இப்படியெல்லாம் சஞ்சனாவை தான் பேசக்கூடும் என்று ஒருகாலும் அவன் நினைத்ததில்லை.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சை தலையை உயர்த்தி விட்டத்தை பார்த்து வெளியிட்டவன் கைகள் அவனிடையை பிடித்துக்கொண்டது.
அடிபட்ட கால்களுடன் அவனால் வெகுநேரம் நிற்க முடியவில்லை. ஆனாலும் வலி தாங்கி நின்றான். பிடிவாதமாய் நின்றான்.
‘இதை கூட கடக்க முடியாதென்றால் தானெல்லாம் என்ன?’ என்னும் தன்னம்பிக்கையுடன் நின்றான்.
“போவோமா? ப்ளீஸ்…” ஆழினி கேட்க,
“ப்ளீஸ் சொல்லக்கூடாதுன்னு உனக்கு பலதடவை சொல்லிருக்கேன்…” என்று சுட்டுவிரல் நீட்டி அவன் எச்சரித்தான் எரிச்சலாக.
“சரி சொல்லலை. போவோமா?…”
“இதுவும் ப்ளீஸ் போடற மாதிரியே இருக்கே?…” என்றான் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி.
தீயாய் அவனை முறைத்து பார்த்தவளுக்கு அதற்குமேல் அங்கே நிற்க முடியவில்லை.
நஞ்சப்பனிடமிருந்து அழைப்பு வந்ததும் அவள் தவித்த தவிப்பும், துடிப்பும் அவள் மட்டுமேயல்லவா அறிந்தது.
எங்கே மீண்டும் அவள் நினைவில் அங்கே சென்றுவிட்டானோ என்றோருபக்கம் பயம்.
ஆனால் அவனை பற்றி தெரிந்திருந்தவளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.
வேண்டாம் என்றால் வேண்டாம் தான். வேண்டும் என்ற பிடிவாதம் அவனை எந்தளவுக்கு ஸ்திரப்படுத்தும் என்பதை பலவிஷயங்களில் கண்கூடாக கண்டிருக்கிறாளே.
இப்படி இருவேறு மனநிலையில் வந்தவளுக்கு இங்கே கண்ணன் செய்தது பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.
“எல்லாம் குடுத்தாச்சு தம்பி. போதும். விட்டுடுங்க. இனியும் பேசி எங்க குறை உயிரையும் எடுத்துடவேண்டாம். பெத்து தொலைச்சிட்டோம். அதுக்காக கரை சேர்த்துவிட வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்…” என்று சஞ்சனாவின் தந்தை கையெடுத்து கும்பிட,
“இனியாச்சும் கவனமா இருங்க…” என்று சொல்லிவிட்டு கொஞ்சமும் இளக்கமின்றி, வருத்தமின்று வெளியேறினான் கார்மேகவண்ணன்.
கதவோரம் அழுகை சத்தத்துடன் நின்றவளின் இருப்பை அவனால் உணர முடிந்தது.
நிச்சயம் தவறை உணர்ந்து அவள் அழுதிருப்பாள் என்ற நம்பிக்கை இல்லை அவனுக்கு.
மாட்டிக்கொண்டோமே, இப்படி சபையில் அசிங்கப்படுத்திவிட்டானே என்றதில் தான் இத்தனை அழுகை என அவனால் பிரித்தறிய முடிந்தது இந்த கணம்.
மனதின் பாரம் மட்டும் இறங்கவே இல்லை அவனைவிட்டு. காதல் என்றான் கண்கட்டு வித்தை என்பார்களே? எத்தனை உண்மை என்று ஏளனமாய் சிரித்துக்கொண்டான்.
“இந்த லவ்க்கு கொஞ்சம் கூட அறிவே இல்லைல…” என்று அவனாகவே வாசலை விட்டு வெளியேறுகையில் கூற,
“அப்ப கனவில்லை மச்சான். காரை எடு…” என்று சொல்லி ஏற போக,
“அட போப்பா. அடுத்து என்ன செய்வியோன்னு பக்குன்னு இருக்கு. பிரியாணியை போட்டு என் கிட்னியை உருவ பார்த்த உன்னை நம்பி இனி வருவேனா? நான் காரை உன் வீட்டுல நிப்பாட்டிடறேன். நீ மேடம் கூட போ….”
“நேரா வீட்டுக்கு தான் போறோம். வாடா…” என்றான் கண்ணன்.
“இந்தா நீயே ஓட்டிட்டு போனாலும் உனக்கு மட்டும் இரக்கப்படவே மாட்டேன்…”
“எம்டி முன்னாடியே பேசறியே நீ….” என்று ஆழினியை கண்ணன் காண்பிக்க,
“சீட்டே கிழிஞ்சாலும் பரவாயில்லை. உசுரு முக்கியம்டா…” என்று நஞ்சப்பன் அவனோடு வரவேமாட்டேன் என நிற்க,
“நீங்க கிளம்புங்க. நான் கூட்டிட்டு போறேன்…” என்றாள் ஆழினி.
“நன்றி சொல்வேன் தெய்வமே. தேங்க்ஸ் மேம்…” என்றான் அவன் உடனே.
சொல்லிய வேகத்தில் கண்ணனின் காரை கிளப்பிக்கொண்டு அவன் கிளம்ப ஆழினி அவனை பார்த்தாள்.
“ப்ச், தலையெழுத்து…” என்று நெற்றியை நீவியபடி அசட்டையாக அந்த பைகளை எல்லாம் பின்னிருக்கையில் வீசியவன் முன்பக்கம் வந்து அமர்ந்து காலை நீட்டிக்கொண்டான்.
“கால் வலிச்சா சீட்டை பின்னாடி தள்ளிக்கோங்க…” என்று தானும் காரில் அமர்ந்ததும் அவன் முகம் பார்த்து சொல்ல,
“ஹ்ம்ம், நீயும் கொஞ்சம் அறிவு வாளி தான்…” என்றான் நக்கலாக.
“அது எனக்கே தெரியும். சிலருக்கு தான் இருக்கா இல்லையான்னே தெரியலை…” என்று ஆழினி காரை கிளப்ப,
“ஒத்துக்கறேன்…” என்றான் கார்மேகவண்ணன் கைகளால் கண்ணை மறைத்தபடி பின்னால் சாய்ந்து.
“எதை, அறிவு வாளில இல்லைன்றதையா?…”
“இருந்திருந்தா நான் ஏன் உன்கிட்ட வேலை பார்க்கறேன். அதுலயே தெரியலையா?…” என்று சொல்ல தலையசைப்புடன் ஆயாசமாய் சாலையை பார்த்தாள்.
இப்போது இத்தனை பேசுபவன் அலுவலகம் என்று வந்துவிட்டால் நடை, உடை, பாவனை, பேச்சுக்கள் எல்லாம் வேறுவிதம்.
அதை எண்ணி மின்னலாய் கீற்று புன்னகை ஆழினி முகத்தில் வெளிச்சம் கூட்டியது.
“அப்பறம் இன்னொன்னு சொல்லனும். இந்த கிப்ட்ஸ், ஜ்வெல்ஸ் எல்லாம் உன்கிட்ட இருக்கட்டும்..” என்று சொல்ல உள்ளுக்குள் அதிர்ந்தாலும் எதையும் காண்பித்துக்கொள்ளாமல் திரும்பி பார்த்தாள்.
“கொண்டுபோய் சித்தும்மாக்கிட்ட குடு. என்ன செய்யறதுன்னு சொல்லுவாங்க….”
“ஏன் மகிம்மா சொல்லமாட்டாங்களா?…” என்றதுமே, ‘அய்யனார்கிட்ட எனக்கு செருப்படி கன்பார்ம்’ என்று நினைத்துக்கொண்டவன்,
“எங்க வீட்டு அய்யனாரு மலைக்கும் மலையேறிடுவாரு…” என்று பாலிஷ்டாக சொல்ல க்ளுக்கென்று சிரித்துவிட்டாள் ஆழினி.
“ஆனா ரொம்ப காஸ்ட்லி லவ் போல?…” என்று நக்கலுடன் கேட்டவள்,
“எல்லாம் மாமாவை சொல்லனும். உங்க சம்பளத்தை என்ன பன்றடான்னு கேட்டு கணக்கு வச்சிருந்தா தெரிஞ்சிருக்கும். வைர மோதிரம் என்ன? செம்பு மோதிரம் கூட வாங்கி கிப்ட் பண்ணிருக்கமுடியாது…” என்றாள் படுநக்கலாய்.
“அவர் முடியாதுன்னு சொன்னா?…” என்று வேகமாய் கேட்டுவிட்டாலும் அது என்னவோ உண்மை தானே என்று தோன்றியது.
‘தன்னை கொஞ்சம் கண்டிப்புடன் வளர்த்திருக்கலாம்’ என்ற சிந்தனை உதித்த வேகத்தில் மறைந்தும் போனது.
‘தவறு என் மீதில்லை. நான் சரியாக இருந்திருக்கிறேன். என் தேர்வு பொய்த்திருக்க நான் எப்படி காரணம்?’ என்ற எண்ணம் இப்போதும் அவனுள் தலை தூக்கி அவனை நிமிர செய்தது.
இவ்வளவிலும் அவனின் மனதில் தான் தோற்றுவிட்டோம் என்னும் வலி தானே தவிர காதலை இழந்துவிட்டோம் என்றெல்லாம் இல்லை.
‘ஏமாறும் அளவுக்கா இருந்திருக்கிறோம்’ என்னும் நினைவு அவனின் இறுமாப்பை குறைக்க பார்த்தது.
‘சின்ன சறுக்கல். தட்ஸ் இட்’ தன்னை தானே தேற்றிக்கொண்ட கார்மேகவண்ணன் தன் தோளை தானே தட்டிக்கொடுக்க அவன் மீதும் கவனம் வைத்திருந்தவள் கவனத்தில் சிறு சிதறல்.
“ஓஹ் காட்…” என்று காரை ஒடித்து திருப்பி நிறுத்திவிட்டாள் எவ்வித சேதமும் இன்றி.
“ஹேய் பார்த்துடா…” என்று பட்டென்று பதட்டமாய் எழுந்தவன் அவளின் தலையை பிடித்து தன் தோளில் சாய்க்க நொடியில் சிறு அணைப்பும், ஆறுதலும்.
உச்சந்தலையில் அவனின் உள்ளங்கை சூடு பெண்ணின் கொதிப்பை கூட்ட தவிர்க்கப்பட்ட விபத்தை விட இந்த விபத்து அவளை பலமாய் ஆட்டிவைத்தது.
“ஓகே, ஓகே. ரிலாக்ஸ்….” என்று அவளை ஆற்றுப்படுத்தினான்.
பத்தே நிமிடங்கள். அவனிடமிருந்து மெல்ல தலையை விலக்கியவள் முகமெல்லாம் வியர்வை பூக்கள்.
“ஓகே, ஐ’ம்…” என்று ஆரம்பித்ததும்,
“போதும். ஒன்னும் சொல்லவேண்டாம். தண்ணியை குடி…” என்று நீரை தேட காரில் தண்ணீர் இல்லை.
“வாட்டர் பாட்டில் கூடவா இல்லாம கார் எடுத்த?…” கண்டப்பார்வை.
“மொபைல் குடு…” என்று அவளிடம் வாங்க,
“எதுக்கு?…” என்றாள் பதட்டத்துடன் தராமல்.
“போன்ல எதுவும் பேய் பிசாசு இருக்கா? குடுன்னு சொல்றேன்ல…” என்று வாங்கியவன் வாழவந்தானுக்கு அழைப்பு விடுத்து,
“பொண்ணு வெளில கிளம்பறான்னா கார்ல என்னென்ன இருக்குன்னு பார்த்து அனுப்பமாட்டியா மாமா? இல்ல கேட்கமாட்டியா? என்ன அப்பா நீ? வந்து பேசிக்கறேன். இதுக்கெல்லாம் அய்யனார் தான் கரெக்ட்…” என படபடவென்று பேசிவிட்டு போனை வைத்தவன் ஆழினியை பார்த்தான்.
நெற்றியில் இருகைகளையும் கொண்டு தாங்கியபடி அமர்ந்துவிட்டாள் ஆழினி.
“ஓய், என்ன தலையில அடி எதுவும் பட்டிருச்சா?…” என்று கார்மேகவண்ணன் கேட்க, அவனின் அந்த அக்கறை சக்கரை தேனீயாய் அவளை மொய்த்தது.
“ம்ஹூம்…”
“ஓகே, ட்ரைவ் பண்ணு…” என்று சொல்லி இப்போது சாய்த்திருந்த இருக்கையை நேராக்கி அமர்ந்துகொண்டான்.
“கால் வலிக்கும். நீங்க கால் நீட்டி படுத்துக்கோங்க…”
“ப்ச், அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன். எனக்கு நீ சொல்லாத. கிளம்பு…” என்ற கட்டளை.
அதற்கு மேல் பேசாமல் ஆழினி கிளப்ப, இதில் அவ்வப்போது கார்மேகவண்ணன் பார்வை அவளை தொட்டு, அவளின் கைகளை பார்த்து என படிந்து படிந்து மீள என்றுமில்லாதளவு அவனின் பார்வை இத்தனை நெருக்கத்தில் அவளை பதட்டம் கொள்ள செய்தது.
இத்தனை வருடத்தில் மொத்தவாழ்விலும் அவளை கவனித்தவனது அத்தனை பார்வையும் ஒட்டுமொத்தமாய் அவளிடம் இந்த நொடியில் குவிந்து விட திணறி போனாள் ஆழினி.
அலைகடலில் ஆர்ப்பரிப்பு அடங்க மறுக்க சட்டென எழுந்த ஆவேச அலை அவனை மொத்தமாய் சுருட்டிக்கொள்ள பேராவல் கொண்டது.