“பேசாம வா. தெரியாம யாராவது இடிச்சிட்டா? இன்னும் டெலிவரிக்கு ஒருமாசம் தான் இருக்கு. கேர்ஃபுல்லா வரவேண்டாமா?…” என்றவன் அவளின் வளையல் நிறைந்த கையை பிடித்துக்கொண்டான்.
இருவருக்குமிடையேயான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது.
சீண்டல்களும், சண்டைகளும் சிலநேரம் வலுக்கவும் செய்யும், வளைக்கவும் செய்யும்.
ரசித்து, சிரித்து வாழ்க்கையை அனுபவித்து அனுசரித்து வாழ பழகி, பழக்கிக்கொண்டனர்.
ஆழினியின் காதல் அவனை இன்னுமின்னும் சுழலாய் இழுத்துக்கொள்ள தான் செய்தது.
முன்பைபோல குற்றவுணர்வில் அவனை அவள் அமிழ்த்துவதில்லை. ஆகாயமாய் மிதக்க செய்துகொண்டிருந்தாள்.
இன்றளவும் அவளுக்கு அவன் வாங்கிய கைபேசி தேவையிருக்கவில்லை. ஏதோ ஒரு தீர்வில் கையடக்க போனுக்கு மாறினாலும் அவளின் கணக்குகளை தான் வாங்கிய புது கைபேசிக்கு மாற்றி அதை அவளை பயன்படுத்த செய்தாலும் அதுவுமே அவனிடமே இருக்க ஆரம்பித்தது.
“வர வர இந்த சின்ன போனை கூட கேரி பண்ண முடியலையா உனக்கு? எல்லாமே நான் தான் சுமக்கனும்…” என்று பலநேரங்களில் காய்வான்.
“ஆமா, சுமக்கனும் தான். பொண்டாட்டி சுமை என்ன கனமா?…” என்று கண் சிமிட்டுபவளிடம் காதலை தான் காண்பிக்க முடிந்தது அவனுக்கு.
சண்டைகள் வந்த வேகத்தில் தீர்ந்து போகும். அவனின் கலாட்டாவில் கலைபவை சில என்றால், அவளின் காதலில் கரைவது பல.
“இவன் போடற சண்டையில, நல்லா வருது…” என்று கோவேந்தனை முட்டிக்கொள்ளாத குறையாக தான் சுற்ற வைப்பான் மகன்.
“இங்க புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரே சண்டை. என்ன எதுன்னு கேட்கறீங்களா? நல்லா இருக்கீங்க?…” என்று அவரை வம்பிழுப்பவன்,
“மாமா, இங்க வந்த உடனே கிளம்பவும்ம். ஒரு முக்கியமான விஷயம். அய்யனாருக்கு அருள் வந்திருச்சு…” என்று அவர்களை அரக்கபரக்க வரவழைத்துவிட்டு ஆழினியுடன் அவன் கையசைத்துவிட்டு கிளம்பிவிடுவான்.
“நான் எப்ப கூப்பிட்டேன். ஏன்டா நான் கூப்பிடனும்ன்னா நானே கூப்பிட்டிருக்கமாட்டேனா?…” என்று கோவேந்தன் குதித்தால்,
“வர சொல்லிட்டு நீ எங்கடா போற?…” என்பார் வாழவந்தான்.
“பேரன்ட்ஸ் எதுக்கு இருக்கீங்க? புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னா கூப்பிட்டு வச்சு சமரசம் பண்ண வேண்டாமா? பொறுப்பில்லாம இருந்தா நான் தான் எல்லாம் செய்யனும். அதான் மனைவியை சமரசம் செய்ய கூட்டிட்டு போறேன்…” என்பான் வேண்டுமென்றே.
“எம்புட்டு அறிவா சிந்திக்கிறான் என் பிள்ளை…” என்று மகிழா மகிழ்வுடன் கன்னத்தில் கைவைப்பார்.
“இவளை உதைச்சா சரியா போவும்…” என்று அதற்கும் கொந்தளிப்பார் கோவேந்தன்.
இப்படியாக இரு குடும்பங்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டாத குறையாக அவனின் அட்டகாசங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் மெருகேறிக்கொண்டே தான் சென்றது.
“நாளைக்கு என் பிள்ளை வந்து இழுத்தா கையோட வருதான்னு பார்க்கனும்ல. அதான் இழுத்து பார்த்தேன்…” என்று ஆடிய ஆட்டங்களும் ஏராளம்.
“இவனையே சமாளிக்கமுடியலை. இவனை போலவே பிள்ளை பிறந்தா?…” என்று சொல்லும் கோவேந்தன்,
“பிறக்கட்டும். அப்பத்தான் என் அருமை என்னன்னே தெரியும் இவனுக்கு…” என்று சொல்ல,
“உங்களை மாதிரியா வளர்ப்பேன்? என் பிள்ளைக்கு அய்யனாரா எல்லாம் இருக்கமாட்டேன். அம்சமான அப்பாவா இருப்பேன்…” என்று கண்ணடிப்பவன்,
“என் பிள்ளையை நான் பாரின்ல தான் படிக்க வைப்பேன். அப்ப என்னை யார் கேட்பான்னு பார்ப்போம். அவன் கூட்டிட்டு போவான் என்னை…” என்று அவரை கையை பிடித்து இழுக்காமல் அவனின் நாட்கள் சென்றதே இல்லை.
எரிச்சல், கோபம் என்று எத்தனை கூறினாலும் அதற்கெல்லாம் பின் மகன் மீதான பேரன்பே நிரம்பியிருந்தது கோவேந்தனுக்கு.
“போடா போடா. நாளைப்பின்ன என்ன மாதிரி நீயும் உன் பிள்ளையை அனுப்பமுடியாம யோசிக்கத்தான் போற. அப்ப தெரியும் இந்த அப்பாவை…” என்பார் அவரும் நக்கலுடன் சிரித்து.
“எப்ப பாரு மாமாவை டென்ஷன் பன்றதே வேலை. அநியாயம் பன்றீங்க நீங்க…” என்று ஆழினி கூட சொல்லி பார்த்தாகிவிட்டது.
“நானும், அய்யனாரும் நார்மலா இருக்கோம்ன்னா இதோ இப்படி இருந்தா தான். இல்லைன்னா எங்களுக்குள்ளவே என்னவோ இழந்தது மாதிரி. இந்த பாண்டிங் எல்லாருக்கும் அமையுமான்னு தெரியலை. என்னால பேசாம எல்லாம் இருக்க முடியாது…” என்பவன்,
“ஓகே, வேணும்னா நான் பேசாம இருந்து காமிக்கறேன். என்ன நடக்குதுன்னு பார்க்கிறியா?…” என்று அவன் சொல்லியதுபடி இருக்க முழுதாய் ஒருநாள் நகர்ந்திருக்க மறுநாள் விடிந்ததுமே மகனை எதிர்கொண்டு நின்றுவிட்டார்.
“என்னடா உடம்புக்கு எதுவும் சுகமில்லையா? காய்ச்சலா? தொண்டை கட்டிருக்கா? தூக்கத்துல கனவுகினவு கண்டியா? என்னன்னு சொல்லு. என்னாச்சு உனக்கு?…” என்று அவர் உலுக்கு உலுக்கிவிட்டார் மகனை.
“உன்கிட்ட எதாச்சும் சொன்னானா? என்னாச்சு இவனுக்கு? இப்படி இருக்கமாட்டானே? ஏன் ஒன்னுமே பேசலை….” என்று மகிழாவிடமும்,
“என்னம்மா, வேற எதுவும் பிரச்சனையா ஆழி?…” என்று மருமகளிடமும் கூட கேட்டுவிட்டு,
“விக்ஸ் மாத்திரை சாப்பிடுங்கோ. கிச், கிச் போக்குங்கோ. அய்யனாருக்கு மாத்திரை பார்சல்….” என்று மகன் வாயை திறக்கவும் என்னவோ பெரிதாய் பரிசு வாங்கிவிட்டதை போல அவரின் முகத்தில் சந்தோஷத்தை அள்ளித்தர,
“அதானே பார்த்தேன். இவன் திருந்தமாட்டான்…” என்று முகமெல்லாம் பொங்கும் சிரிப்போடு சொல்லி சென்றார்.
முதல் வாரம் தான் ஆழினிக்கு வளைகாப்பு முடிந்திருக்க அவளுடன் அதிகமாய் இருக்க முடியாமல் நஞ்சப்பனின் திருமண வேலைகள் கண்ணனை இழுத்துக்கொண்டது.
முனியாண்டிக்கு துணையாய் இன்னொரு மகன் போல வந்து நின்றுகொண்டான் கார்மேகவண்ணன்.
“உடம்புக்கு முடியாதா அம்மாவை நீங்க பாருங்க. நான் கவனிச்சுக்கறேன்…” என்று நஞ்சப்பனுடன் சேர்ந்து பெரும்பாலான வேலைகளை அவன் தான் எடுத்து செய்தது.
நஞ்சப்பனின் சகோதரிகள் இருவரும் தங்கள் கணவனுடன் விருந்தாட வந்ததை போல இருக்க,
“இவங்கலாம் ஒரு ஆளுங்கன்னு, கண்டுக்காதடா…” என்று அவர்களை மதிக்கவே இல்லை கண்ணன்.
ஷர்மியும் கூட அவள் பிள்ளையுடன் வந்துவிட்டாள் நஞ்சப்பனின் திருமணத்திற்கு.
திருமணம் முடிந்ததும் அவள் மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு மாமியார் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட, இதோ உணவை முடித்துக்கொண்டு முனியாண்டி, நஞ்சப்பனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
“எங்க நாம எடுத்த போட்டோஸ் பார்ப்போம்…” என்று தங்கள் அறைக்கு வந்ததும் கார்மேகவண்ணன் பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்தவள் அன்றைக்கு இருவருமாக எடுத்திருந்த புகைப்படங்களை வரிசையாக பார்த்தாள்.
“போட்டோவுக்கு இந்த சேரி செம்மயா விழுந்திருக்குல?…” என்று கண்ணனிடம் காண்பித்து ஆராவாரத்துடன் சிரித்துக்கொண்டு கேட்க,
“போன வாரம் தான் வளைகாப்புக்கு இதை கட்டின. இப்ப இன்னைக்கு….” என்றான் முறைப்புடன்.
“மூக்குத்திக்கு மேட்சா கட்டிக்க வேண்டாமா?…” என்று அவனிடம் அவள் முணுமுணுக்க,
“என்ன, இதுவரைக்கும் எத்தனை வாங்கி குடுத்திருக்கேன்? வாங்கி தர்ற அன்னைக்கு போடறதோட சரி. திரும்ப இந்த வெடிங் நோஸ் ரிங் தான். இதுல மேட்சிங் ட்ரெஸ் வேற?…” என்றான் கடுப்புடன்.
“ஏன் முகம் அன்-ஈஸியா இருக்கு? என்ன ஆழி?…” என அவள் முகம் கண்டு கேட்டவன்,
“முதல்ல ட்ரெஸ் சேஞ்ச் பண்ணு. நான் உனக்கு குடிக்க ஜூஸ் ஏதாவது கொண்டுவாரேன்…”
“ஹய்யய்யோ ஹப்பா, எனக்கு வேண்டாம். அங்க சாப்பிட்டதே எனக்கு சுத்தமா முடியலை. இங்க வரை இருக்கு. ப்ளீஸ்…” என்றவள் இதழ்களை இரு விரல் கொண்டு இழுத்து பிடித்தவன் அதற்கு மென்மையான இதழொற்றலை தந்துவிட்டு,
“முன்னாடி எல்லாம் உன் ப்ளீஸ் கடுப்பாகும். இப்ப வேறென்னவோ பீல் குடுக்குது. வந்து ஆராய்ச்சி பன்றேன்…” என்றான் கள்ளப்புன்னகை புரிந்து மாயக்கண்ணனாய்.
“அடி, நான் டாக்டர்கிட்ட சொல்லுடுவேன்…” என்றாள் அவனின் தலையில் வலிக்காமல் குட்டியவள்,
“இதுக்கு மேல முடியாது….”என்று உடை மாற்ற செல்ல கார்மேகவண்ணன் கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான்.
வாழவந்தான் மீட்டிங்கை முடித்துவிட்டு நேராக கோவேந்தன் வீட்டிற்கு வந்துவிட அங்கே நடந்தவற்றை எல்லாம் மருமகனிடம் பேசிவிட்டு இரவு வரை அங்கே தான் இருந்தார்.
இரவுக்கு உணவு முனியாண்டியின் வீட்டில் இருந்தே அவர்களுக்கு வந்துவிட்டது.
“எவ்வளோ தூரத்துல இருந்து குடுத்துவிட்டிருக்காங்க பாரு…” என்று கோவேந்தன் சொல்ல,
“என் ப்ரெண்டை போல யாரு மச்சான்…” என்று பாடி விசிலடித்தான் கார்மேகவண்ணன்.
“இப்ப தான இங்க இருந்தான்…” என்றபடி அதனை எடுத்து பார்க்க நஞ்சப்பன் வீடியோ காலில்.
“சாப்பிட்டு முடிச்சதை எல்லாம் உள்ள கொண்டுபோய் வச்சிட்டிருக்கான். கூட மகிழாவும் சித்துவும் பேசிட்டிருக்காங்க அவன்கிட்ட. நீ அட்டன் பண்ணி நஞ்சாக்கிட்ட என்னன்னு கேளு…” என்று வாழவந்தான் சொல்ல,
“என்னத்தை இப்ப போய் கேட்க? அறிவுகெட்டவன், இந்தநேரம் வீடியோ கால் பண்ணியிருக்கான்…” என்று யோசித்தவர்,
“டேய் கண்ணா. உன் போன் தான். நஞ்சா கூப்பிடறான் பாரு?…” என்றார் சத்தமாய்.
அப்போதும் அவன் வராதிருக்க சத்தமாய் அவர்கள் பேச்சுக்குரல் கேட்க இவரே அதனை எடுத்துவிட்டார் அங்கே யாருக்கும் எதுவும் அவசரமோ என்று.
“இதைத்தான் நானும் சொன்னேன்…” என்று வாழவந்தான் சிரித்தார்.
“ப்பா எங்க அவனை?…” என்று திரையில் கேட்ட நஞ்சப்பனின் பார்வையில் மிரட்சி தெரிய,
“என்னடா என்னாச்சு? யாருக்கும் எதுவும் முடியலையா?…” என்றார் கோவேந்தன்.
அந்தநேரம் பார்த்து சிக்னல் பிரச்சனையில் சரியாக அவனின் முகம் வீடியோ தெரியவில்லை.
“இரு வரேன்…” என்று நகர்ந்து முன்வாசல் பக்கம் வந்து நிற்க உடன் வாழவந்தானும் வந்தார்.
“டேய் என்னன்னு சொல்லுடா. எதுக்கு மூஞ்சி இப்படி இருக்கு?…” என்று அவர் அதட்டியதில்,
“இங்க பாருங்க ப்பா…” என்றான் நஞ்சப்பன்.
அவன் காண்பித்த காவி உடையை கண்டு கோவேந்தன் புரியாமல் பார்க்க, வாழவந்தான் ‘ஐயோ’ என்று பார்க்க, நஞ்சப்பன் அழுவதை போல் பார்த்தான்.
“நஞ்சப்பன் என்னதிது?…” என்று வாழவந்தான் பாவம் போல அழைக்கவும்,
“பாருங்க பாஸ், முதலிரவுக்கு போட்டுக்க ஸ்பெஷல் கிப்ட்ன்னு இவன் பண்ணி வச்சிருக்கற அக்கப்போரை. இதுல கண்டிப்பா இதை தான் நீ உன் பர்ஸ்ட் நைட்க்கு உடுத்தனும், இது நட்பு மேல சக்கரை சத்தியம்டான்னு வேற சொல்லிட்டு போனான்….” என்று சொல்லி பாவமாய் வாழவந்தானை பார்க்க,
“சரி அதை தூக்கி போட்டுட்டு ஆகற வேலையை பாரு. இதுக்கொரு போன்…” என்றார் வாழவந்தான் சிரிப்புடன்.