளர்த்தியா? பாரு எப்படி பேசறான்னு…” என கோவேந்தன் வாழவந்தானிடம் சொல்ல,
“என்ன ஊட்டி வளர்த்து என்ன? உன் குணமும் இருக்கும்ல…” என வெள்ளையாய் சிரித்தபடி அவர்.
“திருந்தவே மாட்டாங்க…” என சொல்லி,
“போறது சரி. மழை நேரம் பார்த்து பத்திரமா இருக்கனும். மறக்காம அப்பப்ப கால் பண்ணனும். ரொம்ப அதிகமான மழைன்னா பேசாம ரூம்ல இருங்க…” என்றவர் மகன் கவனம் தன்னிடம் இல்லை என்றதும்,
“ஆழி உன்கிட்ட தான் சொன்னேன்…” என்றார் கோவேந்தன் கடுப்புடன் கோபமாக.
“ஓகே மாமா. பார்த்துக்கறோம்…” என்றவள்,
“சொல்லுங்க…” என்றாள் கண்ணனிடம்.
“ப்ச், நான் என்ன சின்னபிள்ளையா? இல்லை நீ குழந்தையா? இதென்ன முதல்தடவை போற மாதிரி? எங்க போறோம், எங்க ஸ்டே பன்றோம் எல்லாமே சொல்லியாச்சு. அப்பறமும் எதுக்கு இந்த பதட்டம்?…” என்றான் இலகுவாய்.
“அதுக்காக…” என்ற ஆழினியை பார்த்தவன்,
“நான் போய் தூங்கறேன். மார்னிங் ப்ளைட். அங்கருந்து கார் ட்ராவல். டயர்டாகிடும். நீ பேசிட்டு வா…” என்று எழுந்து சென்றுவிட்டான்.
மற்றநாள் எல்லாம் பெரிதாய் தோன்றாதது அன்றைக்கு ஆழினிக்கு வருத்தமாய் இருந்தது.
“விடுங்க மாமா, எப்பவும் போல தானே?…” என்று சிரித்தபடி அவரின் பேச்சின் திசையை மாற்றி உற்சாகமாய் சொல்லுபவள் இன்று அமைதியாக பார்த்தாள்.
“என்னடா ஆழி? எப்பவும் சமாதானப்படுத்துவ. இன்னைக்கு என்ன சைலண்டாகிட்ட?…” என்று கோவேந்தன் சிரித்துவிடவும்,
“ஸாரி மாமா. கொஞ்சம் கஷ்டமாகிடுச்சு…”
“அவன் மேலையும் தப்பில்லைடா. நீங்க அங்க போற விஷயத்தை சொன்னதுல இருந்தே நானும் முகத்தை தூக்கி வச்சிட்டு சுத்தறேன். பட்டுன்னு பேசிட்டு இருந்தேன். அவனும் எவ்வளோ தான் பொறுப்பான்?…” என்று மகனை விட்டுக்கொடுக்காமல் அவர் பேச,
“அப்பப்பா, போதுமப்பா. இதென்ன இத்தனை சென்டியா பேசிட்டு?….” என்ற வாழவந்தான்,
“ஆழி நீயும் போய் தூங்கு. காலையில சீக்கிரம் எழுந்துக்கனும். நான் பார்த்துக்கறேன்…” என்று மகளிடம் கண்ணமர்த்தி கிளம்ப சொல்லியவர்,
“சித்து நீ மகி கூட பேசிட்டிரு. நானும் இவனும் சும்மா ஒரு வாக் போய்ட்டு வரோம்…” என்று கோவேந்தனை பார்க்க,
“ஏன் எனக்கெல்லாம் தூக்கம் வராதா? அவனில்லைன்னா நானா? எப்ப பார் உனக்கு கூட ஒருத்தர் இருக்கனும்…” என்று கோவேந்தன் சட்டமாய் அமர்ந்துகொள்ள,
“ஆமா, நீ வா என்கூட. சும்மா எல்லாத்துக்கும் எகிறிக்கிட்டு…” என்றவர் அவரை இழுத்துக்கொண்டே சென்றார்.
“நான் எப்பவும் போல தான இருக்கேன்? இப்ப எதுக்கு இந்த சமாதானம்?…” என்று கோவேந்தன் கேட்க,
“உன் மூஞ்சியை பார்த்தா தெரியாதா? வா வா…” என நடக்க ஆரம்பித்திருந்தார் வாழவந்தான்.
ஆழினியிடம் சொல்லிவிட்டு சித்தாராவும் மகிழாவும் வெளியே வந்து அமர்ந்துகொள்ள தங்களின் அறைக்குள் நுழைந்தாள் ஆழினி.
நெற்றியில் கையை வைத்தபடி படுத்திருந்தான் கார்மேகவண்ணன். அவனிடம் கோபப்படவும் முடியாமல், இந்த செயலை ஏற்கவும் முடியாமல் மறுபக்கம் வந்து சாய்ந்தமர்ந்துகொண்டாள்.
அமர்ந்தவள் எதுவும் பேசாமல் மௌனமாகயிருக்க கண்ணை மறைத்திருந்த கையை எடுத்துவிட்டு ஆழினியின் மடியில் தன் தலையை மாற்றினான் கார்மேகவண்ணன்.
“மனைவிக்கு என்னவாம்? இப்ப அங்க என்ன சொல்லிட்டேன்னு நீ டல்லா இருக்க?…” என்றான் மனைவியிடம்.
“மாமாவை அப்படி பேசக்கூடாதுல. தப்புன்னு தெரியலையா?…” கோபமில்லை. ஆனால் ஆதங்கம் நிறையவே இருந்தது.
அவனிடம் மட்டும் அவன் என்ன செய்தாலும் கோபப்படவோ, அவனை காயப்படுத்தவோ அவளுக்கு தோன்றவே இல்லை.
கேட்ட கேள்வியை கோபமாக கேட்டிருந்தால் விஷயமே வேறு. இப்படி கேட்பதில் முகம் சுருக்கினான் கார்மேகவண்ணன்.
“நீ எனக்கு ரொம்ப செல்லம் குடுக்கற ஆழி. யூஸ்வல் வொய்ப் மாதிரி இதை கோபமா கேளு…” என்று சொல்ல,
“கோபமாவா?…” என பார்க்கத்தான் முடிந்தது.
“ஆமா, கோபமா. ஆபீஸ்ல, பில்டிங் கன்ஸ்ட்ரக்ட் பன்ற இடத்துல எல்லாம் கோபப்படுவியே. அப்படி….”
“ப்ச், அதெல்லாம் தானா வரனும்…” என்று தவிர்க்க,
“அதெப்படி இடத்துக்கு ஏத்த மாதிரி, ஆளுங்களுக்கு ஏத்தமாதிரி கோபம் கூட நிறம் மாறுமா?…” என்ற கேள்வியில்,
“ஹ்ம்ம், மாறும். கார்மேக கண்ணன்கிட்ட என்னோட ஒரே ஷேட் இதுதான். இப்படித்தான். இந்த வண்ணம் மாறாது…” என்று சொல்லியவளின் மூக்கை பிடித்து நிமிண்டினான்.
அவன் விரல்கள் கொடுத்த அழுத்தத்தில் மூக்குத்தியும் அழுந்த லேசாய் வலியை தந்துவிட்டது.