அந்த பட்டின் மென்மை கூட அவளை தொடவில்லை. விழிகள் சுழல அங்கே ஆளுயர புகைப்படத்தில் அவன் நின்றிருந்தான்.
ஆத்மகண்ணன். அன்றைய நாளின் நாயகனானவன். நாயகனாக அவனே வந்து முன்னின்றது தான் முற்றிலும் உண்மை.
இது தான் எதிர்பாராமல் அவனால் உருவாக்கப்பட்ட, அவனே உருவாக்கிக்கொண்ட பந்தம்.
எத்தனை முயன்றும் கழுத்தில் உறவாடிக்கொண்டிருந்த அந்த மந்திர கயிற்றின் ஊசலாட்டத்தை மனதும் தத்தெடுத்திருந்தது.
கையில் திருமாங்கல்யத்தை எடுத்து பார்த்தவள் மனதின் ஓலம் அவளை பெற்றவளின் ஆன்மா மட்டுமே உணர கூடிய ஒன்று.
யாரின் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தாளோ, யார் முகத்தில் விழித்தால் அன்றைய நாளே சுபமற்று போகும் என்றவரின் பார்வையில் கூட படாமல் விலகி இருந்தாளோ அந்த குடும்பத்தின் மருமகள் இப்போது.
சொந்த தாய்மாமனை கூட உரிமையற்று யாரோ போல பாவித்து வளர்ந்தவள் இப்போது அந்த மாமன் மகனின் மனைவி இன்று.
இது எப்படி சாத்தியம்? அவன் மாங்கல்யத்துடன் நெருங்குகையில் அந்த நிமிடமே அவனை விலகி தள்ளி தான் சென்றிருக்கவேண்டுமே?
“மாமாவுக்காக ப்பா, ரிதும்மா…” என்ற இளைய தாய்மாமன் இளவரசுவின் கெஞ்சல் இப்போதும் காதில் ஒலித்தது.
“இதுதான் நீங்க இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கற லட்சணமா? ஒன்னு தைரியசாலியா இருக்கனும். இல்லையா பிரச்சனை வந்தா என்னன்னு பார்க்கற நிதானத்தோடவாச்சும் இருக்கனும். இவன் பயந்தாரியா இல்ல இருக்கான். இவனை நம்பி இவளை கட்டி வைக்கறேன்னு நிக்கறீங்க?…”
அத்தனை கூட்டத்தின் மத்தியில் மண்டபத்தின் மணமேடையில் நின்று ஆத்மகண்ணன் கேட்ட கேள்வியில் கூனி குறுகி நின்றாரே இளவரசு?
“ஒரு பொறுப்பை ஏத்துக்கிட்டா மட்டும் போதாது. அதை எப்படி சரியா செய்யறோம்ன்றதுல இருக்கு சித்தப்பா எல்லாம். நீங்க கடமை முடிஞ்சா போதும்ன்ற மாதிரி பண்ணிட்டீங்க…” என்ற குற்றச்சாட்டலில் அவர் எத்தனை துடித்து போனார்.
அந்த பேச்சின் திசை எந்த நொடியில் மாறியது என்று தெரியாமல் அவள் விழித்து நிற்க அவரின் கண்ணீரும், கெஞ்சலும் தலையாட்ட வைத்து இதோ இந்த வீட்டின் மருமகளாய் அவனின் அறையில் ஆத்மாவின் மனைவியாய் அவள்.
புகைப்படத்தில் தன்னையே உறுத்து விழிப்பதை போன்ற பாவனையுடன் இருந்தவன் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள்.
ஒரே சுற்று சுவற்றின் உள்ளே இருந்த நான்கு பெரிய வீட்டில் தான் அவளின் வாசமும்.
ஆனால் இப்போது தான் அவனின் உருவத்தை நிதானமாய் கவனிக்கிறாள். அவனின் முகத்தை அவதானிக்கிறாள்.
நிச்சயம் அவனுக்கும் அப்படியாக தான் இருக்கும் என்பதில் அவளுக்கு அத்தனை திண்ணம்.
வருடத்திற்கு ஒருசில முறை மட்டுமே வருபவன் எப்போது வருகிறான் என்றும் தெரியாது. கிளம்பி போவதும் தெரியாது.
அப்படியான சமயங்களில் நேருக்கு நேர் நின்று பார்த்த தருணங்கள் என ஒன்றுகூட இருந்ததில்லை என்பதே அவள் வாழ்ந்த வாழ்க்கை காண்பித்த நிதர்சனம்.
அப்படி இருக்க இது எப்படி நடந்தது? அவனின் முடிவு ஏன் இப்படி? தன்னை ஏன் மனைவியாக்கிக்கொண்டான்? என எதுவும் விளங்கவில்லை.
நிச்சயம் பிடித்து என்ற வரையறைக்குள் நுழையவே முடியவில்லை. தான் ஒருபங்கு ஒதுங்கினால் அவன் பலமடங்கு விலகி செல்பவன்.
தான் ஒருத்தி சொந்தம் என இருப்பதை கூட யாரேனும் அவனுக்கு ஞாபகப்படுத்தவேண்டிய அளவுக்கு தான் குடும்பத்துடன் அவனின் ஒட்டுதல்கள் இருந்திருந்தது.
இப்போதும் யோசித்து பார்க்க இந்த வீட்டிற்குள் நுழைந்த ஞாபகம் கூட இல்லை.
படாரென்ற சத்தம் கேட்கவும் உடல் தூக்கிவாரி போட நிமிர்ந்து பார்த்தாள் ஒரு உதறலுடன்.
வந்தது தாய்மாமன் அண்ணாமலையோ என்று பார்த்தவளுக்கு அப்போது தான் நிம்மதியானது.
சித்தி முருகேஸ்வரியும், அவரின் மகள் வித்திவ்யாவும். அவர்களுடன் உடன் வந்தது அவளின் தாயின் உடன்பிறப்பான அவளின் பெரியம்மா விசாலாட்சி.
“என்னம்மா தூங்கி எழுந்தாச்சா?…” என கேட்டுக்கொண்டே விசாலாட்சி வர வித்யா வந்து கட்டிக்கொண்டாள் அக்காவை.
‘சாப்பிட்டாச்சா? தலைவலி இருக்கா?’ என சைகையில் ரிதுபர்ணாவிடம் கேட்க இல்லை என்று தலையசைத்த ரிது,
“தலை வலிக்கலை. ஆனா எப்படி தூங்கினேன்? எனக்கு தெரியலை…” என்றாள் இருவரையும் பார்த்தபடி.
ஆத்மா தான் அவளுக்கு தந்திருந்த பழச்சாறில் உறக்கத்திற்கான மாத்திரையை கலந்து தலைவலி மாத்திரையை தனியே தந்து அனுப்பியிருந்தான்.
அதனை சொல்லாமலே அவளை போட வைத்து இவ்வளவு நேரம் அமைதியாய் உறங்க வைத்திருக்க எழுந்ததும் இப்படி கேட்கவும் பதில் சொல்லமுடியவில்லை அவர்களுக்கு.
“கீழே உன் மாமியாரோட சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க. யாரையும் பார்க்கவோ, பதில் சொல்லவோ முடியாதுன்னு கிளம்பி போய்ட்டார் அண்ணன்…” என்று சொல்ல,
“அவங்க ஒன்னும் சொல்லலையா?…” என்றாள் மாமியாரை பற்றி கேட்டு.
“அண்ணி எங்க பேசறாங்க? எல்லாம் ஆத்மா தான் பேசறான். அதுவும் அவனோட தாய்மாமா சண்டையே போட்டுட்டார்….” என்று சொல்ல கதவு தட்டப்படும் சத்தம்.
“வித்யா யாருன்னு பாருடா…” என முருகேஸ்வரி சொல்ல வித்யா சென்று கதவை திறந்தாள்.
“சாப்பாடு கொண்டுவந்திருக்கேன்….” என்று நின்றது ஆத்மகண்ணன் தங்கை மனோசித்ரா.
கையில் பெரிய தட்டில் உணவுகள் வைத்து மூடி இருக்க வித்யா வழிவிட்டு நிற்கவும் லேசாய் சிறு புன்னகை மனோவிடம்.
“அத்தை, அண்ணா அண்ணிக்கு சாப்பாடு குடுத்தனுப்பினாங்க. இருந்து சாப்பிட வச்சுட்டு வருவீங்களாம்…” என்று சொல்ல அவளின் உரிமையான அழைப்பில் ரிதுவின் முகம் மாறியது.
இது மனோவின் முதல் பேச்சு. அதுவும் தன்னிடமல்லாது தன்னை குறித்தான பேச்சு.
“சரி, நான் கீழே போறேன். மாமாவும், அத்தையும் இப்பவே ஊருக்கு கிளம்பறாங்கலாம் …” மனோ விசாலாட்சியை பார்த்து சொல்ல,
“எல்லாருமா?…” விசாலாட்சி கேட்டார்.
“தெரியலைத்தை. ஆனா மாமா இனி இங்க வரவேமாட்டேன்னு பேசிட்டிருக்காங்க அம்மாக்கிட்ட. அம்மா அழுதுட்டிருக்காங்க…”
“கண்ணா…”
“அண்ணன் ஒன்னும் சொல்லலை. இருங்கன்னும் சொல்லலை. போங்கன்னும் சொல்லலை. கல்யாணத்தை பத்தி பேசக்கூடாதுன்னு மட்டும் சொன்னாங்க…” சுருக்கமாய் கீழே நடந்த விவாதத்தை மனோ சொல்லவும்,
“சரி நீ போ. நான் வரேன்…” என்றார் விசாலாட்சி.
இவற்றை பார்வையாளர்களாக ரிதுவும், முருகேஸ்வரி, வித்யாவும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அண்ணனுக்கு பயந்தோ, இல்லை அண்ணனுக்காகவோ அண்ணி என அந்த உறவை உடனே ஏற்றுக்கொண்டாள் அவள்.
இப்போது அவள் செல்லவும் கையில் இருந்த பூவை விசாலாட்சி ரிதுவிற்கு வைக்க,
“ப்ளீஸ் பெரிம்மா, எனக்கு பிடிக்கலை. சங்கடமா இருக்கு…” ரிது கையால் தடுத்து மறுத்தாள்.
“இதுல என்ன சங்கடம்?…” என்ற விசாலாட்சி,
“நீ சொல்லு முருகேசு, இவ என்ன இப்படி பேசறா?…” என்றார்.
“ஆமா கண்ணு…” என அவரும் சொல்ல,
“என்ன ஆமா கண்ணு? சித்தி இந்த கல்யாணம் எப்படி நடந்திருக்கு? நீங்க என்னன்னா…” என்றவள்,
“ப்ச், ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்திருச்சு. அதுக்கு உடனே இப்படி எல்லாம் பண்ணினா இந்த வீட்டுல என்ன நினைப்பாங்க? அதுவும் இவங்களை பத்தி எனக்கு எதுவுமே தெரியாதப்போ இப்படி செஞ்சா?…” என்றவள் ஆத்மாவின் புகைப்படத்தை காண்பிக்க,
“இப்ப என்ன பண்ணிட்டாங்க? உனக்கு தலை வாரி பூ வச்சாங்க. அவ்வளவு தானே? இருக்கட்டும் கண்ணு…” என்ற முருகேஸ்வரி,
“முதல்ல சாப்பிடு. ஒண்ணுமே சாப்பிடாம இருந்தா திரும்ப தலை வலிக்கும்…” என்றார்.
அந்த வீட்டின் உணவு அல்ல. கடையில் சொல்லியிருக்க கூடும் என அதனை பார்த்ததும் தெரிந்துவிட்டது.
பின்னே திருமணம் முடிந்ததும் அண்ணாமலையின் மனைவி பக்கத்தின் அத்தனை சொந்தங்களும் கிளம்பி வந்திருந்தார்களே?
கரூரின் மிக புகழ்பெற்ற நிறுவனமான எழில் குழுமத்தின் மூத்த வாரிசின் திருமணம். அதுவும் எதிர்பாராத திருமணம்.