வாழவந்தானுடன் பேசி முடித்த ஆழினி அவர் கிளம்பவும் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிக்க கார்மேகவண்ணனுக்கு அழைப்பு விடுத்தாள். கதவை தட்டி உள்ளே நுழைந்தவன் அவள் முகம் பார்த்தான்.
அடர்ந்த கத்தரிப்பூ வர்ணத்தில் அவள் அணிந்திருந்த உடை நிறத்திற்கு ஏற்ப அவள் மூக்குத்தியும் மின்னியது.
‘எப்பவும் ட்ரெஸ்க்கு மேட்சா தான் போடுவாளா?’ என்றொரு யோசனை அவனுள் இப்போது பார்த்ததுமே.
“உட்காருங்க…” என அவனை அமர சொல்லியவள் தனது லேப்டாப்பில் ஒரு மாதிரி வீடியோவை ஓடவிட்டாள்.
“நமக்கு அனுப்பின டிஸைனும், இந்த வீடியோவும் கொஞ்சம் வேற மாதிரி இல்லையா?…” அவள் கேட்க,
“பார்த்திடறேன்…” என்று தன் பக்கம் நன்றாக திருப்பிக்கொண்டான் கார்மேகவண்ணன்.
“இந்த வீடியோ எப்போ எடுத்தது?…” என்றவன் கேட்க,
“நேத்து நான் தான் எடுக்க சொன்னேன். நாம டிஸைன் பண்ணின வீடியோ மெசர்மென்ட்ல இருந்து சின்ன சின்ன சேஞ்சஸ் நடந்திருக்கு. அதான் வொர்க்கை ஸ்டாப் பண்ண சொல்லிருக்கேன்…” என்றாள்.
“முதல்ல அங்க என்ன தவறு நடக்குதுன்னு தெரியனும். எதுக்காக இப்படி பேட்ச்அப் பன்ற மாதிரி பிசிறல் இருக்குன்னு கண்டுபிடிக்கனும்….” என்றாள்.
“இது பிசிறல் தானா? ஐ மீன், கவனக்குறைவால செஞ்சு அதுக்கப்பறம் அதை மறைக்க பண்ணினது தானா? இல்லை நிஜமாவே அங்க வேற எதுவும் தப்பு நடக்குதா?…” என யோசித்தான் கார்மேகவண்ணன்.
“நடந்திருந்தா இஞ்சினியர் சொல்லியிருப்பார். மேனேஜர் கூட அங்க தானே இருக்கார்….” என்றவளுக்கு அவன் சொல்லியபின் அந்த யோசனையுமே வந்தது.
அதற்குமேல் யோசிக்காமல் தன் காரியத்தரசி சுலோக்ஷனாவிற்கு அழைத்தவள்,
“பூந்தமல்லி ப்ராஜெக்ட் மேனேஜர், இஞ்சினியர் எல்லாரையும் வர சொல்லு சனா…” என்று உத்தரவிட,
“மேம், அங்க வொர்க் ஸ்டாப் பண்ணிருந்தீங்களே?…”
“தெரியயும். வர சொல்லு…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டவள் யோசனையாக,
“இப்ப எதுக்கு டென்ஷன்? பில்டிங் இன்னும் பர்ஸ்ட் ப்ளோர் வரலையே? பார்த்துடுவோம்….” என்றவன் அங்கிருந்தே தனது கைபேசியில் இருந்து அங்கே கட்டிட வேலை செய்பவர்கள் இருவரை பிடித்தான்.
அவர்களிடம் விளையாட்டாய் ஓரிருவார்த்தைகளும், அவர்களின் நலனையும் விசாரித்தவன்,
“அப்பறம் ண்ணே வேலை எல்லாம் எப்படி போகுது?…” என்று சாதாரணமாய் கேட்பதை போல சிரித்தபடி விசாரிக்க, ஆழினியின் கவனம் அவனிடம் குவிந்தது.
“ஹ்ம்ம், அப்படியா? சரி நீங்க மேனேஜர்கிட்ட சொல்லவேண்டியது தானே? இல்லை எனக்கு கூப்பிட்டிருக்கலாம்…” என்று பேச பேச கார்மேகவண்ணன் முகமே மாறியது.
ஆழினிக்கு அவன் முகபாவனையில் என்னவோ அங்கே தவறு நடப்பது ஊர்ஜிதமாகிவிட பரபரப்புடன் பார்த்தாள்.
“சரி நான் பார்த்துக்கறேன். நீங்க எதுவும் யார்கிட்டயும் இதுவிஷயமா பேசவேண்டாம்…” என்று சொல்லியவன் சற்றுநேரத்தில் சிரித்தபடி,
“அதெல்லாம் பயப்படவேண்டாம். இதை நான் எப்படி கொண்டுபோகனுமோ அப்படி பார்த்துக்கறேன்….” என்றவன்,
“அட என்னண்ணே நாமெல்லாம் வேலை செய்ய வந்தவங்க. ஒருத்தரை ஒருத்தர் நாம தான் தாங்கி பிடிச்சுக்கனும். விடுங்க பார்த்துக்கறேன். இருந்தாலும் இந்த விஷயம் அரசல்புரசலா தெரிய வந்தப்பவே நீங்க என்கிட்டையாச்சும் இப்படி நடக்குதுப்பான்னு சொல்லியிருக்கலாம்…” என்றான் பேச்சுவாக்கில் ஊசி ஏற்றுவதை போல.
“புரியுதுண்ணே, அதுக்காக நமக்கு பொழைப்பை குடுத்து அதுக்கு சம்பளம் குடுக்கறவங்களுக்கு விசுவாசமா இருக்க வேண்டாமா? உண்மையை சொல்ல எதுக்கு பயப்படனும்? சரி சரி சங்கடப்படாதீங்க. என்னவோ மனசுல பட்டுச்சு சொல்லிட்டேன். ஏன் நான் சொல்லக்கூடாதா?…” என்று நயமாய் பேசி அவரிடம் நன்றி சொல்லி அழைப்பை துண்டித்து கைபேசியை மேஜையில் தூக்கி போட்டான்.
“என்னாச்சு? என்ன சொன்னாங்க? பேசினது யார்?…” என்று ஆழினி கேட்க,
“ஜல்லி காண்ட்ராக்ட்டை வேற ஒருத்தருக்கு மாத்திவிட்டேல. அவன் சூனியம் செஞ்சிருக்கான்…” என்றான் இரு கை விரல்களையும் சேர்த்து மடக்கி சொடுக்கிட்டபடி.
“என்ன? அது எப்பவோ நடந்தது. குவாலிட்டியா இல்லை. அதோட ரொம்ப டிலே டெலிவரி. நம்மோட தேவைக்கு தான் அவங்க சப்ளை பன்றாங்க. அதுவும் சும்மா இல்லை…” என்று ஆழினி பொரிய,
“உன்கிட்ட ஏற்கனவே…” என்றவன் பார்வையில் நிதானமானவள்,
“இல்லை, இவ்வளோ நாள் கழிச்சு ஏன்?…” என்றவள்,
“நம்மோட சைட்ல யார்?…” என்றாள் அவனிடம்.
“இஞ்சினியர் சுரேஷ். அவர் தான் இங்க ஒரு பிக்சர் குடுத்துட்டு இப்ப அங்க சின்ன சின்ன இடங்களையும் மாத்த சொல்லிருக்கார். விசாரிச்சா தெரியும்…” என என்றவன்,
“உடனே செஞ்சா ஈசியா அவன் பக்கம் கவனம் போகும்ன்னு லேட் பண்ணி பண்ணிருக்கான். புத்திசாலியாம்…” என்றான் கண்ணன்.
“ஓகே, நான் பார்த்துக்கறேன். அதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட சொல்லனும்…” என்றதும் இருவருமே வாழவந்தானை பார்க்க சென்றனர்.
விஷயத்தை கூறவுமே அத்தனை கோபம் அவருக்கு. அவர்கள் வரவும் தன்னிடம் அழைத்து வரும்படி சொல்ல இஞ்சினியர் மட்டும் வரவில்லை.
“கண்ணா என்ன செய்யலாம்?…” என்றார் அவனிடம்.
“கம்ப்ளைண்ட் பண்ணலாம் ப்பா…” ஆழினி சொல்ல,
“என்னன்னு கம்ப்ளைண்ட் பண்ணுவீங்க? எந்த எவிடன்ஸும் இல்லை. கேட்டா கவனக்குறைவுன்னு ஸாரி சொல்லிட்டு போய்டுவான். கேஸ் நிக்காது. கண்டிப்பா சிக்குவான். நான் பார்த்துக்கறேன்…” என்று பொறுப்பை தான் எடுத்துக்கொள்ள அங்கே வேறொருவரை பணிக்கு அமர்த்தினார்கள்.
மற்றவர்களையும் எச்சரித்து அவ்விடத்தில் வேலையை துவங்குமாறு சொல்லி அப்போதைக்கு அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
மதியஉணவுநேரம் அது. இந்த பிரச்சனை நடந்ததில் பசியென்பதே இரண்டுமணி தாண்டும் வரையிலும் இல்லை.
“எவ்வளோ நேரம் சாப்பிடாம இருக்க போறீங்க?…” என ஆழினி கேட்கவும் தான் வாழவந்தானும், கண்ணனுமே பசி உணர்ந்தனர்.