இன்றுவரை ஆழினிக்கு தன் தந்தையும், தந்தையின் உயிர் நண்பரான கோவேந்தன் மேலும் பிரமிப்பு தான்.
கோவேந்தன், வாழவந்தான் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். அவர்கள் நட்பு, இருவரும் குடும்பஸ்தானான பின்னரும் தொடர்ந்து இன்றுவரை வளர்பிறையாய் தான் வருகிறது.
அவர்களுக்கு ஏற்ற இணையாய் சித்தாரா, மகிழா இருக்க பிள்ளைகளும் அந்த உறவின் இலக்கணத்தில் இழைந்து சேர்ந்தனர்.
அதை எண்ணியபடியே தனித்து அமர்ந்திருந்தவளுக்கு மகிழா பாலை கொண்டுவந்து தர,
“தேங்க் யூ மகிம்மா…” என்று வாங்கிகொண்டாள்.
“ஒன்னொண்ணுக்கும் தேங்க்ஸ் சொல்லு. நல்ல பொண்ணு போ…” என்று புடவை தலைப்பால் முகத்தை துடைத்துக்கொண்டவர்,
“எங்க உன் மாமா, பேசிட்டு வந்தாச்சா?…” என்றார்.
“ம்ஹூம். முடியலை போல. வருவாங்க…” என்று மெல்ல மெல்ல பாலை அருந்தினாள் ஆழினி.
“ஹ்ம்ம், இன்னைக்கு மிளகு தூளும் சேர்த்து போட்டிருக்கீங்க போல மகிம்மா…” என்று கடைசி சொட்டு வரை சுவைத்து தீர்க்க,
“நீ கிளம்பவும் சித்து கால் பண்ணினா. உனக்கு தொண்டை சரியில்லையாமே? அதான் சரின்னு மிளகு தட்டி போட்டேன்…” என்றதும் குபீரென்று சிரித்துவிட்டாள் ஆழினி.
“லேசா கரகரப்பா இருந்ததுக்கே இந்த அம்மாஸ் இருக்கீங்களே? சரியான ஹார்லிக்ஸ் மம்மீஸ்…” என மகிழாவின் கன்னத்தை கிள்ளியவள்,
“ஷர்மி அக்கா எப்படி இருக்காங்க? குட்டி பாப்பா எப்படி இருக்கா?…” என்று கேட்க,
“அதெல்லாம் இல்லை மகிம்மா. அம்மாப்பாவோட தான் என் முழு வாழ்க்கையும். அப்படியெல்லாம் போயிடமாட்டேன்…” என்று உள்ளர்த்தத்துடன் அவள் கூற,
“பார்க்கத்தான போறோம்….”
“நிஜம்மா மகிம்மா. பார்க்கத்தான் போறீங்க. நான் எப்பவும் அவங்களோட கூடவே தான் இருப்பேன்…” இந்த முறை இதனை சொல்லும்பொழுது அவளின் குரல் தழுதழுதுவிட அதை மகிழாவும் உணர்ந்தார்.
ஆழினிக்கு கண்ணனை அன்றி இன்னொருவன் மீது எக்காலத்திலும் நாட்டம் ஏற்பட போவதில்லை.
அவளின் பாதி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. அவள் தான் அவன். அவளுக்குள் தான் அவன். அவளின் மூச்சோடு கலந்திருப்பவன்.
அதனை தாண்டி வேறொரு வாழ்க்கையா? அதை ஒருபோதும் தன் மனது ஏற்காது என்பதில் ஸ்திரமாக இருந்தாள்.
“அடடா, இப்ப என்ன சொல்லிட்டேன் நான்? அடுத்தவருஷம் உனக்கு யோகம் கூடி வருதுன்னு சித்து சொன்னா. வரன் பார்க்கனும்ன்னு சொன்னா. வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திடுவோம்…” என்றவர்,
“இவனை தான் என்ன பன்றதுன்னு தெரியலை. கண்ணன் ஒரு பொண்ணை விரும்புவான்னு நினைக்கவே இல்லை ஆழி. அதுவும் வருஷக்கணக்கா மறைச்சும் வச்சிருக்கான் பாரு. முதல்ல இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிடனும்….” என்று சொல்ல ஒப்புக்கு தலையசைத்தவள் உள்ளத்தில் மத்தள சத்தம்.
“ஷர்மி மாப்பிள்ளை பக்கம் ரெண்டு பொண்ணுங்களை சொன்னாங்களாம். ஒத்துவந்தா பேசலாமான்னு ஷர்மி கேட்டுட்டு இருந்தா. வீட்டுக்கு வந்து கண்ணனோட கலந்து பேசிட்டு சொல்றேன்னு வந்தேன். இங்க வந்தா இப்படி ஒரு காரியம்…” என்றதும் ஆழினியின் உதட்டு புன்னகை அப்படியே நின்றுவிட்டது.
இமைகளை தாழ்த்திக்கொண்டவள் பார்வை கையிலிருந்த தம்ளரில் பதிய, இதழ்கள் அவருக்கான புன்னகையை சிந்தியது.
“இப்ப எப்படி பேச? போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வந்திருக்கான். அதுவும் லவ் பண்ணி அந்த பொண்ணு வீட்டுல கலாட்டா பண்ணி. இது வெளில தெரிஞ்சா எவ்வளோ அசிங்கம்? ஏன் தான் இவனுக்குன்னு இப்படி நடக்குதோ? உன் மாமாவும் கோவப்படறதுல தப்பில்லை….” என்று புலம்பிக்கொண்டிருக்க வாழவந்தான் வெளியே வந்தார்.
“போலாமா ப்பா…” என்று அந்த பேச்சிலிருந்து தப்பிப்பதை போல பட்டென்று எழுந்துகொண்டாள் ஆழினி.
“என்னடா தூக்கம் வந்திருச்சா?…” மகிழா கேட்க,
“ஆமா மகிம்மா. இவ்வளோ பெரிய தம்ளர் நிறைய பாலை குடுத்துட்டு தூக்கம்ன்னு கேள்வி வேறையா?…”என்றாள் ஆழினி புன்னகையுடன்.
“இதுல அப்படியே ஒன்றரை பிடி இருந்துச்சாக்கும்….” என்று சிரித்துக்கொண்டவர் அவளின் கொழுகொழு கன்னத்தை பிடித்து கொஞ்சினார்.
“வரேன் ம்மா…” என்று வாழவந்தான் சொல்ல,
“அவன் தூங்கிட்டானா ண்ணே?…” என்றார் மகிழா.
“இல்லம்மா. போன் பார்த்திட்டு இருக்கா. இவனை பேசாம இருக்க சொல்லு. கண்ணா தூங்கிருவான்…” என்று சொல்லி வெளியே வர கோவேந்தன் இன்னும் போனில் தான் பேசிக்கொண்டிருந்தார்.
“நாளைக்கு நைட் ட்யூட்டில வந்திடறேன். அட ஆமாண்ணே. ஆமா…” என்று பேசிக்கொண்டிருந்தார் கோவேந்தன்.
காதில் போனுடன் திரும்பி பார்த்தவர் புன்னகையுடன் ஆழினியின் தலையில் கைவைத்து, கன்னத்தை தட்டிக்கொடுத்துவிட்டு,
“போடா…” என்றார் வாழவந்தானை பார்த்து.
“கொழுப்பை பார்த்தியா? என்னமோ இவன்கிட்ட சொல்லிட்டு போக நான் வந்தமாதிரி மூஞ்சியை பாரு. நீ போடா…” என்று நண்பனின் தோளில் வலிக்க அடித்துவிட்டு,
“வந்துரு வந்துரு…” என்று சிறுபிள்ளை போல வாழவந்தான் கேட்டை நோக்கி ஓடி வர ஆழினிக்கு சிரிப்பு பொங்கியது.
“இப்ப தெரியுதா நான் பெத்த ராஸ்கல் யார மாதிரி இருக்கான்னு…” என்று போனை வைத்துவிட்டு கோவேந்தன் தலையில் அடிக்க,
“ஓகே மாமா. வரேன்…” என்று சொல்லி கிளம்பினாள் ஆழினி.
அங்கே அவர்களின் கார் இல்லை. வாழவந்தான் மட்டும் நின்றுகொண்டிருந்தார் மகளுக்காக.
“காரை அனுப்பிட்டீங்களாப்பா?…” என்று அவள் வர,
“ஆமாடா, அடுத்த தெரு தானே? வா அப்படியே ஒரு வாக்கிங்…” என்று பின்னால் கைகளை கட்டிக்கொண்டு அந்த இரவில் நிசப்தத்தில் மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
முகத்தில் கண்ணனை எண்ணி ஒருபக்கம் கவலை இருந்தாலும் இன்னொருபக்கம் மகிழ்ச்சி.
“இந்த படுவா இன்னும் அப்படியே தான் இருக்கான்…” என்று சொல்லிக்கொண்டார் வாழவந்தான்.
அவரின் கதைகளை மீண்டும் மகளுடன் பகிர போகிறார் என்று ஆழினிக்கு புரிந்தது.
இப்படியான பலநேரங்கள் வாழவந்தானுக்கு மட்டுமல்ல, ஆழினிக்குமே நிரம்ப பிடித்த பொழுதுகள்.
அவர் கண்ணனுடன் கடந்துவந்த காலங்களை அத்தனை சில்லாகித்து சொல்லும் விதமே ஆழினிக்கு ரசனைக்குரியதாய் இருக்கும்.
பிறந்ததில் இருந்து விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே ‘கண்ணன் இதுல என்ன பண்ணுவான் தெரியுமா?’ என்று அவளின் வளரும் நாட்களில் அவனை முன் நிற்கவைத்தார் வாழவந்தான்.
அவர் அறியாமல் விதைத்த அந்த விதை யாருமறியாமல் விருட்சம் பெற்றிருந்தது ஆழினியின் மனதில்.
“எனக்கும் உங்கம்மாவுக்கும் கல்யாணம் முடிஞ்சு பன்னெண்டு வருஷமாச்சு நீ பிறக்க. அப்பலாம் எங்களுக்கு அவன் தான் எல்லாம்…” என்று ஆரம்பித்துவிட்டார்.
“நாலு வருஷம் பிள்ளைன்னு இல்லை. பிறக்கவே பிறக்காதோன்னு உங்கம்மாவும், நானும் அழாத நாளில்லை. சொந்தம்ன்னு இருக்கானுங்களே உசுரை புடுங்கி எறிய. துடிக்க துடிக்க ஆறுதல், அறிவுரைன்னு கொஞ்சநஞ்ச பாடா படுத்தினானுங்க…” என அன்றைய நாட்களின் சோகம் இப்போது அவர் முகத்தில்.
“விடுங்கப்பா…” ஆழினி சமாதானமாய் சொல்ல,
“இந்த படுவா பிறந்தான். எங்க கல்யாண நாள் அன்னைக்கு இவன் பிறந்தான். உங்கம்மா மறுக்கா பிறப்பெடுத்த மாதிரி அம்புட்டு கொண்டாடிட்டா. இருக்காதா பின்ன இந்த வேந்தன் பைய பிள்ளை பிறந்ததும் முதல்ல அவனை தூக்கிட்டு வந்து குடுத்தது உங்கம்மாட்ட தான….” நட்பின் பெருமிதம் அவர் முகத்தில்.
“அவன் மட்டுமா? நம்ம மகியும்ல கிரேட். நமக்கும், கண்ணனுக்குமான உறவு, உங்கம்மாவோட ஏக்கம்ன்னு எல்லாத்தையும் தாங்கி பிடிச்சாங்க. எங்கயும் நம்மளை விட்டு போகலை. கூடவே இருந்து கண்ணனை உங்கம்மாவும், நானும் பார்த்துக்க அனுமதிச்சு இப்ப வரைக்கும் அவன் எங்களுக்கு இருக்கான்னா சும்மாவா?…”
“ஆனா நீங்க தான் ரொம்ப செல்லம் குடுக்கறீங்க இல்லையாப்பா?…” என்று சிரித்தாள் ஆழினி.
“அதென்னமோடா, அவன் லேசா கலங்கினா கூட மனசு பொறுக்கமாட்டிக்கு. அவனும் என்ன கெட்ட பிள்ளையா? கொஞ்சம் விளையாட்டுத்தனம், பிடிவாதம். இருக்கும் தானே? அவன் வயசுக்கு அவனுக்கும் ஒரு எதிர்கால வாழ்க்கை இப்படி வேணும்ன்னு ஆசை இருக்கும்ல…” என்றார் கண்ணனின் பிரதிவாதியாக.
ஆழினியின் முகத்தில் புன்னகை. தலையசைத்து சிரித்தபடி அவர் பேச்சுக்களுக்கு காது கொடுத்துக்கொண்டே வந்தாள்.
கண்ணனின் எட்டு வயது வரை அவனுக்கு இன்னொரு பெற்றோராய் இருந்தவர்கள் ஆழினியின் தாயும் தந்தையும்.
கண்ணனுக்கடுத்து ஷர்மிளா வந்தும் கூட கண்ணன் தான் அவர்களுக்கு எல்லாம்.
கோவேந்தனும், மகிழாவும் கூட அதற்குள் தலையிடவில்லை. அவர்களின் பாசத்திற்கு அணையிடவில்லை.
ரயில்வேதுறையில் பணியாற்றும் கோவேந்தனை தன்னோடு தொழிலில் சேர்த்துக்கொள்ள எத்தனையோ முயன்றுவிட்டார் வாழவந்தான்.
முடிந்தபாடுதான் இல்லை. பிள்ளைகளிடமும் வேற்றுமை பார்த்ததில்லை இன்றுவரை.
இருவர் பக்க சொந்தகளிடம் கூட இவர்களின் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்திருந்தது.
அவர்கள் பெற்றோரின் ஆசை தன் பிள்ளைகளும் தங்களின் காலத்திற்கு பின்னர் அப்படி இருக்கவேண்டும் என்பது தான்.
அந்த கண்ணோட்டத்தில் நட்பு என்னும் கோட்டினுள் இருந்ததனாலோ என்னவோ யாருக்கும் ஆழினியின் மனதும், பார்வையும் புரியாமலேயே போனது.
புரியவில்லை என்பதை விட அவள் தெரியப்படுத்த விரும்பவில்லை. அவனின் கவனம் தன் மீது என்றைக்கும் இருந்ததில்லை என வலியுடன் அவள் உணர்ந்த நாட்கள் அநேகம்.
ஆனால் அதன் பின்னர் இப்படியான ஒரு காதல் இருக்கும் என்று நினைத்தும் பார்த்திடவில்லை.
எப்போதும் பக்குவப்பட்ட முடிவுகளையே தேர்ந்தெடுக்கும் ஆழினியின் மனது கடலில் ஆழ்ந்த அமைதியை போல அடங்கி போனது.
தன் பார்வையும், ஓரிரு வார்த்தையும், அருகாமை உணர்த்தாததும், அவன் கவனத்தை கவராமல் போக அதற்கு மேல் தான் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தாள்.
தான் விருப்பத்தை சொல்லி, கண்ணன் மறுத்து அதை ஒருக்காலும் அவளால் தாளமுடியாது.
வீட்டிற்கு வந்தவள் வாழவந்தானை உறங்க அனுப்பிவிட்டு தனது அறைக்கு வந்தாள்.