“இவனை பெத்துட்டு நான் படற பாடிருக்கே? எங்க அவன்?…” என்று அழைப்பை துண்டித்துவிட்டு மகனை தேடினார் கோவேந்தன்.
“டேய் இருடா. இரு…” என்று வாழவந்தான் கோவேந்தனை பிடிக்க பார்க்க, உள்ளிருந்த சித்தாரா,
“என்ன அண்ணே கோவமா கூப்பிட்டுட்டு வர மாதிரி தெரியுது…” என்று சொல்ல,
“கண்ணா உங்கப்பா வராரு. எந்திச்சு உள்ள போ…” என்று டேபிளில் அமர்ந்திருந்த மகனை மகிழா கிளப்பினார்.
“அய்யனாரோட ஜிபிஎஸ்ன்னா அது நீ தான் மகிம்மா…” என்று அவரின் கன்னம் கிள்ளியவன் நகர போக, அவனெதிரே வந்துவிட்டவர்,
“டேய் நில்லுடா…” என்றார் கோவேந்தன்.
“மனைவிக்கு தலைவலி…” என்று சொல்லி சிட்டாக பறந்துவிட்டான் கண்ணன்.
“என் பிள்ளை சிட்டுக்குருவி மாதிரி. ஆழிக்கு ஒன்னுன்னதும் எப்படி பறந்து போறான் பாருங்க…” என்று மகிழா சிரித்தப்படி வந்து சமாளிக்க,
“உன்னை வெட்டினா சரியா போகும். கொண்டா அந்த வாயை…” என்று மகிழாவின் கழுத்தை பிடிக்க போய்விட்டார் கோவேந்தன்.
“உங்க பேச்சை நான் என்னிக்குங்க தட்டிருக்கேன். இந்தாங்க….” என்ற மகிழா அசராமல் சொல்ல அமர்ந்துவிட்டார் கோவேந்தன்.
“எனக்கு ஒரே ஒரு ஆசைதான். என்னங்க காபியா டீயான்னு உங்ககிட்ட கடைசியா கேட்டுக்கவா?…” என்று பாசாங்காய் கண்ணை கசக்கி அவரருகில் மகிழா அமர,
“ஏய், ச்சீ, எந்திச்சு போடி அங்கிட்டு…” என்றவருக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.
“கிழக்கையா? மேற்கையாங்க?…” ஒன்றுமறியாதவர் போல.
“ஹ்ம்ம், வடக்க? என்ன போலாமா?…” என்று மீண்டும் கேட்க,
“ஆத்தீ, ஓவர் டோஸ். சமாளிப்போம்…” என்று சுதாரித்த மகிழா,
“என்னைக்கு நீங்க என் கழுத்துல தாலி கட்டுனீங்களோ, அன்னில இருந்தே உங்க கை பிடிச்சு எங்கன்னாலும் வர நான் ரெடி…” என்றவர் முகபாவனையில் கோபத்திற்கு பதிலாய் சிரிப்பு தான் வந்தது கோவேந்தனுக்கு.
“பார்ரா, டிடிஆர் ட்ரெயினை விட்டு இறங்கிட்டான். நல்லாருந்தா சரிடா வேந்தா. நானும் கிளம்பறேன்…” என்று சித்தாராவுடன் வாழவந்தானும் புறப்பட்டுவிட்டார்.
அவர்கள் இருவரும் கிளம்பி செல்லவும் நெற்றியில் கையை வைத்தபடி லேசான புன்னகையுடன் கோவேந்தன் அமர்ந்திருந்தார்.
“என்னங்க, நான் ஒன்னும் தப்பா சொல்லிடலையே?…” என்று மகிழா கேட்க,
“எங்கருந்துடி இப்படிலாம் கத்துக்கிட்ட? உன் மவன் ட்ரெய்னிங்கா?…” என்று நறுக்கென மகிழாவின் தலையில் குட்டியவர்,
“ஹ்ம்ம், உன்னை விட்டுட்டு நான் மட்டும் இருந்திருவேனாக்கும்?…” என்றதில் அதிர்ச்சி தாக்க, நிஜமாகவே மகிழாவிற்கு நெஞ்சடைத்து மயக்கம் வந்துவிட பொத்தென்று விழுந்தார் அவர்.
“என்னாச்சுப்பா? என்ன அம்மா மயங்கிட்டாங்க?…” என்று பதட்டமானவன் அவர் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப,
“எனக்கும் தெரியலைடா கண்ணா. பேசிட்டிருக்கும் போதே பொத்துன்னு விழுந்துட்டா. வா ஹாஸ்பிட்டல் போவோம்…” என்று கலங்கி போய் சொல்ல, அதற்குள் மகிழாவின் மயக்கம் தெளிந்தது.
“என்னம்மா என்னாச்சு உங்களுக்கு? என்ன பண்ணுது?…” என்றான் மகன்.
“என்னடி, என்னனு சொல்லு. எனக்கு பயந்து வருது. பயத்துல நெஞ்சே அடைச்சிருச்சு. உனக்கு ஒன்னுமில்லேல?…” என்று அவர் கேட்டதில் விழிவிரித்து பார்த்தார் மகிழா.
“ப்ச், ரெண்டுபேரும் பதட்டப்படாம இருக்கீங்களா முதல்ல. மகிம்மாவும் பேச டைம் குடுங்க. எத்தனை கேள்வி?…” என்று அதட்டிய ஆழினி டவலால் அவரின் முகம் துடைத்துவிட்டு,
“மகிம்மா இப்ப ஓகே வா நீங்க?…” என்றாள் பொறுமையாக.
“ஹ்ம்ம்…” என்றவர் கோவேந்தன் முகம் பார்த்து,
“இப்படிலாம் நீங்க பேசினதில்லையா? அதான் மயங்கிட்டேன்…” என்றார் மெல்லிய குரலில்.
“நானா நான் என்ன பேசினேன்?…” கோவேந்தன் திருதிருத்தார்.
“என்னப்பா? என்ன சொன்னீங்க?…” என்று கார்மேகவண்ணன் கேட்க,
“ஒண்ணுமே சொல்லலையேடா கண்ணா…” என்றவர்,
“இந்தாடி என்னன்னு சொல்லி தொலை. இவன் வேற என்னை பார்க்கிற பார்வையே சரியில்லை…” என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.
அவருக்கு தான் அப்படி என்ன மயங்கி விழும் அளவிற்கு பயப்படுத்த சொல்லியிருப்போம் என்று புரியவில்லை. மகிழாவின் முகத்தையே அவர் பார்க்க,
“என்னை விட்டுட்டு உங்களால இருக்க முடியாதுன்னு சொன்னீங்களே? இதுவரைக்கும் சொன்னதில்லையா. அதான் மயங்கிட்டேன்…” என்று மகிழா மொத்தமாய் சொல்ல,
“ஓஹ், இதுக்கு பேர் தான் சொல்லுல மயங்கறதா?…” என்ற மகனின் கேலி சிரிப்பில் அங்கே இருக்கமாட்டாமல் ஓட்டமெடுத்துவிட்டார் கோவேந்தன்.
“கூறுகெட்டவ இவன் முன்னாடி நாணி கோணிக்கிட்டு சொல்லுறதை பாரு. வரட்டும். மண்டையில நாலு போடறேன்…” என்று அவரின் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தார்.
மகிழா உள்ளே வந்ததுமே எதுவும் பேசுவாரோ என்று பார்த்து நிற்க கண்டவர் முகமும் சிரிப்பை அடக்கியது.
“அறிவுகெட்டவளே…” என்று மனைவியின் தோளில் தட்டினார் அனுசரணையாய்.
அதில் கூடுதலாய் அவர்கள் முகத்தில் லேசாய் வெட்கம் வேறு சிரிப்பை உண்டாக்க மூப்பின் அழகு அங்கே மிளிர்ந்தது.
“அப்படியே தூங்கிடலாம்ன்னு நினைப்பா? வா, வா. அஞ்சுநிமிஷம் வாக்கிங் போகலாம்…” என்று அழைத்துக்கொண்டு வீட்டின் முன் நடக்க ஆரம்பித்தான்.
லாங் கவுனில் மெல்ல பாதம் வைத்து அவள் அசைந்தாடி நடக்க அவளுடன் இணைந்து நகர்ந்தது அவளின் கார்மேகம்.
“இன்னும் கரெக்ட்டா ஒரு மாசம் இருக்கு கண்ணா…”
“ஆமா கண்ணா…” என்று அவனும் மௌனப்புன்னகையுடன் சொல்ல,
“ப்ச், கிண்டல் பேசக்கூடாது…”
“ஓகே உத்தரவு. சொல்லு…” என்று லேசாய் பணிந்து காண்பித்து நிமிர,
“ரொம்ப பணிவு தான்…” என்று சிரித்தவள்,
“குழந்தைக்கு என்ன பேர் வைக்கிறதுன்னு நேத்து கேட்டேனே? எழுதி வச்சிருந்தேனே? படிச்சீங்களா?…” என்றாள் அவனிடம்.
“ம்ஹூம், படிக்கலை…”
“என்ன? ஏன்? நான் தேடி தேடி எவ்வளோ பேர் புதுசா சர்ச் பண்ணி வச்சிருந்தேன். ஈஸியா படிக்கலைன்னு சொல்றீங்க?…” என்று அவனின் முன் நின்று கேட்க,
“படிக்கலைன்னா அதை தானே பாஸ் சொல்லமுடியும்?…” என்றான் கார்மேகவண்ணன்.
அவனின் ஒரு கை அவளின் இடை வளைத்து பிடித்திருக்க இன்னொரு கரம் அவளின் மூக்கின் நுனியில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது.
“வெளில இருக்கோம்…” மெல்லிய குரலில் ஆழினி கிசுகிசுக்க,
“கேட் கம்பில எல்லாம் கொடி படர்ந்திருக்கு. யாரும் பார்க்கமுடியாது. நீ சொல்லு…” என்று இன்னும் நெருங்க, மேடிட்ட அவளின் மெத்தை வயிறு அவனுக்கிடையில் நின்றது.
“கேட்டது நான். ஏன் படிக்கலை?…”
“அதான் சொன்னேனே. தோணலை…” என்றவன் அவளின் முகம் தாங்கி நுனிமூக்கில் இதழ் பதித்து,
“ஆனா தோணும். சட்டுன்னு ஒரு பேர் நமக்குள்ள மின்னலடிக்கும். கடலும், வானும் கலந்த ஒரு பேர். பளிச்சுன்னு இதுதான் சரின்னு நமக்குள்ள ஒரு உணர்வோட எழும் பாரு. அந்த பேர் தான். உன் வாழ்க்கைக்குள்ள என்னை எடுத்த மாதிரி. என் கனவுக்குள்ள நீ வந்த மாதிரி. அந்த மந்திரம் இங்கேயும் நடக்கும்…” என்றான் நிறைவாய் புன்னகையுடன்.
அந்த புன்னகை பெருநகை. அளவில்லாத மதிப்பிடமுடியாத பொக்கிஷ பூக்கோலம் கொண்ட மென்னகை.
“அப்போ உங்களுக்குள்ள நிறைய பேரை அலசிட்டு இருக்கீங்க…” என்று கேட்க,
“மனசு தானா தேடுது. குழந்தை பிறக்கவும் வார்த்தையா வந்திரும். ஆழினிக்கு பிடிச்சா வச்சிடலாம்…”
“கண்ணன் வைக்கிற பேர் தான் ஆழினி இஷ்டம்ன்னு தெரியாதா என்ன?…” என்று அவளும் கேட்டு நாக்கை கடித்தவள் அவனின் முகத்தை அவஸ்தையாய் பார்க்க மென் புன்னகை புரிந்து அவளின் கன்னம் பற்றினான் கார்மேகவண்ணன்.
“நீ எத்தனை தான் என்கிட்ட உனக்கா தோணி செய்யறன்னு சொன்னாலும் இந்த சின்ன சின்ன விஷயங்கள் காட்டிக்குடுத்திடுது ஆழி. அதனால நீ எப்பவும் போல இரு. அதுக்காக அளவில்லாம என்னோட எல்லாத்துக்கும் சரின்னாம, அப்பப்ப என் காதை பிடிச்சு திருகு….”
“ஏன் மீசையை பிடிக்க கூடாதா?…” என ஆழினி புருவம் உயர்த்த,
“என் மீசையை ஏன் உன் கை விரல் பிடிக்கனும்?…” என்று உயர்ந்த புருவத்தை ஏற்றி இறக்கி, கண் சிமிட்டி புன்னகைத்தான் கார்மேகவண்ணன்.