அந்த மண்டபம் நிரம்பி வழிய நஞ்சப்பனின் முகத்தில் ‘ஹப்பாடா’ என்னும் நிம்மதி ஒளிர்ந்தது.
அன்று தான் அவனின் திருமணம் முடிந்திருக்க மணமக்கள் இருவரையும் தனித்து புகைப்படம் எடுக்க நிறுத்தவும், மனைவியுடன் சேர்ந்து முகமெல்லாம் சிரிப்புடன் எதையோ சாதித்த பாவனையில் நின்றான் நஞ்சப்பன்.
“டேய் மச்சான், ஐம் வெரி ஹேப்பி. ஸ்டார்ட் ம்யூஸிக்…” என்று கார்மேகவண்ணன் பின்னணி குரல் கொடுக்கவும் அத்தனைபேரும் குபீரென சிரித்துவிட்டனர்.
“டேய் நானே பாவம்…” என்று பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு நஞ்சப்பன் சொல்ல,
“ஜோ ஜைலன்ட் பாய்சா. ஒரு சந்தோஷத்துல. நீ நில்லு. போஸ் குடு…” என்று சொல்லி விலகி நின்றான் கார்மேகவண்ணன்.
“நான் சொல்லல, ரொம்ப நல்ல பய இவன்…” என்று மனைவிடம் சொல்லிவிட்டு அவளின் கழுத்தில் கை போட,
‘மாமா நீங்க எங்க இருக்கீங்க.’ சத்தத்தில் மீண்டும் அனைவரும் கார்மேகவண்ணனை பார்க்க,
“நானில்லப்பா. அதான் சொல்லிட்டேனே? பேசவே இல்லை. போன்ல தான் வேற என்னவோ தேடிட்டிருந்தேன். இது வந்துச்சு. அவ்வளவு சத்தமாவா கேட்டுச்சு?…” என்றான் பாவனையாக நஞ்சப்பனிடம்.
“படுத்தறானே?…” என்று முணங்கிய நஞ்சப்பன்,
“டேய் மச்சான், இது உனக்கே நியாயமா?…” என்று அவனை கட்டியணைத்து,
“ஒரு போட்டோ எடுக்க விடுடா. அப்ப இருந்து உன் அக்கப்போர் தாங்க முடியலை. இன்னைக்கு எனக்கு கல்யாணம். அழுது போடுவேன் அழுது…” என்று சொல்ல,
“எல்லாரும் கேட்டுக்கோங்க. இவன் சொல்லி நான் கேட்கமாட்டேன்னு சொல்லவேமாட்டேன். பாருங்க எப்படி கண்ணை கசக்கறான்னு? மனசை தொட்டுட்டடா நஞ்சா…” என்று இவன் வசனம் பேச,
“ஓவரா போகுதே. டேய் என்னடா ப்ளான்?…” என உஷாராகிவிட்டான் நஞ்சப்பன்.
“அப்படி என்னண்ணே சொன்னார்?…” புதுப்பெண் கேட்க,
“இன்னைக்கு நைட் வரை அவன் கூடவே இருந்து நல்லதுபொல்லது எல்லாம் நானே பார்க்கனும்ன்னு சொல்லி ஒரே கதறல்…” என்று கண்ணன் சொல்லவும்,
“நானா? இது எப்ப? அடப்பாவி…” என்று குபீரென்று அடைத்த நெஞ்சை பிடித்தபடி விழிகள் தெறித்துவிடும் போல் அவன் பார்த்தான்.
“இந்த முகத்தை நீங்களே பாருங்க? நான் எங்க போயிட போறேன்னு சொன்னா கட்டி புடிச்சிட்டு விடமாட்டேன்னு சின்னப்பிள்ளை மாதிரி அடம் பன்றான். என்ன செய்ய நான்?…” என்று நித்யானந்தம் பாவனையில் கண்ணை மூடி திறந்தபடி கார்மேகவண்ணன் அருள்பாலிக்க நின்றான்.
“உலகமகா நடிப்புடா சாமி…” என்றவனுக்கு ரத்தக்கண்ணீர் வராத குறை தான்.
“கேட்டுக்கிட்டியா? நல்லா சிரி, பார்ப்போம்….” என்று அங்கே கண்ணனின் குறும்புகளில் நஞ்சப்பனை தவிர அத்தனைபேருக்கும் சிரிப்புதான்.
“அவர் ஆசைப்பட்டுட்டார். அவரோடவே இருங்கண்ணே. எங்க கல்யாணத்தை முன்ன நின்னு நடத்திருக்கீங்க. எனக்கு உடன்பிறப்பு இல்லை தான். உங்களை என் அண்ணனா நினைச்சு சொல்றேன்…” என்று நஞ்சப்பனின் மனைவி பாசத்தை பிழிய,
“அம்புட்டு தான். சோலி முடிஞ்சி….” என்று பால்வடியும் முகமாய் பார்த்து புன்னகைத்த கண்ணனின் சாந்தத்தில்,
“இப்படி ஒரு ப்ரெண்ட் கிடைக்க அவர் நிச்சயம் குடுத்து வச்சிருக்கனும். எனக்கு அண்ணனாவும் இருக்கீங்க…” என்று அவள் பேச பேச, பட் பட் என்று நஞ்சப்பனின் நெஞ்சில் பல வெடிகள் வெடித்து சிதறியது.
“அப்பறம் என்னடா மச்சான். சீக்கிரம் போட்டோ எடுத்து முடிச்சிட்டு வா. நான் என் வொய்போட ஒரு செல்பியை போட்டுட்டு வரேன்…” என்று கார்மேகவண்ணன் சொல்ல,
“எங்கடா வர?…” என்றான் நஞ்சப்பன்.
“எங்கையா? என்ன நான்சென்ஸ்? விருந்து இருக்குல? டைனிங் வா. மச்சானை செமத்தியா நான் தானே கவனிக்கனும்…” என்றவன் வேஷ்டியை மடித்து கட்டியபடி அட்டகாசமான நடையுடன் கூலரை மாட்டிக்கொண்டு அலப்பறையை கூட்டியபடி மேடையை விட்டு இறங்க,
“ஹப்பாடா போய்ட்டான்…” என்று நிம்மதியானான் நஞ்சப்பன்.
“மச்சான் கூப்பிட்டியா?…” என கார்மேகவண்ணன் அங்கிருந்தே திரும்பி பார்த்து கண்ணாடியை லேசாய் இறக்கி கேட்க,
“இல்லையே. நான் உன்னை பார்க்கவே இல்லை….” அவசரமாய் மறுத்த நஞ்சப்பன் முகத்தை திருப்பினாலும், பக்கவாட்டில் அவனை தான் பார்த்துக்கொண்டிருக்க,
“அப்ப தங்கச்சி…”
“அட போப்பா. டார்ச்சர் பண்ணிக்கிட்டு. நீ இங்கிட்டு திரும்பு….” என்று மனைவியை பிடித்து திருப்பியவன்,
“நீ இப்படி வந்து போட்டோ எடுப்பா…” என்று போட்டோக்ராபரை அழைக்க,
“ஸார் இந்த சைட்ல போக்கஸ், லைட்டிங் சரியில்லை. பழையபடி நில்லுங்க…” என்று அவனின் உயிரை எடுத்தார் அவர்.
“ஹேப்பி மேரீட் லைப்டா மச்சான்…” என்று அங்கே நடந்தவற்றை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துவிட்டு திரும்பி நடந்தவன் எதிரில் வந்தவரை இடிக்க அவர் கீழே விழும் முன் தாங்கி பிடித்தான்.
“அவ்வ்வ்வ் அய்யனார்…” என்று சொல்லிவிட்டு,
“அப்பா…” என்றான்.
“எதுக்குடா இந்த அலப்பறை? அவனை கல்யாணத்தன்னைக்கும் நிம்மதியா இருக்க விடாம படுத்தி எடுக்கற?…”
“அது ப்ரெண்ட்ஷிப் அபெக்ஷன். ஏன் என் மாமனாரை இரக்கமே இல்லாம நீங்க பந்தாடலை. அப்படித்தான். ஜஸ்ட் பாஃர் ஃபன்…” என்றான் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு.
“அதை நீ சொல்ற பாரு. கொடுமை…” என்றவர்,
“போ, அங்க ஆழி பசிக்குதுன்னு சொல்லிட்டிருந்தா. நீ வராம போகமாட்டேன்னு உக்கார்ந்திருக்கா. கூட்டத்துல பார்த்து கூட்டிட்டு போ…” என்று அதட்டி அனுப்ப,
“இன்னைக்கு ட்யூட்டி இல்லையா?…” என்றான் அவரிடம் வம்பிற்கென்றே.
“வாலண்டரி ரிட்டையர்மென்ட் வாங்கலாம்ன்னு இருக்கேன்…” என்று அவனை சீண்ட அவர் பேச,
“அப்ப டெய்லி மனைவி தான்…” என்றபடி நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தான் கார்மேகவண்ணன்.
“அடங்குறானா பாரு…” என்று தலையில் அடித்துக்கொண்டவர் முனியாண்டியை தேடி சென்றார்.
மதிய உணவு நேரத்திற்கு விருந்தினர்கள் அனைவரும் உணவருந்த சென்றிருக்க கார்மேகவண்ணன் சிரித்தபடி தன்னுறவுகள் நோக்கி வந்தான்.
“வந்துட்டான். சொல்லிட்டு புறப்படுவோம்…” என்று அவனை காண்பித்து வாழவந்தான் சொல்ல,
“டைம் என்ன? இன்னைக்கு பிஸ்னஸ் மீட் இருக்கே? கிளம்பலையா மாமா?…” என்றான் வந்ததும் வழக்கம் போல அவரை விரட்டுபவனாக.
“ஏன் நான் இங்கயே இருங்கன்னா இருப்பீங்களா?…” என்றதும்,
“இவன்கிட்ட மனுஷன் பேசுவானா?…” என்று எழுந்துகொண்டார் வாழவந்தான்.
“அப்ப…” என்று ஆரம்பித்தவனை பார்த்து போதும் என்றவர்,
“நான் கிளம்பறேன். நீ வரியா இல்லையா சித்து?…” என்று மனைவியிடம் கேட்க,
“ஆழிக்கு துணைக்கு நான் இருக்கேன். அவளோட கிளம்பி வரேன்…” என சித்தாரா சொல்ல,
“இதை அவன் பார்த்துக்கமாட்டானா? நீ என்னோட வா…” என்றார் அவர் கண்ணன் இதை தான் கூறுவான் என்று அவனுக்கு முந்திக்கொண்டு.
“ஏன்? சித்தும்மா அவளுக்கு அம்மா தான? அவங்க அவ மேல இருக்கற அக்கறையில சொல்றாங்க…” என்று அவன் அவருக்கு எதிர்மறையாக பேசி வைக்க,
“இவன்கிட்ட பேசமுடியாது. என்னமோ பண்ணுங்க…” என்றவர் தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு திரும்ப அவருடன் வந்தான் கார்மேகவண்ணன்.
“அந்த பார்ட்டி கூப்பிட்டதுக்காக போய் பேசுங்க. சட்டுன்னு ஓகே பண்ணிடவேண்டாம் மாமா. அவர் அப்பார்ட்மென்ட் கட்ட சொல்ற இடமும் எப்படிப்பட்டதுன்னு நாம யோசிக்கனும்….” என்று அவருடன் வந்து சொல்ல,
கார் நகர்ந்ததும் தான் மீண்டும் உள்ளே வந்தான் கார்மேகவண்ணன். அவன் வருகையில் ஆழினி கையில் ஒரு தம்ளர் இருக்க,
“என்ன சாப்பிடற நேரத்துல தண்ணி?…” என்று வந்து அவளருகே அமர்ந்தான்.
“தண்ணி இல்லைடா கண்ணா. மோர். எவ்வளோ வெயில் பாரு. அவளுக்கு இந்த புடவையோட சுத்தமா முடியலை. அவளை கிளம்ப சொன்னா உன்னோட வரேன்னு சொல்லிட்டா…” என்றார் மகிழா.
“அப்படியா?…” என்று மனைவியை திரும்பி பார்க்க,
“இல்லையே. எனக்கு இங்க இருக்கனும்ன்னு தோணுச்சு. இருக்கறேன்….” என்று அவனை போலவே தோளை குலுக்கி சொல்ல கண்ணனின் முகத்தில் கள்ளப்புன்னகை.
“ஹ்ம்ம், தோணும், தோணும். இப்ப ஏன் மோர் குடிச்ச? சாப்பிட வேண்டாமா?…”
“கண்ணா அங்க ரொம்ப கூட்டம். இன்னும் ஒரு ரவுன்ட் முடியட்டும். அடுத்து போவோம். நான் தான் அதுவரைக்கும் ஏன் பசி தாங்கனும்ன்னு மோர் கொண்டுவந்தேன்…” என்றார் மகிழா.