வாழவந்தான் இந்த சிலவார்த்தைகளிலேயே சிலையாய் நின்றுவிட்டார். அதனை சொல்லும்பொழுதே அவன் முகத்தில் எத்தனை வேதனை.
மனதெல்லாம் தவித்தது தான் பெறாத அப்பிள்ளைக்காக. பாவம் போல் நின்றவரை பார்த்ததும் சிரிப்புடன் சேர்த்து அணைத்துக்கொண்ட கார்மேகவண்ணன்,
“யோவ் மாமா, பாதி கதையோட நிப்பாட்டிட்டேன்னு இதென்ன சோகமான லுக். செட்டே ஆகலை…” என்று சொல்லி இன்னும் சிரிக்க,
“போடா…” என்றவர் அவனின் கையிலிருந்து நழுவி திரும்பினார்.
“எங்க போக? வா, சேர்ந்து போவோம்…” என்று இன்னும் கேலியாய் அவன் சொல்ல வாழவந்தான் கைபேசியில் ஆழினி.
“ஆழி தான்…” என்றவர் அழைப்பை ஏற்க,
“ப்பா, என் கார் பஞ்சர். எங்க இருக்கீங்க?…” என்று கேட்க,
“ஈசிஆர்…” என்றவரின் பதிலில் அவனுடன் இருக்கிறார் என்று புரிந்துபோனது.
“ஓகே, நான் மேனேஜ் பண்ணிப்பேன்…” என்று வைத்துவிட்டாள்.
“மேனேஜ் பண்ணிப்பாளா? என்ன இந்த பொண்ணு?…” என்று மீண்டும் ஆழினிக்கு அழைக்க,
“என்னாச்சு?…” என்றான் கார்மேகவண்ணன்.
“கார் பஞ்சராம். இவ என்னன்னா எங்க இருக்கீங்கன்னு கேட்டு மேனேஜ் பண்ணிப்பேன்னு சொல்லி வைக்கறா…” என்று இவனிடம் சொல்ல ஆழினி எடுத்துவிட்டாள்.
“நான் பார்த்துக்கறேன் ப்பா. ப்ளீஸ்…” என்று எடுத்ததும் சொல்ல,
“இதுக்கும் ப்ளீஸ்? எங்க இருக்க இப்ப?…” என்றான் அவளிடம் கார்மேகவண்ணன்.
அவள் பதில் பேச ஆரம்பிக்கவுமே அவரிடமிருந்து கைபேசியை வாங்கியிருந்தான் அவன்.
“இல்லை, நான் பார்த்துக்கறேன்…”
“நீ என்ன பார்த்துப்பன்னு கேட்கலை. எங்க இருக்கன்னு கேட்டேன்…” என்று இடம் விசாரித்துவிட்டு,
“நஞ்சு அங்க பக்கத்துல தான் இருப்பான். அவன் வரவும் நீ கிளம்பு. கார் ரெடியாகவும் அவன் கொண்டுவருவான்…” நஞ்சப்பனுக்கு அழைத்து விவரம் சொல்லி ஆழினியை வீட்டிற்கு அனுப்ப சொல்லிவிட்டு வாழவந்தானை அழைத்துக்கொண்டு கிளம்பி வந்துவிட்டான்.
அவள் இருந்த இடம், அந்த ஏரியா, அவள் ஏன் அங்கே செல்லவேண்டும் என்ற எந்த கேள்வியும் அவனிடமில்லை.
கேட்கவேண்டும் என்றும் நினைக்கவில்லை. அதனை கருத்தில் கொள்ளவும் இல்லை கார்மேகவண்ணன்.
அங்கே ஆழினி செல்ல அவசியமில்லையே என்றும் அவனுக்கு தோன்றவில்லை. ஆழினி இருந்த இடத்தின் அருகில் நஞ்சப்பன் விலாசம் மட்டுமல்ல, சஞ்சனாவின் விலாசமும் உண்டு என்பது புத்திக்கு அந்தநொடி உரைக்கவே இல்லை கார்மேகவண்ணனுக்கு.
அதன்பின்னான நாட்கள் எல்லாம் ஆழினியின் பார்வையை ஆராய்வதையும் ஒருவேலையாக எடுத்துக்கொண்டது அவனுள்ளம்.
அவனின் அனுமதி எல்லாம் அவசியமே இல்லை என்பதை போல தன் முதுகை துளைக்கும் பார்வைகளுக்கான வேறுபாடுகளை பட்டியலிட துவங்கியது.
இதற்கு முன்னும் யாரோ தன்னை பார்வையால் தொடர்கிறார்கள் என்று உள்ளுணர்வு எடுத்துக்கொடுத்தாலும், இவ்வளவு பேர் வேலை பார்க்கும் அலுவலகம், பார்க்கத்தானே செய்வார்கள் என பெரிதாய் நினைத்ததில்லை.
ஆனால் அப்படியல்ல என்று உணர்ந்துகொள்ள ஆரம்பித்தவனுக்கு சிலநாட்களிலேயே புரிந்துபோனது ஆழினியின் எண்ணவோட்டம்.
முதலில் அதனை தவிர்க்க ஆரம்பித்தவன் நாளாக நாளாக அவள் பார்க்கிறாளா என்று கவனிக்க தொடங்கி இருந்தான்.
பலநேரங்களில் நேரடியாக கேட்டுவிடுவோமா என்ற உந்துதலில் கிளம்பி செல்பவனின் வேகத்தை அவளின் விழிகள் மொழியும் மௌனத்தில் பல்லை கடித்துக்கொண்டு திரும்பிவிடுவான்.
‘ஆமாம் என்றுவிட்டால் மட்டும் என்ன செய்துவிட போகிறாய் நீ?’ என அவன் மனது அவனை சாடியது.
“இல்லைன்னு சொல்லி, நீயா என்னை இப்படி நினைச்சன்னு கேட்டுட்டா? வேண்டவே வேண்டாம்…” என்றும் சொல்லிக்கொண்டான் அவனிடமே.
ஆறேழு மாதங்கள் இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டிலேயே நாட்கள் நகர்ந்தோடியது.
சஞ்சனாவின் தாக்கத்திலிருந்து மொத்தமாய் வெளியே வந்துவிட்டான். அதன் சுவடு கூட அவன் மனதில் எங்கும் இல்லை. அதன்பின் அவளை எங்கேயும் காணவும் இல்லை.
சமீபமாய் தான் மகிழா அவனின் திருமணம் பற்றிய பேச்சை மீண்டும் துவங்கியிருந்தார்.
அன்று அவரிடம் காய்ந்துவிட்டு தான் தாமதமாக அலுவலகம் வந்தவனோடு உள்ளே நுழைந்தான் நஞ்சப்பன்.
“மார்னிங் டா பாய்சன்…” என்று அவனை கண்டதும் இலகுவான மனதோடு கார்மேகவண்ணன் பேச அவனை முடிந்தமட்டும் முறைத்துவிட்டு தாண்டி உள்ளே சென்றுவிட்டான் நஞ்சப்பன்.
“ஓஹ், இன்னைக்கு ஸார்க்கு குவா குவா டே இல்ல….” என சிரிப்புடன் பின்னே சென்றதும் நஞ்சப்பனை தேட அவன் ஆழினியின் அறைக்குள் நுழைந்தான்.
அங்கே ஏற்கனவே வாழவந்தானும் இருக்க கார்மேகவண்ணனும் அங்கே சென்று வாழ்த்தினான்.
“நீ பேசாதடா…” என்று எச்சரிப்பதை போல சுட்டுவிரல் நீட்டி எச்சரித்த நஞ்சப்பன்,
“சொல்லுங்க மேம்…” என்றான் ஆழினியிடம்.
“என்னாச்சு? அவர் விஷ் தானே பண்ணினார்?…” என்றாள் ஆழினி.
“அதானே?…” வாழவந்தானும் சொல்ல,
“நல்லா விஷ் பண்ணான். அட போங்க ஸார். இன்னைக்கு பர்த்டே கொண்டாடற மூடே போச்சு…” என்று கார்மேகவண்ணனை பார்த்து பல்லை கடிக்க,
“நான் என்னடா பண்ணேன்?…” என்றான் சிரிப்புடன் அவன் முகம் பார்த்து.
“என்னடா பண்ணலை? உன்கிட்ட பர்ஸ்ட் விஷ் பண்ணுன்னு நான் கேட்டேனா? இல்ல கேட்டேனான்னு கேட்கறேன். உன்னை யார்ரா நைட்ல விஷ் பண்ண சொன்னா?…” என்று கோபமாய் சொல்ல அப்போது தான் நஞ்சப்பனின் நெற்றியில் இருந்த வீக்கத்தை பார்த்தான் கார்மேகவண்ணன்.
“தலையில என்னடா காயம்?…” என்று இன்னும் அருகே வர,
“எல்லாம் உன்னால தான்…” என்ற நஞ்சப்பன்,
“நீங்களே பாருங்க ஸார் எப்படி விஷ் பண்ணிருக்கான்னு…” என தன் கைபேசியில் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு கார்மேகவண்ணன் அனுப்பியிருந்த வாழ்த்து செய்தியை காண்பித்தான்.
படித்ததும் வாழவந்தான் வயதை மறந்து குபீரென சிரித்துவிட அதனை ஆழினியும் வாங்கி பார்க்க அவளுக்கும் புன்னகை தான்.
“என்னடா அனுப்பினேன்? ஒரு வாழ்த்துக்கா இந்த அக்கப்போரு?…” என்று அதனை தானும் வாங்கி பார்க்க அவனின் முகம் விளக்கெண்ணெய் குடித்ததை போலானது.
‘இனிய பறந்த நாள் வாழ்த்துக்கள்டா மச்சான். வருஷா வருஷம் நீ சந்தோஷமா பறக்கனும்டா பாய்சா. நாளைய பொழுது விடிஞ்சதும் சந்தோஷமா பற’ என்று அனுப்பியிருந்தான் கார்மேகவண்ணன்.
“உன்னை எல்லாம் எவன்டா தூக்கத்துல தமிழ்ல விஷ் பண்ண சொல்லி அழுதா?…” என்று நஞ்சப்பன் எகிற,
“அது டைப்போடா மச்சான்…” என்ற கண்ணன்,
“ஆமா தலையில என்னடா?…”
“மரியாதையா போயிரு…” என்றவன் வாழவந்தானை பார்த்து,
“எந்திச்சதும் இந்த வாழ்த்து தான் ஸார் முதல்ல பட்டுச்சு. எப்பவும் இவன் அர்த்தராத்திரில மெசேஜ் பண்ணமாட்டானேன்னு எடுத்து பார்த்தா நிஜமாவே பறந்துட்டேன்…” என்றவன்,
“கரண்ட் இல்லையேன்னு நைட்ல மொட்டைமாடில படுத்து எந்திச்சு பார்த்தா இப்படி ஒரு விஷ். இவனைன்னு நினைச்சுட்டே திரும்பினா அம்புட்டு கொடிலையும் துணியை போட்டுவச்சு கால்ல சிக்கி, பல்டியடிச்சு பறந்து விழுந்து வாரினது தான் மிச்சம்….”
“எப்பேவாடா மச்சான்…” என கிண்டலாய் கேட்டவனை ஒன்றும் சொல்லாமல் பல்லை கடித்தவன்,
“எப்பே தான். பின்னாடி வந்துடாத…” என்று சொல்லிவிட்டு செல்ல ஆழினியும், வாழவந்தானும் பொங்கி பொங்கி சிரித்தனர்.
“விஷ் அருமை தெரியாதவன்…” என்ற தோள் குலுக்கலுடன் கார்மேகவண்ணனும் சிரித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
“நல்ல பிள்ளைங்க….” என்று வாழவந்தானும் சிரிக்க ஆழினியின் முகத்தில் இன்னும் புன்னகை குறையாமல் சிதறல் தூவியது.
மாலை நஞ்சப்பனை அழைத்துக்கொண்டு வெளியே சென்று சமாதானம் செய்யவேண்டும் என கார்மேகவண்ணன் நினைத்திருக்க அதற்கு வாய்க்கவில்லை.