கார்மேகவண்ணன் வீட்டு வாசலில் வாகனம் நின்றதும் ஆழினி அவனை திரும்பி பார்க்க,
“ஒழுங்கா வீடு போய் சேரு…” என்றவன் இறங்கிக்கொள்ள மகிழா உள்ளிருந்து ஓடி வந்தார்.
“இந்த காலோட எங்க போன நீ? சொல்ல சொல்ல கேட்காம…” என்று மகனை பேச,
“ம்மா, வாசல்ல வச்சு இப்படித்தான் சத்தம் போடறதா?…” என்று முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான் கார்மேகவண்ணன்.
“இவனை என்ன சொல்லி தான் அடக்கன்னு தெரியலை…” என்று புலம்பியபடி திரும்பியவர் ஆழினி வருகையை கண்டு புன்னகைத்தார்.
“இப்பதான் நஞ்சு சொல்லிட்டு போனான் உன்கூட இவன் வரான்னு. எங்க போனான்னு கேட்டா சொல்லாமாட்டேன்றான். நீ எங்க பார்த்த ஆழி?…” என்றார் அவளிடம்.
“இதையும் வாசல்கிட்டவே சொல்லனுமா மகிம்மா?…” சிரிப்புடன் அவள் கேட்க,
“ஹ்ம்ம், இப்பதான திட்டிட்டு போனான். சரி வா வா…” என்று முன்னே நடந்தார் அவர்.
“கொஞ்சம் முன்னாடி தான் உன் மாமா யாரையோ பார்க்கனும்ன்னு கிளம்பி போனார். போகும்போதே அத்தனை கேள்வி உன்னை யார் அவனை வெளில அனுப்ப சொன்னதுன்னு…” என்று உள்ளே வந்தவர் அவளை அமர சொல்லிவிட்டு மகனை எட்டி பார்த்தார்.
கட்டிலில் அமர்ந்து காலை நீட்டிக்கொண்டிருந்தவன் முகத்தில் அப்பட்டமான வலியின் சாயல்.
“பாரு வலிக்குது போல. முகத்தை சுண்டவச்சிட்டு உக்கார்ந்திருக்கான். போய் கேட்டா சொல்லுவானா?…” என்று புலம்ப மகளிடமிருந்து அழைப்பு.
“ஷர்மி தான் கூப்பிடறா. ரெண்டுநாளா இவன்கிட்ட பேசனும்ன்னு சொல்லிட்டே இருக்கா….” என்று தன் போனை எடுத்து வைத்துக்கொண்டு கூற,
“பேச சொல்லுங்க மகிம்மா. இது ஒரு விஷயமா?…” என்றாள் ஆழினி.
“இது விஷயமில்லாம வேற என்னடா? அவ கூப்பிட்டா வீடியோ கால் தான். அதுவும் பாப்பா கேட்கவே மாட்டா. பார்த்து தான் பேசனும்ன்னு சொல்லுவா. இவன் முகத்துல காயமிருக்கு….” என்றதும் ஆழினியும் மௌனமானாள்.
ஒருமுறை அடித்து ஓய்ந்த அலைபேசியில் மீண்டும் சப்தம். ஷர்மிளா தான் அழைத்தாள்.
“எடுத்து பேசுங்க மகிம்மா…” ஆழினி சொல்ல,
“என்னத்த பேச? பேசினா பொண்ணு விஷயமா தான் பேசுவா. கண்ணன்கிட்ட பேசியாச்சான்னு கேட்பான். என்னத்த சொல்ல?…” என்றதும் ஆழினியின் முகம் மாறியது.
“காலையிலேயே கூப்பிட்டா. நான் தான் உடம்பு சரியில்லை. தூங்கறான்னு அது இதுன்னு சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன். கண்ணனுக்கும் கூப்பிட்டிருப்பா போல. பிஸின்னு மெசேஜ் பண்ணிருக்கான்…”
“சமாளிச்சு தானே ஆகனும்…” என்றதும்,
“சரி, இரு உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவரேன்…” என்று உள்ளே செல்ல போனவர்,
“ஆமா, நீ ஆபீஸ்ல இல்ல இருந்திருப்ப? நீ எங்கடா கண்ணனை பார்த்த?…” என்றார் அவளிடம் திரும்பி.
ஆழினிக்கு இந்த விஷயத்தை சொல்வதா வேண்டாமா என்று அத்தனை யோசனை.
“நஞ்சு கூட போனவன் உன்னோட வந்திருக்கான். எங்க போனான்னு தெரியுமா?…” என இன்னும் அருகில் வர, கார்மேகவண்ணனின் அறைக்கதவு பட்டென்று திறக்கப்பட்டது.
“இப்ப இந்த கேள்வி அவசியமா? எங்கையோ போனோம். ஆபீஸ் விஷயமா தான் போனோம்….” என்று சொல்ல, திடுக்கிட்டு நெஞ்சில் கைவைத்துவிட்டார் மகிழா.
“பிசாசு, பிசாசு மாதிரி இப்படியாடா மடார்ன்னு திறப்ப? உனக்கெல்லாம் உங்கப்பா தான் சரி. என்னை இந்த பாடு படுத்தற? பெத்து தொலைச்சிட்டேனேன்னு பல்லை கடிச்சுக்கிட்டு இருக்கவேண்டியதாருக்கு…” என்று ஆழினியிடம் கேட்டதை மறந்து மகனை வசைபாட,
“இதுக்குத்தான் வாழா வீட்டுக்கு வாழ போறேன்னு சொல்றேன். விட்டா தான? உனக்கும் புண்ணியமா போகும். உன் புருஷன் தொல்லை இருந்து எனக்கும் விடுதலை…” என்று இடக்காய் தாயிடம் பேசியவன் பேச்சில் ஆழினி மனதிற்குள் மெல்லிய பூஞ்சாரல்.
எதையும் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் போல் முகத்தை வைத்துக்கொள்ள கொஞ்சமே கொஞ்சம் சிரமம் தான் அவளுக்கு.
“இருடா ஆழி, டக்குன்னு சேமியா கிச்சடி செஞ்சு கொண்டுவரேன். பசியோட இவனை கூட்டிட்டு எதுக்கு போகனும்…” என்றபடி அவர் உள்ளே செல்ல போக,
“மகிம்மா, அதெல்லாம் வேண்டாம். நான் கிளம்பறேன். முக்கியமான வேலை. வீட்டுக்கு போகனும்…” என்று எழுந்துகொண்டாள் ஆழினி.
“உக்காரு. என்ன முக்கியமான வேலை? சரி, ஜூஸ் போட்டிருக்கேன். அதாச்சும் குடிச்சிட்டு போ…” என்று அவளை அமரவைக்க பார்க்க,
“ஆபீஸ் வேலை பார்த்து களைச்சு போய் வந்திருக்கார் உங்க பிள்ளை. அங்க குடுங்க உங்க ஜூஸை. நான் கிளம்பறேன்…” என்ற ஆழினி வாசல் பக்கம் திரும்பியவள்,
“இன்னும் பத்துநாளைக்கு ஆபீஸ்ல எந்த வேலையும் இல்லை மகிம்மா. எல்லாமே முடிச்சாச்சு. வெளில வர தேவை இருக்காது. பார்த்துக்கோங்க…” என்று போகிற போக்கில் ‘வெளியே விடவேண்டாம்’ என்பதையும் சொல்லிவிட்டே செல்ல,
“இவளை…” என்று பல்லை கடித்தான் கார்மேகவண்ணன்.
“இப்பத்தான் நிம்மதியா இருக்கு…” என்ற மகிழா,
“இருடா உனக்கு கொண்டுவரேன். ஒழுங்கா சூப்பையும், ஜூஸையும் குடிச்சு உடம்பை தேத்து. இன்னொருவாட்டி அடிவாங்க தெம்பு வேணா?…” என்று நக்கலாய் சொல்லி செல்ல,
“ம்மா, இங்க வா, என்ன சொன்ன?…” என அவன் வெகுட்டு கத்த காதில் விழாததை போல உள்ளே சென்றுவிட்டார் மகிழா.
ஜூஸுடன் இரண்டு நிமிடத்தில் அவர் வருகையில் முகமெல்லாம் சிவந்து கண்ணில் நீர் நிரம்பியிருந்ததை துடைத்திருந்த சுவடும் தெரிந்தது.
“ப்ச், இப்ப எதுக்கு அழுகை?…” என அசட்டையாக அதனை வாங்கியவன்,
“சித்தும்மாவுக்கு கால் பண்ணி அவங்க பெண்ணரசியை சாப்பிட சொல்லு. நேரம் தவறிருச்சுன்னு சாப்பிடாம இருப்பா…” என்று சொல்ல,
“ம்க்கும், இங்க உன்னையே சொல்லி திருத்த முடியலை. இதுல ஆழி கேட்பாளா?…” என்றவர்,
“ஆனா அவ கேட்பா. நீ தான் விதாண்டாவாதத்துக்கு பொறந்தவன்…” என்று மூக்கை உறிஞ்ச,
“அய்யனார பத்தி கரெக்ட்டா சொல்ல எங்கம்மாவால தான் முடியும்…” என்று சிரித்தான் கார்மேகவண்ணன்.
“நான் என்ன சொன்னேன்?…”
“இப்ப சொன்னியே, விதண்டாவாதம். அதானே அய்யனார்…” என அவன் இன்னும் சிரிக்க மகனின் புன்னகை முகத்தையே அப்படி அழுத்தமாய் பார்த்தார் கலங்கிய கண்களுடன்.
“ப்ச், ம்மா…” என்றவன் அவரின் தோளோடு அணைத்து பிடித்து,
“சின்ன சறுக்கல். யோசனையில்லாம ஏமாந்துட்டேன். சரியாகிரும்…” என்றான் இப்போது பொறுமையாய் அவரின் அழுகையை பார்க்கமுடியாமல்.
கோவேந்தன் வீட்டில் இருக்கையில் மகிழாவால் அழவும் முடியாது. அத்தனை சத்தம் போடுவார்.
“நம்ம உயிரை எடுக்கன்னே நாம தலைநாள்ல பெத்து வச்சிட்டோமே? அழுது மட்டும் என்னவாக போகுது?…” என்று அத்தனை பேசி தீர்த்துவிடுவார்.
அதிலும் இவ்வளவு காயமடைந்து வந்திருப்பவனை பார்த்து இரவெல்லாம் உறங்காமல் அவர் புலம்பிய புலம்பல் ஒருபக்கம்.
பார்ப்பவர்களுக்கு கோபம் போல் தோன்றினாலும் தன் மகனை இப்படி அடித்திருக்கின்றனரே என்னும் ஆற்றாமை ஆத்திரமாய் வெளிப்பட்டதன் பிம்பம் அது என்று வீட்டினர் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
“எப்படிடா அடிக்கலாம்ன்னு போய் கேட்கக்கூடிய காரியத்தையா உன் மகன் பண்ணிருக்கான். வேற விஷயமா இருந்தா நடக்கறதே வேற. எம்புள்ளைய நானே கை நீட்டினதில்ல. எந்த பயலோ இப்படி அடிச்சிருக்கானே? நல்லாருப்பானுங்களா? அம்புட்டுக்கும் காரணம் நாம பெத்து வச்சிருக்கறவன் தான்…” என்று அங்கலாய்த்து தீர்த்திருந்தார் மனைவியிடம்.
எப்போதும் சிரித்துக்கொண்டு, வம்பிழுத்துக்கொண்டு சுற்றி வருபவனை முடக்கி போட்டதை போல இப்படியாக்கி இருக்க பார்க்க பார்க்க தாளவில்லை.
இன்னும் விம்மி அழுதார் மகிழா. மகன் கைதானது வேறொரு ஏரியாவில் இருக்கும் காவல்நிலையம் என்பதனால் இங்கே அத்தனை சீக்கிரம் தெரிந்திருக்கவில்லை.
எத்தனை தான் வழக்காகாமல் வெளியே வந்திருந்தாலும் ஒருவருக்கு தெரிந்தால் அடுத்தடுத்து தெரியவரத்தானே செய்யும் என்று கலக்கம்.
அவனின் திருமணம் பற்றிய கவலை. பெண்ணின் வீட்டாருக்கு தெரிந்தால் தலையிறக்கமாக போகும்.
போதாததிற்கு மருமகனுக்கும், அவரின் குடும்பத்திற்கும் தெரிந்தால் அங்கே தன் மகளின் மதிப்பு என்னவாகும்? தங்களுக்கு என்ன மதிப்பிருக்கும்? என்று அவர் யோசிக்க யோசிக்க ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தது.
அவரின் சிந்தனை பல யூகங்களை கிளப்ப பயந்து போனவர் சத்தமாய் அழுதுவிட்டார்.
“அம்மாடியோ, என்ன மகி இது? மூச்…” என்று அதட்டிவிட்டான் கார்மேகவண்ணன்.
எத்தனை தான் பேசினாலும், திட்டினாலும் அவனால் அதற்கு ஈடுகொடுத்து பதில் தரமுடியும்.
ஆனால் கண்ணீர் என்றுமே அவனை தடுமாற செய்யும். அப்படி ஒரு கண்ணீர் சுமந்த முகம் கண்டு தானே இன்று அதன் பலனை அனுபவிக்கிறான்.
சட்டென்று எழுந்த சஞ்சனாவின் நினைவில் பல்லை கடித்துக்கொண்டவன் தலையை உலுக்கிக்கொண்டான்.
“என்னாச்சு கண்ணா? தலையில அடி பட்டிருக்குல. வலிக்குதா?…” என்றார் நெற்றியில் இருந்த வீக்கம் கண்டு.
“சத்தியமா அதிகமா வலிக்க போகுது. அழாம இருக்க போறியா என்ன?…” என்று சத்தம் போட்டவன் முகம் கோபத்தை காண்பிக்க கப்பென்று வாயை மூடினார் மகிழா.
அவ்வளவு ஆவேசம் அவனின் சத்தத்தில். இப்படியெல்லாம் அவன் அவரிடம் முகம் காண்பித்ததே இல்லை.
இப்போது அப்படி நடந்துகொண்டதில் அவனின் நிதானம் எங்கோ சென்றதை போலிருக்க,
“ப்ச், மகிம்மா…” என்றவன் மீண்டும் தாயை அணைத்துக்கொண்டான்.
“என்னை வாய் ஓயாம என்னவேணா திட்டிக்கோ. வேணும்னா அடிக்க கூட செய். தாராளமா வாங்கிக்கறேன். ஆனா அழ மட்டும் செய்யாதம்மா….” என்றவனின் குரலும் கரகரத்திருந்தது.