மறுநாள் மாலை ஊரே விழாக்கோலம் போல ஜொலித்தது. அதற்கு மறுநாள் திருக்கார்த்திகை தீபம்.
ஊருக்குள் காரை செலுத்தும் பொழுதே ஆத்மாவின் இதயத்தில் கனமாய் பந்தொன்று அடைத்து எழுந்தது.
கிளம்ப வேண்டாம் என நினைத்திருந்தவனுக்கு கிளம்பாமல் இருக்க முடியவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு வந்துவிட்டான்.
ஊருக்குள் காரில் வேகமாய் வந்துகொண்டிருந்தவன் வழக்கமாய் செலுத்தும் வேகத்தை குறைத்து மெதுவாய் ஊர்ந்தபடி வீதியில் தான் கடக்கும் வீடுகளில் வெளியே வைக்கப்பட்டிருந்த தீபங்களை பார்வையிட்டபடி வந்தான்.
இருளில் ஒளிவீசும் அந்த தீபங்கள் மனதின் கனத்தை குறைப்பதற்கு பதிலாய் கூட்டிவிட்டே தான் ஒளிர்ந்தது.
எத்தனை வருடங்களுக்கு முன் இப்படி ஒரு விசேஷ நாளில் ஊருக்குள் இருக்கிறான் என்று சுத்தமாய் ஞாபகமில்லை.
ஏசியை அணைத்துவிட்டு கார் கண்ணாடியை இறக்கினான். எண்ணையின் வாசனையில் தீபத்தில் எரிந்த திரியின் மெல்லிய கருகல் வாசம் நாசியை நிறைத்தது.
தனது வீட்டின் கேட்டின் முன்னால் ஹாரனை ஒலிக்கவிடும் முன் கேட் அகல திறந்திருந்தது விளக்குகளோடு.
உள்ளே நுழைந்தவன் காரை விட்டு இறங்கி பார்க்க சுற்றிலும் அவ்வளவு வெளிச்சம். அத்தனை தீபங்கள். பார்க்க இரு கண்கள் போதவில்லை.
பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்தபடி நின்றவன் சில நொடிகள் தன்னுணர்வுகளை அடக்க முயன்றான்.
பால்ய காலத்தில் தானும் இதில் பங்குகொண்டதாக தெளிவில்லாத பிம்பமாய் கலங்கலாய் ஒரு காட்சி நினைவூட்டியது மனதில்.
“ம்மா நானும் விளக்கு வைக்கிறேன்ம்மா. இந்த கொழுக்கட்டை தான் எனக்கு வேணும். பெருசா…” என பச்சரிசி மாவில் செய்த விளக்கில் நெய்யிட்டு திரி போட்டு எரிந்துகொண்டிருந்த தீபத்தை பார்த்து கேட்டதும் எங்கோ ஒரு மூலையில் எழுந்தது.
மூச்சை ஆழமாய் இழுத்துவிட்டவன் மனதை சிறிது சமன் செய்துகொண்டு பார்வையை ரிதுபர்ணா வீட்டு பக்கம் திருப்பினான்.
காருக்குள் இருந்த கவரை எடுத்துக்கொண்டவன் அவளுக்கு அழைக்க அவள் போன் எடுக்கவில்லை.
இரண்டு மூன்றுமுறை அழைத்துவிட்டான். எடுக்கப்படவே இல்லை. யாரையும் வெளியில் பார்க்கவும் முடியவில்லை.
தெரு முக்கில் ஒவ்வொரு தெருவிற்கும் ரேடியோ குழாய் கட்டப்பட்டு பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க அதையும் கேட்டபடி அந்த பேக்கை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அவனின் இந்த எதிர்பாராத வருகையை அத்தனை ஆச்சரியமும், சந்தோஷமுமாக பார்த்த ஆனந்தி எழுந்து நின்றுவிட்டார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் மகனின் வரவில் திக்குமுக்காடி போயிருக்க அண்ணாமலைக்குமே வியப்பு தான்.
“வாங்க தம்பி…” என ராணி சத்தமாய் சொல்ல வீட்டிலிருந்த மற்றவர்களும் கவனித்தனர்.
அவர்களை டைனிங் ஏரியாவில் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் மாடியேறிவிட்டான்.
“மனோ, நீ போய் அண்ணனை சாப்பிட வர சொல்லு…” என மகளை அனுப்ப அண்ணாமலை சாப்பிட்டவரை போதும் என்று கையை கழுவிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
மாடிக்கு சென்றவன் சென்ற வேகத்தில் கீழே இறங்கி வந்தான். எதிரே தங்கை வரவும் அவள் புன்னகைக்க தானும் புன்னகைத்தவன்,
“என்ன மனோ?…” என்றான்.
“டின்னர் சாப்பிடலாம், வாங்கண்ணா…”
“இல்லம்மா, பசிக்கலை. நீ சாப்பிடு…” என்றான்.
“நாங்க எதிர்பார்க்கலை. சர்ப்ரைஸ். தேங்க்ஸ் அண்ணா…” என்று சொல்ல மௌனமாய் ஒரு புன்னகை ஆத்மாவிடம்.
ஆனாலும் மனதிற்குள், ‘என் வீட்டுக்கு நான் வர தேங்க்ஸ்’ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
“அண்ணா கொஞ்சம் சாப்பிடலாமே?…”
“ரிது வரட்டும். நீங்க சாப்பிடுங்க…” என்றான் கீழே வந்துவிட்டவன்.
சற்று சத்தமாக தான் சொல்லவேண்டியதிருந்தது. வெளியே கட்டபட்டிருந்த ஒலிபெருக்கியில் அவ்வளவு சத்தம். வீட்டிற்குள் வரை கேட்டது.
“இல்லை சேர்ந்து சாப்பிடலாமேன்னு…” என்றவளை திரும்பி பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டான்.
ஆனந்தி அமர்ந்திருந்த இடத்தை விட்டு நகரவில்லை. மனோ மட்டும் வரவும் இதை எதிர்பார்த்ததை போல சாப்பிட ஆரம்பித்தார்.
வெளியே வந்தவனுக்கு நிலைகொள்ளவில்லை. மீண்டும் காரினருகே வந்து நின்றவன் போனில் அழைத்தான்.
ஒலிபெருக்கி உபயத்தால் அழைப்பு கேட்டிருக்காது என்றாலும் யாரையும் அனுப்பி அழைத்துவர சொல்லவும் விரும்பவில்லை.
“கையில போனை வச்சிருக்கவேண்டியது தானே இவ? வைப்பரேட்ல போட்டிருக்கலாம்ல…” என முணுமுணுத்து நின்றவன் வெளியே அங்கிருந்து யாரும் வருவதை போல் தெரியவில்லை என்று தானே முன்னேறினான்.
கால்கள் தயங்கினாலும் மனைவி அவனை காந்தமென இழுத்துக்கொண்டாள் அவள் வாசல் வரை.
அந்த வீட்டு வாசலுக்கு சென்ற நினைவு எப்போதுமே இருந்ததில்லை. இப்போது அதன் முன் நெருங்க நெருங்க மற்றவை எல்லாம் மறைந்து ரிது மட்டுமே நினைவில் நின்றாள்.
“போனை எடேன்டி?…” என்று மீண்டும் மீண்டும் அவளின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருந்தான்.
வாசலுக்கே வந்துவிட வந்து நின்றவனுக்கு ஒரு நொடி தான். திரும்பி சென்றுவிட்டால் என்ன என்று தோன்ற திரும்பவும் நினைத்தவன் பார்வை மீண்டும் அந்த வீட்டு வாசலை எட்ட வெளியே பாட்டுச்சத்தம் நின்றது.
“இப்ப எடுத்திருவா…” என்று அங்கிருந்தே மீண்டும் அழைத்தவன் காதை கொலுசொலி நிறைக்க பார்வை திறந்திருந்த வீட்டிலேயே தான் இருந்தது.
“நீங்க எப்ப வந்தீங்க?…” என்றவள் குரலில் அவள் வாசலில் இருந்து பக்கவாட்டில் திரும்ப விசாலாட்சி வீட்டில் இருந்து வந்துகொண்டிருந்தாள் ரிதுபர்ணா.
முகமெல்லாம் அவனை பார்த்துவிட்ட மகிழ்ச்சியும், புன்னகையுமாய் ஜொலிக்க அந்த கொள்ளை அழகு அவனை அள்ளியது.
அடர்ந்த பச்சை நிற சில்க் காட்டன் புடவையில் தலை நிறைய முல்லை பூவும், இரு கைகளிலும் மருதாணி தொப்பியுமாய் அவனை நெருங்கி வந்தாள்.
அருகே வர வர கையிரண்டில் இட்டிருந்த மருதாணியின் வாசமும், அவள் தலையில் சூட்டியிருந்த முல்லைப்பூவின் வாசமும் ஆத்மாவை சுண்டி இழுத்தது.
காதில் வைத்திருந்த போனை எடுக்கவே இல்லை. அப்படியே திரும்பியவன் பார்வை அவளிடமே நிலைத்திருக்க,
“சொல்லவே இல்லை வரேன்னு. ஈவ்னிங் ஷோரூம்ல இருக்கறதா தானே சொன்னீங்க?…” என்றாள் இன்னும் நம்பமுடியாமல்.
“ஹ்ம்ம், நீ என்ன இங்க?…” என்றதும் தான் அவன் தன் வீட்டு வாசலில் நின்றதே உரைத்தது.
ரிதுபர்ணா மட்டுமல்லாது விசாலாட்சி வீட்டிலிருந்து வெளி வந்த வித்யா, விசாலாட்சி, செண்பகம், சுந்தரி என அத்தனைபேரும் அதிர்ச்சியாக பார்த்தனர் ஆத்மா அங்கே நிற்பதை.
“ப்ச், போச்சுடா…” என நெற்றியை விரலால் நீவிக்கொண்டவன்,
“வா போகலாம்…” என்று நடந்தான்.
அதற்குள் ரிதுவை அழைக்க வந்த முருகேஸ்வரியும் ஆத்மாவை பார்த்துவிட்டு வாசலில் நிற்பதை கண்டு ஓடி வந்தார்.
“வாங்க தம்பி. நல்லாயிருக்கீங்களா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தான் அவன்.
“ஹப்பா இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு. நீ வந்துட்ட…” என விசாலாட்சியும் சொல்ல, அதற்கு வித்யா கை தட்ட ஒருவித ஆயாசத்துடன் அவர்களை பார்த்தவன் கால்கள் பின்னோக்கி செல்ல தலையசைத்து நகர்ந்தான்.
“சரி நாளைக்கு பேசுவோம். போய் படுங்க வெரசா…” என்று விசாலாட்சி சொல்லவும் அனைவரும் உள்ளே செல்ல ரிதுவும், ஆத்மாவும் மட்டும் அங்கே நடுநாயகமாக இருந்த தாமரைக்குள தொட்டி அருகில் வந்து நின்றனர்.
அவர்கள் எல்லாம் செல்லவும் அதன் பின்னர் தான் சற்று ஆசுவாசமாய் மூச்சை இழுத்துவிட்டான் ஆத்மா.
ரிதுவின் பார்வை அவனை குறுகுறுவென வட்டமிட அதனை எதிர்கொண்டவன்,
“என்ன? என்ன லுக்?…” என்று கேட்டு,
“நைஸ்…” என்றான் அவளை பார்த்துவிட்டு.
“சுந்தரி அக்கா மருதாணி கொண்டு வந்தாங்க அவங்க வீட்டுல பறிச்சதுன்னு. நாளைக்கு விசேஷம் வேற. பெரிம்மா உடனே அரைச்சு எல்லாருக்கும் வச்சு விட்டுட்டாங்க. நல்லா இருக்கா…” என்றாள் அவனிடம் கையை நீட்டி காண்பித்து.
“அள்ளுதுடி…” என்றான் மயக்கமும், கிறக்கமுமாய்.
அவன் மொழிந்த வார்த்தைகளும், பார்வையும், ரசனையை வெளிக்கொணரும் புன்னகையும் ரிதுவை கூச செய்ய நீட்டிய கையை இழுத்துக்கொண்டாள் உடனே.
இன்னும் ஆத்மா அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான் பேசாமல். மீசைக்கடியில் நெளிந்த புன்னகை அவளை தடுமாற செய்ய பார்வையை திருப்பியவள்,
“இன்னைக்கு பரணி தீபம். நான் தான் இதெல்லாம் வச்சேன்….” என்று பேச்சை மாற்றி தன் வீட்டையும், விசாலாட்சி வீட்டையும் காண்பித்தாள்.
“நைஸ்…” என்றான் அதற்கும்.
“கோலம் கூட நான் தான் போட்டேன்…” அடுத்ததாய் வேறு பேச,
“நைஸ்…” மாற்றமே இல்லாமல் அதற்கும் அதையே சொல்ல வேறு என்ன பேச என்று தெரியவில்லை.
போனில் அவனிடம் மல்லுக்கு நின்றதை போல் பேசியவளுக்கு நேரில் இப்போது பேச முடியாமல் போனதோடு, அவன் வந்த சந்தோஷமும் அவளை திணறடித்தது.
“ரிது, என்னை பார்…” என்ற அழைப்பில் ஏறிட்டவள்,
“சாப்பிட்டாச்சா? நாங்க சாப்பிட்டோம். பெரிம்மா தான் மருதாணி வச்சுவிட்டுட்டு எல்லாருக்கும் ஊட்டி விட்டாங்க…” என்று அவனை பார்க்காமல் பேச அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் ஆத்மா.
“ஓகே கூல்….” என்றவன்,
“இப்படி வா…” என அருகே அழைத்து விளக்குகளுக்கு மத்தியின் நிறுத்தியவன் தனது மொபைலில் அவளை படம் பிடித்தான்.
“கையை காமி. இன்னும் கொஞ்சம் ஸ்மைல்…” என்று சொல்ல ரிதுவிற்க்கு தான் சங்கடமாக இருந்தது.
“யாராச்சும் வர போறாங்க…” என சொல்ல,
“யாருமில்லை. நில்லு. சும்மா ஒரு மெமரிக்கு…” என எடுத்துக்கொண்டான்.
அதனை பார்த்தபடி ரிதுவினருகே வந்தவன் அவளோடு சேர்ந்து இருவருமாய் செல்பி எடுத்துக்கொள்ள,
“போதும். விடுங்க…” என தோளை அசைத்து அவனின் கையை எடுத்துவிட்டாள்.
“சரி போகலாமா?…” என கேட்கவும் ரிதுபர்ணா பார்வை அவனின் வீட்டை பார்த்தது.
அங்கே இப்போது அண்ணாமலை இருப்பது தெரியும். முதல் தடவை தானிருந்த பொழுதும், அங்கிருந்து சென்னைக்கு கிளம்பிய பொழுதும் அண்ணாமலை அங்கு இல்லை.
“ரிது…” என்றவனின் அழைப்பில் ஆத்மாவின் முகம் பார்த்தாள்.
அவளின் எண்ணவோட்டங்களை புரிந்துகொண்டவன் அதனை காட்டிக்கொள்ளாமல் பேச்சை மாற்றினான்.
“மொபைல் எடுக்கனுமா? கைல மருதாணி, இதோட மொபைல் வேண்டாம். இங்க இருக்கட்டும். நீ உள்ள சொல்லிட்டு வரனும்னா வா…” என்று சொல்ல முருகேஸ்வரியே வெளியே வந்தார்.
“சித்தி…” என அவள் ஆரம்பிக்கும் முன்பே,
“நீ போய்ட்டு வா கண்ணு…” என்று அவரும் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட ரிதுவின் கால்கள் நகர மறுத்தது.
“வா…” என்று அவள் தோளில் கையிட்டு அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தான் ஆத்மா.
“கையை எடுங்க ப்ளீஸ்…” என சங்கடத்துடன் அவனை விட்டு விலகி நிற்க,
“ஓகே, வா…” என்று ஆத்மா தன் கைகளை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தவாறு நடக்க ரிதுபர்ணாவின் காதில் அண்ணாமலையின் கோப குரல் ஒலித்து அவள் நடைக்கு தடைபோட்டது.