“உன் பொண்ணு போன் தான் உடைஞ்சு போச்சு….” என்று திரும்பி பாராமல் அவன் சொல்ல,
“அதான் எப்படி? லேசானா சர்வீஸ் பண்ணலாமே?…”
“பண்ணமுடியாது மாமா. பார்ட் பார்ட்டா கழட்டிட்டேன்….” என்று அவருக்கு பதில் சொல்லிவிட்டு,
“லேட்டஸ்ட் வெர்ஷன் மொபைல்…” என்று பணியாளரிடம் கூறினான்.
அத்தனை இலகுவாய் அவன் சொல்லிவிட்டாலும் வாழவந்தானுக்கு குறுகுறுத்தது ‘ஏன் உடைக்க வேண்டும்?’ என்று.
மகள் கைபேசியில் தன் மனக்காயங்களை இறக்கிவைத்து அழித்துக்கொண்டிருந்ததை அவர் அறியவில்லையே!
“என்னன்னு சொல்லு கண்ணா?…”
“அதான் சொல்றேன்ல. இருந்த கோவத்துல ஆழிக்கு பதில் போனை உடைச்சு நொறுக்கிட்டேன்…” என்றவன்,
“இந்த மாடல் பாரு…” என்றான் கொஞ்சமும் தயக்கமின்றி.
“என்ன அடிக்க நினைச்சியா? ஆழியையா?…” என்றவருக்கு மகளின் செயலில் ஒப்புதல் இல்லை என்றாலும் அடிக்க இருந்தேன் என்று சொல்லியதில் மனது உடன்படவே இல்லை.
‘அவ தப்பு செஞ்சாலும் கண்டிக்கிறதை விட்டுட்டு அடிப்பானா?’ என்று தோன்றிய எண்ணத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க,
“ஓஹ், அம்புட்டு பாசம்? ஹ்ம்ம்…” என்றவன்,
“நானே மொபைல் செலெக்ட் பண்ணிக்கறேன்…” என்றான் கண்ணன்.
“அவ்வளோ கோவம் வருமாடா உனக்கு?…”
“வருமே? ஏன் பார்க்கனுமா?…” அதையும் சிரித்துக்கொண்டே கேட்க அவரால் பேச முடியவில்லை.
“இந்த மொபைல்க்கு பில் பண்ணிடுங்க…” என்று சொல்லியவன் அங்கிருந்து கிளம்பும்வரை அமைதியாக நிற்க கைபேசி வந்துவிட்டது.
“இங்கயே இருக்க போறியா மாமா?…” என்ற மருமகனை பாராமல் அவனுடன் வந்து காரில் அமர்ந்துகொண்டார்.
“ப்ச், இப்ப எதுக்கு உம்முன்னு வர? உனக்கும் புது மொபைல் வேணுமா என்ன?…” என்று இடதுகையை நீட்டி அவரின் பாக்கெட்டை தடவ,
“டேய் இருடா…” என்று பதறினார்.
“பேசாம ட்ரைவ் பண்ணு…” என்று அவனுக்கு சொல்ல,
“அதெல்லாம் முடியாது. அதுக்கா உன்னை கூட்டிட்டு வந்தேன்? பேசு. கேட்போம்…”
“என்னத்த பேச? மனசு கலங்கிருச்சு கண்ணா. நீ ஆழியை அடிக்க நினைச்சேன்னு சொல்ற. இதுவரைக்கும் அவளை அடிச்சு வளர்த்ததில்லையா. என்கிட்டையே சொல்லவும்…” என்றுவிட்டு வார்த்தைகளை நிறுத்த,
“ஓஹ் மாமனார் பொஷிஷனா? நீங்க நடத்துங்க மாமனாரே…” என அதையும் கிண்டலாக அவன் சொல்ல உடைந்து போனார் வாழவந்தான்.
“என்னடா கண்ணா? எனக்கு நீ வேற, ஆழி வேற இல்லடா. இப்படியெல்லாம் கிண்டல் பேசாத….” என்று பாவம் போல அவர் சொல்ல,
“இதான், இதை தான் நிறுத்த சொல்றேன். என்னை எப்படி என் பொண்ணை அடிக்க நினைச்சன்னு கேட்டா கூட சந்தோஷமா இருக்கும். எனக்கும், உன் பொண்ணு மேல வச்சிருக்கற பாசத்துக்கும் நடுவுல நீ. ப்ச், போ மாமா…” என்றான் மீண்டும் இறுக்கமான முகத்துடன்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா கர்வம் குடுக்கற விஷயங்கள் எல்லாம் இப்ப என்னவோ கனமா சுமக்க முடியாம இருக்கு. அப்படியே உன்னை மாதிரியே அவ. நான் என்ன செஞ்சாலும் எனக்குன்னு. அட போயா, என்ன சொல்லி, என்ன பேசி, என்ன செய்ய?…” என்று அலுத்துக்கொண்டவன்,
“அடிக்கனும்ன்னு நினைச்சேன்னு சொன்னதுக்கே இவ்வளோ வருத்தப்படற நீ. அந்தநிமிஷம் அங்க நான் என்ன பாடு பட்டிருப்பேன். அதுக்கும் சேர்த்து தான் போன்ல காமிச்சேன்…” என்றுவிட்டு அவன் மௌனம் மேற்கொண்டான்.
அதிலுள்ள அந்த விஷயம் என்னவென்று வாழவந்தான் கேட்கவில்லை. அதே நேரம் கார்மேகவண்ணனும் சொல்லவில்லை.
இதற்கே இத்தனை கலங்கி போகிறவர், மகள் தனக்கு தானே தன்னை பார்த்துக்கொண்ட விஷயம் தெரிந்தால் என்ன ஆவாரோ என்று எதையும் கூறவில்லை.
அதுவும் அது தன் காதல் சம்பந்தப்பட்டது. தனக்காக அவள் செய்தது. அதை சொல்லவும் அவன் மனது இடம் தரவில்லை.
மருத்துவமனை வரை அவ்வப்போது வாழவந்தான் பேச முகம் திருப்பாமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தான் கண்ணன்.
“வேந்தன்கிட்ட பணத்தை கட்ட சொல்லிருக்கேன் கண்ணா…” என்றும் அவர் சொல்ல,
“செஞ்சிருப்பீங்கன்னு தெரியுமே…”
“என்னடா மரியாதை எல்லாம்?…” என அதற்கும் அவர் தவித்து போக,
“என்ன செய்ய? என் மாமனாரா போய்ட்டீங்களே? அதனால மரியாதை குடுத்து தானே ஆகனும்…” என்று வேண்டுமென்றே அவன் சீண்டினான்.
“இப்படியெல்லாம் பண்ணாத கண்ணா. அப்பறம், அப்பறம்…”
“ஹ்ம்ம், அப்பறம்?…” என்று அவர் பக்கம் திரும்பி விழி உயர்த்தி பார்த்தவன்,
“பழையபடி கூப்பிடறேன். காசிக்கு போவோமா? கைலாசாவா? காவிக்கு ஓகே வா?…” என்று கேட்டு அவரின் பிபியை ஏற்றிவிட,
“அது வந்து…”
“இந்த வந்து போய் வேலைக்கே ஆகாது. டீலா நோ டீலா?…” என்றவனை எப்படி சமாளிக்க என்று பார்த்தவர் பொத்தாம் பொதுவாய் தலையசைக்க,
“அப்ப டீல். திரும்ப கிளம்பும்போது அதே கடையில காவி ட்ரெஸ் மறக்காம வாங்கிப்போம். நாம போறோம்…” என்று சொல்லி மருத்துவமனை வந்து சேர்ந்தான்.
“வா மாமா. போய் நஞ்சாவையும் ரெடி பண்ணனும். அம்மாவோட சர்ஜரி முடிஞ்சதும் கிளம்புறோம்…” என்று இறங்கிக்கொண்டான்.
“விடமாட்டான் போல?…” என்று அவனோடு அவர் வர அங்கே குடும்பத்தினர் இருந்தனர்.
“நஞ்சா இந்தா இதுல உனக்கும் அப்பாவுக்கும் ட்ரெஸ் இருக்கு…” என்று நீட்ட,
“என்னடா என்ன ட்ரெஸ்?…” என நஞ்சப்பன் கேட்க,
“காவி ட்ரெஸ்….” என்று பொறுக்காமல் வாழவந்தான் சொல்லிவிட,
“என்ன?…” என்று நிமிர்ந்தவன் அப்போது தான் வாழவந்தானை கவனித்தான்.
“ஸாரி பாஸ். உங்களை நான் கவனிக்கலை…” என்றவனின் தோளில் ஒரு அடி போட்ட கண்ணன்,
“இதென்ன உன் வீடா? வாங்கன்னு வரவேற்க? ரொம்ப பண்ணாதடா…” என்று சொல்லிவிட்டு கோவேந்தனை பார்த்தான்.
இன்னும் முனியாண்டியின் முகத்தில் தெளிவு இல்லை. கலங்கி போய் தான் அமர்ந்திருந்தார்.
“ப்பா இதுல ட்ரெஸ் இருக்கு. இங்க ரூம்க்கு கேட்டிருக்கேன். எப்ப வேணுமோ போய் மாத்திக்கோங்க…” என்று அந்த பையை அவர் அருகில் வைத்துவிட்டு கோவேந்தனை பார்க்க அவரும் புரிந்த விதமாய் எழுந்து வந்தார்.
“டாக்டர் வந்தாங்களா ப்பா? அம்மா எப்படி இருக்காங்க?…” என கேட்க,
“ஆமா நீ வாழாக்கிட்ட கேட்கவேண்டாம்ன்னு சொல்லிட்டு அப்பறம் நீயே பணம் அனுப்ப சொல்லிருக்க? என்னடா?…” என்றார்.
“நான் சொன்ன இடத்துல பணம் வர கொஞ்சம் லேட் ஆகும் போல. அதான் மாமாட்ட சொல்லி அனுப்ப சொல்லிட்டேன். ஏன்ப்பா, உங்களுக்கு சரின்னு தோணலையா?…”
“அதெல்லாம் இல்லைடா. தொகை அதிகம் இல்லையா? அதான் நம்ம பழக்கத்துக்கு அவனை நாம கஷ்டப்படுத்த கூடாதுல. அவனுக்கு இது பெரிய தொகை இல்லைன்னாலும்…” என்ற பொழுதே வாழவந்தானும் வந்துவிட்டார்.
“என்னவோ பிரச்சனை போலடா. என்னை போய் துணைக்கு காசிக்கு கூப்பிடறார். காலம்போன கடைசில அவர் போகட்டும். வொய் மீ? அதுவும் உன்னை இப்ப இந்த நிலமையில விட்டுட்டு?…” என்றவனை சந்தேகமாய் பார்த்தான் நஞ்சப்பன்.