“அம்மா சொன்னாங்க. நான் மதிப்பா நடக்கனுமாம். இல்லன்னா உன் வீட்டுக்காரருக்கு புடிக்காதாம். நமக்கு ஒரே வயசு இதெல்லாம் ரெண்டாவதாம்…” என சலிக்க,
“அதானே பார்த்தேன். நீயா ஏன் கூப்பிட போறன்னு…” என்று இருவரும் பேசிக்கொண்டே கல்லூரி வேலையை முடித்து திரும்பினார்கள்.
அங்கே கல்லூரியில் அவளுடன் பணிபுரிந்த தோழிகள் ஒருவரையும் பார்க்கவில்லை.
இருந்தால் தேவையற்ற கேள்விகள் வருமென வேலை நேரத்தில் சென்றுவிட்டு திரும்பிவிட்டாள்.
பத்து கிலோமீட்டர் தூரத்தில் தான் கல்லூரி. அந்த கல்லூரி இருக்கும் ஊரில் தான் பரத்திற்கு பேசி முடித்திருக்கும் பெண்ணின் வீடும் இருந்தது.
முரளி அந்த ஏரியாவை கடக்கையில் பெண்ணின் வீடிருக்கும் திசையை காண்பித்துவிட்டே அழைத்து வந்திருந்தான்.
எத்தேர்ச்சையாக அந்த பெண்ணை கல்லூரியிலும் பார்த்திருந்தார்கள். பார்த்தவரை திருப்தி தான்.
“பொண்ணு போட்டோல விட நேர்ல இன்னும் நல்லாயிருக்கு பெரிம்மா. நல்ல பொண்ணு…” என வந்ததும் விசாலாட்சியிடம் சொல்லிவிட்டாள்.
ஒரு வருடமாகவே பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்திருக்க ஜாதகம் அமையாமல் இருந்து இப்போது எல்லாம் கூடி வந்து ஜாதகம், குடும்பம், என எல்லா பொருத்தமும் அமைந்து மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் பிடித்துவிட்டது.
கோவிலில் வைத்து சுருக்கமாய் பூ வைத்து நிச்சயம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
அன்றைய நாள் திருக்கார்த்திகை என்பதால் அதற்கு அடுத்த நாட்கள் ஒத்துவராததால் தள்ளி போடவேண்டாம் என்று அன்றைக்கு காலையே நேரத்தை குறித்திருக்க அதன்பொருட்டு ரிதுபர்ணா ஊர் திரும்புவது நிறுத்தப்பட்டது.
அங்கிருந்த நாட்களில் அண்ணாமலையின் கண்களில் படாமல் இருந்துகொண்டாள் அவள்.
ஆனால் அவ்வப்போது விசாலாட்சி வீட்டில் இருக்கையில் ஆனந்தியின் வருகை அதிகப்பட்டது அங்கே.
ஏதேனும் சின்ன விஷயம் கூட நேரில் வந்து சொல்வதாக பெயர் பண்ணிக்கொண்டு மருமகளை வந்து பார்த்து என ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
மனதிற்குள் ஏகத்திற்கும் கேள்வி. மகனோடு எப்படி வாழ்க்கை செல்கிறதோ இப்பெண்ணிற்கு என்று அவள் பார்க்காத நேரம் முகத்தில் அத்தனை ஆராய்ச்சி செய்வார்.
அவர் பார்க்கிறார் என்றே உணர்ந்தும் நிமிராமல் திரும்பாமல் இருந்துகொள்வாள் ரிதுபர்ணா.
“நல்ல மாமியா, நல்ல மருமவ. சேர்ந்திருக்கீங்க பாருங்க ரெண்டும்…” என விசாலாட்சி தான் தலையிலடித்துக்கொள்வார்.
இந்த விளையாட்டை கவனித்த செண்பகம் கூட கிண்டலாக ஆனந்தியிடம் கேட்டுவிட்டார்.
“மருமகட்ட பேசனும்னா பேசவேண்டியது தான? எவ்வளவு நாளைக்கு க்கா இப்படியே இருந்திருவீங்க?…” என கேட்க,
“எனக்கென பேச்சு? நான் ஏன் போய் பேசனும்? ஏன் அவளுக்கு அம்புட்டு இடும்பா? வேணும்னா வந்து பேசட்டுமே?…” என்று வீராப்பு குறையாமல் பேசி மழுப்ப அது இளவரசு காதுக்குமே செண்பகம் மூலம் சென்றது.
“கொஞ்ச நாள் போனா தானா பேசிருவாங்க. அதுக்கு கண்ணனும் கொஞ்சம் குடும்பம்ன்னு நெருங்கி வரனும்…”
“என்னதான் பன்றது? அவ இங்க இருந்தா வருவான்னு உங்கண்ணி கணக்கு போட்டா அவன் அதுக்கு மேல இருக்கான்…” என்ற செண்பகம்,
“இன்னும் ரெண்டு வருஷத்துல முரளிக்கும் கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிக்கனும்….” என அப்போதிருந்தே மகனின் திருமணத்தை பற்றி திட்டமிட ஆரம்பித்தார் அவர்.
இப்படியாக விசேஷத்தின் இருநாட்களுக்கு முன் வழக்கமான நேரம் ஆத்மாவிடமிருந்து அழைப்பு வந்தது ரிதுபர்ணாவிற்கு.
“இன்னுமா ஷோரூம் கிளம்பலை நீங்க?…” என்றாள் ரிது.
குரலில் அவன் மீதான அதிருப்தி மிதமிஞ்சி இருந்ததை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை ஆத்மா.
மும்பை சென்று வந்த பின்னர் இருவருக்குமிடையேயான பேச்சுக்கள் கூட நெருங்கி இருந்தது. இலகுவாய் தயக்கமின்றி அவள் பேசவும் செய்தாள் அவனுடன்.
“போகனும், இன்னைக்கு லேட்டாகிருச்சு….” என்றவன்,
“நாளை மறுநாள் மதியம் கார் ரெடியா இருக்கும். நீ இங்க இருந்து கிளம்பின கார் தான். லன்ச் முடிச்சுட்டு கிளம்பிடு ரிது….” என்றான்.
“அதை இப்பவே சொல்லனுமா?…”
“சரின்னு சொல்லமாட்டியா நீ? இல்லை இன்னும் பத்துநாள் இருக்கறதா ஐடியாவா? இப்பவே எவ்வளோ நாளாச்சு?…” என்றவன்,
“இல்லை நான் வந்து உன்னை தாங்கி தடுக்கி கூப்பிடனும்னு நினைக்கிறியா?…” என்றான் சற்று எரிச்சல் பொங்க.
மும்பையிலிருந்து வந்த நாளில் இருந்தே அவனிடமிருந்து அவ்வப்போது வெளிப்படும் இத்தகைய எரிச்சல்கள் அவளை சுட்டுவிடும்.
அவளில்லாத அந்த வீட்டின் தனிமை என்னவோ ஆத்மாவிற்கு அறவே பிடிக்காது போனது.
அதுவும் அவர்களின் அறை அவளின் பயன்பாட்டின் அடையாளங்கள் என்று அவனுக்கு அவளில்லாததை உணர்த்திக்கொண்டே இருக்க ஊசியாய் அவனின் உணர்வுகளை துளைத்துக்கொண்டிருக்க தாளமாட்டாமல் இவளிடம் கொட்டிவிடுவான்.
அப்போதெல்லாம் பேச்சுக்களின் சூடு கொஞ்சமும் குறையாமல் அவளை அடைய இவ்வளவிற்கா அவளை தான் தேடுகிறோம் என்று தன்னை குறித்த மலைப்பு மலை போல் எழும்.
இன்னும் இருநாட்கள் இருந்தாலும் எப்போதடா நகரும் என்று நத்தையாய் ஊர்ந்த நொடிகளுக்கு அத்தனை சாபமிட்டுக்கொண்டிருந்தவன் அவளிடமும் காய்ந்தான்.
“நான் சொன்னேனா? நீங்க வாங்கன்னு நான் கூப்பிடவே இல்லையே?…” பதிலுக்கு இவள் பேச,
“ஏன் கூப்பிடலையா?…” என முறைக்கவும் அவனை பார்த்தவளுக்கும் அதே முறைப்பு தான்.
“ஆமாமா, பொண்ணோட மாமியார். மாப்பிள்ளைக்கு அம்மா. சும்மா கெத்தா இருக்கனும்ல…” என சிரித்தவள்,
“இந்த கலர் நல்லாயிருக்கு பெரியம்மா…” என்றாள் கையில் அலைபேசியின் தொடர்பில் ஆத்மா இருப்பதை மறந்து.
முருகேஸ்வரியும் வந்து பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொல்ல விசாலாட்சிக்கு திருப்தி.
“இப்பவே எல்லாத்தையும் எடுத்து வச்சா தான் அன்னைக்கு நிம்மதியா மத்த வேலைங்களை பார்க்க முடியும். நீங்களும் எடுத்து வச்சுக்கங்க…” என்று அவர் செல்லவும் முருகேஸ்வரி ரிதுவிடம் திரும்பினார்.
“பட்டு சேலை எதாச்சும் கொண்டு வந்திருக்கியா ரித்து?…” என கேட்கவும் தான் அவளுக்கு எல்லாமே சென்னையில் இருப்பதே ஞாபகம் வந்தது.
“அதான் என்னை ஊரை காலி பண்ணி அனுப்பற மாதிரி அத்தனையும் அங்க அனுப்பிட்டீங்களே?…” என்றாள் முகத்தை சுண்டிக்கொண்டு.
“அங்க போக, வர உனக்கு அவசியப்படுமேன்னு தான் எடுத்து வச்சேன்…” என்றவர்,
“சரி இங்க பீரோல என்ன துணி இருக்குன்னு பாரு…” என்றதும் மொபைலை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு பீரோவை திறந்தாள்.
அதிலிருந்த உடைகள் அவ்வளவு பகட்டாக இல்லவே இல்லை. எல்லாம் வெகு சாதாரணம் தான்.
“சில்க் காட்டன் இருக்கு சித்தி. போதும் தானே?…” என அதனை எடுத்து வந்து காண்பிக்க,
“என்ன கண்ணு? காலையில கோவில்ல உங்க பூஜை. அடுத்து பரத்துக்கு தாம்பூலம் மாத்தறாங்க. நீ உசத்தியா கட்டிருக்கனும்ல…” என்றவர்,
“நகைக கூட பிரச்சனை இல்லை. இங்க இருக்கறதா போட்டுக்கலாம். ஆனா சேலை?…” என்றவர்,
“சரி. சட்டுபுட்டுன்னு கிளம்பி போய் கடையில நல்லதா ஒரு பட்டு சேலை எடுத்துட்டு வருவோம்…” என்று சொல்லவும் மறுக்க முடியாமல் தலையசைத்தாள்.
“ஆனா உனக்கு வழக்கமா தைக்குமே, டிசைன் வச்சு சட்டை தைக்கிற அந்த புள்ளை ஊருக்கு போயிருக்கு. வேற டெயிலர்ட்ட தான் தைக்க குடுக்கனும். என்ன பண்ண கண்ணு?…” என்றார்.
“நான் இதுவே போதும்ன்னு சொல்றேன். நீங்க கேட்கமாட்டேன்றீங்க? பரவாயில்லை ப்ளவுஸ் சாதாரணமா தச்சா போதும். கோவில்ல வேறு யாரு இருக்கா? நாம தானே சித்தி?…”
“என்ன கண்ணு நீ? கல்யாணமாகி நம்ம குடும்பத்துல நடக்குற மொத விசேஷம். நீ பார்க்க நல்லவிதமா இருக்கனும்ல…” என்று சொல்லவும் மறுக்க முடியவில்லை.
சரி என்று சொல்லி வந்தவள் ஆத்மாவுடன் பேசிக்கொண்டிருந்ததையே மறந்துவிட்டிருந்தாள்.
அவனும் அவள் மொபைலை எடுக்கையில் அழைப்பில் இல்லாததால் முருகேஸ்வரியுடன் கடைக்கு கிளம்பிவிட்டாள்.
“இப்ப என்ன? அங்க இருந்து கண்ணனை அனுப்பிவிட சொல்லு. இல்லைன்னா ட்ரைவரை அனுப்பி வாங்கிட்டு வர சொல்லுவோம்…” விசாலாட்சியும் சத்தம் போட்டு பார்க்க,
“சும்மா இருங்க பெரிம்மா, ஒரு சேலை ஜாக்கெட்டுக்கு இந்த பாடா? சில்க் காட்டன் புதுசாவே ரெண்டு இருக்கு. சொன்னா சித்தி கேட்கமாட்டேன்னு சொல்றாங்க…” என ரிதுபர்ணா கடுப்பாகிவிட்டாள்.
“உனக்கென்ன? ஈசியா சொல்லிடுவ. இதுல எவ்வளோ விஷயமிருக்கு. அதுவும் கல்யாணம் முடிஞ்சு நீ மட்டும் தனியா வந்ததுக்கே ஊருக்குள்ள அவ்வளவு பேச்சு. என்னாச்சு, தனியா வந்துட்டா அது இதுன்னு. இப்ப நீ சாதாரணமா நின்னா சுத்தம். இன்னும் பேசுவாங்க…”
விசாலாட்சி சத்தம் போட்டு பட்டு ஜவுளி கடைக்கு சென்று புதிதாய் புடவை எடுத்துக்கொண்டு வரும் வழியில் வேறு டெய்லரை பிடித்து நன்றாக தைக்கும்படி வேப்பிலை அடிக்காத குறையாய் சொல்லிவிட்டு வந்துவிட்டனர்.