இன்னும் ஆழியை பிரமிப்பு விலகாமல் பார்த்துக்கொண்டிருந்தான் கார்மேகவண்ணன்.
“எவ்வளோ நேரம் பார்ப்பீங்க?…” என்று சிரித்துவிட்டவள் அவனின் முகத்தை வேறுதிக்கில் திருப்பி,
“ம்ஹூம், என்னையே பார்க்கலாம்…” என்று தன்புறம் மீண்டும் திருப்பிக்கொண்டாள்.
தன் கன்னம் பற்றிய ஆழினியின் கரத்தை அப்படியே பிடித்துக்கொண்டவன் இதழ்கள் அழுத்தமாய் ஒரு முத்தத்தை அதில் பதிக்க, கூடவே இதனை தெரிந்துகொள்ளாத தன் மடமையை எண்ணி நிந்தித்துக்கொண்டான்.
‘அவள் சொல்லவில்லை, அதனால் தனக்கு தெரியவில்லை’ என்ற உணர்வு போய் இப்போது அந்த எண்ணமே அவனை அழுத்த ஆரம்பித்தது.
அவள் மேல் தவறில்லை. அவளின் காதலை அவனிடம் காண்பிக்காமல் வேறு என்ன செய்வாள் என்றும் நினைத்தான்.
நினைக்க நினைக்க அவன் மனதில் அவளின் காதல் பெரும்புயலாக மாற்றமெடுத்திருந்தது.
இனிமையான, சுகமான உணர்வை தந்துகொண்டிருந்தது மெல்ல மெல்ல வலியை ஊடுருவ செய்தது.
“என்ன பண்ணேன்னு இவ்வளோ காதல்? சத்தியமா என்னால முடியலை ஆழி? எது இத்தனை தூரம் என்னை நினைக்க வச்சது? என்ன பண்ணேன்? எந்த இடத்துல இந்த துவக்கம்?…” என்றான் மீண்டுமாய் அவனுக்கவனே கேட்டுக்கொள்வதை போல.
“இதென்ன கிவ் அன்ட் டேக் பாலிஸியா? எனக்கு நீங்க ஒன்னு செஞ்சு அதுல லவ் வர? காதலுக்கு காரணம் வேணுமா என்ன? எந்த காரணமும் இல்லை…”
“காரணமே இல்லையா?…”
“ம்ஹூம்…”
“ஒரு பர்சண்டேஜ் கூட இதனால பிடிச்சதுன்னு எதுவுமே இல்லையா?…” என்றான் இன்னும் புருவமுயர்த்தி.
“கண்ணனை புடிக்கும். அதனால கண்ணனோட எல்லாமே பிடிக்கும். கண்ணன்னாலே பிடிக்கும்…” என்று கண்கள் மின்ன அவள் சொல்ல,
“கண்ணனுக்கு உன்னை பிடிக்காம போயிருந்தா?…” என்னமுயன்றும் அவன் குரலில் அந்த நடுக்கத்தை மறைக்க முடியவில்லை.
“கண்ணனை எப்பவும் எப்படி இருந்தாலும் பிடிக்கும். இப்படி பண்ணிட்டீங்களேன்னு எந்த சூழ்நிலையிலையும் உங்க தப்புக்கும், தவறுக்கும் காரணம் கற்பிச்சு என்னால விலகவோ, பிரியவோ முடியாதே கண்ணா?….” என்று சொல்லும்பொழுது சுக்குநூறாய் உள்ளுக்குள் உடைந்துபோனான் கார்மேகவண்ணன்.
அவள் அங்கே இருந்தவரை அவளின் பிடித்தங்கள் எல்லாம் அவனதாகவே இருக்க சிலநேரங்களில் பொறுமையிழந்தும் பேசியிருந்தான் கேலி போல.
“உனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டா அதை சொல்லு ஆழி. எனக்கு பிடிச்சதை ஏன் சொல்ற? அதை ஏன் கேட்கிற?…” என்று கேட்டுவைக்க,
“நிஜமாவே இதெல்லாம் தான் எனக்கும் பிடிக்கும். வேற எனக்கு என்ன பிடிக்கும்? தெரியலையே?…” என்றவனை பார்த்தவள் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை.
“முன்னாடியே ஓரளவு என்னோட டேஸ்ட்டும், உன்னோட டேஸ்டும் ஒன்னுபோலன்னு மாமா சொல்லும்போது அதுக்கு இது காரணமா இருக்கும்ன்னு நான் நினைச்சதே இல்லை…” என்றவன் அதற்குமேல் அதனை வளர்க்கவில்லை.
அவளின் ரசனைகள் எல்லாம் அவனினதாக இருக்க இன்னுமின்னும் அவன் முன் பிரமாண்டமாய் தெரிந்தாள் ஆழினி.
‘ஒருவேளை இந்த திருமணம் நடக்காது போயிருந்தால்? அவளின் எண்ணம் தனக்கு தெரியாமல் போயிருந்தால்?’ நினைக்கவே அச்சமாக இருந்தது கார்மேகவண்ணனுக்கு.
அதன் தாக்கம் அவளுள் மொத்தமாய் இடைவெளியின்றி அவன் நிறைந்துகொண்டே இருந்தான்.
ஒருவாரம் எப்படி சென்றதென தெரியவில்லை. அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் அவளின் காதலின் காத்திருப்புகள் தான் அவனை சுட்டுக்கொண்டிருந்தது.
அதன் வெம்மையில் பொசுங்காத குறையாய் அவன் மீளமுடியாமல் தவித்து தள்ளாடி வரவேண்டியதாகி போனது.
அங்கிருந்து கிளம்பவே மனமின்றி கிளம்பி வந்தவள் முகம் கண்டவனுக்கும் அழைத்து செல்ல விருப்பமில்லை.
“இங்கயே இருந்திடலாமா ஆழி?…” என்றான் கண்கள் சிரிக்க.
“உங்களுக்கு ஓகே வா?…” என்று பதிலுக்கு கண் சிமிட்டியவள் கேள்வியில்,
“உன்கிட்ட கேட்டு பதில் வாங்கறதுக்கு நானே பதில் சொல்லிப்பேன். இல்லைன்னா கேட்காமலே இருக்கலாம்…” என விளையாட்டு போல என்றாலும் உண்மையாக.
“ரொம்ப டார்ச்சரா இருக்கா?…” என்று கிளம்பும் அன்று ஆழினி அவனிடம் ஆழ்ந்த பார்வையில் கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தான் ஆழினியை.
“பைத்தியமாடி நீ?…” என்று கேட்க,
“உங்களோட எல்லா உணர்வையும் என்னால பார்க்க முடியுமே? நீங்க என்ன நினைக்கறீங்கன்னு என் மனசுக்கு தெரியுது. ரொம்ப படுத்தறேனா கண்ணா?…” என்றாள் தவிப்பும், துடிப்புமாக.
“மனசுக்குள்ள நினைக்க கூட விடமாட்டிக்காளேன்னு தோணுது தானே?…”
“அடி விழும். உளறிட்டு இருக்க. கிளம்பு…” என்று சமாளிக்கமுடியாமல் கிளப்பி கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான் சென்னைக்கு.
திருமணமானதிலிருந்து அலுவலகம் செல்ல ஆழினிக்கு நேரம் போதவே இல்லை.
வாழவந்தானுடன் கார்மேகவண்ணன் மட்டும் அவ்வப்போது சென்று வந்துகொண்டிருந்தான்.
ஊரிலிருந்து வந்து ஒருநாள் மட்டுமே ஓய்வென்று இருந்துவிட்டு ஆழினியையும் கூட்டிக்கொண்டு அடித்துபிடித்து கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தான் கார்மேகவண்ணன்.
“சேர்ந்தே போவோம். வெய்ட் பன்றேன்…” என்று ஆழினி சொல்ல,
“என்ன புதுசா? எப்பவும் போலவே போலாம். நீ போ. நான் பார்க் பண்ணிட்டு வரேன்…” என்று சொல்லியும் ஆழினி நகரவில்லை.
“வரவர பிடிவாதம் ரொம்ப கூடிப்போச்சு உனக்கு…” என்று முறைத்துக்கொண்டே காரை விட்டு இறங்கியவன் ஆழினியுடன் சேர்ந்து வர அத்தனைபேரும் சூழ்ந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கார்மேகவண்ணன் என்றைக்கும் போல அங்கே காண்பிக்கும் அதே மென்புன்னகை தான்.
ஆனால் அதற்கு நேர்மாறாக ஆழினியின் முகத்தில் அப்பட்டமாய் சந்தோஷம் தென்பட, தலையசைப்புடன் அங்கிருந்து விலகி சென்றான் ஆழினியை அழைத்துக்கொண்டு.
“மொத்த வெளிச்சமும் உன் முகத்துல தான். எவ்வளோ சந்தோஷம் உனக்கு?…” என்று சிரித்தான் மனைவியின் மகிழ்வை கண்டு.
“ஏன் இருக்காதா பின்ன?…” என்றவளுக்கு எந்த வேலையை முதலில் ஆரம்பிக்க என்று தடுமாறி பின் தலையில் தட்டி கன்னத்தில் கைவைக்க பார்த்துக்கொண்டிருந்தவன் அடக்கமாடாமல் ஆர்ப்பாட்டமாய் சிரித்துவிட்டான்.
“கண்ணா…” என்று நாணத்துடன் கண்களை சுருக்கி புன்னகை செய்தவள்,
“இதென்ன இப்ப என் ரூம்ல? உங்க கேபின் போங்க…” என்று அவனை விரட்ட பார்க்க,
“ஓஹ், ஆமா. மேடம் கூப்பிட்டா தானே நான் இங்க பர்மிஷன் கேட்டுட்டு வரமுடியும்?…” என்று கார்மேகவண்ணன்,
“என்ன பேச்சு இது? பர்மிஷன் அது இதுன்னு?…” என்று அவனின் சொல் பொறுக்காது முகம் கன்றினாள்.
“இந்த ஆழினி இந்த சீட்க்கு செட்டாகவே இல்லை. முதல்ல புது பொண்ணு, கல்யாணப்பொண்ணு, கண்ணனின் ராதை இந்தமாதிரி போஸ்ட்டிங்ல இருந்தெல்லாம் ஆபீஸ் டைம்ல விலகிக்கோ. புரியுதா?…” என்றான் கண்டிப்புடன்.
“நான் எப்பவும் போல தான் இருக்கேன். கொஞ்சம் லாங் லீவ் மாதிரி ஆகிடுச்சு இல்லையா?…” என்று ஆழினி சமாளிக்க,
“ஓனர் மாதிரியா பேசற நீ? சின்ன குழந்தை காரணம் சொல்ற மாதிரி. நல்லாருக்கு வாழா ட்ரெய்னிங்….” என்றவன்,
“யோவ் மாமா…” என்று சத்தம் போட,
“இது ஆபீஸ், என்ன பன்றீங்க?…” என்றாள் ஆழினி அவனின் அழும்பி.
“பின்ன இதென்ன மிட்டாய் கடையா? ஒழுங்கா வேலையை பாருன்னு சொன்னா டயலாக் பேசற…” என்று சொல்லியவன்,
“ஓகே, நான் என் கேபினுக்கு போறேன். நீங்க உங்க வொர்க்கை பாருங்க மேம்…” என்று சிரிப்புடன் சொல்லி எழுந்துகொண்டவன்,
“அன்ட் கங்க்ராட்ஸ்…” என்று தன் வலதுகையை ஆழினியை நோக்கி நீட்டினான்.
“இது எதுக்கு?…”
“எல்லாரும் உங்க கல்யாணத்துக்கு விஷ் பண்ணினாங்க. நான் பண்ண வேண்டாமா? அதுக்கு தான்….” என்றவனின் குறும்பு புன்னகையில் லயிக்கும் மனதை இழுத்து பிடித்தவள்,
“தேங்க்ஸ்…” என்றாள் மிதப்பாய் அவனை பார்த்து.
“பார்ரா?…” என்று ஆச்சர்யபாவம் காட்டியவன்,
“விஷ் பண்ணா பதிலுக்கு கை குடுக்கனும் மேம். அதுதான் பேஸிக் மேனேர்ஸ்…” என்று வம்புக்கென்று நிற்பவனை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தவள் எழுந்து நின்று கை கொடுக்க,
“வாழ்த்துக்கள் உங்க திருமண வாழ்க்கைக்கு…” என்று சொல்லியவனின் ஒற்றை விரல் அவளின் உள்ளங்கையில் கோடிழுக்க,
“கண்ணா…” என்று தன் கையை உருவ பார்த்தாள்.
“ஓகே, ஓகே. வரேன்…” என்று சொல்லி அவளின் கரத்தை விட்டவன் தன்னிரு கைகளையும் மேலே தூக்கி காண்பித்து சொல்லி பின்னே இரண்டடி வைத்து,
“டேக் கேர்…” என்று சொல்லி திரும்பினான்.
“இவங்களை…” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனை பார்த்தபடி ஆழினி அமர,
“இந்த தாலி வேற என் கழுத்துல. எப்படித்தான் பொண்ணுங்க எல்லாம் போட்டிருக்காங்களோ?…” என்று வேண்டுமென்றே கழுத்தின் காலரினுள் கைவிட்டு தேய்த்தபடி அவன் திரும்பி ஆழினியை பார்க்க,
“என்ன? தாலி உங்க கழுத்துலையா?…” என்று பதட்டமாகிவிட்டாள் ஆழினி.