வீட்டிற்குள் நுழையும் முன் அத்தனை பெரிதாய் கேட்ட அண்ணாமலையின் குரலில் திடுக்கிட்டு நின்றுவிட்டாள் ரிதுபர்ணா.
வாசல் படியில் கால் வைக்கவே முடியவில்லை அவளால். அத்தனை பேச்சிலும் ஆத்மா அசராமல் அவள் கை பிடித்து உள்ளே அழைக்க மறுப்பாய் தலையசைத்தவள் முகத்தில் ஏகத்திற்கும் தவிப்பு.
தன்மானத்திற்கும், தனக்கென தன்னுடையவனாக நின்றவனுக்கும் இடையில் பரிதவித்தவள் முகத்தை கடுமையாய் ஏறிட்டான்.
“உன்னை உள்ள வான்னு சொன்னேன்…” என்று சொல்ல,
“ம்ஹூம், நீங்க போங்க. ப்ளீஸ். நாளைக்கு விசேஷத்தை வச்சுட்டு தேவையில்லாம பிரச்சனை வேண்டாம்…” என்றாள் அவன் கையில் சிக்குண்டிருந்த தனது கையின் மணிக்கட்டை உருவியபடி.
“விசேஷம் எல்லாம் எனக்கு தேவையில்லாதது. இப்ப நீ வரியா இல்லையா?…”
“முடியாது. இவ்வளோ பேசறாங்க. கேட்டுட்டு வர சொல்றீங்க?…” என்றவள் மறுக்க,
“உங்களை விடவா? நீங்களும் தான் பிடிவாதமா இருக்கீங்க?…”
இருவருக்கும் சற்று முன்னிருந்த மோனநிலையும், மகிழ்ச்சியான சூழலும் முற்றிலும் குலைந்து எரிமலையாய் தகித்தது.
“ஓகே, நீ வரவேண்டாம்….” என்றதும் அவனை ஆச்சர்யமாக பார்க்க,
“உன் கால் வாசல்ல படாம நான் தூக்கிட்டு போறேன்…” என்றவன் சட்டென தூக்க போக துள்ளி விலகி நின்றாள்.
வீட்டிற்குள் பேச்சு சப்தம் குறைந்து அதற்கும் சேர்த்து இவனின் சத்தம் சத்தமாகவே கேட்டுவிட குப்பென்று வியர்த்துவிட்டது ரிதுபர்ணாவிற்கு.
நிச்சயம் உள்ளிருப்பவர்களுக்கு ஆத்மா சொல்லியது தெளிவாகவே கேட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
“என்ன பேசறீங்க?…” என்றாள் படபடத்து.
“ஏன் உன் காதுல விழலையா? இன்னும் சத்தமா சொல்லவா? தூக்கிட்டு போவேன்னு சொன்னேன்…” என இன்னும் சத்தமாக சொல்ல,
“அச்சோ…” என்று அவனின் பேச்சை நிறுத்த முடியாமல் தன் காதை மூட்டிக்கொண்டாள்.
கேட்டில் பைக் சத்தம் கேட்க திரும்பி பார்த்தனர் இருவரும். இளவரசு தான் வந்திருந்தார்.
“அடடா, கண்ணா வாப்பா. இப்ப தான் வந்தியா?…” என வரவேற்பை அவனிடம் கேட்டபடி வந்தார். அவர் அருகே வரும் முன்,
“ஓய், இப்பவே என் கிட்ட வந்திரு. இல்ல சித்தப்பா முன்னாடியே சொல்லிட்டு தூக்கிருவேன்…” என்று புருவம் உயர்த்தி பல்லிடுக்கில் அவன் வார்த்தைகளை கடிக்க எங்கே சொன்னதை செய்துவிடுவானோ என்று பயந்து அவனருகே வந்து நின்றுவிட்டாள்.
ஆனாலும் அவன் கூறியதில் ரிதுபர்ணாவின் முகமே மாறிவிட்டது. எங்கே சொன்னபடி தூக்கிவிடுவானோ என்று தான் அவனருகே கொஞ்சம் எச்சரிக்கையுடன் அரண்டு போய் நின்றிருக்க இளவரசு அவர்கள் அருகில் வரவுமே இருவரின் முகத்தையும் கண்டுகொண்டார்.
“என்னாச்சு? ஏன் ரிது முகம் வாடி இருக்கு?…” என கேட்க,
“வழக்கம் போல தான்…” என ஆத்மா சொல்ல அவள் மௌனமாய் நின்றிருந்தாள்.
“சரி உள்ள போங்க. காலையில கோவிலுக்கு கிளம்பனும்…” என்றவர்,
“வரேன் கண்ணா…” என்றவர்,
“உள்ளவரைக்கும் நான் வரவா கூட?…” என்றார் ரிதுவின் முகம் பார்த்து.
“அப்ப நீங்களே கூட்டிட்டு உள்ள போங்க சித்தப்பா. நான் இப்படியே கிளம்பறேன்…” என்றான் ஆத்மா.
“அடேய் யப்பா, நீயே கூட்டிட்டு போ. துணைக்கு வரேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா…”
“இதை இவ இங்க இருந்தப்பவே பண்ணிருந்திருக்கனும். இத்தனை நாள் விட்டுட்டு இன்னைக்கு கேட்டா நான் வேற என்ன பேச?…” என்றான்.
குதர்க்கமில்லை. ஆனால் குதர்க்கம் தான். வாய் நிற்காமல் பட்டென்று பேசிவிட்டான்.
அவனின் பேச்சில் அவன் வந்த மகிழ்ச்சி பின்னுக்கு சென்று இப்படி வம்பு செய்கிறானே என ஆயாசம் தான் சூழ்ந்தது ரிதுவிற்கு.
“சரி சரி. உள்ள போங்க…” என்றவருக்கு ‘பிரச்சனைன்னா சொல்லு, வரேன்’ என்று சொல்ல கூட வாய் வரவில்லை.
அதற்கும் ஏதாவது பேசுவானே என்று இளவரசு ரிதுவிடம் தலையசைத்துவிட்டு சென்றாலும் அத்தனை வேகமில்லை நடையில்.
எதுவும் சத்தமென்றால் உடனே சென்று பார்த்துவிடவேண்டும் என மெதுவாய் நடந்தவர் கவனமெல்லாம் இங்கே இவர்களிடம் தான் இருந்தது.
“போயாச்சு வா…” என்று அவளை தூக்குவதை போல கைகளை கொண்டு சென்று அவன் குனிந்ததும் அவனிடமிருந்து விலகி வேகமாய் படிகளை தாண்டி வீட்டினுள் சென்றுவிட்டாள் ரிதுபர்ணா.
அங்கே நடுநாயகமாய் அண்ணாமலை நின்றிருக்க அவரை பார்த்ததுமே ரிதுவின் உடல்மொழி இறுக்கம் பெற்றது.
ஒரு வேகத்தில் கணவனிடமிருந்து தப்பிக்க அந்த வீட்டிற்குள் ஓடி வந்து இங்கே முதலையின் வாயில் விழுந்ததை போல பதட்டமாய் நின்றாள்.
மீண்டும் எதுவாவது பேசிவிடுவாரோ என்று மனதை திடப்படுத்தியபடி திரும்ப ஆத்மா புன்னகையுடன் வந்தான் உள்ளே.
“ஆனந்தி, உன் பிள்ளைட்ட சொல்லி வை….” என்று சத்தமாய் அண்ணாமலை மகனின் கவனத்தை தன் பக்கம் திருப்ப,
“என்ன இங்க வேடிக்கை? வா சாப்பிடலாம்…” என அதனை கண்டுகொள்ளாமல் ஆத்மா ரிதுவின் தோளில் கைவைத்து தள்ளிக்கொண்டு உணவருந்த அமர்ந்தான்.
“ராணி…” என்ற சத்தத்தில் அவர் ஏற்கனவே தயாராய் நிற்பதை போல அவனுக்கு தட்டை எடுத்து வைத்தார்.
“நான் சாப்பிட்டேன்…” என சின்ன குரலில் ரிது சொல்ல,
“நான் இன்னும் சாப்பிடலை. கூட உட்கார்ந்திரு…” என்றவன் சாவகாசமாக சாப்பிட அண்ணாமலைக்கு கோபம் உச்சத்திற்கு எகிறியது.
“மனோ…” என மகளை அதட்ட,
“சொல்றேன்ப்பா…” என்றவள் ஆத்மாவிடம் வர அவனின் என்னவென்ற பார்வையிலேயே எச்சிலை விழுங்கியபடி நின்றாள்.
தந்தைக்கும், அண்ணனுக்கும் இடையே அவள் பயந்துகொண்டு நிற்க ஓரவிழியால் இதனை கவனித்த ரிதுவிற்கு பாவமாக இருந்தது.
‘இந்த வீட்டுல என்னன்னு மனுஷங்க இருக்காங்களோ?’ என தோன்றியதை மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டாள் ரிது.
“என்னன்னு கேட்டா தான் சொல்லுவியா நீ?…” என்று ஆத்மா கேட்கவும்,
“சொல்லேன், இனி அந்த வீட்டு வாசப்படில போய் நிக்க கூடாதுன்னு. அப்படி இருந்தா இந்த வீட்டுக்குள்ள வரலாம். இல்லைன்னா..” என அண்ணாமலை சொல்லிவிட்டு,
“இத்தனை வருஷம் நான் இருந்த இருப்பேன்ன? அங்க போய் கல்யாணத்தை பண்ணினதோட இல்லாம அவ இருக்கற வீட்டு வாசல்ல போய் நிக்கிறான்…” என்று சொல்லவும் மனோ தன் அண்ணனை பார்க்க,
“வாசல்ல நின்னது தான் இப்ப பிரச்சனையா?…” என்ற ஆத்மா,
“அப்படித்தான் நிப்பேன்….” என்று குரல் உயர்த்தி சொல்ல அண்ணாமலை வாயடைத்து போய் பார்க்க ரிதுவிற்கு இவன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் என்ன என தோன்றியது.
“நிக்கமட்டுமில்லை எனக்கு தோணுச்சுன்னா வீட்டுக்குள்ள கூட போவேன். அங்கயே தங்க கூட செய்வேன். என் பொண்டாட்டி வீடு. என்னை யார் கேட்பா?…” என தெனாவெட்டாய் பேச விட்டால் எழுந்து அவனின் வாயை பொத்திவிடும் வேகம் ரிதுவிற்கு.
“ரிது, வா போகலாம்…” என்றுவேறு சொல்ல ஆனந்தி இத்தனை பேசும் மகனை வெறித்து பார்த்தார்.
இந்த திருமணத்தின் முன்பு வீட்டிற்கு வருபவனின் சத்தத்தை கேட்கவே தவமிருக்கவேண்டும் என்னும் அளவிற்கு வாயடைத்து தான் இருப்பான்.
வீட்டில் அவனிடம் பேசுவதற்கு மெதுவாய் தான் சத்தம் வரும். கேட்பதற்கு மட்டுமே பதில். அதுவும் நறுக்கென்று இருக்கும்.
இத்தனை அடாவடியாய் பேசியதில்லை என்றுமே. ஆனால் என்று திருமணம் முடிந்ததோ அன்றிலிருந்து அவன் பேச்சுக்கள் அத்தனை பேச ஆரம்பித்திருந்தான்.
இத்தனை சொல்லிய பின் அண்ணாமலையால் அங்கே நிற்கமுடியவில்லை அதற்கு மேல்.
அதுவும் ரிதுவையும் வைத்துக்கொண்டு மகன் பேசிய பேச்சு தலையிறக்கமாய் போய்விட கோபமாய் மீண்டும் அறைக்குள் நுழைந்துகொண்டார்.
“அண்ணா…” என மனோ பார்க்க,
“சொல்லியாச்சுல. போ…” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டவன் கையை கழுவ ரிதுபர்ணா அவனுக்கு முன்பே மாடிக்கு நகர்ந்துவிட்டாள்.
ஆனந்தி மட்டும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டே நின்றார் இதனை எல்லாம்.
ஆத்மாவிற்கு முன் அறைக்குள் நுழைந்தவளுக்கு அப்போது தான் மூச்சுவிடவே முடிந்தது.
இத்தனை அடாவடித்தனம் செய்கிறானே என தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவள் அவன் வரவும் எழுந்து நின்றாள்.
“நீங்க…” என அவள் பேசும் முன் உள்ளே வந்தவன் ஆரம்பித்திருந்தான்.
“தலையெழுத்து பொண்டாட்டி அவ வீட்டுக்கு கூப்பிடமாட்டேன்றா. பெத்தவரு வீட்டுக்குள்ள வராதன்னுறார். என்ன வாழ்க்கைடா ஆத்மா உனக்கு?…” என அவளுக்கு முந்திக்கொண்டு தான் குற்றம் சாட்ட அய்யோடா என்று விழிகளை உருட்டினாள் ரிது.
“என்ன? உண்மையை சொன்னா பேய் முழி முழிக்கிற?…” என்று நக்கலடிக்க,
“நான் கூப்ட்டா உடனே நீங்க வந்திருவீங்க தான்…” என அவனை போலவே அத்தனை நக்கல் அவளிடம்.
“அதுக்கு நீ முதல்ல கூப்பிடனும்…”
“சரி வாங்க போகலாம். இப்ப வரீங்களா?…” என்று கேட்க,
“அதான் இங்க வந்துட்டோமே? அதெல்லாம் தானா வரனும். நான் சொல்லி தானே கூப்பிடற? நீயா கூப்பிடும் போது பார்க்கலாம்….” என்றான் சட்டையை கழற்றியபடி.