“ஹ்ம்ம், ஓகே மாமா. நைட் பேசலாம் அதைபத்தி. அப்பவே டிஸ்கஸ் பண்ணி கொட்டேஷன் ரெடி பண்ணிருவோம்…” என்று சொல்ல சற்றுமுன் நடந்த கலந்துரையாடல் பற்றிய விஷயங்களை அவன் விரிவாய் அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தான்.
பேச்சுக்கள் தீவிரமாய் இருக்க இருவருக்குமே தங்களின் கருத்துக்களில் சில முரண்பாடுகளும் இருக்க குறித்துக்கொண்டனர்.
“ஓகே, இதை எல்லாம் செட்டில் பண்ணிட்டு கன்ஸ்ட்ரக்ஷனை ஆரம்பிச்சிருவோம்…” என்று அவர் கோப்பை மூடி வைக்க,
“சரி வரேன்…” என்று எழுந்துகொண்டான் கார்மேகவண்ணன்.
“லஞ்ச்க்கு ஆழி வந்திருவா கண்ணா….” என்றதும் தலையசைத்துவிட்டு அவன் கதவை திறந்து வெளியே வர நஞ்சப்பனிடமிருந்து அழைப்பு.
“சொல்லுடா பாய்சா, கேர்ள்ப்ரெண்டை பார்க்க ஓடினதாட்டம் தெரிஞ்சது? என்ன எனக்கு கல்யாணம்ன்னு குதிச்சிட்டு வர போறியா?…” என்றான் சிரிப்புடன் எடுத்ததும்.
“பதறாத. எந்த ஹாஸ்பிட்டல்?…” என்று கேட்டு வாழவந்தானிடம் சொல்லிவிட்டு தானும் கிளம்பிவிட்டான்.
சர்க்கரை நோயாளியான நஞ்சப்பனின் தாய்க்கு சிறுநீரகம் செயலிழந்திருக்க மாற்று சிறுநீரகம் பொருத்தியாகவேண்டிய கட்டாயம்.
நஞ்சப்பன் இடிந்துபோய் அமர்ந்திருந்தான். அதனை பார்த்த கார்மேகவண்ணனுக்கு தாளமுடியவில்லை.
“டேய் நஞ்சா…” என்று வந்தவனை பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டான் நஞ்சப்பன்.
“மச்சான்…” என்றவனின் கண்ணீரில் பதட்டமானவன் பார்வை அங்கே இடிந்துபோய் அமர்ந்திருந்த முனியாண்டியை கவனித்தது.
முரட்டு மனிதர் எல்லாம் இழந்ததை போல் அமர்ந்திருந்தார். அருகில் சில உறவுகளும், நஞ்சப்பனின் உடன்பிறந்த அக்காவும்.
நஞ்சப்பனின் தங்கைக்கும் கூட இருமாதங்களுக்கு முன் தான் திருமணமாகியிருந்தது.
எப்போதும் சிரித்த முகமும், அப்பாவி பார்வையும், கள்ளம் கபடமற்ற பேச்சுமாய் வளைய வருபவனின் ஓய்ந்த தோற்றத்தில் கார்மேகவண்ணன் கலங்கி போனான்.
“டேய் என்னடா நீ? இதெல்லாம் சும்மா சின்ன சர்ஜரி. அம்மாவுக்கு எதுவுமாகாது…” என்று நஞ்சப்பனை தேற்றி மாற்று சிறுநீரகம் பொருத்துவதை பற்றி விசாரித்து அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்தது.
வாழவந்தானுக்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்துகொண்டவன் தன் வீட்டிற்கும் சொல்ல உடனே கிளம்பி வந்துவிட்டார்கள் கோவேந்தனும், மகிழாவும்.
“டேய் என்ன இது சின்ன புள்ளையாட்டம்? கண்ணை துடைடா கழுதை. தைரியமா இருக்க வேண்டாமா?…” என்று நஞ்சப்பனின் தோளில் தட்டிக்கொடுத்த கோவேந்தன் முனியாண்டியின் அருகில் அமர்ந்துகொண்டார்.
பெரிய மருத்துவமனை. செலவுகள் பற்றிய விஷயம் தெரிந்ததும் உடன் வந்த சொந்தங்கள் மெல்ல மெல்ல நழுவினார்கள்.
“ஏய் வாடி, இங்க இருந்து நீ நட்டமா தூக்கி நிப்பாட்ட போறியாக்கும்? போய் புள்ளைக்குட்டியை பார்க்க வேண்டாமா?…” என்று கையோடு அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
“மனுஷனா இவன்?…” என்று கடுகடுத்த கோவேந்தன் எங்கே அவனின் சட்டையை பற்றிவிடுவாரோ என்று பயந்துபோனான் நஞ்சப்பன்.
“விடுங்கப்பா. என்னை பெத்தவளை நான் தான பார்க்கனும்…” என்ற்றவனுக்குமே திக்கு தெரியாத காட்டில் விட்டதை போன்ற பரிதவிப்பு.
சேமிப்புகள் எல்லாம் இரு சகோதரிகளுக்குமே கரைந்திருக்க கூடுதலாய் இருமாதங்களுக்கு முன்பு நடந்த தங்கை திருமணத்தின் கடன் சுமை வேறு.
இளைய தங்கைக்கு அழைத்து சொல்லியிருக்க அவளின் மாமியார் பொதுவாய் விசாரித்ததோடு,
“சங்கடம் தான். அதுக்குன்னு இவ்வளோ பெரிய ஹாஸ்பிட்டல்ல சேர்க்கறதுக்கு முன்னாடி யோசிக்க வேண்டாமா? பணத்துக்கு என்ன செய்வீங்க? அவ்வளோ செலவாகுமே? ஹ்ம்ம், அவசரம்னா உதவி செய்யக்கூடிய குடுப்பினையிலையா இருக்கோம் நாங்களும்?…” என்று ‘கேட்காதே’ என்பதை போல நாசூக்காய் சொல்லிவிட்டார்.
“ஆப்பரேஷன் பன்றப்போ பார்க்க வரோம்…” என்று தாயின் பேச்சை தட்டாமல் தங்கையின் கணவனும் சொல்லியிருக்க மலங்க மலங்க விழித்தான் நஞ்சப்பன்.
“என்னடா கண்ணா பண்ண போறேன்?…” என்று அவன் யோசிக்க,
“ஏன் நாங்க எல்லாம் இல்லையா?….” என்று அவனை அதட்டி மருத்துவரை பார்த்து பேசிவிட்டு மகனை தனியே அழைத்தார் கோவேந்தன்.
“என்ன கண்ணா செய்யலாம்?…” என்று அவனின் தோளில் கைபோட்டு அழைத்துக்கொண்டு நடந்தபடியே தள்ளி சென்றார்.
“நானும் அதான் யோசிக்கறேன் ப்பா….” என்றவனுக்கும் ஒரு சிந்தனை.
“இருந்த சேவிங்ஸ் எல்லாம் சேர்த்து உன் பேர்லையும், ஆழி பேர்லயும் இப்பத்தான் ஒரு இடம் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணோம். அதை வேணா?….”
“இல்ல இல்ல, அதெல்லாம் வேண்டாம்…”
“வேண்டாம்ன்னா?…”
“ஆபீஸ்ல ஏற்பாடு பண்ண சொல்லனும். மாமாட்ட பேசனும்…”
“அது சரிவராது கண்ணா. சொந்தம், நட்பு எல்லாம் வேற. இது நம்ம பொறுப்பு. வாழாட்ட கேட்டா கண்டிப்பா செய்வான் தான். அதுல மாற்றமில்லை. அதுக்காக நாம போய் நிக்கிறது நல்லாயில்லடா…” என்றவர்,
“சரி டாக்டர்கிட்ட பேசுவோம். எவ்வளோ ஆகுதுன்னு விசாரிச்சிட்டு மொத்தமா பார்ப்போம்…” என்று சொல்ல,
“இல்லப்பா. நான் பார்த்துக்கறேன். எதையும் பிளட்ச் பண்ண வேண்டாம்….” என்றான் உடனடியாக.
“உன்கிட்ட அவ்வளோ பேலன்ஸ் இருக்குமா கண்ணா? ஆனா ஆழிட்ட கேட்டுக்கோ…” என்றும் சொல்ல,
“நான் எல்லாம் மேனேஜ் பண்ணிப்பேன். நீங்க இங்க இருங்களேன். நான் வந்திடறேன்…” என்றான்.
“நான் எங்க போக போறேன். இந்த பய கண்ணை கசக்கிக்கிட்டு நிக்கிறானே? விட்டு போக மனசு வருமா?…” என்றவர் திரும்பி பார்க்க மகிழா வரும்பொழுதே உணவையும் எடுத்து வந்திருந்தார்.
நஞ்சப்பனுக்கும், முனியாண்டிக்கும் வைத்து தந்து அவர்களை சாப்பிட வைத்துக்கொண்டிருந்தார்.
“உங்கம்மாவே பார்த்துப்பா. நீ கவலைப்படாம போய்ட்டு வா. ட்ரைவ் பண்ணும் போது நிதானமா போ. இதையே நினைச்சிட்டு ஓட்டாத. பைக்ல தான வந்திருப்ப?…” என்று கேட்க,
“ஹ்ம்ம், மெதுவாவே போறேன்…” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான் கார்மேகவண்ணன்.
வரும்பொழுதே வாழவந்தானுக்கு அழைக்க அழைப்பு செல்லவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தவன் பார்க்கிங்கில் வந்து தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டான்.
இன்னும் ஆழினி வந்திருக்கவில்லை. வாழவந்தான் தன்னை சந்திக்க வந்திருப்பவருடன் தொழில் நிமித்தம் உரையாடிக்கொண்டிருந்தார்.
“ஹ்ம்ம், உட்கார். இப்போ ஓகே வா?…” என்று கேட்க அங்கே நடந்தவற்றை எல்லாம் விவரித்தான் கார்மேகவண்ணன்.
“ஓகே, அமௌன்ட் ஏற்பட்டு பண்ணனும் அவ்வளோ தானே? பண்ணுவோம்…” என வாழவந்தான் சொல்ல,
“இல்ல இல்ல. இதை நானே மேனேஜ் பண்ணிக்கறேன் மாமா. என்னோட அந்த பணம் இருக்கே? அதை வச்சு மேனேஜ் பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்…” என்று சொல்லவும் திக்கென்றானது வாழவந்தானுக்கு.
“அந்த கோல்ட்…” என்று கேட்டவருக்கு முகமே மாறிவிட்டிருந்தது.
“அதே தான். பணமா மாத்த சொல்லிருந்தேன்ல. என்கிட்ட இருந்தா எப்பயாவது அப்பா கவனிச்சா என்ன ஏதுன்னு பேச்சு வரும். பிரச்சனையாகும்ன்னு தான் உங்ககிட்டயே இருக்கட்டும்ன்னு சொல்லிருந்தது…” என்றான் இறுக்கமான பாவனையுடன்.
சட்டென்று பதில் சொல்லமுடியாமல் தடுமாற்றத்துடன் வாழவந்தான் அவனை பார்த்தார்.
சஞ்சனாவிற்கென வாங்கி தந்த நகைகளை எல்லாம் பணமாய் மாற்றி வாழவந்தானையே வைத்திருக்க கூறியிருந்தான் கார்மேகவண்ணன். அதற்கு ஆழினி சம்மதிக்கவில்லை.
“கேட்டா மாத்தியாச்சுன்னு சொல்லிடுங்கப்பா. கேட்கும்போது இதுக்கு எவ்வளோ வருமோ அந்த அமௌண்டை நாம குடுத்திடலாம்….” என்று சொல்லி,
“அவ சரி கிடையாது. அதுக்காக விக்கிறதா? எவ்வளோ ஆசையா வாங்கிருப்பார் கண்ணன். என்னைக்கா இருந்தாலும் தங்கம், எதுவுமாகாது. நீங்க மாத்தியாச்சுன்னு சொல்லிடுங்க. பணத்தை குடுத்திடுவோம். இது நம்மக்கிட்டையே இருக்கட்டும்…” என்றிருந்தாள்.
‘எப்படியானாலும் விற்கபோவது தானே? வாங்கியது நாமாக இருப்போமே?’ என்று அன்று மகள் சொல்லிவிட மறுக்கவில்லை அவர்.
அப்போது சாதாரணமாக நினைத்துக்கொண்டவருக்கு மகளின் திருமண விஷயத்தின் போது தான் நகைகளை அவள் ஏன் தனக்கு வைத்துக்கொண்டாள் என்றும் புரிந்தது.
“என்னைக்காவது நல்ல மூட்ல இருக்கும்போது நானே சொல்லிக்கறேன் ப்பா. இது கண்ணனோட பரிசு. அவரோட உண்மையான அன்புக்கு கிடைக்கவேண்டியது. என்கிட்ட இருக்கறது சரிதானே? தப்பென்ன இருக்கு?…” என்று சொல்லி அவரின் வாயடைக்க செய்திருந்தாள்.
“என்ன மாமா? அமைதியாகிட்ட?…” கண்ணனின் பார்வை அவரை துளைக்க,