அவளிடம் அவன் காட்டும் கடுமையும், கோபமும் சமீபமாய் தான் என்பதை புரிந்துகொண்டிருந்தாலும் மௌனம் சாதித்தாள்.
வீட்டில் வேறு திடீரென திருமண பேச்சை ஆரம்பிப்பார்கள் என்று சுத்தமாக நினைக்கவில்லை. போதாததிற்கு ஷர்மிளாவையும் சொல்லி,
“உனக்கு ரெண்டுவயசு தான் பெரியவ ஷர்மி. முடிச்சு வச்சுட்டோம்ல. வயசு போகுதுடா. சீக்கிரம் கல்யாணம் பண்ணவேண்டாமா? அப்பாம்மாவுக்கும் ஆசை இருக்கும்ல…” என்று மகிழா பேசியிருந்தார்.
அதை பிடித்துக்கொண்டு சித்தாராவும், வாழவந்தானும் ஆசையாய் பார்க்க சட்டென மறுக்கமுடியாமல் இருநாட்கள் நேரம் கேட்டிருந்தாள்.
மறுநாள் மாலை என்ன பதில் சொல்லமுடியும்? நினைக்க நினைக்க பயப்பந்து சுழன்றது.
அதனுடன் கலந்துரையாடல் நடக்கும் அறைக்குள் செல்ல மற்றவர்களும் வந்துவிட்டனர்.
கலந்தாய்வு துவங்க வாழவந்தான் கூட ஒருவிதமாய் இதில் கவனம் செலுத்த, ஆழினியின் மனதில் அவனின் செவ்வரியோடிய விழிகள் ஆட்சிபுரிந்தது.
மனம் இருபுறமும் ஊசலாட கதவு தட்டப்பட்டு பேச்சு நிற்க, கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் கார்மேகவண்ணன்.
வீட்டிற்கு கிளம்பி சென்றவன் தன் செயலை எண்ணி வெறுத்தவனாக பாதிவழியில் திரும்பியிருந்தான்.
அதன்பின் கலந்தாய்வு நல்லவிதமாக முடிவுக்கு வர மற்றவர்கள் அறையை விட்டு கிளம்பவும்,
“கண்ணா நீ ஓகே தானே?…” என்றார் வாழவந்தான்.
“எதையும் எமோஷனலா பார்க்கக்கூடாதுன்னு சொல்ற நானே அப்படி கிளம்பி போய்ட்டேன். டிஸ்கஸ்டிங். அதான் பாதில வந்துட்டேன். நான் ஓகே தான்…” என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்கு திரும்பிவிட்டான்.
மறுநாள் காலை பரபரப்புடன் கோவேந்தனின் சத்தம் வீட்டை நிறைத்துக்கொண்டிருந்தது.
வாழவந்தான் சற்றுநேரத்திற்கெல்லாம் வந்துவிடுவார். கிளம்பவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்.
மகிழாவும் அவ்வப்போது எங்கே செல்ல போகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையில்,
“இன்னும் துரைக்கு விடியலையா?…” கோவேந்தன் மகனின் அறைக்கதவு திறக்காததை கண்டு மனைவியிடம் கேட்க,
“இன்னும் தூங்கறான் போலங்க?…” என்றார் மகிழா.
“ம்க்கும், அதையும் யூகத்துல தான் சொல்லுவியா? போ போய் எழுப்பு. லேட்டாச்சுன்னா அதுக்கும் உன்னை தான் பிடிச்சு கத்துவான்…” என்று எச்சரிக்க,
“ஆமால்ல…” என்றார் அவர்.
“விளங்கிரும். இதுவுமா? போடி போ. நானும் புறப்படனும்…” என்று மனைவியை விரட்டியவர் தலையை துவட்டியபடி தன் உடையை எடுத்து அலமாரியில் வைக்க ஆரம்பித்தார். போன வேகத்தில் மகிழா வந்துவிட,
“ஹ்ம்ம், சரி என்ன சொல்றான்? பொண்ணு பார்க்கலாமா? இல்ல இப்படியே இருக்க போறானா? கேட்டியா?…” என்றதும் மகிழா தலையசைக்க,
“இங்கபாரு, ஆழி கல்யாணம் முடிஞ்சதும் அப்படியே இவனுக்கும் பார்த்துடுவோம். ரொம்ப எல்லாம் தள்ளிப்போட முடியாது. இவனை யார் சமாளிக்க?…” என கோவேந்தன் கேட்கவும் மகிழா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டார்.
“ஒரு வார்த்தை நீங்க சொல்லலாம்ல. நீங்க பக்குவமா எடுத்து சொன்னா…”
“யாரு நான் சொல்லி உன் பிள்ளை கேட்டுடுவானாக்கும்? எவடி இவ கூறுகெட்டவ…” என தலையில் அடித்துக்கொண்டவர்,
“இந்த ட்ரெஸ்ல ரெண்டு ஷர்ட் சரியா அயர்ன் பண்ணாம இருக்கு. சுருக்கமே போகலை. திரும்ப குடுத்துவிடு. அப்பறம்…” என்ற முடிக்கும்முன்,
“ம்மா, மகி…” என்றான் சத்தமாய் கார்மேகவண்ணன்.
“இதோ வரேன்டா…” என்றவர்,
“நான் குடுத்துக்கறேன். நீங்களும் சாப்பிட வாங்க…” என்று கணவரையும் அழைத்துவிட்டு ஓடி வந்தார் வெளியே.
அதற்குள் கண்ணன் ஒரு தட்டில் தனக்கு இடியாப்பமும், தேங்காய் பாலும் ஊற்றிக்கொண்டு சாப்பிடவே ஆரம்பித்துவிட்டான்.
“தேவைதான்டா. எல்லாம் என் நேரம்….” என்று பசும்பாலை எடுத்து தர தேங்காய் பாலுடன் கலந்துகொண்டான் அவன்.
“அவனவனுக்கு ஆள் வந்தா இல்ல தெரியும் சேதி. என்னைய நீ அரட்டிக்கிட்டே திரியவேண்டியது தான். ஆனா வரவக்கிட்ட எப்படி இருக்க போறன்னு நானும் பார்க்கத்தான போறேன்?…” மகிழா கேலி பேச,
“எப்படி அய்யனார்கிட்ட நீ இருக்கற மாதிரியா?…” என நக்கலாக கண்ணன்.