“கிப்ட் குடுத்தது நான் தானே? அதுக்காக அடி வாங்கினதும் நான் தானே?…” என்றவன் காலை ஆட்டியபடி அமர்ந்திருக்க சஞ்சனாவை சேர்ந்தோருக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
“இப்படி இவன் நடுவீடு வரை வர நீ தான காரணம்?…” என்று சிலபல வசவு வார்த்தைகள் தடித்தபடி கொட்ட அவளின் சத்தம் அதிகமாய் கேட்டது.
அந்த சத்தம் கார்மேகவண்ணன் காதிலும் விழத்தான் செய்தது அமிலம் ஊற்றியதை போல.
கண்ணை மூடி திறந்தவன் உணர்வுகள் கட்டுக்குள் வரவே முடியாமல் தத்தளிக்க அவன் பார்த்த விஷயங்களும், கேட்ட விஷயங்களும் அவனால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை.
முயன்று தன்னை கட்டுக்குள் வைக்க போராடினான். அவனின் தாடை இறுகுவதை கண்ட ஆழினி,
“கொண்டுவந்து தான் குடுத்து தொலைங்களேன்….” என்று சஞ்சனாவின் பெற்றோரிடம் கூறினாள்.
“பெத்த பாவத்துக்கு இன்னும் என்னலாம் அசிங்கப்படனுமோ? முதல்ல அவளை நாலு இறுக்கு இறுக்கி என்னென்னத்த வாங்கி தொலைச்சான்னு கேட்டு கொண்டுவந்து எறி…” என்று சஞ்சனாவின் தகப்பன் சொல்ல,
“என்ன?…” என்றான் கார்மேகவண்ணன் புருவத்தை உயர்த்தி தலை சாய்த்து பார்த்து.
“இல்ல கொண்டுவந்து குடுக்க சொன்னேன்…” என்றவர்,
“இங்க பாருப்பா. போதுமட்டும் எங்க குடும்பமானம் சந்தி சிரிச்சு போச்சு. மாப்பிள்ளை வீட்டுல ஓரளவு சமாளிச்சுட்டோம். திரும்பவும் இப்படி நீங்க வந்தா என் பொண்ணோட எதிர்காலமே?…” என்று சொல்லியவரை தீர்க்கமாய் பார்த்தவன்,
“ஏன் உன் பொண்ணு லவ் பண்ணுதுன்னு உனக்கு தெரியாமையா இருந்துச்சு? அடிச்ச, கண்டிச்ச அதுவரைக்கு அது உன் விஷயம், உன் பொண்ணு விஷயம். கேட்கவந்த என்னை ஏன்ய்யா அடிச்சு, நான் பேச வந்ததுக்கு ப்ளேட்டை மாத்தி போலீஸ்ல புடிச்சு குடுத்த?…” என்றான் அவன் ஆவேசம் கொண்டு.
அனைவருமே வாயடைத்து நிற்க என்ன பதில் சொல்லிவிட முடியும் அவனிடம்?
“பிரச்சனை பண்ணனும்ன்னு நான் நினைச்சு உன் மக வாழ்க்கையை கெடுக்க நினைச்சிருந்தா நான் இன்னைக்கு மண்டபத்துக்கு வந்திருப்பேன். அங்க வச்சு பேசிருப்பேன்….” என்று சொல்ல பீதியில் உறைந்து பார்த்தனர்.
“ஆனா அப்படித்தான் செஞ்சிருக்கனும் போல? உன்னை மாதிரி உன் பொண்ணை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம்…” என்று சொல்லியவன் எழுந்துகொண்டான்.
“இங்க பார், உன் பேச்சை கேட்டு மருகி போய் உன் குடும்பத்துக்காகவே அவ என்னை வேண்டாம்ன்னு சொல்லியிருந்தா கூட விதின்னு நினைச்சு கஷ்டப்பட்டுட்டு போயிருந்திருப்பேன். ஆனா…” என்று சொல்லியவன் கை முஷ்டிகள் இறுகியது.
அன்றையநாள் அவள் வீட்டு வாசலுக்கு வந்தபொழுதில் அவன் கேட்ட பேச்சுக்கள்.
அதற்கு மறுநாள் நஞ்சப்பன் மூலம் அவன் அறிந்துகொண்ட மற்ற விஷயங்கள் என்று எல்லாம் அவனை ஒன்றுமில்லாமல் நிறுத்தியதை போலிருந்தது.
தன்னை நாலும் அறிந்தவன் என்று நினைத்து அவனுக்கவனே அத்தனை பெருமையாய் கர்வம் கொண்டிருந்தவனை எப்படி ஏமாற்றி இருக்கிறாள் என்று நினைக்கையில் அவமானமாக இருந்தது.
‘அவள் ஏமாற்றினால் என்பதை விட தானும் நம்பி கண்ணை மூடிக்கொண்டு ஏமாந்திருக்கிறோமே’ என்று தான் தாளமுடியவில்லை.
அவனின் உணர்வு போராட்டத்தை கவனித்த ஆழினி சட்டென அவனருகில் வந்து நின்றுகொண்டாள்.
“ப்ச், ஒன்னும் செய்யலை. எதுக்கு பயப்படற நீ?…” என்று அவளை பார்த்து கேட்டவன்,
“இவனுங்களை அறைஞ்சு தள்ளனும்ன்னு வெறி வெறியா வருது. ஆனா பாரு. இதுங்களை போய் தொட்டுக்கிட்டு ச்சை…” என்று சொல்ல சஞ்சனாவின் அம்மா உள்ளிருந்து வந்தார்.
அவர் கொண்டுவந்ததை பார்த்த மற்ற சொந்தங்கள் வாயில் கைவைக்காத குறையாக பார்த்தனர்.
“இது எல்லாம் பவுனு மாதிரில இருக்கு?…” என்று கன்னத்தில் கைவைத்து சஞ்சனாவின் அத்தை கேட்க,
“மாதிரி என்ன மாதிரி. பவுனு தான் போல? பொடி பொடி உருப்படியா இருக்கு பாரு…” என்ற அவளின் பெரியம்மா,
“மவ படிக்க போற இடத்துல புதுசா நகைய போட்டுக்கிட்டு வந்தா என்ன ஏதுன்னு கூடவா கண்டுக்காம இருப்ப?…” என்றார் சஞ்சனாவின் தாயை பார்த்து.
“அந்த லட்சணத்துல மக என்ன செய்யறான்னு கூட தெரியாம இருந்திருக்கான்னா பார்த்துக்கோ?…” என அத்தைக்காரி சொல்ல,
“அவ என்ன செய்யிவா? விடிஞ்சதும் காய்கறி மார்கெட்டுக்கு உங்கண்ணே கிளம்புறாரு. இவ காய்கறி கடைய திறக்க போயிடறா….” என்று சஞ்சனாவின் சித்தி அவளின் தாய்க்கு பரிந்து பேச பார்க்க,
“அதான் அவுத்துவிட்ட கன்னுக்குட்டியா கேட்க ஆளில்லாம சுத்திருக்கா. வீட்டுல புள்ளைகுட்டிக தான் கொஞ்சமாச்சும் பெத்தவங்க கஷ்டம் உணர்ந்து இருக்கனும். புள்ளைங்க என்ன செய்யுதுங்கன்னு பெத்தவங்களும் கவனிக்கனும். இல்லைன்னா இப்படித்தான்…” என்று அத்தைக்காரி இதுதான் வாய்ப்பென்று விடவில்லை.
தூக்கில் தொங்கிவிடலாம் போலிருந்தது அவர்கள் கேட்ட கேள்விகளில். தலையை கவிழ்ந்தபடி அழுதுகொண்டு நின்றார் சஞ்சனாவின் தாய்.
“வசதியா வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைச்சதும் சின்ன கொளும்ப விட்டுட்டு பெருசா கிடைக்கவும் கப்புன்னு புடிச்சுக்கிட்டா பொழைக்க தெரிஞ்ச பிள்ளை…” என்று வஞ்சத்துடன் வேறு பேச்சுக்கள்.
அழகான பெண் என்று சீர்வரிசைகள் கூட வேண்டாம் என தேடி வந்து பெண் கேட்டிருக்க உடனே சம்மதித்துவிட்டிருந்தனர் சஞ்சனாவின் வீட்டில்.
இத்தனை பேச்சுக்களும் கார்மேகவண்ணன் ஆழினி இருக்கும் பொழுதே தான் நடக்க, அவன் எதையும் காதில் வாங்காததை போல தான் அந்த பொருட்களை சரி பார்த்துக்கொண்டிருந்தான்.
“இன்னும் ரெண்டு ரிங் மிஸ்ஸிங். அதுல ஒன்னு டைமண்ட் ரிங்..” என்றவன் கேட்ட கேள்வியில் சஞ்சனாவின் தந்தை அவமானத்தில் குறுகி போனார்.
இத்தனை பொருட்கள் மகளிடம் இருப்பதே அன்றுதான் அவர் பார்க்கிறார். இதை அணிந்து கூட பார்த்ததில்லை.
‘இத்தனை தூரம் வாங்கி தந்து அவளும் வாங்கியிருக்கிறாளே? அவன் வேண்டாம் என்ற அன்றே இதனையும் திருப்பி தந்திருக்க வேண்டாமா?’ என்று குனிந்த தலை நிமிராமல் மடிந்து அமர்ந்துவிட்டார்.
“பார்த்தீங்களா அந்த புள்ளைக்கு திண்ணக்கத்த? கமுக்கமா வைர மோதிரத்த மறைச்சிருக்கா பாரு. பொழைக்க தெரிஞ்சவன்னு நான் சொன்னது சரிதானே?…” என்று அந்த அத்தை பேச,
“ஸ்டாப்இட் கண்ணா. வாங்க போவோம்…” என்றாள் ஆழினி அங்கே சஞ்சனாவின் பெற்றோரின் நிலைகண்டு பொறுக்கமாட்டாமல்.
“ம்ஹூம், அது எக்ஸ்பென்ஸிவ்….” என்று அவன் விடாப்பிடியாய் நிற்க,
“ஐயோ ஐயோ இவளை பெத்ததுக்கு நாங்க சும்மாவே இருந்திருக்கலாமே?…” என்று தலையில் அடித்துக்கொண்டு சஞ்சனாவின் தாய் அழ,
“இங்க தான்ம்மா வச்சிருந்தேன். தேடி தரேன்…” என்று உள்ளே சஞ்சனாவின் அழுகுரல்.
அதற்குள் மாப்பிள்ளை வீட்டினரிடமிருந்து அழைப்பு வந்துவிட அதை எடுக்க கூட முடியாத நிலையில் இருந்தார் சஞ்சனாவின் தந்தை.
“அண்ணே வரோம்ன்னு சொல்லுங்க. இந்த அசிங்கம் எல்லாம் நம்மோடவே போவட்டும். மொதல்ல இவளை கட்டிக்குடுத்து அனுப்பி தொலைங்க. இனி அந்த பையனாச்சு, இவளாச்சு. கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை பிள்ளையை ராணி மாதிரி வளர்க்கறேன்னு சொல்லுவியே. எல்லாம் நீ குடுத்த இடம் தான்…”
அவரின் தங்கை ஒருபக்கம் அங்கலாய்த்துக்கொண்டிருக்க அனைத்தையும் பார்வையாளனாய் பார்த்துக்கொண்டு நின்றான் கார்மேகவண்ணன்.
“இந்தாங்க தம்பி. இம்புட்டு தானா? வேற என்னமுமா?…” என்று கண்ணீருடன் வந்து சஞ்சனாவின் தாய் சொல்ல,
“மத்த கிப்ட்ஸ் எல்லாம் தேவையே இல்லை. ஆனா இன்னொரு தகவலை சொல்லனும். உங்க பொண்ணுக்கு இந்த ரெண்டுவருஷம் காலேஜ் பீஸ் எந்த தொண்டு நிறுவனமும் கட்டலை. நான் தான் ஸ்பான்சர் பண்ணேன்…” என்று சொல்ல அவர்கள் திக்கென்று நின்றனர்.
மேல்படிப்பு படிக்க முடியாத மாணவ, மாணவிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் கல்வி தொண்டு நிறுவனம் ஒன்று தன் படிப்பு செலவை ஏற்பதாக தோழியின் மூலம் பேசி வைத்திருப்பதாக சஞ்சனா அவர்களிடம் கூறியிருக்க அதுவும் பொய்யா?
படிக்காத அவர்களை எத்தனை தூரம் மகள் ஏமாற்றி இருக்கிறாள் என்று உடைந்து போனார்கள்.
“எம்புட்டு காசு?…” என்று சஞ்சனாவின் தாய் கேட்க,
“ஸ்பான்சர்ன்னு அன்னைக்கு உங்களுக்கு சந்தேகம் வராம இருக்க நான் தான் இப்படி சொல்லுன்னு சொல்லிக்குடுத்தேன். இப்ப ஸ்பான்சராவே இருக்கட்டுமே? டொனேஷன் பண்ணினதாவே நானும் நினைச்சுக்கறேன். ஃபார் யூர் கைண்ட் இன்பர்மேஷன்…” என்றான் கார்மேகவண்ணன் அலட்டிக்கொள்ளாமல்.
“வில்லன். எப்படி பேசறான்?…” என்ற ஆழினிக்கு அந்த பெண்ணின் தாயை பார்க்க பரிதாபமாய் இருந்தது.
இதைவிட உயிரை அறுக்கும் வார்த்தைகள் வேறு எதுவும் இருக்கக்கூடுமா என்று தெரியவில்லை.
சஞ்சனாவின் மீதும், அன்றைக்கு காவல்நிலையம் வந்தவர்கள் மீதும் அத்தனை ஆத்திரமாய் இருந்தாள் தான் ஆழினி.
ஆனால் இப்போது கண்ணன் செய்ததையும் அவளால் சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை.
விலகி வந்த பின்னர் அதனை சோதித்து பார்க்க, அதுவும் எதுவும் தெரியாத இவர்களை காயப்படுத்த வேண்டுமா என்று நினைத்தாள்.
“சொல்லி வைங்க. இனிமேலாச்சும் யாரையும் ஏமாத்தி அவங்க தயவுல முன்னுக்கு வந்து பின்னாடி காலுல போட்டு நசுக்காம இருக்க சொல்லி. இனி எந்த இடத்துலையும் அவ பேரையோ, நடந்ததையோ நான் சொல்லமாட்டேன். ஆனா இதை மன்னிக்கவும்மாட்டேன்…” என்ற கார்மேகவண்ணன்,
“நாளைக்கே உங்களால ஒரு உபத்திரவம்ன்னா கூட உங்க பொண்ணு பெத்தவங்கன்னும் பார்க்கமாட்டான்னு எனக்கு புரிஞ்சு போச்சு. உங்களுக்கு புரிஞ்சா சரி. ஏனா நம்பவச்சு கழுத்தருக்கறதுல உங்க பொண்ணு டாக்டரேட் தான். நானே பலியாகிட்டேனே…” எனும் பொழுது அவனுக்குள் வலித்த வலி.