“பார்த்தா தெரியலையா? அதெல்லாம் நனையலை. அதோட ட்ரைவர் வந்து விட்டுட்டு போனான். அதுவுமா கேட்கலை உனக்கு? டிவி கூட போடலையே?…” என்று மகனை ஆராய்ச்சியாய் பார்க்க,
“ப்ச், ரொம்ப முக்கியம். ஏதோ டென்ஷன். விடேன்….” என்றவன்,
“அப்பறம் டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்களா? மாப்பிள்ளை என்ன பன்றானாம்?…” என்று பல்லை கடித்துக்கொண்டு கார்மேகவண்ணன் கேட்க மகிழா அதனை கவனிக்கவில்லை.
“நல்ல இடமாம். அவங்களும் சொந்த பிஸ்னஸ் தான். போட்டோ கூட காமிச்சாங்க. எங்களுக்கு எல்லாம் ரொம்ப புடிச்சிருக்கு…” என்று சந்தோஷமாய் சொல்ல சொல்ல நெருப்பொன்று அவனை பற்றிக்கொண்டது.
“ஓஹ், அப்போ சீக்கிரமே கல்யாணம்ன்னு சொல்லு…”
“ஆமாடா கண்ணா. ஆனா இந்த பொண்ணு வாயே திறக்கலை. யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டா….” என்று புலம்ப,
“ப்ச், பசிக்குது சாப்பிடலை இன்னும்…” என்றான் அந்த பேச்சை கேட்க பிடிக்காமல்.
காரணமற்ற கோபம். யாரையேனும் இழுத்துவைத்து அடித்து துவம்சம் செய்யுமளவிற்கு அவன் கைகள் பரபரத்தது.
“சாப்பிடுன்னு உன்னை சொல்லி தானே அனுப்பினேன்? அப்பறம் என்னடா?…” என்று அவர் உள்ளே செல்ல,
“தேவையே இல்லை. நானே சாப்பிட்டுக்கறேன். போம்மா…” என்றவன் ஒரு தட்டில் தனக்கானதை எடுத்து வைக்க,
“என்னடா கண்ணா? என்னாச்சு உனக்கு?…” என மகனின் முகம் திருப்பி பார்த்தார்.
“என்ன என்ன? ஒண்ணுமில்லை. ஏதோ யோசனையில சாப்பிடாம இருந்து இப்ப பசிக்குது…” என்று சொல்ல,
“சரி வா. நான் எடுத்துட்டு வரேன்…” என்றவர் அவனை அமரவைத்து தானே ஊட்ட, அமைதியாய் வாங்கிக்கொண்டான்.
அதன்பின் அவர் பேசியவை எல்லாம் ஆழினிக்கு பார்த்திருக்கும் சம்பந்தத்தின் பெருமைகள் தான்.
ஆழினி சரி என்றதும் சம்பந்தம் நல்லபடியாக முடிந்துவிட்டால் அதனை எப்படியெல்லாம் நடத்தவேண்டும் என்று பேசியதையும் சேர்த்தே சொல்ல அந்த உணவு அவர் கூறிய விஷயத்துடன் விஷமாய் இறங்கியது அவனுள்.
“போதும்…” என்று சொல்ல,
“போதுமா? என்னடா?…” என்றவர்,
“சரி, நீ போய் தூங்கு. நானும் படுக்கறேன்…” என்று சொல்லி கதவுகளை அடைத்துவிட்டு சென்று படுத்துவிட்டார்.
கார்மேகவண்ணன் கண்களை உறக்கம் சிறிதளவேணும் அண்டினால் தானே உறங்குவதற்கு.
பலவித யோசனைகளில் இருந்தவனின் எண்ணங்களுக்கு தடை சொல்வதை போல இருந்தது மகிழாவின் பேச்சு.
‘ரெண்டுநாள்ல யோசிச்சு சொல்றேன்னு ஆழி சொல்லிருக்கா’ என்ற பதில் அவனுக்கும் சுவரெழுப்ப அவ்விடத்தில் மடிந்தமர்ந்துவிட்டான்.
ஒருவேளை இந்த வரனுக்கு அவளுக்கு விருப்பம் என்றால்? வாழவந்தானின் புன்னகை முகம் நெஞ்சில் எழும்பி நின்றது.
“ப்ச், போடி நிம்மதியா இருந்தேன். உயிரை எடுத்துட்ட இல்ல?…” என்று சொல்லியவனால் அவ்வுணர்வை தாங்க இயலவில்லை.
மொத்தமாய் என்னவோ கைவிட்டு போன தாக்கம் புரட்டி போட்டது கார்மேகவண்ணனை.
‘கொஞ்சமாச்சும் தெரியப்படுத்தினாளா? ம்ஹூம், தெரிஞ்சுக்காத நானும் முட்டாள் தானே?’ நினைத்து மருக மட்டுமே முடிந்தது.
அந்த இரண்டுநாட்கள் அவளின் முடிவிற்காக காத்திருந்தது வாழவந்தான் மட்டுமல்ல கார்மேகவண்ணனும் தான்.
மறுநாள் அலுவலகத்தில் கூட ஆழினியின் பக்கம் அவனாக எதற்கும் செல்லவில்லை.
ஆனால் அவளின் பார்வையை உணர்ந்தான். பொறுமை பறந்துகொண்டிருந்தது கார்மேகவண்ணனுக்கு.
‘என்னதான் செய்யனும்னு நினைக்கிறாளோ?’ என்று பல்லை கடித்துக்கொண்டு அந்த ஒருநாளை கடக்கவே அத்தனை சிரமமாய் இருந்தது.
எதையாவது சொல்லிக்கொண்டு, கேட்டுக்கொண்டு அவனெதிரில் வருவதும், இல்லை அவனை வரவைப்பதுமாக இருந்தாள் ஆழினி.
அத்தனையும் வேலை நிமித்தமாக தான். ஆனால் அதையும் தாண்டிய அவளின் காதல் அவனிடம் சித்துவிளையாட்டை காண்பிக்க திண்டாடிப்போனான்.
போதாததிற்கு இதில் வாழவந்தான் வேறு அவனை அழைத்து இதுவிஷயமாய் பேசி வைக்க அத்தனை கடுப்பு.
“நேத்தே உன்னை இருக்க சொன்னேன். கேட்டியா நீ? சும்மா தான் என்னோட அண்ணனும், சித்துவோட அண்ணனும் வந்திருக்காங்கன்னு நினைச்சேன்டா கண்ணா. எனக்கே ஆச்சர்யமா போச்சு….” என்று சொல்லியவர்,
“ஆழி மாமாவுக்கு சரியான டென்ஷன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைக்கிற நினைப்பில்லையான்னு கேட்டு குடைஞ்செடுத்துட்டார் மனுஷன். அவர் மகன் ஆழிக்கு ரெண்டுவயசு சின்னவன். இல்லைன்னா நானே என் வீட்டு மருமகளாக்கிருப்பேன்னு சொல்லிட்டு வரனையும் பார்த்திருக்காங்க…” என்றதும்,
“நீங்க என்ன சொன்னீங்க?…” என்றான் கார்மேகவண்ணன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு.
“என்ன சொல்ல? பொறுப்பா அவளுக்கு தாய்மாமாவா ஒரு காரியம் எடுத்துட்டு வந்திருக்கார். எனக்கெல்லாம் சரின்னு தான் படுது. நாளைக்கு வேந்தனோட போய் அவங்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டு வரலாம்ன்னு இருக்கேன். உங்கப்பனும் நைட் வந்திருவான்ல…” என்றார்.
“சரி போய்ட்டு வாங்க…” என்று எழுந்துகொள்ள,
“என்னடா கண்ணா நீ எதுவுமே கேட்கலை?…” என்றார் அவனிடம்.
“விசாரிச்சு முடிங்க. வீட்டுல வச்சு என்னன்னு பேசிக்கலாம். இது ஆபீஸ். வேலை பாக்கவேண்டாமா நான்? மாசாமாசம் சம்பளம் வாங்கறேனே?…” என்று சொல்லவும் பதறிவிட்டார் வாழவந்தான்.
“என்னடா கண்ணா இப்படி பேசிட்ட? சம்பளம் அது இதுன்னு?…”என்று நொடியில் கலங்கிவிட்டார் இந்த வார்த்தைகளில்.
“இங்க நான் எப்படியோ அப்படித்தான்டா நீயும். இல்லைன்னு சொல்லி பாரு…” என்று சொல்லியுமே கார்மேகவண்ணன் எவ்வுணர்வையும் முகத்தில் காண்பிக்கவில்லை.
“மாமா, நான் சொன்னது வலிச்சாலும் இதுதான் நிஜம். நான் இங்க எம்ப்ளாயி தான். சும்மா இதுக்கெல்லாம் எமோஷனலாகிட்டு…” என்று சொல்லியவன்,
“ஆழினியும் சட்டு சட்டுன்னு இப்படி எமோஷனலாகறது ஏன்னு இப்ப தான் புரியுது. நல்லா இருக்கீங்க அப்பாவும், பொண்ணும். வார்த்தைக்கு என்னவேணா சொல்லலாம். ஆனா நிஜம்ன்னு ஒன்னு இருக்கு…” என்றவன்,
“எந்த முடிவெடுத்தாலும் அதை நாலஞ்சுதடவை சரியான்னு அலசி பார்த்து செய்ங்க. எந்த முடிவா இருந்தாலும். எமோஷனலா முடிவுக்கு வந்து இதோ நிக்கறேனே? கண்ணுக்கு தெரிஞ்சும் தெரியாம எல்லாம் கைவிட்டுடுமோன்னு…” என்று என்னவோ போல் சொல்லியவன் முகமும், குரலும் வாழவந்தானுக்கு கலக்கத்தை தூண்டியது.
“கண்ணா என்னடா சொல்ற?…” என்று கேட்க,
“மாமா…” என்றவன் பாய்ந்து சென்று அவரை கட்டிக்கொண்டான்.
நெஞ்சை அடைக்கும் உணர்விலிருந்து அவனால் மீள முடியவில்லை. எதை தொலைக்கவிருக்கிறோம் என்ற எண்ணமே அவனை சித்தம் கலங்க செய்தது.
“கண்ணா எதுவும் பிரச்சனையாடா? என்கிட்ட சொல்லு…” என்று வாழவந்தான் கேட்க சட்டென நிமிர்ந்து விலகினான்.
“என்ன பிரச்சனை? எதுவுமில்லை…” என லேசாய் புன்னகைத்தவன்,
“எதுக்கு இப்படி முழிக்கிறீங்க?…” என்றான்.
“டேய்…” என்று சொல்லியவரின் கையை பிடித்துக்கொண்டவன்,
“மைண்ட் அப்செட். நான் வீட்டுக்கு கிளம்பவா?…” என்று கேட்க,
“ம்ஹூம், நீ சரியில்லை. வா, நான் கூட வரேன்…” என்று தானும் புறப்பட தயாரானார் வாழவந்தான்.
“சேர்மன் மாதிரி நடந்துக்கோங்க முதல்ல. இன்னும் கொஞ்சநேரத்துல மீட்டிங் இருக்கு. ஆழினி தனியா பண்ண முடியாது. நானும் இல்லை. பேசாம இருக்கனும் இங்கயே. நான் வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வந்துடுவேன்…” என்று சொல்லியும் குழந்தை போல விழித்தார் வாழவந்தான்.
அதற்குமேல் என்ன பேசமுடியும்? மனதை அறுக்கும் உணர்வுகளை கட்டிவைக்கமுடியாமல் விறுவிறுவென்று அவன் வெளியேற எதிரில் ஆழினி.
செந்நிறம் பூண்டிருந்த விழிகளையும், அவன் முகவாட்டத்தையும் பார்த்ததும் கண்டுகொண்டாள்.
“என்னாச்சு? உடம்புக்கு எதுவும் முடியலையா?…” என்று கேட்க ஒருகணம் இமைக்காமல் அவளை பார்த்தவன் பதில் கூறாமல் நகர,
“ப்ளீஸ், நில்லுங்க. என்னாச்சு?…” என மீண்டும் கேட்க,
“நான் மட்டும் என்ன ஸ்பெஷல் உனக்கு? என்கிட்ட உன் கெத்தெல்லாம் என்னாகுது?…” என்றான் முறைப்புடன்.
‘இது என்ன கேள்வி?’ என்று ஆழினி திகைப்புடன் நிற்க அவள் பதிலை எதிர்பார்த்து நின்றவன்,
“கேட்டா பதில் சொல்லாம நிக்கனுமா? உன்கிட்ட பேசறதே…”
“உங்கப்பாம்மாவுக்கு தானே? எனக்கு அவங்க சலுகை காமிச்சுப்பாங்க. நீ காமிக்க தேவையில்லை…” என்று சொல்லிவிட்டு வெளியேற, ‘எதற்கு இந்த காரணமற்ற கோபம்?’ என்று புரியாமல் ஆழினி விழித்தாள்.