அந்த அதீத பதட்டம் இன்னுமே அவனை அவளிடம் செலுத்த, நீட்டிய கை கொண்டு அவளின் முன்னிருந்த தம்ளரை சுட்டிக்காட்டினான்.
“ஓஹ், ப்ளீஸ்…” என்று எடுத்து தந்தவள்,
“இருமல் பரவாயில்லையா?…” என்றாள்.
“ஹ்ம்ம்…” என தலையசைத்தபடி தண்ணீரை பருகியவன் முகத்தில் தான் அவள் பார்வை.
“தேங்க்ஸ்…” என்று சொல்லியவன்,
“என்ன சொன்ன? கண்ணான்னா?…” என கேட்கவும் தூக்கிவாரிப்போட்டது ஆழினிக்கு.
“அதுவந்து இருமல். பதட்டத்துல…” என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் திண்டாட,
“நீ இதுவரைக்கும் என்னை அப்படி கூப்பிட்டதில்லைல…” என்றான்.
பதிலின்றி நின்றாள் ஆழினி. கண்கள் விரிந்து அகன்று இருக்க அவள் முகத்தில் முத்து முத்தாய் சிறு புள்ளிகள். வியர்த்துவிட்டிருந்தது அவனின் கேள்வியில், பார்வையில்.
‘என்ன நினைத்து கேட்கிறான்?’ என தெரியாமல் அலமலந்து பார்த்து நின்றவள் பார்வையில் சிக்குண்டது கார்மேகவண்ணன் மனம்.
அந்த விழிகள் அவனை விழுங்கிவிட காத்திருக்க நெஞ்சத்தின் துடிப்பு துள்ளி துடித்தது.
‘ஷிட், கொல்ல போறேன் உன்னை. எப்படி பார்க்கிற நீ?’ என்றவன் இதயம் அல்லாடினாலும் முகத்தை இன்னும் இறுக்கமாய் வைத்திருந்தான்.
“உன்னை தான் கேட்டேன். என் வயசென்ன? பேர் சொல்லி கூப்பிடற?…” மீண்டும் அதட்டினான்.
“கூப்பிடத்தான் பேர். கூப்பிட்டேன்…”
“அதுக்கு பேர் சொல்லனுமா?…”
“சரி எப்படி கூப்பிடனும்? சொல்லுங்க…” என்று தன்னை சுதாரித்தவள் இரு கைகளையும் கட்டிக்கொண்டு கேட்க,
“இதுவரை சொல்லித்தரலையோ? அதான் உனக்கு தெரியலை. ஷர்மியை விட இளையவ தானே நீ?…” என்று அவன் கேட்ட கேள்வியில் உள்மனம் அலைகடலாய் பொங்க, ‘என்ன சொல்ல போகிறானோ?’ என்ற அச்சம் முகத்தில் அப்பட்டமாய்.
“ஹாங், ஆமாவா இல்லையா?…” என்றான் மீண்டும்.
‘என்ன சொல்வானோ? தன்னை எப்படி அழைக்க சொல்வானோ?’ என்று இதயமெங்கும் அதிர்வு பரவ அவன் கூறும் எதையும் கேட்கும் திடம் இல்லை.
“எனக்கு வேலை இருக்கு. இது ஆபீஸ்…” என்று தப்பிக்க பார்க்க,
“இவ்வளோ நேரம் இது ஆபீஸ்ன்னு தெரியலையா மேம்?…” என நக்கலுடன் கேட்க அவள் அங்கிருந்து கிளம்ப பார்த்தாள்.
“ஹேய் நில்லு. நீ தானே சொல்லுங்கன்னு சொன்ன. நில்லு…” என்றவன் முகத்தை பார்க்காமல் தலையை திருப்ப கார்மேகவண்ணன் பார்வை அவளின் மூக்கின் நுனியில் பதிந்தது.
உணர்வை அடக்க முயன்ற முயற்சியில் முகம் சிவந்ததுடன் மூக்கின் நுனி பளபளத்து கத்தரிப்பூ நிற கற்களை சுற்றி வியர்வை நீர் முத்துக்கள் ஒளிர்ந்தது.
“ஆழி எப்ப இருந்து நோஸ் ரிங் யூஸ் பன்ற?…” என்றான் கார்மேகவண்ணன்.
வாயை திறக்கவில்லை ஆழினி. ‘கிராதகன். என்ன வேண்டுமானாலும் பேசி வார்த்தைகளை பிடுங்க பார்ப்பான்’ என்று இறுக்கமாய் அவள் நிற்க,
“என்னம்மா சாப்பிடலையா? கண்ணா நீ என்ன பாதில எழுந்துட்ட?…” என்றார்.
“ஹ்ம்ம், சாப்பிட முடியலை. வரேன்…” என்று சொல்லியவன் விருட்டென்று அந்த அறையிலிருந்து வெளியேறிவிட,
“என்ன இந்த பையன் சரியாவே சாப்பிடலை?…” என கவலையுடன் மகளை அமர கூறினார்.
“உன் பெரியம்மா, பெரியப்பா வராங்க ஆழி. நாமளும் சீக்கிரம் கிளம்புவோம். ரொம்பநாள் கழிச்சு வராங்க. நாளைக்கு இங்க எதோ விசேஷமாம். அப்படியே நம்மளையும் பார்க்க வராங்க…” என்று பேசிக்கொண்டே அவர் உண்டு முடித்தார்.
அத்தனை உற்சாகம், சந்தோஷம் அவரின் முகத்தில். ஆழினி எதுவும் சொல்லாமல் எல்லாம் எடுத்து வைத்து ட்ரைவரை வந்து எடுத்து செல்ல பணித்தாள்.
மனதிற்குள் கார்மேகவண்ணனின் கேள்விகளும், பார்வையும். அவன் கோபமாய் இருப்பதை போல தான் இருந்தது.
ஆனால் இந்தளவு கவனித்து கேட்டதில்லை எந்த கேள்வியுமே. பொதுவாய் அவளிடம் அவன் பேசும் பேச்சுக்கள் வெகு சொற்பம்.
சில சமயம் திமிராய், எப்போதாவது கனிவாய், அக்கறையாய், அனுசரணையாய் என்று அனைவரின் முன்பும் பேசக்கூடிய வார்த்தைகள் தான்.
இதை அவன் பழகும் யாரிடம் வேண்டுமானாலும் அவன் காண்பிக்க கூடிய விதமாக தான் நினைக்க வைத்தான்.
அவளுக்கென்று பிரத்யேக உணர்வுகள் அவனிடம் இருந்தனவா என்றால் இல்லவே இல்லை.
அதில் மனது உடைந்ததென்னவோ உண்மை. தேற்றமுடியாத அளவிற்கு உள்மனம் குழந்தையென தேம்பியது.
காண்பித்துக்கொள்ள முடியாமல் அவன் நினைவுகளை மட்டும் காதலுடன் இறுக்கிக்கொண்டு கடந்து வந்துகொண்டிருக்க இப்போது இந்த வித்தியாயம் அவளுக்கு புதிது.
‘அதிலும் பெயர் சொல்லி அழைப்பாயா, சொல்லித்தர வேண்டுமா?’ என்று கேட்ட அதட்டலே அவளை ஸ்தம்பிக்க செய்தது.
‘தன்னை கண்டுகொண்டானோ? ம்ஹூம் இருக்காது. ஆனாலும்’ என்ற அச்சத்தை விதைக்க வேலையை மறந்து இப்போதும் அவனை தொடர்ந்தன அவள் விழிகள்.
அவன் உணர்ந்து உருகி திளைத்து தவழ பார்த்துக்கொண்டிருந்தாள் தன் செயலை உணராமலேயே.
‘என்னால வேலை பார்க்கமுடியலை. என்ன செஞ்சிட்டிருக்கா இவ?’ என்று இடதுகையால் தலையை நீவியபடி அப்படியே கண்கள் மட்டும் தெரியும்படி திரும்பி சட்டென ஆழினியை கண்டுவிட்டான்.
பார்த்ததும் இல்லாமல் புருவத்தை உயர்த்தவும் தன்னுணர்வு வந்தவள் திடுக்கிட்டு பார்வையை விலக்க அவளின் பதட்டத்தில் கண்ணனின் இதழ்களில் புன்னகை மொட்டுக்கள் விரிந்தன.
‘ம்ஹூம், இதை இப்படியே விடக்கூடாது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான் கார்மேகவண்ணன்.
சற்றுநேரத்தில் வாழவந்தான் ஆழினியுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். நஞ்சப்பனுடன் வெளியே கிளம்பலாம் என்று நினைத்திருந்தவன் அலைபேசியில் மகிழா.
“கண்ணா அம்மா இங்க ஆழி வீட்டுல இருக்கேன்…” என்று சொல்ல,