“டேய் இருடா இரு. ஏன்டா இல்ல ஏன்னு கேட்கறேன். இப்படியே திருப்ப எங்கப்பன் வீட்டு ரோடா? ப்ரிட்ஜ்ல இருந்து கீழ இறங்க வேண்டாமா? அந்த எண்டுக்கு போய் தான டேர்ன் எடுக்கனும். கடுப்பேத்தாத பார்த்துக்கோ…” என்று கத்திவிட, தோளை குலுக்கிக்கொண்டு சமத்தாய் அமர்ந்துவிட்டான் கண்ணன்.
வழியெல்லாம் புலம்பியபடி பைக் ஓட்டிய நஞ்சப்பன் நேராக பார்க்கிங் செல்ல திரும்ப,
“இங்கயே நிறுத்து. பார்க்கிங் போகவேண்டாம்…”
“இவ்வளோ தூரம் கூட்டிட்டு வந்தவனுக்கு அங்க கொண்டுபோய் விட தெரியாதா? அதுவும் செகெண்ட் பேஸ்மென்ட்ல இருக்கும் பைக். அப்பறம் இதுக்கும் நீ சொல்லிக்காமிப்ப…” என்று உஷாராக,
“அதான் சொல்றேன்ல வேண்டாம்ன்னு. எனக்கு பார்க்கிங்ல வேலை இல்லை. நீ கிளம்பு…” என்றதும்,
“என்ன?…” என்று நஞ்சப்பன் முறைக்க,
“சத்தமில்லாம இப்படியே கிளம்புன்னு சொன்னேன். உன் வேலை முடிஞ்சது. எனக்கு உள்ள வேலை இருக்கு…”
“நன்றிகெட்டவன்…”
“நீ நன்றி நல்லவனாவே இருந்துட்டு போ. அதுதான் எனக்கு வசதி. போடா டேய்…” என்று சொல்லிவிட்டு செல்ல அம்போ என்று நின்றிருந்தான் நஞ்சப்பன்.
‘வஞ்சகன் கண்ணனடா நஞ்சா’ என்று தனக்கு தானே செல்ப் டெடிகேட் செய்தபடி கிளம்பினான் அவன்.
அலுவலகத்திற்குள் நுழைந்தவன் சத்தமில்லாமல் பூனை பாதம் வைத்து வர அவன் எதிர்பார்க்காத ஒன்று அங்கே அவள் செய்தது.
தான் கிளம்பும்பொழுது சரியாய் கதவை அடைக்காமல் சென்றது எத்தனை நல்லதென்று உணர்ந்தவன் முகத்தில் கனிவும், கடுமையும் சரிவிகிதத்தில் படர்ந்தது.
தான் எப்போதும் செய்யும் அந்த பாணியை இன்றைக்கும் ஆழினி மேற்கொள்ள அவள் உள்ளத்தின் அடைப்புகள் எல்லாம் ஆழம் தாண்டி வெளியே வார்த்தைகளாக வந்து விழ, கேட்டதும் கண்ணனின் விரல்கள் அவனின் உள்ளங்கைக்குள் நெறிபட்டது.
காதலில் தொடங்கி இந்த திருமணம் பற்றிய அத்தனை பேச்சுக்களும் அவளின் அலைபேசியில் பகிர்ந்து பதிவிட்டவள் முழுதாய் முடிக்கும்வரை கார்மேகவண்ணன் இடையிடவில்லை.
மௌனமாய் மூச்சுக்காற்றின் சப்தம் கூட வெளிவராமல் நின்று தனக்குள் வாங்கிக்கொண்டான் அவளுள் நிறைந்திருக்கும் அந்த காதலை.
பேசும்பொழுது அத்தனை தழுதழுப்பு. மடைதிறந்த வெள்ளமென எல்லாம் பேசி முடித்தவள்,
“இப்ப வீட்டுக்கு போனா என்ன முடிவுன்னு கேட்பாங்களே என்ன சொல்லுவேன் நான்? ஆனா கண்டிப்பா சரின்னு சொல்லமுடியாது. சொல்லவும் மாட்டேன். என்ன பண்ண போறேன்?…” என்று சொல்லியவளின் மௌனம் அவனை அசைக்க அடுத்து என்ன செய்வாளோ என்று பார்த்திருந்தான்.
இந்தவிதமாக தான் அவளுக்கு அவளே கேள்வியும், பதிலுமாய் நிற்க அதுவே அவனிடம் எதையும் பகிராமல் தவிர்த்திருப்பதும், பகிர்ந்தால் தான் இப்படி நினைத்துவிடுவேனோ என்று பயந்திருப்பதும் கூட என அறிந்துகொண்டவன் முகத்தில் மென்மையான புன்னகை.
முகத்தை நன்றாக துடைத்துக்கொண்டவள் நேராய் நிமிர்ந்தமர்ந்து ஆசுவாசப்படுத்தி தான் பேச ஆரம்பித்த நிமிடத்தில் தீர்வை யோசித்து அவள் பேச கார்மேகவண்ணனின் புருவங்கள் உயர்ந்தது.
“பார்ரா, இவ்வளோ நாள் இதே வேலையா தான் இருந்தியா நீ?…” என்று முணுமுணுத்தவனுக்குள் இருந்த பாரமெல்லாம் கலைந்திருந்தது.
‘போதும், எல்லாமே போதும்’ என்று தோன்ற அதற்கு மேலும் விலகி இருக்க இயலாமல் கதவை நன்றாக திறந்து நின்றவன்,
“தப்பான சொல்யூஷன்…” என்றான் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி.
சத்தியமாய் ஆழினி இந்தநேரத்தில் இப்படியான சூழலில் அவனை அங்கே எதிர்பார்க்கவே இல்லை.
அதிர்ச்சியில் அவள் எழுந்து நின்றுவிட முகமெல்லாம் அதிர்வில் அசையாதிருக்க முன்னே வந்தான் கார்மேகவண்ணன்.
“என்ன பண்ணிட்டிருக்க நீ?…” என்று கேட்க, அவன் முழுதாய் கேட்டானா இல்லையா என்றே தெரியாமல் நின்றவளுக்குள் படபடப்பு அதிகமாகியது.
அவளின் எதிரே வந்து நின்றவன் பார்வை அங்கிருந்த அவளின் கைபேசியில் பதிய, அவன் உடல்மொழி அதனை எடுத்துவிடும்போல் தெரிய சட்டென அதனை எடுக்கிறேன் என்று பதட்டத்தில் போனுடன் அருகிலிருந்த கண்ணாடி குடுவையையும் சேர்த்து தட்டிவிட இரண்டும் கீழே விழுந்தது.
“ஆழி என்ன பன்ற?…” என மறுபக்கம் அவளின் அருகே வரும்முன் கீழே குனிந்து போனை எடுக்கிறேன் என்று சில்லுசில்லாய் உடைந்திருந்த சிதறல்களில் கை பதிய பதட்டத்தில் கைபேசி கைக்குள் அகப்படவில்லை.
சலசலவென்று வியர்த்து கொட்டிவிட்டது ஆழினிக்கு. அவள் எடுக்கும்முன் அவன் கைப்பற்றி இருந்தான் கைபேசியை.
போன் கீழே விழுந்திருந்தாலும் ஓரங்களில் கீறல்களுடன் இன்னும் உயிருடன், முக்கியமாக லாக்காகாமல் இருந்தது.
கடைசியாய் அவள் பேசி முடித்த பதிவு பார்க்கப்படும் விதமாய் நின்றிருக்க அதை வாங்க முடியாமல் ஆழினியின் கைகள் கண்ணாடியில் இன்னும் அழுத்தமாய் பதிந்து காயம் கொடுத்தது.
“பைத்தியமா உனக்கு? எதை காப்பாத்த ட்ரை பன்ற? எல்லாம் எல்லாம் கேட்டுட்டேன். போதுமா?….” என்றவன் பல்லை கடித்தான்.
அவனுக்கு மொத்தமும் தெரிந்தது தான் பேசுகிறான் என்பதிலேயே அரை உயிர் போய்விட்டது.
இதில் இந்த கோபமும் அவளுக்கு தவறாக தோன்ற, ‘தான் பேசியது, தன் விருப்பம் இவையெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை’ என்ற மாயையை உருவாக்க பொத்தென்று இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.
‘உண்மை தானே? இனி எதை காப்பாற்ற போகிறேன்? தன்னை வெறுத்துவிடுவானோ?’ என்ற எண்ணமே உயிரை பிடுங்கியது.
மௌனமாய் அவள் அமர்ந்துவிட அந்த அறையில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்தவன் ஆழினியின் கைபேசியையும் இருவரும் பார்க்கும்படி தள்ளி வைத்து அவள் பேசியதை ஓடவிட்டான்.
“திரும்ப கேட்கனும். லாக் பண்ண நினைச்ச நடக்கறதே வேற…” என்று எச்சரிக்கை செய்ய அசையவே இல்லை ஆழினி.
‘கேட்டுக்கோ போடா. அப்படித்தான். என்ன சொல்லிடுவ? சொன்னா சொல்லிட்டு போ.’ என்று என்னவும் செய்துகொள் என்னும் மனப்பான்மையில் மனதை அவன் பேச்சை கேட்க தயார் செய்துகொண்டாள் ஆழினி.
உள்ளங்கையில் ஆங்காங்கே கண்ணாடி கற்கள் குத்தியிருக்க ஆழினியின் எதிரே ஒரு சிட்டரை போட்டு தானும் அமர்ந்துகொண்டு அவளின் காயத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
அவள் பேசிய அனைத்தும் கேட்டு முடிக்கும் வரையிலும் இருவரிடமும் பேச்சில்லை.
கவனமாய் அவள் உள்ளங்கைக்குள் குத்தியிருந்த கண்ணாடிகளை எடுத்தவன் பஞ்சினால் சுத்தம் செய்ய வலியிலும் வாய் திறக்கவில்லை அவள்.
“இதுல கூட என்னை மாதிரியே இருக்க நீ…” என்று சொல்லி அவளை நிமிர்ந்து பார்க்க ஆழினியின் விழிகள் அவனின் கரங்களுக்குள் பொதிந்திருந்த தன் கைகளில் தான்.
‘விட்டுடாத கண்ணா. ப்ளீஸ். உனக்கு பிடிக்காட்டியும் ப்ளீஸ் சொல்லுவேன். விட்டுடாதடா’ என்று உள்ளுக்குள் மந்திரம் ஓட அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை கார்மேகவண்ணன்.
“கொஷின் கேட்டுட்டு எனக்கான ஆன்ஸரையும் நீயே சொன்னா நான் எதுக்கு ஆழினி?…” என்றான் அவளின் கையில் மருந்தை பூசியபடி.
“இன்னும் எவ்வளோ நாள் இப்படியே இருக்கலாம்ன்னு இருந்த?…” என்று கேட்க பதிலில்லை.
இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் அவன் கரத்தின் மேல் பட்டு தெறிக்க நிமிரவில்லை கார்மேகவண்ணன்.
ஆழினிக்கு அவனின் முன் நெற்றி சிகை மட்டுமே தெரிந்தது. குனிந்திருந்தான் அவளின் கைகளை பார்த்தபடி.
“வீட்டுக்கு போனா பதில் சொல்லனுமேன்னு தான் கிளம்பாம இருந்தியா?…” என்று கேட்க அவள் கைகளில் அசைவு.
“ப்ச், ஆட்டாம அப்படியே கையை வை…” என்றவன் கைகளுக்கு கட்டு போட்டுக்கொண்டே,
“என்ன செய்யனும்? என்ன பண்ணனும்ன்னு எதாச்சும் சொல்லேன் ஆழி?…” என்று கேட்டும் பதில் சொல்லாமல் இருக்க இப்போது கண்ணீர் நிற்காமல் வழிந்தது அவள் கண்களில் இருந்து.
மெல்ல இமைகளை உயர்த்தியவன் கருவிழிகள் அவள் கண்களை சந்திக்க பரிதவிப்பான அந்த முகம்.
அவனின் வாழ்நாளில் இதுவரை பார்த்திராத பாவத்தை அவள் காண்பித்திருக்க மனதை பிசைந்தது அவளின் அழுகை.
“எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நீ சொல்லு. யார்கிட்ட பேச? என்ன பேச? என்னோட அப்பாம்மாக்கிட்டையா? இல்லை மாமா, சித்தும்மாக்கிட்ட பேசவா?…” என்றான் இலகுவாய்.
ஆழினியின் மௌனம் இன்னும் நீள, அவள் முகத்தில் ஆச்சர்யத்தின் வெளிப்பாடு.
நம்பமுடியாமல் அவனையே லேசாய் தலைசாய்த்து அவள் பார்க்க கார்மேகவண்ணனின் முகத்தில் புன்னகை.
“நம்ப முடியலையோ?…” என்றவன்,
“எனக்கொரு விஷயம் சொல்லேன். எத்தனை வருஷமா இந்த எண்ணம் உன் மனசுக்குள்ள? எப்ப இருந்து?…” என்று கேட்க அதற்கும் வார்த்தைகளில்லை.
“புரியலையா?…” என்று கேட்டவன் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து இதயவடிவில் காண்பித்து,
“இதுக்கு பேர் என்ன ஆழினி?…” என்றான் ஆழ்ந்த குரலில்.
எதுவும் பேசமுடியவில்லை. என்னென்னவோ நினைத்துக்கொண்டிருந்தவளின் அலைப்புறுதல்கள் எல்லாம் ஒன்றுமே இல்லாது செய்துவிட்டானே இவன் என்று மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க சத்தமில்லாமல் ஒரு அழுகை.
அவளின் கண்ணீரை தன் கரம் கொண்டு துடைத்தவனும் மௌனத்தின் பின்னால் அவளுடன் மறைந்துகொள்ள மௌன சங்கீதமாய் அந்த நிசப்தம் இருவரை சுற்றியும் அரங்கம் அமைத்துக்கொள்ள கார்மேகவண்ணனின் கரம் சேர்ந்தது ஆழினியின் விரல்கள்.