“இதுவே கம்மி. இருக்கற வெறுப்புல ரொம்ப கண்ட்ரோல் பண்ணிட்டு தான் பேசறேன் சித்தும்மா. மாடில ஒரு பிசாசு உட்கார்ந்திருக்கு. போய் பாரு. கையோட விபூதி வேப்பிலை எல்லாம் அடிச்சு பேயோட்டி வை. மிச்சத்தை நான் வந்து ஓட்டறேன்…” என்று சொல்ல,
“இப்பத்தான் இங்க எனக்கு ஓட்டினா…” என்றார் வாழவந்தான் கண்ணனிடம்.
“வாயை மூடுங்க நீங்க. எப்பா இவளையும், உங்களையும் வச்சுக்கிட்டு? அவ பத்திரப்படுத்தமாட்டாம பொருளையே என்கிட்ட குடுத்து வைக்கிறவ இதை மட்டும் வச்சிருக்கா. அதை என்கிட்ட நீங்களும் சொல்லாம விட்டிருக்ககீங்க…” என்று சித்தாரா கொந்தளிக்க,
“பேய் ஓட்டினா கன்னமெல்லாம் அப்படியே இருக்கு?…” என்றான் கார்மேகவண்ணன்.
“நல்லா வருவடா…” என்றவர்,
“அவ ஏதோ தெரியாம பண்ணிட்டா கண்ணா. அவ ஒன்னு நினைச்சு வச்சிருக்க…” என்று மகளுக்கு பரிந்து வர,
“மூச். எதுவானாலும் போய்ட்டே பேசலாம். வா…” என்றான் அவரை அழைத்து.
“எங்க?…”
“என்கூட ஹாஸ்பிட்டலுக்கு….”
“இல்ல, நீ போ. நான் ஆழியை…” என்று மறுத்த வாழவந்தானை கண்டுகொள்ளாமல்,
“சித்தும்மா இவரை வெளில அனுப்புங்க. நான் கூப்பிட்டு போகனும்…” என்று சொல்ல,
“மேல ஆழி…” வாழவந்தான் இன்னும் யோசித்தார்.
“அவளுக்கென்ன தெம்பா, தைரியமா, திண்ணக்கமா, திமிரா, என் உயிரை இன்னும் வேற எப்படி எடுக்கலாம்ன்னு யோசிப்பா. என்னை யோசிக்க தான் யாருமில்லை…” என்றவன்,
“நான் கேப் புக் பண்ணிக்கறேன்…” என்று வெளியேறினான்.
“டேய் இருடா நீ வேற?…” என்றவர்,
“பைக்ல தான வந்த?…” என்றார்.
“எனக்கு இப்ப பைக் ஓட்ட முடியாது. ஓட்டினா எங்கியாச்சும் போய்…” என்றவனின் வாயை பொத்தியவர் கண்கள் கலங்கிவிட்டது.
“என்னடா?…”
“என்ன செண்டி ஃபீலா? இதுக்கெல்லாம் மசியமாட்டேன். நீ வரியா நான் போகவா?…” என்றவனை சமாளிக்க முடியாமல் அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை கிளம்பினார் வாழவந்தான்.
அதன்பின்னர் தான் அவன் தன்னை அழைத்து வந்ததன் அர்த்தமே அவருக்கு புரிந்தது.
மாமனாரை நார்நாராக கிழிக்காத குறையாக வைத்து செய்துவிட்டான் காருக்குள் வைத்தே.
“தப்பு தான் கண்ணா…” என்ற வார்த்தையை தவிர்த்து அவரால் வேறு எதுவும் சொல்லமுடியவில்லை.
“என்ன தப்புத்தான்? இதை சொல்லிட்டா தப்பிச்சிடலாம்ன்னு நினைப்பா?…”
“வேந்தாக்கிட்ட சொல்லிடாதடா…”
“சொன்னா அதுக்கும் எனக்கு தான் சாத்து விழும்….”
“ஹப்பாடா…”
“அதுக்காக சொல்லாம இருக்கமாட்டேன். அய்யனாரை உனக்கெதிரா எப்படி அரிவாளை தூக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்…”
“அடப்பாவி கண்ணா…”
“அப்பாவியா இருந்தேன் ய்யா. உன் மக என்னை என்ன பாரு படுத்தறா?…”
“நான் சொல்லி வைக்கறேன் கண்ணா…”
“ஒரு லைட்டும் தேவை இல்லை. இத்தனை வருஷம் சொல்லி வளர்த்து இந்தா இப்ப நிக்கிறா பாரு?…” அதற்கும் காய்ந்தான்.
அவனின் கோபத்தில் வாய் மூடிக்கொண்டு காரை ஓட்டினாலும் அதற்குமே கோபப்பட்டான்.
“என்ன சைலன்ட்டா வந்தா எதுவும் பேசமாட்டேன்னு நினைப்பா?…” என்று கையை பிடித்து இழுக்க,
“அடேய் இருடா, ட்ரைவ் பண்ணிட்டிருக்கேன்…” என்று பயந்து போனார்.
“நானே மண்டை காய்ஞ்சு போய் இருக்கேன். இதுல நீர் அமைதியா வந்து இன்னும் கடுப்பேத்தினா?…”
“தப்புத்தேன். தப்புத்தேன்….” என்றவர்,
“இப்ப என்ன முடிவு பண்ணிருக்க கண்ணா?…” என்றார் மெதுவாய்.
“காசிக்கு காவியோட போலாமான்னு தான். எப்படி ப்ளான்? ஓகே வா?…” என்றவனை பாவமாய் பார்த்தார்.
“என்ன முழி இது?…” என்று கேட்டவன்,
“தனியா எல்லாம் போகமாட்டேன். கூட துணைக்கு உன்னையும், நஞ்சாவையும் சேர்த்தே கூட்டிட்டு போயிருவேன்…” என்று பேசியே தன் கோபத்தை தணிக்க முயன்றான் கார்மேகவண்ணன்.
“அவன் என்னடா பண்ணான்?…”
“என்ன பண்ணுவானோன்ற கவலை தான். என்னாலையே உன் மக அட்டகாசத்தை சமாளிக்க முடியலை. நானே கோவப்பட்டு, கத்தி கூப்பாடு போட்டு, பேசி, திட்டி, அட்வைஸ் பண்ணின்னு எவ்வளோ டயர்ட்? அவன் பாவம், பச்சைப்பிள்ளை. அவனை எல்லாம் அப்படியே விடமுடியாது…” என்றான் தீவிரமாக.
“நீ நெசமாத்தான் சொல்றியா கண்ணா?…”
“நம்ப முடியலைன்னா நம்பவேண்டாம். திடீர்ன்னு வந்து கூப்பிடுவேன். அப்ப என்கூட வந்து பார்த்தா தெரிஞ்சிரும்…” என்றான் அலட்சியமாக.
“அடேய்…” என்றவர் விழிபிதுங்கி போனார்.
“லெப்ட் எடு மாமா…” என்று சிறிதுநேர அமைதிக்கு பின் வழியை மாற்றி காண்பித்தான் கார்மேகவண்ணன்.
“நேரா போய் ரைட் தானடா எடுக்கனும்?…” என்றவருக்கு பதைபதைத்தது.
இப்போதே அந்த முடிவுக்கு வந்துவிட்டானோ என்று. அவனின் முகத்திலிருந்து கோபத்தை தவிர எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
“எதுவானாலும் ஹாஸ்பிட்டல் போய்ட்டு முடிவு பண்ணுவோம் கண்ணா…” என்று வாழவந்தான் சொல்ல,
“ப்ச், நீ இறங்கு. நான் ட்ரைவ் பன்றேன்…” என கண்ணை மூடிக்கொண்டு அவன் சொல்ல,
“என்னடா நீ? கொஞ்சம் பொறுமையா இரேன்…”
“இப்ப லெப்ட் எடுக்கலைன்னா…” என்றதும் தலையசைத்து எடுத்தவர் அவ்வப்போது அவனின் முகத்தை பார்க்க என்று இருந்தார்.
“இந்த பக்கமா போ. இந்த சந்து…” என்று காண்பிக்க,
“கண்ணா…”
“சைக்கிள் இருக்கு மாமா, இடிக்காம போ…” என்று வழியை சொல்லியவன் அவரை பார்க்கவே இல்லை.
அவன் சொல்லிய திசையில் காரை செலுத்தியவருக்கு நிஜமாகவே வெறுப்பில் இந்த முடிவுக்கு வந்துவிட்டானோ என்று பயந்து தான் போனார்.
“நானெல்லாம் கல்யாணமாகி பார்க்காத பிரச்சனையா? சிலநேரம் இப்படி தோணும் தான். அதுக்காக…” என்றவரை முடிக்க கூட விடவில்லை.
“உனக்கு பிரச்சனைன்னா எனக்கும் இருக்கனுமா? அதெப்படி பொண்ணை பெத்த அப்பாஸ் எல்லாம் இப்படி இருக்கீங்க?…” என்றான் அவன் நக்கலாக.
“இல்லடா, வாழ்க்கைன்னா சிலநேரம் இப்படித்தான் இருக்கும். நாம தான் நீக்கு போக்கா பார்த்து அனுசரிச்சு…”
“நிப்பாட்டு, இங்க தான்…” என்று சொல்லவும் அவன் சொல்லிய இடத்தில் கடையை நிறுத்திவிட்டு அவர் நிமிர்ந்து பார்க்க, அங்கே காவி உடைகள், பூஜை பொருட்கள், கோவிலுக்கு வாங்கிவண்டிய சாமான்கள் எல்லாம் ஒரே கடையில் கிடைக்கும் விதமாய் கடைக்கு முன்னே தொங்கவிடப்பட்டு எழுதியும் ஒட்டப்பட்டிருந்தது.
“ஆத்தீ…” முகம் வெளுக்க பார்த்தார் வாழவந்தான்.
“இறங்கி வா மாமா…” என்றான் தானும் இறங்கி.
“கண்ணா…” என்றவரின் அழைப்பை காதில் வாங்கவே இல்லை அவன்.
இறங்கி நின்று வாழவந்தான் வர காத்திருக்க காரை ஓரம்கட்டி நிறுத்தியவர் கலவரத்துடன் அவனை பார்த்து வந்து,
“நஞ்சப்பனை கூப்பிடலையே? அவனை விட்டுட்டா போறோம்?…” என்றார் மெதுவாய் அப்பாவியாய்.
முகத்தில் அச்சமும், கவலையும் அப்பிக்கிடந்தாலும் அவன் அழைக்கவும் அவனோடே வந்துவிட்டவர் கேள்வியில் அதுவரை இருந்த இறுக்கம் குறைந்து கண்ணனின் முகத்தில் குறுநகை எட்டி பார்த்தது.
“இல்ல அவனையும் கூட்டிட்டு தானே காசி, கைலாசான்னு சொன்ன?…” என்று பாவம் போல கேட்க,
“யோவ் மாமா…” என்றவனுக்கு அவரின் முகபாவனையில் சிரிப்பு பொங்க அவரை அணைத்துக்கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் கார்மேகவண்ணன்.
“என்னடா சிரிக்கிற?…” என்றார் புரியாமல்.
“பக்கத்து கடையை பாருய்யா. உம்மக ஏன் இப்படி இருக்கான்னு இப்பத்தான் தெரியுது. சிக்கிக்கிட்டு நான் தான் முழிக்கறேன்…” என்று அவன் அங்கே காண்பித்தான்.
பக்கத்தில் பழச்சாறு கடையும், அதனை ஒட்டி உடைகள் இருக்கும் கடையும் இருந்தது.
“நஞ்சா அப்படியே கிளம்பி வந்துட்டான். ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு போகனும்ன்னா ரொம்ப லேட்டாகும் போய் வர. அதான் அவனுக்கும் முனியப்பாவுக்கும் மாத்திக்க ட்ரெஸ் எடுத்துக்கலாம் வந்தேன்….” என்று சொல்ல,
“பயந்துட்டேன் டா கண்ணா…” என்றவருக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.
“அப்பப்பா, பயந்த? நீ பெத்து வச்சதுட்டையும், உன்கிட்டயும் அவ்வளோ பேசி தொண்டை எல்லாம் காய்ஞ்சு போச்சு எனக்கு. ஒரு ஜூஸ் வாங்கி தரனும்ன்னு தோணுச்சா? வா. அதையும் நானே வாங்கி தரேன்…” என்று சிரிப்போடு அழைத்து செல்ல நிறைந்த மனதுடன் உடன் சென்றார் வாழவந்தான்.
உடை எடுக்கும் கடையில் எடுத்து முடிக்கவும் அங்கிருந்த பணியாளரிடம் காதில் கிசுகிசுத்தவன்,
“அவர்கிட்ட நான் சொன்னேன்னு கொண்டுபோய் குடுங்க…” என்று அனுப்ப அங்கே வாழவந்தானிடம்,
“ஸார் இதை அந்த ஸார் குடுக்க சொன்னார்…” என்று காண்பித்த அந்த காவி உடை கண்டு ஒருநொடி பகீர் என்றானது வாழவந்தானுக்கு.
“சைஸ் ஓகேனா பில் பண்ணிடலாம் ஸார்…” என்று பணியாளர் சொல்ல,
“ஏப்பா நான் கேட்டேனா? ஒன்னும் தேவை இல்லை. போப்பா…” என்றார் அவசரமாய் வாழவந்தான்.
“என்ன மாமா, காவின்னு முடிவுக்கு வந்தாச்சு போல?…” என்று கண்ணன் கேலியாய் கேட்க,
“ஏன்டா படுத்தற?..” என்றார் வாழவந்தான்.
“அந்த பயம் இருக்கட்டும். இனிமே அந்த கடல் கொந்தளிச்சது உனக்கு காவி தான். பிக்ஸ் பண்ணிக்கோ. இப்ப வா…” என்று அழைத்துக்கொண்டு வெளியேறினான் கார்மேகவண்ணன்.