“ஓஹ், இவ்வளோ யோசிச்சியா நீ?…” என்றவன் குரலில் திடுக்கிட்டு எழுந்து மொபைலை பார்க்க மீண்டும் அழைத்திருந்திருந்தான்.
எத்தேர்ச்சையாக கைகள் பட்டு அது அழைப்பை ஏற்றிருக்க இவளின் பேச்சுக்குரலை கேட்டிருந்தவன் முகத்தில் ஏகத்திற்கும் நக்கலும், கோபமும்.
“அது வந்து…” என இவள் விழித்ததில் ஆத்மாவின் கோபம் பின்னுக்கு சென்று சுவாரஸியம் துளிர்த்தது.
“ஹ்ம்ம், உனக்கு அந்த கோபம் வேற இருக்கா என்ன?…” என்றான் நன்றாக இருக்கையில் சாய்ந்தமர்ந்து.
“அதெல்லாம் இல்லை, நீங்க சொன்னதை சொன்னேன். அவ்வளோ தான். எனக்கென்ன கோவம்?…” என சமாளித்தாள்.
“நைஸ்…” என சொல்லி புன்னகைத்தவன்,
“காலேஜ்க்கு இன்னைக்கும் போகலையா?…” என்றான்.
“இல்லை, நேத்து தான் போறதா இருந்தது. ஆனா அதுக்குள்ளே இப்படி சொல்லிட்டாங்க…”
“நீயும் இதுதான் சாக்குன்னு அங்கயே இருந்துட்ட? அதுவும் என்னை பழி வாங்க…” என்றதும் திடுக்கிட்டவள்,
“என்ன இது? பழி வாங்கன்னு இப்படி ஒரு பேச்சு?…” முகத்தை சுருக்கினாள் ரிதுபர்ணா.
“பின்ன? உன் மோட்டிவ் என்னன்னு இப்ப நீயே உன் வாயால சொல்லவும் தெரிஞ்சிருச்சே…” என்று வேண்டுமென்றே முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு பேச ரிதுவின் முகமே மாறிவிட்டது.
“நிஜமாவே அப்படி எதுவும் நினைக்கலை. நான் சும்மா தான் சொன்னேன். நீங்களா எதாச்சும் நினைச்சா நான் பொறுப்பில்லை…” என்றவள்,
“உங்கம்மா தான் அஞ்சு நாள்ல கார்த்திகை வருது. இன்னும் கல்யாணமாகிட்டு கோவிலுக்கு போய் பூஜை வைக்கலை. அதோட விசேஷத்துக்கு உங்க சார்பா நான் இருக்கனும்னு சொல்லிட்டாங்களாம்…”
“ஹ்ம்ம், அப்பறம்…”
“ஏன், உங்களுக்கு தெரியாதா? பெரியம்மாக்கிட்ட தான் சொல்லிருக்காங்க. எனக்கு தெரியாது. நீங்க எதுவானாலும் அங்க பேசுங்க. என்னை வேண்டாம்…”
படபடவென்று அவள் பொரிய சிரிப்பு அடங்குவேனா என்றது ஆத்மாவிற்கு அவளின் கோபத்தில்.
“நான் ஏன் பேசனும்? என்கிட்டே என்ன பர்மிஷனா கேட்டாங்க? இன்பர்மேஷன் தான் சொன்னாங்க. நீயே என்கிட்டே இதை சொல்லலை. இப்ப நானா கேட்கவும் தானே பேசற?…” என்றான்.
“இதென்ன வம்பா இருக்கு? பரத்க்கு பேசி முடிக்கிறாங்க. இதுல நான் என்ன உங்களுக்கு சொல்ல? பெரியம்மாவும், பெரியப்பாவும் தான் சொல்லனும்…”
“சொன்னாங்க, சொன்னாங்க…”
“அப்பறம் ஏன் என்கிட்டே கேட்கறீங்க?…”
“நீ… நீ ஏன் வரலைன்னு கேட்டேன்…” மீண்டும் முதலிலிருந்து தொடங்கினான்.
“அட ஈஸ்வரா, அதான் சொன்னேனே, கல்யாணமாகிட்டு வர இது முதல் விசேஷம். கோவிலுக்கும் போகனுமாம். எப்படியும் நீங்க வரமாட்டீங்களாம். அதனால உங்க சார்பா நான் இருக்கனுமாம்….”
“வேறென்ன? சொல்லிட்டேன் என்னன்னு. இந்த விஷயம் உங்களுக்கும் சொல்லிட்டாங்க. ஆனாலும் காலையில இருந்து அதையே கேட்டுட்டு இருக்கீங்க?…” என்றாள் சற்று அலுத்த குரலில்.
“அவ்வளோ கூடி போச்சா உனக்கு? என்கிட்டே சொல்ல கூட இவ்வளோ சலிப்பு?…”
“ஒருதடவைன்னா ஓகே, இதோட பத்து தடவை கேட்டுட்டீங்க…”
“கேட்பேன். ஏன் சொல்ல உனக்கென்ன? வாய் சும்மா தான இருக்குது?…” விஷமமாய் அவன் வார்த்தைகள் அவளுக்கு குறிப்பு கொடுக்க புரிந்துகொள்ள தான் முடியவில்லை ரிதுவின் அப்போதையே நிலையில்.
அன்று எழுந்ததே அவனின் அழைப்பில் தான். உறங்கிக்கொண்டிருந்தவளுக்கு அழைத்து எப்போது கிளம்புகிறாய் என்றதும் தான் இன்னுமா இவனுக்கு தெரியவில்லை என்று அதிர்ந்தாள்.
முதல்நாளே விஷயம் அவனுக்கு தெரிவித்தாகிற்று என விசாலாட்சியின் மூலம் சொல்லப்பட்டிருக்க இப்போது தன்னிடம் இப்படி கேட்க உறக்கத்திலிருந்து மொத்தமாய் களைந்து எழுந்தாள்.
விடிந்திருந்தது அப்போது தான். குளித்துவிட்டு தலையை துவட்டியபடி ரிதுபர்ணாவிடம் கேட்டவனை மலங்க மலங்க விழித்து பார்த்தாள்.
“உன்னை தான். ஏன் பேய் முழி முழிக்கிற? கிளம்பலையான்னு கேட்டேன்? இன்னும் எழுந்துக்க கூட இல்ல போல?…” என்றவன்,
“கழுத்துல செயினோட சேர்த்து தாலி பின்னாடி விழுந்திருக்கு பார். எடுத்துவிடு…” என்று சுட்டி காட்ட கழுத்தை ஒட்டிய அந்த மஞ்சள் நாணை எடுத்து முன்னே விட்டுக்கொண்டாள்.
“ஹ்ம்ம், போய் முகம் கழுவிட்டு ரெடியாகு…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
அவனிருந்தது சென்னை இல்லம். வந்துவிட்டான் என்று தெரிந்தவளுக்கு அங்கே செல்லவேண்டும் என்று தோன்றினாலும் முடியாத சூழ்நிலை.
இன்னும் ஐந்து நாட்களில் கோவிலில் வைத்து பூஜையும், அன்றே அங்கே வைத்து விசாலாட்சியின் மகன் பரத்திற்கு பெண் பார்த்து பூ முடிக்கும் நிகழ்வும் என முடிவாகி இருந்தது.
விசாலாட்சி ஆனந்தியிடம் விவரம் சொல்லவும் அவர் சொல்லிவிட்டார் ரிதுபர்ணாவை ஊருக்கு அனுப்ப வேண்டாம் என்று.
விசாலாட்சியும், ஏழுமலையும் முறையாக ஆத்மாவிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி அவனையும் வருமாறு சொல்லிவிட்டு ரிது இருக்கட்டும் என்று சொல்லியிருக்க அங்கே தலையாட்டியிருந்தவன் இவளை பாடாய்ப்படுத்தி வைத்தான்.
காலை எழுந்ததில் இருந்தே அழைக்கும் பொழுதெல்லாம் எப்போது எப்போது என கேட்டு உயிரை வாங்க பொறுமை இழந்து தான் போனது ரிதுபர்ணாவிற்கு.
“என்ன கனவா? என்ன கனவு? நான் கேட்டதா?…” என்று இப்போது சரசமாய் கேட்டவன் குரலில் கலைந்தவள்,
“கனவா? தூக்கம் வருது…” என்றவள்,
“என்னால முடியலை. இப்ப நான் என்ன பண்ணனும்னு சொல்றீங்க நீங்க?…”
“அதை நான் தான் சொல்லனுமா? இன்னும் அஞ்சு நாள் இருக்கு. கரூருக்கும், சென்னைக்கும் என்ன பெரிய தூரம்? ஏன் பங்க்ஷன் அன்னைக்கு உன்னோட நான் வரமாட்டேனா?…” என கேட்க உதட்டை சுழித்தவள் முகத்தில் ஏகத்திற்கும் கிண்டல்.
ஆனந்தியின் புலம்பல் அப்படி இருந்தது. அதுவும் பேச்சுக்கள் ரிதுவிற்கு கேட்கும்படியே தான் இருந்தது.
“இவளை அனுப்பினா இதென்ன விசேஷம்? நீங்க பாருங்க. கல்யாணத்துக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லிருவான். என்னைக்கு எந்த விசேஷத்துல அவன் வந்து நின்னிருக்கான்? உனக்கு தெரியாதா?…” என விசாலாட்சியிடம் சொல்லுவதை போல ரிதுவிற்கும் சொல்லிவைத்தார்.
நினைக்கையில் அத்தனை சிரிப்பு ரிதுவிற்கு. அதில் புன்னகை மின்ன கண்கள் குழிய சிரித்தவளை பார்த்துக்கொண்டே இருந்தான் ஆத்மா.
“நீங்க வரவேமாட்டீங்கன்னு தான் அவ்வளோ நம்பிக்கை. அதான் பிடிச்சு வச்சுக்கிட்டாங்க என்னை. அதான் வரேன்னு சொன்னீங்களே? வரப்போ சேர்ந்து போவோம்…” என்றாள் ரிதுபர்ணா.
“கொழுப்புடி. ஊருக்கு போகவும் வாயும் நீளுது. இங்க மட்டும் பேசிடாத…”
“அதுக்கு நீங்க என்னை பேச விடனும்…”
“என்ன பன்றேனாம்? உன் வாயடைக்கிறேனா?…”
“ஆமா, இல்லையா பின்ன?…”
“எப்படி? சொல்லு கேட்போம்….” கதை கேட்கும் பாவனையில் அவன் பார்க்க,
“அப்படி எல்லாம் இல்லை. அவங்க நிஜத்தை தான் சொல்லிருக்காங்க. அதோட நான் இப்படியெல்லாம் கலந்துக்கிட்டது இல்லை. இங்கயும் எனக்கு வேலை இருக்கே?…” என்றான் சாதாரணமாக.
ஆனாலும் அவன் முகத்தில் சிறு இறுக்கம் தோன்றி மறைந்ததை கவனிக்கவும் செய்தாள்.
“நான் வரலைன்னா என்ன? அதான் பெரியமனுஷி நீ இருக்கியே, குடும்பத்தலைவியா என் சார்பா. சிறப்பிச்சிட்டு வா…” என கேலி செய்ய,
“கிண்டலா? இது பிடிவாதம்…”
“அப்படியும் வச்சுக்கோ. ஒருவேளை நீ வந்திருந்தா கூட உன்னை கூட்டிட்டு போகனும்னு நான் வந்திருப்பேன். இப்ப அதுக்கும் அவசியமில்லை. நீ முடிச்சிட்டு கிளம்பிடு. லேட் பண்ணாத…” என்றவன் அவள் பேசும் முன்,
“காலேஜ்க்கு மார்னிங் போயிருக்கவேண்டியது தானே? ஏன் இப்போ?…”
“எங்க மேம் இன்னைக்கு லேட்டா தான் வரேன்னாங்க. அதான் இப்ப கிளம்பறேன்…”
“ஓஹ்…”
“ஹ்ம்ம், அதோட டெம்ப்ரவரி ஜாப் தானே? பெரிய பார்மாலிட்டீஸ் எல்லாம் இருக்காது. ஒரு மரியாதைக்கு போய் சொல்லிட்டு ரிசைனிங் லெட்டர்ல சைன் பண்ணிட்டு வரனும்…”
“ஹ்ம்ம், அப்பறம் இங்க எப்ப ஜாயின் பன்றதா ஐடியா?…”
“அதான் சொன்னேனே, பங்க்ஷன் முடிச்சிட்டு வந்து…”
“அந்த முடிவுல இருந்து மாற்றமில்லை. ஹ்ம்ம்…”
“ஹ்ம்ம், மாற்றமில்லை…” என்றாள் அழுத்தமாய்.
“வெல், பை ரிது, டேக் கேர்…” என விரலை அசைத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.
மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது. மொபைலை கையில் வைத்தபடியே எழுந்து ரிது வெளியே வர விசாலாட்சியும், முருகேஸ்வரியும் சிரித்தபடி பார்த்தனர்.
“முடிஞ்சதா? சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா கண்ணு?…” என முருகேஸ்வரி கேட்க,
“சரிங்க சித்தி…” என சொல்லவும் அவர் எழுந்து உள்ளே செள்ள போக,
“அதான் போனை கையிலையே வச்சிருக்காளே? எங்க முடிய? நீ எடுத்து வை. சாப்ட்டுட்டே பேசுவா…” விசாலாட்சி சத்தமாய் கிண்டலடித்தார்.
“ஏன் சொல்லமாட்டீங்க? நான் கிளம்பி போறேன் பாருங்க…” ரிதுபர்ணா முகத்தை சுருக்க,
“என்ன பெரிம்மா இது? அதான் என் ஸ்கூட்டி இருக்கே. அதுலயே நான் போய்க்க மாட்டேனா? இதெல்லாம் ரொம்ப ஓவர். நான் டெய்லி போன காலேஜ் தானே?…” என்று சிணுங்கியபடி அமர முருகேஸ்வரி தட்டுடன் வந்துவிட்டார்.