“மகிம்மா அய்யனார் காலிங்….” என்று நக்கலாய் சொல்லிவிட்டு வேகமாய் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
“இவனை…” என்று பல்லை கடித்து அவனை பிடித்து நிறுத்த பார்த்து முடியாமல் பொங்கிக்கொண்டிருந்தவர் முன்னால் பதவிசாக வந்து நின்றார் மகிழா.
“கூப்பிட்டீங்களாங்க?…” என்று வந்தவர்,
“இன்னொரு காபி, டீன்னு எல்லாம் கேட்காதீங்க ஆமா. எனக்கு நீங்க கேட்டு குடுக்க முடியலைன்னு மனவலியா இருக்கும்…” என பாசமாய் பார்க்க அவரின் முகத்தை கூர்மையாய் பார்த்தார் கோவேந்தன்.
“இங்க உன் மவன் என்னன்னா நான் இன்னைக்கு லீவ்ன்னு தெரிஞ்சும் என் முன்னாடி டான்ஸ் ஆடிட்டு இருக்கான். வெறுப்பேத்தி பார்க்கான். நீ என்னன்னா மனவலின்னு வாய் வலிக்காம பொய் சொல்ற?…”
“ஆண்டவா? என்ன இப்படி சொல்லிட்டீங்க? நான் என்னைக்கு பொய் சொல்லிருக்கேன்?…”
“ஏய் நிப்பாட்டு. முதல்ல அவன்கிட்ட சொல்லி இந்த மனைவின்றதை ரூம்க்குள்ள இல்ல நான் இல்லாதப்ப வச்சுக்க சொல்லு. வேணும்னே பன்றான்…”
“அவன் என்னமோ ஆசையா கூப்பிடறான்…” மகிழா மகனுக்கு ஆதரவு தர,
“அப்படி சொல்லுங்கம்மா…” என்று ஆழினியுடன் வெளியே வந்த கார்மேகவண்ணன்,
“அன்ட் அய்யனாருக்கு பூஜை போடனும். பேசிருங்கம்மோவ்…” என்றுவிட்டு முன்னே செல்ல,
“பார்த்தியாம்மா ஆழி?…” என்றார் கோவேந்தன்.
“மாமா, இன்னைக்கும் ஆரம்பிச்சாச்சா?…” என்று சிரித்துக்கொண்டே ஆழினி சென்றுவிட்டாள்.
“என்னங்க?…” என மகிழா பிள்ளைகள் செல்லவும் வேகமாய் அழைக்க,
“என்னடி?…” என்றார் வாசல்பக்கம் பார்த்துக்கொண்டே.
“இப்படியா மருமகக்கிட்ட சொல்லுவீங்க. உங்களுக்கு எதாச்சும் இருக்கா?…” என்று ஒருவேகத்தில் கேட்டுவிட்டு,
“ஏதாவதுன்னா யோசனை, சிந்தனை அப்படி, அந்த டிஸைன்ல. வேற தப்பா எதுவும் கேட்கலை….”
“தப்பான்னா?…” கோவேந்தன் மிரட்டலாய் கேட்க,
“இந்த அறிவு, புத்தி, மூளை இதெல்லாம் இருக்கா. இந்த மாதிரி கேட்க வரலை…” என்றார் பாவமாய்.
“நடிக்காதடி…” என்றவர்,
“எப்ப பாரு என் கையை புடிச்சி இழுக்கான் அவன். முதல்ல கல்யாணமானவனாட்டம் அவனை நடக்க சொல்லுடி…” என்று கத்தவே செய்துவிட்டார் கோவேந்தன்.
“சொல்றேங்க…” என்று மகிழா கண்ணை உருட்ட,
“என்னத்த சொல்லுவியோ? இதை கூட நான் சொல்லித்தான் பேசனுமா நீ?…” என்று அதற்கொரு சத்தம்.
“நீங்க சொல்லாம என்னைக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்?…”
“ஏய், ஏய். கத்திட்டா கப்புன்னு இந்த நெஞ்சை நக்கற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத. நீ யாரு, உன் மவன் யாருன்னு எல்லாம் எனக்கு தெரியும். நான் என்ன நினைப்பேன்னும் உனக்கு தெரியும். ஆனாலும் ஒண்ணுமே தெரியாதமாதிரி என்னன்னு பார்க்க முடியுது உன்னால?…”
“என்னமோ திருகுதாளம் பண்ணிருக்க. என்னன்னு அதையும் சொல்லி தொலை. கேட்டுட்டு போய் படுக்கறேன்…” என்றவர் தலையை பிடித்தார்.
“அதான் சொன்னானே அய்யனாருக்கு பூசை…”
“ஆமாண்டி, ஓடி ஓடி உழைச்சு கொட்டறேன்ல. நீயும் எனக்கு பேர் வைப்ப…”
“ஆமா, நான் மட்டும் வீட்டுல ஊஞ்சலா ஆடிட்டிருக்கேன். சும்மா…” என்று முனங்க,
“ஹ்ம்ம், இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. என்கிட்ட மட்டும் பதில் பேசு….” என்றார் கோவேந்தன்.
“உங்ககிட்டயும் பேச கூடாதா நானு? மகனுக்கு கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டு அக்கடான்னா இருக்க முடியுதா? ஒத்தக்காட்டு புள்ளையா நானும் இங்க ஒத்தையில தான நிக்க முடியும்? அவன் அவன் பொண்டாட்டியோட போவான். வருவான். எனக்குன்னு இங்க என்ன இருக்கு?…” என்று நொடித்துக்கொண்டு சோகம் போல கேட்டுவிட கோவேந்தனுக்கே நிஜமோ என்று தோன்றிவிட்டது.
“சரி சரி. விடு. இப்ப என்ன? இப்படி உட்கார்…” என்று அமர சொல்லி,
“புதுசா கல்யாணமானவன். அப்படித்தான் இருப்பான். அதையெல்லாம் கண்டுக்கறதா? என்ன ஒன்னு ஓவரா ஆட்டம் போடறான் படவா. வேணுமே என்னை சீண்டி பார்க்கறதுல ஒரு சந்தோஷம்…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல,
“அப்பாடி. இப்ப என்ன விஷயம்ன்னு சொல்லட்டா?…” என்றார் மகிழாவும் கோவேந்தனிடம்.
“அதான் அன்னைக்கு வேண்டினேனே ஞாபகமில்ல?…”
“என்னைக்கு?…”
“அதான் காபி ஆறி, நீங்க கொதிச்சு, மொட்டையடிக்கேன்னு வேண்டி, நீங்களும் இன்னொரு வேண்டுதல் வச்சு, ஒரே நேரத்துல ரெண்டுபேர் வைக்க கூடாதுன்னு சொன்னேனே? அந்த வேண்டுதல். பண்ணிருவோமா?…” என்று சொல்லிவிட்டு அப்பாவி பார்வை பார்த்தார் மகிழா.
கோவேந்தன் அயர்ந்து பார்த்தார் மனைவியை. இதை தான் மகனும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் என்று புரிய,
“எந்திடி…” என்றார் வேகமாய்.
“பட்டுன்னு எந்திக்க சொன்னா? எனக்குன்னு இங்க என்ன இருக்கு?…”
“ஏன் இன்னொரு சோபா இல்லையா? பேசி பேசி எம்புட்டு நேக்கா எனக்கு மொட்டையடிக்க ப்ளான் பன்றீங்க அம்மாவும், புள்ளையும். அதை ஒன்னைத்தான் பண்ணலை. இப்ப அதையும் சாதிக்கிற?…”
“இங்க பாருங்க, அம்புட்டுக்கு ஒன்னும் நான் இரக்கமில்லாதவ இல்ல. நீங்க அன்னிக்கே சம்மதிக்கலைன்னா அதுக்காக அலகு குத்த வைப்போம்ன்னு முதல்ல நினைச்சேன். அப்பறம் உங்களுக்கு வலிக்குமேன்னு மொட்டையோட நிப்பாட்டினேன் தெரியுமா? என்னை போய்…” என்று வராத கண்ணீரை துடைத்த மகிழா,
“ஊருக்குள்ள எம்புட்டு வேண்டுதல் இருக்கு? ஆணி செருப்பு, தலையில தேங்காய் உடைக்கிறது, பூ மிதி வேண்டுதல், உடம்பெல்லாம் அலகு குத்தி ஊரெல்லாம்….” என்று அடுக்கிக்கொண்டே செல்ல கோவேந்தன் விழி பிதுங்கினார்.