‘ஆழி’ என்ற வார்த்தையும், வாழவந்தானின் தடுமாற்றமும் அவனுக்கு எல்லாவற்றையும் விளக்கிவிட்டது.
தான் துடைத்தெறிய நினைத்த ஒன்றை மனைவி பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே அவனை பந்தாட துவங்கியது.
விழிகள் இரண்டும் சிவந்துவிட நின்றவனை பார்த்தவரினுள் அச்சம் மேலோங்க எழுந்து வந்தார்.
“கண்ணா…” என்று அவனின் தோளை தொட்டதும்,
“நான் ஹாஸ்பிட்டல் கிளம்பறேன்….” என்று சொல்லிவிட்டு வேறு எதையும் பேசவில்லை அவன்.
“இரு நானும் வரேன்…”
“எல்லாரும் அங்க போய் உக்கார்ந்தா இதை யார் பார்க்க? அப்ப நீ கிளம்பு. நான் இருக்கேன்…” என்று வீம்பு பிடித்து அவன் நிற்க,
“கண்ணா…” என்று பாவமாய் பார்த்தவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
“சரி பார்த்து போ…” என்று சொல்லவும் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான் கார்மேகவண்ணன்.
மருத்துவமனைக்கு செல்லாமல் நேராக வாழவந்தானின் வீட்டிற்கு சென்றுவிட அன்றைக்கு தோழியின் வீட்டில் விசேஷம் என்று சித்தாரா சென்றிருந்தார்.
கமலா மட்டுமிருக்க அவளை கவனிக்க கூட இல்லாமல் வேகமாய் மாடிக்கு சென்றுவிட்டான் கார்மேகவண்ணன்.
அவன் வந்த ஐந்துநிமிடத்தில் சித்தாரா வந்தாகிற்றா என்று கேட்க வீட்டின் எண்ணிற்கு வாழவந்தான் அழைக்க கமலா தான் எடுத்தது.
“அம்மா இன்னும் வரலையே. இப்பத்தான் கண்ணா தம்பி தான் வேகமா வந்துச்சு. ஆழி ரூம்க்கு போயிருக்கு…” என்றதுமே பயந்துபோனார் வாழவந்தான்.
உடனடியாக மகளுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி தானும் புறப்பட்டுவிட்டார் வீட்டிற்கு.
முதலில் வாழவந்தான் வந்து சேர்ந்திருக்க வந்ததும் மகளின் அறைக்கு செல்ல அறை முழுவதும் நகைகள் இறைந்து கிடந்தது. கூடவே பரிசு பொருட்களும்.
“கண்ணா….” என்று பயத்துடன் மருமகனின் தோளில் கை வைத்தவர் இறைஞ்சுதலாய் பார்த்தார்.
“பழைய விஷயத்தோட சுவடு வேண்டாம்ன்னு தானே மொத்தமா அதை மாத்த சொல்லி, என்கிட்ட கூட வச்சுக்காம உன்கிட்ட பார்த்துக்க சொன்னேன்? ஏன் மாமா?…” என்றவனின் கேள்வி அவரை தாக்க,
“அப்படி இல்லடா கண்ணா….”
“உன்னால என்கிட்ட மறைக்க முடியுதா மாமா? எப்படி சொல்லாம விட்ட? அதுவும் இப்போ வரை. அப்போ நான் கேட்கலைன்னா என்கிட்ட சொல்லியிருக்கவே மாட்ட இல்ல?…”
“கண்ணா ப்ளீஸ், நான் சொல்றேன். பொறுமையா கேளு. ஆழி அந்த நகைகளை எல்லாம் வெறும் பவுனா பார்க்கலை. உன்னோட ஆசையா, உன் அன்பா பார்த்தா. அவளுக்கு அதை விக்க மனசில்லை…”
“உன் பொண்ணு சரியான பைத்தியக்காரி மாமா. ஏன்ய்யா உனக்கும் புரியலை…” என்றவன் மீண்டும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
“இது,,, இது ஒரு விஷயமா கண்ணா?….” என்று கேட்க,
“ஆமா, இது விஷயமில்லாம? வேற என்ன? இந்த நகைங்க எல்லாம் என்ன தெரியுமா? என்னோட ஏமாற்றம். என்னோட வலி. நிஜத்தை பார்க்காம விட்ட மடத்தனத்தோட ஞாபகம். உண்மையை உணர முடியாத பொய்யோட அடையாளம். புரியுதா?…” என்றவனின் சத்தத்தில் மிரண்டு நின்றார்.
“கண்ணா…”
“உன் பொண்ணை என்னன்னு நினைச்ச? சும்மா கண்டதும் காதல், எதோ பிடிச்சதால என் மேல விருப்பம்ன்னு நினைச்சியா? இல்லவே இல்லை. அவளுக்குள்ளவே தணியாத தீயா வளர்த்து வச்சிருக்கா. இப்ப வரைக்கும் அந்த நெருப்பு அவளுக்குள்ள அணையாம எரியுது. தெரியுமா?…” என்றவன்,
“அந்த பைத்தியக்காரத்தனத்தோட உச்சம் தான் இது. என்னோட ஏமாற்றத்தை கூட வலிக்க வலிக்க அவ சுமக்கறா. ஒத்துக்கலைன்னாலும் நானும் முதல்ல பிடிச்சு விரும்பி தானே இதெல்லாம் வாங்கி கிப்ட்டா குடுத்தேன் அவளுக்கு. அப்போ இதை ஆழி பார்க்கும் போதெல்லாம், இதோட சேர்ந்து வாழ்ந்த போதெல்லாம் எப்படியான நரகத்தை அனுபவிச்சிருப்பா?…”
“சரி முன்னாடி தான் சொல்லலை. அட்லீஸ்ட் எங்க கல்யாணம் முடிஞ்சதும் சொல்லியிருக்கலாமே? பதில் பேசு மாமா?….” என்றவனுக்கு என்ன பதிலை தந்துவிட முடியும் என்று பார்த்தார்.
“இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயமா தெரியும். ஆனா அனுபவிக்கிறவங்களுக்கு தான் அதோட டெப்த் & பெய்ன் புரியும். அவளோட வலி என்னோட காயத்தை இன்னும் பெருசாக்கும். அது….” என்று சொல்லிக்கொண்டே வந்தவன் அங்கே விக்கித்து நின்ற ஆழினியை பார்த்தான்.
கண்ணனின் பார்வை சென்ற திசையில் தானும் திரும்பி பார்க்க அங்கே மகளின் வரவையும் அவளின் அதிர்ந்த முகத்தையும் கண்டுவிட்டு இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தார்.
“ஆழிம்மா…” என்றவர் மகளிடம் செல்ல,
“மாமா நீ கிளம்பு…” என்றான் கார்மேகவண்ணன் அவரிடம் கட்டளையாக.
“கண்ணா…”
“கிளம்புன்னு சொன்னேன். இதை நாங்க பேசி சரி பண்ணிப்போம்….” என்று இறுக்கத்துடன் சொல்ல அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை.
இங்கே சூழ்நிலை இப்படி? மருத்துவமனையில் எப்படியோ என்று யோசித்து கோவேந்தனுக்கு அழைக்க,
“என்னடா வாழா குரலே ஒருமாதிரி இருக்கு?…” என்று கண்டுவிட்டார் கோவேந்தன்.
“வேந்தா…” என்றவருக்கு இந்த சூழ்நிலையில் அவர்களிடம் சொல்லவும் மனதில்லை.
“சொல்லுடா, உடம்புக்கு ஒன்னுமில்லையே?….” என்று கேட்க,
“அதெல்லாம் இல்லை. இப்பதான் கண்ணா வந்து சொன்னான். உன் அக்கவுண்டுக்கு பணம் போடறேன்….”
“வாழா…”
“அட இருடா. கண்ணாக்கிட்ட நான் பேசிட்டேன். அவனும் வருவான். இப்ப எமர்ஜென்ஸிக்கு பணத்தை கட்டு…” என்று சொல்லிவிட்டு கணிசமான தொகையை அனுப்பி வைத்தார்.
அவர் சென்றதும் ஆழினி இன்னும் அறையின் வாசலில் நின்றிருக்க அவளை அழுத்தமாய் பார்த்தவன்,
“உள்ள வந்து டோர் லாக் பண்ணுன்னு சொன்னா தான் செய்வியா நீ?…” என்ற அதட்டலில் தன்னை போல அவள் உள்ளே வந்து கதவை அடைக்க,
“என்ன இது?…” என்றான் ஆழினியிடம்.
பதிலின்றி பார்வை அவனின் முகத்தில் தான் நிலைத்திருந்தது. அவ்வளவு கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றிருக்கிறான் என்று புரிந்து மௌனமாய் நிற்க,
“உன்கிட்ட தான் கேட்டேன் ஆழி. பதில் பேசு. ஏன் இப்படி பண்ணின? இன்னும் என்னலாம் என்னை பாடா படுத்தலாம்ன்னு இருக்க?…” என இன்னும் நெருங்கி வந்து கேட்க அதே அமைதி.
பேசவும், சொல்லவும் ஆயிரம் காரணங்கள் இருக்க அவளால் வாய் திறக்கமுடியவில்லை.
தன் கணவன் தன்னிடம் இத்தனை கோபம் கொண்டு அன்று தான் காண்கிறாள் ஆழினி.
அதிலேயே அவள் ஸ்தம்பித்து நிற்க அவளின் நிலையும் புரியவில்லை கார்மேகவண்ணனுக்கு.
“ஆழி ஸ்பீக் அவுட்…” என்றான் இரையும் குரலில்.
சட்டென்ற நடுக்கத்துடன் பார்த்தவள் பதிலின்றி நிற்க நிற்க அவனுக்கு பொறுக்கவில்லை.
அந்தநேரம் பார்த்து மருத்துவமனையில் இருந்து கோவேந்தன் அழைத்துவிட அவனால் அங்கே தேங்க முடியவில்லை.
“வந்து பேசிக்கறேன் உன்னை…” என்று சொல்லியவன் வேகமாய் அவளை தாண்டிக்கொண்டு வெளியேற, ஆழினி மடிந்து அப்படியே அமர்ந்துவிட்டாள் சிதறிக்கிடந்த நகைகளின் மத்தியில்.
அந்த நகைகளை சஞ்சனாவின் வீட்டிலிருந்து வாங்கிக்கொண்டு வந்த அன்று அங்கே வைத்து பார்த்தது.
அதன்பின் அதனை பார்க்கும் தைரியமும், மனோபலமும் சுத்தமாக இல்லை. அந்த நிகழ்வை நினைத்து நினைத்து மருகாத நாளும் இல்லை.
அந்த பொருட்களும் நகைகளும் கார்மேகவண்ணனுக்கு ஏமாற்றத்தின் சுவடு என்றால் ஆழினிக்கு அவன் காண்பித்து தவறவிட்ட காதலின் கனிவாய் தெரிந்தது.
அவன் நேசத்தின் அளவாய் தெரிந்தது. எவ்வளவு காதல் இருந்தால் பார்த்து பார்த்து இத்தனை ரசனையாய் வாங்கியிருப்பான் என நினைத்து தவித்த பொழுதுகள் ஏராளம்.
தகுதியில்லாதவளுக்கு தந்திருந்தாலும் அதனை தந்திருந்தவனின் நேசம் உண்மை தானே என்ற கசந்த உண்மையை விழுங்கிக்கொண்டிருந்தாள்.
இன்று தனக்கே வேண்டாம் என்ற தன் பொருள் ஒன்றை நீ எப்படி பத்திரப்படுத்தலாம் என கேட்டவனின் முழுமையான கோபத்தை என்ன பதில் சொல்லி எப்படி சமாளிப்பது என்று பரிதவிப்புடன் அமர்ந்திருந்தவள் மனதில் மீண்டும் அந்த யோசனை.
திருமணத்தின் முன் என்றைக்கு தன் காதலை முழுமையாக கார்மேகவண்ணன் அறிந்தானோ அன்று கைபேசியில் தன்னை தானே பேசி தேற்றியது.
அதன்பின் இன்றுவரை அதனை அவள் நாடியதே இல்லை. இதோ இந்த சூழ்நிலை அவளை அதற்கு உந்த தனது கைபேசியை எடுத்தாள் ஆழினி.
கேமராவை தொட்டு திறந்து தன் முகம் கண்டவள் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டு பேச ஆரம்பிக்க, கதவை திறந்து புயல் போல உள்ளே வந்தவனின் வருகையை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கணவன் முகத்தில் தெரிந்த ஆவேசத்தில் பயத்துடன் எழுந்து நின்றவள் கைபேசியை எடுக்கும் முன் கண்ணன் எடுத்துவிட்டான்.
முழுதாய் ஒருநிமிடம் ஆகியிருக்கவில்லை. சில நொடிகளே அவள் பேசியது. அதனை கேட்டவன் முகம் ஜிவுஜிவுத்து போக,
“நான் செத்தாடி போய்ட்டேன்?…” என்ற கார்மேகவண்ணனின் கேள்வியில் ஆடிப்போனாள் ஆழினி.
ஆனால் அடிவேர் வரை ஆட்டம் கண்டிருந்தது என்னவோ அவனின் காதல்கொண்ட மனம் தான்.