“என்னன்னு சொல்லா? ம்மா, மறந்து போச்சா? அந்த பொண்ணு விஷயம்?…” என ஷர்மி கேட்டதும், கார்மேகவண்ணன் கண்கள் இடுங்க பார்த்தான் தாயை.
இந்த விஷயத்தை மகிழா சொல்லியிருக்க போவதில்லை என்பது அத்தனை நிச்சயம்.
ஆனால் இதென்ன ‘பொண்ணு விஷயம்?’ என்று கேள்வியாய் பார்த்தவனும் அனுமானித்துவிட முறைத்து பார்த்தான் தாயை.
“இல்ல ஷர்மி, இன்னும் உன் அண்ணாகிட்ட பேசலடா…”
“பேசலைன்னா? பேசாம என்ன பன்றீங்க? போனதுமே பேசறேன்னு சொன்னீங்க? இவரும் என்னன்னு என்கிட்ட கேட்கிறார்…” என்றாள் ஷர்மிளா.
“சட்டுன்னு பேசற விஷயமா? அவன் குணமறிஞ்சு கேட்கனும். அதுக்குதான் நேரம் பாக்கறேன்…” என்றார் மகனையும் கெஞ்சுதலாய் பார்த்தபடி.
“நல்லா பார்த்த போ. ஏன்ம்மா இப்படி இருக்க? அங்கிட்டு அப்பாவுக்கு பயம். இங்கிட்டு அண்ணனுக்கும் பேச யோசிக்கிற? நீ பேசி சொன்னா தான போட்டோவை கேட்டு அனுப்ப முடியும்?…” என்றாள் ஷர்மிளா.
திருமண பேச்சை எடுக்கும்வரை கூட இத்தனை பெரிதாய் அவள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
ஆனால் தன்னுடைய கணவன் வீட்டு பக்கமே தன் அண்ணனை தேடி வர அதில் ஒரு சந்தோஷம் அவளுக்கு.
“தானா தேடி வர சம்பந்தம். பார்த்துக்கோங்க…” என்று சொல்லியவள்,
“ஆமாம்மா. ஷாப்பிங் தான்…” என்று கண் சிமிட்டினாள் தன் கையிலிருந்ததை பார்த்துக்கொண்டே.
கண்ணன் கொடுக்க சொல்லி தந்திருந்த பரிசு பொருட்கள் அவை. அதனை சித்தாராவிடம் தர வேண்டும் என்றும் சொல்லியிருக்க ஒரே யோசனை.
சித்தாராவிடம் சொன்னால் நிச்சயம் மகிழாவிடம் சொல்லாமல் அவர் இருக்கபோவதில்லை.
அதனால் அவரிடம் காண்பிக்காமலும், வேறு எதுவும் பேசாமலும் மாடிக்கு சென்றுவிட்டாள்.
“என்ன இந்த பொண்ணு நேரங்கெட்ட நேரத்துல வீட்டுக்கு வந்துட்டு என்னன்னே காமிக்காம போய்ட்டா?…” என்றார் செல்லும் மகளை பார்த்தபடி.
ஆழினி அந்த பொருட்கள் அடங்கியிருந்த பையை பிரித்தும் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை.
அடிமனது அனலாய் தகித்துக்கொண்டிருக்க அவற்றை விழுங்கியபடி தன் அறையில் ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைத்தாள்.
அதற்குள் வாழவந்தான் அழைத்திருக்க முகம் கழுவிவிட்டு வந்து போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
“ஏன்டாம்மா, பார்த்துட்டு காரை எடுத்துட்டு போகக்கூடாது…” என கேட்டவர், நடந்தவற்றை மகள் சொல்லி கேட்டு,
“அங்க வேற எதுவும் பிரச்சனை பண்ணலையே அவன்?…” என்றார் மகளிடம்.
“இதைவிட வேற என்ன பண்ணனும்? புண்ணியத்துக்கு மண்டபத்துக்கு போய் நிக்காம இருந்தாரே…” என்றாள் ஆழினி அலுப்புடன்.
“செஞ்சாலும் என்ன தப்புங்கேன்? பொண்ணை பெத்தவங்களா மக என்ன செய்யறா ஏதுன்னு கூடவா பார்க்காம இருப்பாங்க? அப்ப தேவை தான். பாவம் கண்ணா…” என்றவருக்கு ஒரே கவலை தன்னிடம் சொல்லாமல் சென்றானே என்று.
“சொல்லியிருந்தா கூட போய் வாங்கிட்டு வந்திருப்பீங்களா?…” என்று ஆழினி கிண்டல் பேசி சிரிக்க,
“போனா என்ன தப்புன்னு கேட்கறேன்? போயிருந்தா நல்லா நாலு கேள்வி கேட்டுட்டு வந்திருப்பேன்…” என்று இப்போதும் வாழவந்தான் கொந்தளித்தார்.
“என்னதான் பெத்தவங்க பிள்ளைங்களை கண்காணிச்சாலும் எல்லா விஷயத்தையும் அவங்களால கணிக்கவும், கண்டுபிடிக்கவும் முடியாதுப்பா…” என்றாள் ஆழினி ஆழ்ந்த குரலில்.
“என்ன சொல்ற ஆழிம்மா?…” என்றவரின் புரியாத கேள்வியில் தான், சுதாரித்த ஆழினி,
“இவ்வளோ தெரிஞ்ச உங்க கண்ணாவை உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா? அதை சொன்னேன்…” என்று சமாளித்தாள் அவள்.
“அதுவும் சரிதான். மனசு உடைஞ்சு போயிருப்பான். நான் வரும்போது அவனோட வெளில போய்ட்டு வரேன். அம்மாக்கும் சொல்லிடறேன்…”
“ப்பா இந்த ஜ்வேல் விஷயம் அம்மாவுக்கு தெரிய வேண்டாம் இப்போதைக்கு….”
“புரியுது ஆழி…”
“ஹ்ம்ம், பேச்சுவாக்குல சொல்லிட போறீங்க. நீங்க வரவும் என்கிட்ட இருந்து வாங்கிக்கோங்க…”
“இல்ல இல்ல. உங்கிட்டவே இருக்கட்டும். அங்க சூழ்நிலை சரியாகி, இதுலருந்து மீண்டு வரட்டும். அப்பறம் கண்ணன் கேட்கும்போது குடுப்போம்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தார் வாழவந்தான்.
போனை வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தவள் முகத்தில் அவ்வளவு சஞ்சலம். இந்த பொருட்கள் அவளின் மனபாரத்தை குறைப்பதை விட கூட்டி சென்றிருந்தது.
அறைக்குள் அமரமுடியாமல் கீழே வந்துவிட்டாள் ஆழினி.
———————————————-
பத்துநாட்கள் கழித்து அவனின் வருகை. அலுவலகத்தில் அனைவரின் பார்வையும் கார்மேகவண்ணன் மீது தான்.
பார்மல் உடையில் வெகுநாட்களுக்கு பின் அவனை காண்கிறாள் ஆழினி. இந்த இடைப்பட்ட நாட்களில் வீட்டிற்கு சென்றாலும் பெரும்பாலும் அவன் அவனின் அறைக்குள் தான் இருந்தான்.
அதனால் அப்போது காண்பதற்கும் வாய்ப்பு குறைவாக இருக்க என்றைக்கு அலுவலகம் வருவான் என்று காத்திருக்கவேண்டிய சூழ்நிலை.
இதோ அந்த நாளும் வந்திருக்க அவனின் வருகையில் நடந்த விஷயம் அறிந்த ஒருசிலரால் இன்னும் சிலருக்கு பரவி இருந்தது.
வந்ததும் நேராக வாழவந்தான் அறைக்கு செல்லும்முன் ஆழினியிடம் ரிப்போர்ட் செய்ய வந்துவிட்டான் கடமையாய்.
“குட்மார்னிங் மேம்…” அளவான புன்னகை அவனிடத்தில்.
அலுவலகத்தில் அவனின் விளையாட்டுக்கள் எதுவுமே எப்போதும் தலை நீட்டாது.
அங்கே அத்தனை பொறுப்புடன், அவனின் பதவிக்கான மிடுக்குடன் தான் செயல்படுவான்.
வாழவந்தான், ஆழினி அவர்களின் நெருக்கம் என எதையும் அவன் காண்பித்துக்கொள்ளமாட்டான்.
“மேம்…” மீண்டும் அவன் அழைக்கவும்,
“எஸ்…” என்று உறக்கத்தில் இருந்து விழிப்பதை போல அவள் பார்க்க, அவனின் அடிக்கண்ணில் மெல்லிய முறைப்பு.
“போச்சு ஈவ்னிங் அப்பாக்கிட்ட சொல்லி பேச போறான்…” என்று சத்தமின்றி சொல்லிக்கொண்டவள் அவனிடம் விழிகளால் என்னவென கேட்க,
“லீவ் ஓவர்…” என்றுமட்டும் பல்லிடுக்கில் வார்த்தைகள் வந்து விழ அவன் நீட்டிய காகிதத்தை வாங்கிக்கொண்டாள்.
“ஓகே, கோஅஹெட்…” என்று சொல்லவும் தலையசைத்து கார்மேகவண்ணன் நகர ‘அச்’ என்றொரு தும்மல்.
“எக்ஸ்க்யூஸ் மி…” என்று அவன் திரும்பி தன்னை பார்த்ததும் ஆழினி கை நீட்டி சொல்ல, தலையசைப்புடன் மீண்டும் கதவில் கைவைக்க போனவன் பார்வை அடுத்த காலடியை பாதிக்கும் முன் கீழே சென்றது.
அதன்மேல் காலடியை வைக்காமல் புருவங்கள் சுருங்க குனிந்து அதனை கையில் எடுத்தான் கார்மேகவண்ணன்.
அடர்ந்த நீல நிறத்திலான கல் பதிக்கப்பட்ட மூக்குத்தி. பார்த்ததும் அது ஆழினியுடையது என்று புத்தி உணர்த்தியது.
அவள் அணிந்து பார்த்தது கூட வெகு சாதாரணம் தான். ஆனால் அந்த மூக்குத்தி வளைவுடன் மூக்கில் சொருகப்படுவதை போன்ற வடிவமைப்பில் இருந்தது.
முன்பொருமுறை மகிழாவையும், சித்தாராவையும் அதனை அணிந்துகொள்ளும்படி பாடாய் படுத்தியிருந்தான் கார்மேகவண்ணன்.
“இதுக்கு மூக்கு குத்தனும்ன்னு எல்லாம் இல்லை அம்மாஸ். சும்மா மாட்டிக்கிட்டா போதும். வேண்டாம்ன்னா கழட்டிக்கலாம். ட்ரை பண்ணுங்களேன்…” என்று அவர்களை விரட்டோ விரட்டென்று விரட்டிய நாட்கள் அவன் நினைக்காமலே இப்போது வந்து எழுந்து நின்றது.
கண்ணை பறிக்க ஒளிர்ந்த அந்த மூக்குத்தியை உள்ளங்கையில் வைத்தபடி பார்த்தவன் மீண்டும் திரும்பி ஆழினியை பார்த்தான்.
அவன் பார்வையும், அவன் கையிலிருந்த மூக்குத்தியும் ஆழினியை தாக்க மேஜையை பிடித்துக்கொண்டு இருக்கையை இன்னும் அதனை நெருங்கவைத்து அமர்ந்திருந்தாள் ஆழினி.
எதுவும் பேசாமல் அதனை கொண்டுவந்து ஆழினியிடம் நீட்ட எதுவும் கேட்பானா என்ற பயமும், எதிர்பார்ப்பும் அவளை பிடித்துக்கொண்டது.
“உன்னோடது தானே?…” என்றிருந்தான் கார்மேகவண்ணன்.
“ஹாங்…” என்றவளுக்கு அத்தனை அதிர்ச்சி.
இத்தனை வருடத்தில் முதன்முறையாக அங்கே ஒருமையில் அவன் பேசுவது இதுவே முதல்முறை.
“ஹ்ம்ம்…” என தலையசைத்தாள்.
“டேக் இட்…” என்றான்.
அப்படி ஒரு ஆராயும் பார்வை அவளை அழுத்தமாய் துளைத்தது. இதுவரை கண்ணில் பட்டாலும் கவனத்தில் பதியாதது அவனுள் என்னவோ ஒரு கேள்வியை தூண்டிவிட்டதை போலிருந்தது.
எழுந்து நின்று அவன் கைகளில் இருந்து எடுத்துக்கொண்டவள் முகத்தை பார்த்தபடி கண்ணன் திரும்பி நடக்க, ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் மனதில் கொந்தளித்த படபடப்பை அடக்கியபடி நின்றாள்.
கதவு வரை வந்து நின்றவன் கைகள் கதவை திறக்கவும் கிளம்பிவிட்டான் என்ற பார்வையுடன் மூக்குத்தியை ஆழினி தன் மூக்கில் அணிய, அதேநேரம் மீண்டும் அவளை திரும்பி பார்த்தான் கார்மேகவண்ணன்.
அவன் பார்த்ததுமே ஆழினியின் கைகள் தானாய் கீழே இறங்க, இதோ அவனுக்கான தரிசனம்.
பதட்டத்தில் சிவந்து கனிந்திருந்த அவளின் மூக்கில் பொட்டாய் ஒளிரிடும் பளபளப்பு கார்மேகவண்ணன் கண்களை கூச செய்வதை போல மின்னியது.
கருமேகம் கார்காலம் கொண்டு வானம் கொட்டுவதற்கென்று காத்திருந்தது ஆழமான அலைகடல் அசைந்தாடியபடி.