தன்னை பின் தொடர்ந்து விரட்டியவனை எதிர்கொண்டு அவனின் மார்போடு கட்டியணைத்தவள் செயலில் கார்மேகவண்ணன் அப்படியே நின்றுவிட,
“அதான் சொல்றேன்ல வேற வேண்டாம்ன்னு? புரியாதா கண்ணா?…” என்ற சத்தத்தில் கார்மேகவண்ணன் பார்வை அவளிடம் நிலைத்தது.
அவளின் பேரன்பு அதிகத்திற்கும் அதீதம் என்பதனை அவனால் சுமக்க முடியவில்லை.
“ப்ளீஸ், கழட்டவேணாம். கொஞ்சநாள். என் ஆசைக்கு. இது மட்டும் போட்டுக்கறேன்…” என்று கெஞ்சுதலாய் கேட்டவள் அவன் அப்போதும் மௌனமாயிருக்க,
“அடங்கவே மாட்டீங்க இல்ல…” என்று தன் அணைப்பை விடாமல் இறுக்கியவள் பற்களால் வலியின்றி அவனின் நெஞ்சத்தை பதம் பார்க்க தூக்கம் எல்லாம் தூர சென்றது.
மொத்தமாய் அவளை அவன் அள்ளிக்கொண்டான். கூடி களைத்து அவன் மார்பில் சாய்ந்தவள் கூந்தலை ஒதுக்கியவன் இதழ்கள் ஆழினியின் நெற்றியில் பதிந்திருக்க,
“முதல்ல இந்த மூக்குத்தி பாக்ஸை நாடு கடத்தறேன். இருந்தா தான போட சொல்லுவீங்க…” என்றாள் முணுமுணுத்து.
“ஓய், மனைவி இன்னும் தூங்கலடி நான்…” என உடல் குலுங்க சிரிப்புடன்.
“கண்டிப்பா ப்ளைட் மிஸ் பண்ண போறோம்…” என்ற ஆழினி விழி மூட முனைய,
“தூங்கினா தான் தூங்கிருவோம். அதனால இன்னும் மூணுமணி நேரம் தானே?…”
“ஸோ வாட் கண்ணா?…” ஆழினி அவன் முகம் பார்த்து தலையை உயர்த்த,
“நமக்கு சிவராத்திரி கண்ணா…” என்றான் ராகமாய்.
சொல்லியதை போல அன்றைய இரவு உறங்காயிரவாகி போக நேரத்திற்கு விமானநிலையம் வந்துவிட்டனர் இரு குடும்பத்தினருடன்.
தேக்கடி வந்ததிலிருந்து ஆழினியின் முகத்தை படிப்பது தான் கார்மேகவண்ணனின் முழுநேர வேலையாகி போனது.
அவளின் சந்தோஷத்தின் எல்லையை அவன் கண்டுகொண்டான் அங்கே. பார்க்க பார்க்க வலித்தது.
எத்தனை ஆசைகளை, எவ்வளவு அன்பை அவளுள் தேக்கி வைத்து வாழ்ந்திருக்கிறாள் என்று.
அங்கே ஒவ்வொரு இடத்தையும் அவள் சொல்லாமலே நினைவு கூறும் அளவிற்கு தான் சுற்றி வந்தனர்.
“இப்படி இங்க நில்லுங்க. ஒரு ஸ்நாப் எடுப்போம்…” என்று சொல்லி அவள் நிறுத்தும் இடங்களை எல்லாம் அவன் முன்பே நின்ற நினைவை தர உடனடியாக ஷர்மிக்கு அழைத்தான்.
“எனக்கு லாஸ்ட் டைம், அதுக்கு முன்னாடி டைம் நாம போன தேக்கடி ட்ரிப் பிக்சர் அனுப்பி வை ஷர்மி…” என்றான் தங்கையிடம்.
“என்னண்ணா இப்ப பழைய போட்டோஸ்?…”
“ப்ச், இது ரொம்ப முக்கியமா? அதான் அனுப்புன்னு சொல்றேன்ல. எல்லா போட்டோவும் வேணும்….” என்று சொல்லி வைத்துவிட்டான்.
சற்றுநேரத்தில் அவள் அனுப்பிய அனைத்து போட்டோக்களின் ஒவ்வொரு இடத்தையும் ஆழினி இன்று அவனுடன் தன்னை நிறைத்து எடுத்திருந்தாள்.
முக்கியமாக கண்ணன் தனியே நின்றிருந்த இடங்கள் அனைத்தையும் அவள் வளைத்து எடுத்திருக்க மூச்சுக்கு திணறி போனான் கார்மேகவண்ணன்.
“ஆழி, ஆழி என்ன பன்ற நீ? என்ன பண்ணிட்டிருக்க?…” என்றவனுக்கு அவள் மின்னும் விழிகளை பார்த்து இதனை கேட்கமுடியவில்லை.
ஆழினியின் ஏக்கம் சுமந்திருந்த கண்களின் யாசிப்பின் அளவில் பேச்சற்று அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்துகொண்டிருந்தான்.
“இங்க இந்த கார்டன் ஞாபகமிருக்கா?….” என்று அந்த ரெசார்ட்டின் பூங்காவில் அவனை அமர சொல்லி தானும் அமர்ந்துகொண்டு கேட்க தலையசைத்தான் அவன்.
ஐந்துவருடங்களுக்கு முன்பு வந்திருந்தபொழுது சித்தாராவுடன் கண்ணன் மட்டும் அதிகாலையே அங்கே வந்து அமர்ந்திருந்த ஞாபகம் அவனுக்கிருந்தது.
“இப்ப தான் கல்யாணமாகிருக்கு போல. பொண்ணு அழகா இருக்காளே?…” என்று சித்தாரா சொல்ல,
“ஆமா தானே? ஹனிமூனுக்கு வந்திருப்பாங்க போல சித்தும்மா…” என்றவன்,
“சித்தும்மா, எனக்கு கல்யாணமாகிட்டா கண்டிப்பா என் ஹனிமூன் ஸ்பாட் தேக்கடி தான். இங்க கிடைக்கிற இந்த ஃபீல் எல்லாம் வேற எங்கையாவது வருமா?…” என்று கேட்டிருக்க,
“பார்த்துட்டே இரு. பொண்டாட்டி வந்து சொல்லுவா வேற எங்கயாச்சும் போனும்ன்னு. அப்ப தெரியும் நீ என்ன சொல்றன்னு…” சித்தாரா கேலி பேச,
“அதெல்லாம் கண்டிப்பா இங்க தான் வருவோம். பார்த்துட்டே இருங்க…” என்றவன்,
“ஆனா அவ எங்க எந்த ஊர்ல இருக்கான்னு தெரியலையே. இந்த அய்யனார் என்னை விட்டா, நானும் பேசாம பாரின் போய் அங்க ஒரு பொண்ணை பேசி முடிச்சு குழந்தை குட்டியோட அய்யனார் கண்ணை கலங்க வச்சிருப்பேன். எங்க?…” என்று பெருமூச்சு விட்டது இன்றும் ஞாபகம் வர ஆழினியை பார்த்தான்.
“அஞ்சு வருஷம் இருக்கும்ல நாம இங்க இந்த ரெசார்ட் வந்து….”
“ஹ்ம்ம்…”
“அன்னைக்கு என்னோட பர்த்டே….” என்றதும் அவள் முகம் காணாமல் முகம் திருப்பினான்.
“உங்ககிட்ட என் மனசை சொல்லனும்ன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். அன்னைக்கு சொல்லமுடியலை. அதுக்கடுத்து வந்தப்போவும் சொல்லமுடியலை…” என்று புன்னகையுடன் கூறியவள் விழிகள் அதற்கு நேர்மாறாக கசிந்துருக,
“இப்பவும் சொல்ல எதுவுமில்லையா ஆழி?…” என்றான் அவளின் கைவிரல் பற்றியபடி தன்னை நிதானித்துக்கொண்டு.
“சொல்ல தோணலை. ஆனா இங்க கைக்குள்ள இப்படி இருக்கனும்ன்னு தோணுது. வரவா?…” என்றாள்.
பொது இடத்தில் அவளின் தோளோடு உரசி நடப்பானே தவிர அணைத்து பிடித்தெல்லாம் நின்றதில்லை.
அதனை அவளும் புரிந்திருக்க இன்றைக்கு பச்சை பசேலென விடுதியை சுற்றிய ரம்யமும், விடுதியின் ஒரு பகுதியில் சலசலத்து ஓடிக்கொண்டிருந்த சிறு அருவி நீரின் ரீங்காரமும், மெல்லிய தூறலும், அனைத்திற்கும் உச்சமாய் ஆழினியின் காதலும்.
கார்மேகவண்ணன் அவள் வசமாகியிருந்தான் மொத்தமாய். ‘வா’ என்ற தலையசைப்புடன் அருகில் அமர்ந்திருந்தவளை இன்னும் நெருங்கி அமர்ந்து தன் கைவளைவை அரவணைப்புடன் தந்தான்.