குறுங்கடலாக உள்ளம் கொதித்தெழ என்ன செய்வதென்று தெரியாமல் தன் வழக்கமான பாணியை கையிலெடுத்தாள்.
கண்ணாடியின் முன் அமர்ந்தவள் தனது போனில் கேமராவை சுட்டிவிட்டு முகத்தை அழுத்தமாய் தேய்த்துக்கொண்டு நிமிர்ந்தமர்ந்தாள்.
“என்னதான் செய்யலாம்ன்னு இருக்க ஆழி. இப்பவாவது வீட்டுல இதை சொல்லேன்?…” என்று அவளுக்கு அவளே வாதம் எடுத்து நினைத்ததை எல்லாம் பேசினாள்.
பேசி முடித்து மீண்டும் அந்த காணொளியை ஓடவிட்டவள் அதில் தான் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றிற்குமான பதில்களை தானே தேடி கூறினாள்.
“என்னோட காதல் என்னோடவே போயிடட்டும். வேண்டாம்ன்ற நிராகரிப்போட, அந்த வலியோட நான் வாழறதை விட, அவங்களுக்கு சொல்லாம, தெரியாம அவங்க மறுக்கலைன்ற சின்ன சந்தோஷத்தோட வாழ்ந்துட்டு போறேனே? இப்ப என்ன கெட்டுச்சு?…” என்று புன்னகைத்து தோளை குலுக்கிக்கொண்டாள் ஆழினி.
“இந்த விஷயம் தெரிஞ்சு வீட்டுல அவங்களை வற்புறுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சாலும் கஷ்டம். என்னை வேண்டாம்ன்னு கண்ணன் சொல்லி அதனால ரெண்டு குடும்பத்து பெரியவங்க கண்ணீர் விடறதும் கஷ்டம். அதை நான் அனுமதிக்க முடியாது. இது என் ஒருத்தியோடவே போகட்டும்…” என்று விழி விட்டு இறங்கிய நீரை அழுத்தமாய் துடைத்துவிட்டு கண் சிமிட்டி புன்னகைத்தாள்.
ஒரு பெருமூச்சுடன் மனதை தெளிவுபடுத்திக்கொண்ட நிம்மதியுடன் தான் பேசியதை போனில் இருந்து அழித்து விட்டு வந்து படுக்கையில் சாய்ந்தாள்.
“இவங்க மூக்குத்தி எல்லாம் எவ்வளோ க்யூட்ல. சித்தும்மா நீயும் இந்தமாதிரி போட்டுக்கோவேன். அம்மாவும் கேட்கலை…” என்று என்றோ அவன் ஒரு புகைப்படத்தை காண்பித்து சொல்லியதன் தாக்கம் அவளின் நாசியில் நிரடியது.
விரல்கள் அதனை ஸ்பரிசித்து முத்தமிட்டுக்கொள்ள, விழி மூடி ஜன்னல் வழி நுழைந்த குளிர்ந்த காற்றில் கலந்திருந்த அவனின் சுவாசக்காற்றை தேடி உள்ளிழுத்தாள் ஆழினி.
“ஊமைக்குத்தா வாய்லையே குத்தி அனுப்பிருப்பானுங்க இவன் செஞ்சதுக்கு. அதுக்கு என்னசெய்ய? விழா எடுத்துருவோமா?…” உஷ்ணமோ உஷ்ணம்.
மகிழாவுக்கு அவரை சமாளிக்கவே முடியவில்லை. பாவமாய் முழிக்க கோபத்தை அடக்கமுடியாமல் தலையை தேய்த்துக்கொண்ட கோவேந்தன்,
“என்ன வேணும்ன்னு சொல்லி தொலை. அவன் பேசாம உயிரை எடுக்கறான். நீ இப்படி நின்னே படுத்தற…” என்றதும்,
“மட்டன்…” என்று மட்டும் அவர் சொல்ல,
“மட்டன்னா, அப்படியே வேக வச்சு குடுப்பியா? அதுக்கு என்னென்ன வேணும்? ஒன்னொன்னா கேட்கனுமா? இதுக்குத்தான் நான் வீட்டுலையே இருக்கறதில்லை….” வழக்கமான வார்த்தையையும் இலவச இணைப்பாக சொருகிக்கொண்டார்.
“நீங்க மட்டன் கடைக்கு போங்க. அதுக்குள்ள நான் மெசேஜ் பன்றேன்…” என அவரை அனுப்பிவிட்டு மகனை அழைத்து அவனுக்கு என்னென்ன வேண்டும் என்று கேட்டு அதற்கான பொருட்களை குறுஞ்செய்தியில் அனுப்பிவைத்தார்.
அவன் அங்கே சென்ற அடுத்த ஐந்துநிமிடத்தில் ஆழினியின் வருகை ஆழிப்புயலாய் அங்கே மையம் கொண்டது.
அந்த வீட்டினுள் சொற்பமாய் சொந்தங்கள் கூடியிருக்க நட்டநடு கூடத்தில் சட்டமாய் அமர்ந்திருந்தான் கார்மேகவண்ணன்.
காவல்துறைக்கு கூட அழைத்து சொல்லமுடியாதபடி இருந்தது அன்று ஆழினி பேசிய பேச்சுக்கள்.
இன்னும் சற்றுநேரத்திற்குள் மண்டபத்திற்கு கிளம்பவேண்டும். இவனின் வருகையில் அக்கம்பக்கத்தினரும் வேறு என்னெவன்று பார்க்க வர அடிவயிறு கலங்கியது சஞ்சனாவிற்கும், அவளை சேர்ந்தோருக்கும்.
“திரும்பவும் இங்க என்ன பன்ற?…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு ஆழினி.
“இங்க பாருங்கம்மா. நீங்க சொன்னீங்கன்னு தான் நாங்க கேஸை குடுக்காம பின் வாங்கினோம். இன்னும் கொஞ்சம்நேரத்துல மாப்பிள்ளை வீட்டாளுங்க மண்டபத்துக்கு வந்திருவாங்க. நாங்களும் கிளம்பனும். இப்ப வந்து இவரு பிரச்சனை பன்றாரு…” என சஞ்சனாவின் தாய் அழ,
“கண்ணா…” என்று அதிருப்தியுடன் பார்த்தாள் ஆழினி.
“ப்ச், நான் ஒன்னும் பிரச்சனை செய்ய வரலை. நான் குடுத்த கிப்ட்ஸ் எல்லாம் திரும்ப வாங்கிட்டு போக தான் வந்தேன்…” என்று அலட்டிக்கொள்ளாமல் கார்மேகவண்ணன் சொல்ல,
“அதை வாங்கி நீ என்ன பண்ண போற?…” என்றாள் அடங்காத கோபத்துடன்.
“குப்பையில கூட போடுவேன். அது என் இஷ்டம். என் சம்பாத்தியத்துல வாங்கினது. யாரோட சுயநலத்துக்கும் அதை குடுக்கமுடியாது. எடுத்துட்டு வந்து தந்தா வாங்கிட்டு போய்ட்டே இருப்பேன்…” என்றவன்,
“ஏன்டா உன்னை யார் மேடத்துக்கு போன் போட சொன்னா? கரெக்டா நாம வர நேரம் வந்து சேர்ந்துட்டாங்க…” என்றான் நக்கலாக நஞ்சப்பனிடம்.
‘இப்படி கிளம்புகிறேன்’ என்றவனை தடுக்க முடியாமல் ஆழினிக்கு அவன் அழைத்து சொல்லியிருக்க சஞ்சனாவின் வீட்டிற்கு சென்றதுமே பின்னால் ஆழினியும் வந்து சேர்ந்திருந்தாள்.
அவனை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தமுடியவில்லை. தான் நினைத்ததை பதட்டமே இன்றி செய்துகொண்டிருந்தான் கார்மேகவண்ணன்.