“இல்ல அவளுக்கு சொல்லனும்னு இல்லை. புரிஞ்சுப்பா. நானும் வரேன். போவோம்…” என்று விசாலாட்சி எழுந்துகொண்டார்.
“இங்க பாரும்மா, நீ புத்திசாலி பொண்ணு, இனி இதுதான் உன் வீடு. புரிஞ்சு நடந்துக்கோ ரிது…” என்றார் முருகேஸ்வரி.
“இதெல்லாம் ஏன் சொல்லிட்டிருக்க? இது ஒன்னும் அடுத்தவங்க வீடு இல்லை. அவளோட தாய்மாமா வீடு. அவளுக்கு இங்க எல்லா உரிமையும் இருக்கு…” என்ற விசாலாட்சி,
“இந்நேரம் என் அம்மா, என் தங்கச்சி இருந்திருந்தா சந்தோஷப்பட்டிருப்பாங்க ரிது இந்த குடும்பத்து மருமகளா வந்ததுக்காக. இப்பவும் அவங்க மனசார நல்லா வாழ்த்திட்டு தான் இருப்பாங்க…” என்றார்.
“பெரிம்மா…” என அவரை கட்டிக்கொண்டாள் ரிது.
“நல்லா இருக்கனும்டா. எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நீ இந்த வீட்டு பொண்ணுன்றது மாறாதுல…” என்று தலையை கோதியவர்,
“சரி, சரி நானும் அழுது உன்னையும் அழ வச்சிருவேன்….” என அவளை நிமிர வைத்தார்.
“முருகேசு அந்த பையை குடு…” என்றதும் வித்யா அவளிடம் நீட்டினாள் உடனே.
“இதுல உனக்கு ஒரு நைட்டியும், நாளைக்கு எழுந்ததும் குளிச்சிட்டு மாத்த ட்ரெஸ்ஸும் இருக்கு. வச்சுக்கோ. உன் போன் கூட பைக்குள்ள இருக்கு. ஏதாவது வேணும்னா கூப்பிடு…” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
ஒன்றும் சொல்லமுடியாமல் பரிதவிப்புடன் அவர்களை பார்த்துக்கொண்டே நின்ற ரிது சோபாவில் அமர்ந்தாள் மீண்டும்.
கதவு சாற்றப்பட என்னவோ ஒரு கூண்டுக்குள் சிக்கிக்கொண்ட தவிப்பு அவளிடம்.
கையில் இருந்தவற்றை திருப்பி திருப்பி பார்த்தபடி இருக்க உடை மாற்றவேண்டும் என எண்ணம் எழுந்தாலும் முடியவில்லை.
அவன் வந்துவிட்டால்? இதுவரை முருகேஸ்வரி முன்னால் கூட இரவு உடையில் வர விரும்பியிராதவள்.
இரவில் உறங்கும் போது தனக்கான தனி அறையில் மட்டும் இரவு உடை அணிந்திருந்தவள் இப்போது அவனின் முன்னால் எப்படி அணிய முடியும் என கையில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.
உள்ளிருக்கும் மொபைல் லேசாய் சிணுங்கிக்கொண்டிருக்க எடுத்து பார்த்தால் உடன் வேலை பார்க்கும் தோழி.
அன்று காலை தன் அழைப்பின் பேரில் திருமணத்திற்கு வந்திருந்தவள் இப்போது அழைத்திருந்தாள்.
பார்த்தபடி ஒன்றும் பேசாமல் சைலண்டில் போட்டுவிட்டு தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க மீண்டும் கதவு திறக்கப்படும் சத்தம்.
ரிது திரும்பி பார்க்க அங்கே உள்ளே நுழைந்து கதவை தாழிட்டுவிட்டு வந்துகொண்டிருந்தான் ஆத்மகண்ணன்.
அவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவனின் முகத்தை அன்று தான் அத்தனை முறை பார்த்துகொண்டு இருந்தாள்.
மனதிற்குள் இருந்த ஏன் என்ற கேள்வி அவள் முகத்திலும் தொக்கி நிற்க அவள் அருகே வந்தவன்,
“சாப்பிட்டாச்சா?…” என்றான் ரிதுபர்ணாவிடம்.
“ஹ்ம்ம்…” என தலையசைப்பு மட்டுமே ரிதுவிடம்.
“ஓகே, டூ மினிட்ஸ்…” என்று பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டான்.
இதுதான் அவன் அவளிடம் பேசிய முதல் வார்த்தை. மண்டபத்தில் கூட எதுவும் பேசவில்லை.
“சித்தப்பா அவக்கிட்ட சம்மதமான்னு கேட்டு சொல்லுங்க…” என்று கூட இளவரசுவிடம் தான் கேட்டானே தவிர்த்து தன்னிடம் கேட்கவில்லையே?
ஏன் இப்படி செய்தான்? மீண்டும் அதே கேள்விக்குறி தான் தோன்றி அவளை படுத்தியது.
சிந்தனையுடன் அவன் சென்ற திக்கிலே அவள் பார்வை இருக்க வெளியே அவன் வந்ததும் தெரியவில்லை.
கட்டிலில் அமர்ந்து தன்னை பார்த்ததும் கருத்தில் படவில்லை. இப்போதும் அதே திசையில் தான் நிலைகுத்திய பார்வை ரிதுவிடம்.
“ரிது…” என்ற கணீர் குரலில் திடுக்கிட்டு திரும்ப கட்டிலில் அமர்ந்திருந்தான் ஆத்மா.
“இங்க வா…” என்று அழைக்க பொம்மை போல எழுந்து சென்றாள்.
“உட்கார்…”
“இல்லை பரவாயில்லை…” என்று சொல்ல,
“இதுவும் உன் ரூம் தான். உட்கார்…” இப்போது அதிகாரம் போல வந்தது அழுத்தத்துடன் அவன் குரல்.
“இல்லை என்னன்னு சொல்லுங்க…” அப்போதும் அமராமல் ரிது பேச கையை பிடித்து அமர வைத்தான்.
“தலைவலி எப்படி இருக்கு?…”
“ஹ்ம்ம், இப்ப சரியாகிடுச்சு….”
“சூர்…”
“ஆமா…”
“ஓகே, படுத்துக்கோ…” என்று சொல்ல அவளின் பார்வை இங்குமங்குமாய் சுழன்றது.
“உன்னை தான் படுன்னு சொன்னேன்…”
“நான் அப்பவே தூங்கிட்டேன். இப்ப தூக்கம் வரலை. போய் சோபால…” என்று சொல்ல விளக்கை அணைத்திருந்தான் ஆத்மா.
“நாளைக்கு நாம சென்னை கிளம்பனும். படுத்துக்கோ…” என்று சொல்ல ரிதுவிற்கு இன்னும் பேரதிர்ச்சி.
இவன் என்ன என்னை யோசிக்கவே விடமாட்டானா? என்றானது. மறுநாளே சென்னை. அதிலும் இவனுடனா?
“நான் எப்படி சென்னைல?…” மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சத்தில் அவள் கேட்க,
“என் வொய்ப் என்னோட தானே இருக்கனும்? நான் சென்னைலன்னா நீயும் தானே?…” என்றவன் கால்களை நீட்டி படுத்துவிட்டான்.
இனி இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என நினைத்த ரிது அவ்விடத்தை விட்டு நகர திரும்ப எத்தனிக்க அதற்குள் கை பிடித்து இழுத்திருந்தான் ஆத்மா.
“எங்க போற ரிது?…” என்ற கேள்வியில் அவனருகே விழுந்திருந்தவளை கைகளால் சுற்றிக்கொண்டவன்,
“என்ன பன்றீங்க?…” என்று கேட்டவளுக்கு அவனின் செயலில் தலை கிறுகிறுத்தது.
“இங்க பார் ரிது, மாமா பையன், அத்தை பொண்ணுன்ற ரிலேஷன்ஷிப் வச்சு பார்த்தா நம்ம லைஃப் இந்த இடத்தை தாண்டி மூவாகாது. நாம இப்ப ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப். அதுமட்டும் தான் நம்மை வாழவைக்கும்…” என்றவன்,
“சகிச்சிட்டு போற ஒரு லைஃபா இருக்காது நம்மோட வாழ்க்கை. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு நாளை தள்ளி போட்டு வெய்ட் பன்றதுக்கு வாழ ஆரம்பிக்கலாம்…”
“என்ன? அது எப்படி?…” ரிதுவிற்கு பதில் பேசவோ, கேள்வி எழுப்பவோ வார்த்தைகள் வரவில்லை.
“நாம பேசிக்கிட்டது கூட இல்லை. உங்களை நான் எதுவும் தெரிஞ்சுக்கலை…”
“என்னோட பேர் ஆத்மாகண்ணன். ஆத்மா. தெரியுமா?…”
“ஹ்ம்ம், தெரியும்…”
“மாஸ்டர்ஸ் முடிச்சிருக்கேன். சென்னைல ஷோரூம் ரன் பன்றேன். அது தெரியுமா?…”
“ஹ்ம்ம், மாமா சொல்லியிருக்காங்க…”
“அவ்வளோ தான். அதான் ஏற்கனவே தெரிஞ்சு வச்சிருக்கியே? இது போதுமே?…” என்றவனின் அடுத்த வார்த்தைகள் அவள் முகத்தோடு புதைந்தது.
“கல்யாணத்துல பெரும்பாலான புரிதல் இங்க இருந்தும் தொடங்கும் ரிது. நமக்கும் இங்க இருந்தே தொடங்கட்டும். உனக்கு ஓகே தானே?…” என்றவனின் தொடக்கமும், சாதுர்யமான பேச்சும் அவளை பேச விடவில்லை.
ஆத்மாவின் ஈரமுத்தம் ரிதுவின் சூடான விழிகளை குளிர செய்ய அழுந்த பதிந்தது.
அவளின் இமையை அவன் இதழ்வரி ஸ்பரிசித்ததும் விழிகளை உள்ளிழுக்க முடியாமல் இமையை தொட்ட இதழின் தொடுகையில் அதிலிருந்து விலக முடியாமல் தவித்தாள்.
உரிமை, உறவு என்று அவன் கூறினாலும் அவள் கழுத்தில் அழுத்திய மாங்கல்யம் வேறு அவனை யார் என்று எடுத்துரைக்க விழிகளை மூடிக்கொண்டாள்.
இந்த வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பில்லை. இப்போதைய அவனின் செயல்களில் எதிர்ப்புமில்லை.
மௌனமாய் ஒரு கூடல். அந்த அரங்கேற்றத்தில் ஆத்மாவின் மனைவியாய் அவளை அவன் உணர்த்திக்கொண்டிருக்க அவற்றை ஸ்வீகரிக்க ரிதுபர்ணா வெகுவாய் திணறித்தான் போனாள்.
அவன் இருக்கும் அறையில் இரவு உடை அணியவே சற்றுமுன் தயங்கியிருக்க தற்சமைய நிலை அவளை நிலைகுலைய வைத்திருந்தது.
“குட்நைட் ரிது. ஸ்லீப் வெல்…” என்று உறங்கி போனான் அவளை அணைத்தபடி.
ரிதுவிற்கு அவனின் அருகாமையில், அணைப்பில் என பொட்டு உறக்கம் அண்டவில்லை.
நள்ளிரவு வரை விழித்தே இருக்க அவள் உறங்காததின் அசைவில் கண்விழித்தவன்,
“இன்னும் நீ தூங்கலையா?…” என்றான் அவள் முகத்தோடு மோதியபடி.
“ம்ஹூம், அப்பவே தூங்கிட்டேன்….” என்று கண்களை மூடிக்கொண்டவளின் அவசர பதில் ஆத்மாவின் இதழில் கீற்றாய் சிறு புன்னகையை தருவித்தது.